Parrots Name Telling Birds Series Article by V Kirubhanandhini. Book Day Website Is Branch Of Bharathi Puthakayalam

பெயர் சொல்லும் பறவைகள் 3: பச்சைக்கிளி – முனைவர். வெ. கிருபாநந்தினி



ஆங்கிலப் பெயர் – Rose-ringed Parakeet 

அறிவியல் பெயர் -Psittacula krameri (Scopoli, 1769)

Psittacula 

Psittacula –  parrot – லத்தீன் மொழியில் கிளி என்று பெயரிட்டுள்ளனர்.

Krameri 

krameri – Wilhelm Heinrich Kramer (வில்ஹெல்ம் ஹென்ரிச் கிராமர்) 1724 – 1765 – ஜெர்மன் மருத்துவர், இயற்கை ஆர்வலர் & பூச்சியியல் வல்லுநர்.

1753 ல் கார்ல் லின்னேயஸ் (Carl Linnaeus) என்பவர் இருமுனை பெயரிடல் (Binomial nomenculature) முறையை அறிமுகப்படுத்திய பொழுது வில்ஹெல்ம் ஹென்ரிச் கிராமர் என்பவர் Collared pratincole பறவைக்கு pratincola என்று பெயரிட்டார். மேலும் கள ஆய்வுகளின் மூலம் கீழ் ஆஸ்ட்ரியா நாட்டுப் பறவைகளை பற்றி பல தகவல்களை பதிவுசெய்துள்ளார். இதனாலேயே ஸ்கோபோலி (Scopi) அவர்கள் அர்ப்பணிப்பாக பச்சைக் கிளிக்கு  (Psittacus krameri)  கிராமேரி என்று  1769 ஆம் ஆண்டு அறிவித்திருக்கலாம்.

இந்தியா, சகேரியன் ஆப்பிரிக்கா போன்ற 35 நாடுகளில் பரவி காணப்படும் பச்சைக்கிளிகளை தமிழ்நாட்டில் பனை மரங்கள், விவசாய நிலங்கள், மரங்களடர்ந்த பகுதிகள், நீர்நிலைகள், பழத்தோட்டங்கள், புதர் காடுகளில் இயல்பாகப் பறந்து திரிவதைக் காணலாம்.

மேலும் கோவில் கோபுரங்களிலும், சாலையோர கிளி ஜோசியரிடமும் கூண்டுக்குள் கிளிகளைப் பார்க்கலாம். கிளிகள் பார்ப்பதற்கு அழகாகக் காணப்படும். மனிதர்கள் பேசும் சில வார்த்தைகளைத் திரும்பச் சொல்வதால் இதனைச் சிலபேர் வீட்டினுள்  கூண்டுக்குள் அடைத்து வளர்த்து வருவதையும் பார்க்கிறோம்.

விற்பதற்காகக் கூண்டில் அடைத்துள்ளனர் (படம்: Google images)

நான் மீண்டும் மீண்டும் கூண்டிற்குள் என்ற வார்த்தை பயன்படுத்துகிறேன். ஏனெனில் பறவைகள் பறப்பதற்கு தானே ஒழிய கூண்டுக்குள் அடைக்க அல்ல. அதிலும் உயிரினங்களைத் துன்புறுத்தி நாம் நம் பொழுதைக் கழிப்பது கொடுமையானதும், ஆபத்தானதும் கூட.

பறவைகளின் அலகை வைத்தே அது உண்ணும் உணவுகளைக் கண்டறியலாம். அதுபோலவே பச்சைக்கிளிகளின் சிவந்த கொக்கி போன்ற அலகு  பழவகைகள், விதைகள், தானியங்கள், கொட்டைகள் போன்றவற்றை உண்பதற்கு ஏற்றபடியுள்ளன. கிளிகள் நிறையப் பழங்களை உண்ட பின்பு வெளியேற்றும் தனது  எச்சத்தின் மூலம் விதைப் பரவல் செய்து மரங்கள் வளர காரணமாக இருக்கின்றன. இந்த மரங்களைச் சார்ந்து பல உயிரினங்கள் வாழ்கின்றன. இதன் மூலம் அங்கு ஒரு சிறிய பல்லுயிர்ச்சூழல் அமைப்பே உருவாகிறது. இத்தகைய கிளியை சுயநலத்திற்குப் பயன்படுத்துவது ஆபத்து தானே?

பச்சைக்கிளிகளின் இனப்பெருக்க காலம்  செப்டம்பர் மாதம் முதல் டிசம்பர் வரையாகும். கிளிகள் தங்கள் குஞ்சுகளின் பாதுகாப்பு கருதி உயரமான பனைமரங்களையே அதிகம் தேர்ந்தெடுப்பதாக  ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அத்தோடல்லாமல் அரசமரம், ஆலமரம், தென்னை, ஈச்சமரம், வாகை, இலுப்பை ஆகிய மரங்களில் உள்ள பொந்துகளையும் கூட கூடமைக்க பயன்படுத்துகின்றன.

மரங்கொத்திகள் பூச்சிகளைப் பிடிக்க பனைமரத்தின்  கடினமான மேற்பகுதியை அகற்றி துளையிடுகின்றன. கிளிகள் பெரும்பாலும் இதுபோன்ற  பொந்துகளையே சுத்தம் செய்து கூடமைக்கின்றன. அத்தோடல்லாமல் வண்டுகள் துளைக்கப்பட்ட பகுதிகளையும் கூடாக மாற்றிக் கொள்கின்றன. அவ்வாறு ஏற்படுத்தப்பட்ட பொந்துகளில் 4 முதல் 6 முட்டைகள் வரை இட்டு குஞ்சு பொரிக்கின்றன. பொரிந்த குஞ்சுகள் ஓரளவு வளர்ந்தவுடன் பருவமழை காலத்தில் கூட்டிலிருந்து வெளியேறி தனியாக உணவு தேட தொடங்குகின்றன.

கூட்டிலிருந்து வெளியே வந்திருக்கும் குஞ்சு (படம்: E-bird)

கிளிகளின்  இனப்பெருக்க காலத்தில்  முட்டைகளையும், குஞ்சுகளையும் வேட்டையாடிகளிடமிருந்தும், மனிதர்களிடமிருந்தும் காப்பாற்றுவது பெரும் போராட்டமாகவே இருக்கின்றன.

தற்போது பனை மரங்கள் அதிகளவில் அழிந்து வருவதால் கிளிகளின் வாழிடங்கள் குறைந்து வருகின்றன என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. மனிதர்களின் கட்டுப்பாடற்ற நுகர்வுகளால் ஏராளமான மரங்கள் தொடர்ந்து வெட்டுப்படுவதாலும், கிளிக்குஞ்சுகள் விற்பனைக்கு எடுத்துச் செல்வதாலும் கிளிகள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருகின்றன.

விற்கப்படும் குஞ்சுகளை மக்களும் ஆசைப்பட்டு  ஜோதிடத்திற்காகவும், வீட்டில் வளர்க்கவும் அதனை விலை கொடுத்து வாங்குகின்றனர். இந்த நகர்வில் வனத்துறையிடமோ, இயற்கை பாதுகாப்பு செயல்பாடுகளில் ஈடுபட்டு வரும் தன்னார்வலர்களிடமோ சிலசமயங்களில்  மாட்டிக்கொள்வதும் உண்டு. பல நேரங்களில் சிறிய கூண்டுக்குள் பல பறவைகளை அடைப்பதால் அழுத்தம் காரணமாகப் பறவைகள் இறந்துபோக  நேரிடுகின்றன. அவ்வப்போது இதுபோன்ற செய்திகளையும்  செய்தித்தாள்களில் படித்துவிட்டு நாமும்  நகர்கிறோம். பல நேரங்களில் எங்களுடைய ஆய்வுகளுக்கே இறந்த பறவைகளையும்  அனுப்பியுள்ளனர்.

https://www.vikatan.com/news/animals/142133-forest-department-fined-chennai-man-rs10000 

ஆனால் வன உயிரின சட்டம் 1972-ன் படி கிளிகளைக் கூண்டில் அடைத்தல் தண்டனைக்குரிய குற்றமாக இருக்கும் இந்நிலையிலும் கூட இத்தகைய செயல்பாடுகள் நடைபெறுகின்றன.

மனிதர்கள் மிகப்பெரிய விலங்கான யானையே அடக்கி பிச்சை எடுக்க வைத்திருக்கும் நிலையில், கிளியைக் கூண்டில் அடைப்பது எளிதானது தானே?. இதுபோன்ற இயற்கை புரிதலற்ற  நிலையில் தான் கண்ணுக்கே தெரியாத வைரஸ் உலகையே புரட்டிப்போட்டுக் கொண்டிருக்கிறது.

ஊரடங்கு நாட்களில் மக்கள் இயற்கை புரிந்துகொண்டதாகவும், நிறைய பறவைகளைக் காணமுடிகிறது என்றும், அதனுடைய கீச்சுக் குரல்களைக் கேட்க முடிகிறது என்று சிலர் கூறுகின்றனர். இயற்கையைத் தெரிந்து கொள்ள கொரானா என்ற பேரிடரும், அதனால் லட்சக்கணக்கான மக்களின் உயிரிழப்பும் தேவைப்பட்டிருக்கிறது.

ஜோதிடம் போன்ற அறிவியலுக்கு ஒவ்வாத செயல்களுக்கும், பொழுது போக்கிற்காகவும் பறவைகளையும், மற்ற உயிரினங்களையும் பயன்படுத்தப்படுவது முழுவதும் ஒழிய இன்னும் எத்தனை எத்தனை பேரிடர்களை அனுபவிக்கப் போகிறோமோ ?.

கோவிலுக்கு வெளியே கிளியைப் பயன்படுத்தி ஜோசியம் பார்ப்பவர் (படம்: Google images)

ஜோதிடர்களுக்கு வேறு தொழில்களை ஏற்படுத்திக் கொடுத்து, கிளிகளை மீட்க அரசு நடவடிக்கை எடுக்கலாம்.

பறவைகள் சிறகு விரித்துப்  பறப்பதற்கே…..
கூண்டிற்குள் அடைபட்டுக் கிடப்பதற்கல்ல.

அடுத்த வாரம் இன்னொரு பறவையோடு பயணிக்கலாம்.

தரவுகள்

  1. Subramaniyam Kannaiyan and Jaganathan Pandiyan (2018) Spatio-Temporal Variations Of Rose-Ringed Parakeet (Psittacula Krameri) Density In Ariyalur District, Tamil Nadu, India. International Journal of Zoology and Applied Biosciences. 3(3), pp: 421-425.
  2. https://www.wwfindia.org/about_wwf/enablers/traffic/illegal_wildlife_trade_in_india/

  3. https://legislative.gov.in/sites/default/files/A1972-53_0.pdf

  4. https://www.zobodat.at/pdf/Bonner-Zoologische-Monographien_59_0001-0116.pdf

முனைவர். வெ. கிருபாநந்தினி
பறவைகள் ஆராய்ச்சியாளர்

முந்தைய தொடரை வாசிக்க: 

பெயர் சொல்லும் பறவைகள் – முனைவர். வெ. கிருபாநந்தினி

பெயர் சொல்லும் பறவைகள் 2: ரிச்சார்டு நெட்டைக்காலி – முனைவர். வெ. கிருபாநந்தினி



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Show 2 Comments

2 Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *