ஒட்டு போட்ட கால்சட்டையும் உயரத்தில் பறக்கும் தேசியக் கொடியும் கவிதை – கவிஞர் சே கார்கவி

ஒட்டு போட்ட கால்சட்டையும் உயரத்தில் பறக்கும் தேசியக் கொடியும் கவிதை – கவிஞர் சே கார்கவி




1
உணவைத் தேடி அலையும் பொழுது இல்லை, மனிதர்களையும்
நல்ல மனங்களையும் தேடி அலையும் கடின வேளைகளில்….

2
சக்திமிகுந்த தெய்வமென
கோவிலின் கற்பக்கிரகத்தைப்
பார்த்து கையெடுத்து
வணங்கிய குழுந்தைக்கு
அன்னையை விட
ரொம்ப அழகாக தெரிந்துவிடவில்லை
இருளில்
சிலையாக அமர்ந்த
அம்மனின் அமர்வு…

3
வீட்டில் அமர்ந்தபடியே
கொட்டும் மழையில்
நனைய விரும்பினேன்
அவசர அவசரமாக
மழையைப் பற்றி கவிதை எழுத
ஆரம்பித்துவிட்டேன்…..

4
கழுத்தணைத்து
தலை கோதி
இடையமர்ந்து
தோளேற்றி
அப்படியே
துயில் கொள்ளும்
தேவதையைத்தான்
மகளென்பார்களோ
தாயுமகளென்பார்களோ
தத்தக்கா புத்தக்கா
தடுக்கல்களில்
இதோ
தேடலில் ஓர்
பட்டாம்பூச்சி…

5
பதப்படுத்தப்பட்ட
மண்ணின் ஆசைதான்
பழங்கள் குலுங்கும்
விதையை எச்சமிடச் செய்தது…
சரியாகத்தான்
அமர்ந்துவிட்டான் புத்தன்
ஆசை இல்லையென
ஞானத்தை வழங்கத் தயாராக
இந்த இலையுதிர்க்கும்
போதிமரங்களின் நிழலில்….

6
பிறப்பைப் பெரிதாகப் பேசிக் கொண்டிருக்கும் பொழுது
காது கிழிய கூக்குரலிடுகிறது
நேற்று வீசிய மா விதையின் அருகே குழந்தை

7
காலங்களுக்குப் பின்னே
கடிவாளங்களும் உள்ளன
கரைகின்ற நொடிகளுக்கு
யாராலும் பூட்டிட இயலாது
அவசரமாக
உணவு தேடியும்
இணைதேடியும்
செல்கின்ற அணிலுக்கு
அகல விரிந்து
காத்திருக்கின்றன
காலக்கண்கள்……!

8
சாயங்களை பூசிக்கொள்கிறேன்
முகமூடி வழங்குகிறது
குழந்தை
முகமுடி அணிந்து கொண்டேன்
புன்னகைக்கச் சொல்கிறது
வாழ்க்கை
பயணிக்கத்தொடர்கிறேன்
சாயங்களின் வடிவில்
ஓர் கற்றை நூலால் கட்டிய பாதைகளில்……

9
செருப்பு தைக்கும் தொழிலாளி
ஒருபோதும்
நிமிர்ந்து பார்த்ததில்லை
உயரமெனப்படுபவை அனைத்தும்
இவன் காலடியிலே
கிடக்கின்றன என்பதால்….

10
ஒரு போதும்
உனக்கு பிடித்ததை மறைத்து வைக்காதே
பட்டாம்பூச்சிகள்
பூவிற்கு பிடித்தமாதிரியும்
தேனை
உண்டு மகிழும்…

11
நடனமாடிய பின்பு
காலில் வலியையும்
கைத்தட்டல்களில் ஏற்பட்ட குறையையும்
வெற்றி ஒருபோதும் பார்த்ததில்லை
புன்னைகைக்கு வெற்றி தானே புன்னகையால் மகுடம் சூடும்…..

12
சிறகு
சிறியதோ
பெரியதோ
ஆசைகளைக் கற்றைகளாக
கொண்ட நேரத்தில்
தானாகவே முளைத்துவிடுகிறது
காற்றே இல்லாத இடத்தில்
பறவையாய் மனங்கள்
என்ன
கால்களும் கைகளும.
கூடுதலாக முளைத்துவிடுகின்றன….

13
எட்டாம் வகுப்பில்
புட்டங்களில் ஒட்டுகள் போட்ட கால்சட்டையுடன்

கை உயர்த்தி வணக்கங்கள் செய்கிறேன்
ஒட்டிய வண்ணங்களை கண்டு கொள்ளாமலே
பறக்கிறது
எல்லோர் மத்தியிலும் சுதந்திரக் கொடி

கவிஞர் சே கார்கவி
நாகப்பட்டினம்
(Er.Prof.சே கார்த்திகேயன்.ME)
SWD.Chennai

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *