இரண்டு மணி நேரம் 168 பக்கங்களை படித்து தீர்த்து விட்டேன். மறுநாள் பல்கலைக்கழகத் தேர்வை வைத்துக்கொண்டு இப் புத்தகத்தை படிக்க வைத்தது இயக்கத்தின் மீதான என் காதல்♥ ஒரு 2 மணி நேரம் என்னை வாசித்து விட்டு போய் விடு, உனக்காக 2 நாட்கள் காத்திருக்க முடியாது என்ற தவிப்பு மேஜையின் மீது உள்ள புத்தகத்தில் தெரிந்தன… இப்புத்தகத்தின் மையக் கருவே இந்திய மாணவர் சங்கம் தான்.. தமிழக-கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ள தமிழ் மாணவர்கள் அதிகம் பயிலும் ஒரு அரசு கல்லூரி தான் இக்கதையின் நிகழ்விடம். இக்கதையில் முதன்மை கதாபாத்திரமாக வருவது விஜயன் அவர் அரசியல் பின்புலம் கொண்ட குடும்பத்தில் இருந்து வந்தவர் .அவரது தந்தை மற்றும் மாமா கம்யூனிஸ்ட் கட்சியின் அங்கத்தினர்கள் .அவரது மாமா பி்னு் அவர்கள் அக்கல்லூரியில் பயிலும் பொழுது மாணவர் சங்கத் தலைவராக இருந்தார்.
அவரின் காலகட்டத்தில் அக்கல்லூரியில் இடது சாரி மாணவர் அமைப்பு மாணவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம் என்ற நிலையில் சிஎஸ்பி என்ற மாணவர் அமைப்பு கோலோச்சிய காலகட்டம், அக்கல்லூரியில் சுற்று சுவர் மற்றும் நுழைவாயில் இல்லாத நெடு நாள் கோரிக்கையை நிறைவேற்றி வைத்ததன் மூலம் மேலும் வலுப்படுத்தி கொண்டது. இந்நிலையில் அக்கல்லூரியில் நடக்கும் மாணவர் சங்க தேர்தலில் நின்று இடதுசாரி மாணவர் அமைப்பு வெற்றி பெற்றது. உறுப்பினர்களின் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணும் படியான நிலையில் இருந்து கொண்டு இப்படியான வெற்றியை பெற முடிந்தது என்று சொன்னால் கல்லூரி தொடங்கிய காலகட்டத்தில் தொலை தூரத்திலிருந்து வந்து கல்லூரியில் விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கு உண்டியல் குலுக்கி உணவளிப்பதன் மூலம் இந்திய மாணவர் சங்கம் மாணவர்களிடம் உயர்ந்த மதிப்பை பெற்றிருந்தது. அதுவே மாணவர் சங்க வெற்றி வழிகோலியது..
இப்படியான போராட்டங்களின் பொழுது மாணவர் சங்கத் தேர்தலில் நின்ற இடதுசாரி மாணவர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. இது போன்ற வரலாறுகளைக் கேட்டு சகாவு விஜயன் அவர்களும் ஒரு சிறந்த மாணவர் சங்கத் தலைவராக உருப் பெற்றுக்கொண்டிருந்தார். அன்று ஒரு கல்வி உதவித்தொகை கேட்டு சமரம் நடைபெறுகிறது. அதில் பெண் தோழர்கள் அதிகமாக பங்கேற்கவில்லை என குறை எழுகிறது.
அக்குறை இணை சகாவு சந்தியா தமது முயற்சியினால் ஈடு செய்கிறார்… இப்படியே செல்கிறது வாழ்க்கைக்கான கல்வியுடன் கல்லூரி படிப்பும்… முதலாம் ஆண்டு மாணவர்களின் வரவேற்பு இன்று ராக்கிங் செய்யும் மாணவர்களுக்கு ஒரு எதிர்ப்பு வழிகாட்டி.. சகாவு சைலஜா எப்பொழுதும் சுறுசுறுப்புடன் புன்னகையுடன் செய்கின்ற வேலைகளை பார்த்தால் நமக்கும் மாணவர் சங்கத்தில் இணைந்து வேலைகளைச் செய்யத் தூண்டும்… பிறப்பிலேயே ஒரு கை ஊனமாக பிறந்த சகாவு ஆயிஷா தன் குறையைக் கண்டு மற்றவர்கள் அனுதாபப் படுவதை விரும்புவதில்லை. அவருக்கு இக் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் இந்திய மாணவர் சங்கத்தின் உறுப்பினர்கள் வரவேற்ற விதம் அவர்களின் செயல்பாடு அனைத்தும் பிடிக்கவே அவரும் பணியாற்றினார்..
இப்படியாக தோழர் குமரன், சந்தியா, சைலஜா, ஆயிஷா, விஜயன் என அனைவரும் மாணவர் சங்கத் தலைவர்களாக உருப்பெற்று கொண்டிருந்தனர். மாணவர் சங்கத்தின் தாரக மந்திரமான ஆதியம் வரும் அவர் ஸ்தானம் போகும் முன்னால் வந்து கடைசியில் செல்லவும் என்பதை அனைவரும் பின்பற்றிக் கொண்டிருந்தனர்… சகாவு பினு அவர்களின் தோழன் சுப்பு அவர்களைப் பற்றி கூற விழைகிறேன்.. விவசாயக் கூலித் தொழிலாளர்களாக உள்ள இவரது கிராம மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டி சுரண்டப்படும் இவர்களது உழைப்பிற்கேற்ற கூலியை வாங்கிக் கொடுத்தது செங்கொடி இயக்கமே.. அப்படியான சூழலில் தான் சாகவு சுப்பு குடும்பத்தின் ஆதரவுடன் மாணவர் சங்கத்தில் செயலாற்றினார்… இந்நாவல் இருபதாம் நூற்றாண்டு மாணவர் சங்கத்தின் உறுப்பினர்களுக்காக உருவாக்கப்பட்டது போன்று உள்ளது. வாட்ஸ்அப் குறுஞ்செய்தி போன்ற தொழில்நுட்ப வார்த்தைகளை இதில் காணமுடிகிறது.
மேலும் இன்றைய அரசியல் சூழ்நிலைகளை சொல்லும் விதத்தில் சொல்லி புரிய வைக்கிறது.. எழுத்தாளர்கள் கொல்லப்படுவது கோழைத்தனமான கருத்துக்களால் எதிர்கொள்ள முடியாத அவர்களின் நடவடிக்கை என விமர்சிக்கப்படுகிறது… சாதி அடையாளங்களை காட்டும் கயிறுகளை தமிழக பள்ளி கல்லூரிகளில் கட்டும் மாணவர்களை விமர்சனம் செய்வதோடு, சினிமா ரசிகர் மன்றம் என்று சண்டை போட்டுக் கொள்வதை எளனம் செய்கிறது..இதில் முக்கிய அம்சம் மாணவர் சங்க உறுப்பினர் ஒவ்வொருவரும் சங்கத்திற்கு வந்து தான் படிக்காமல் போனான் என்று சொல்லாத படியாக நாம் கல்லூரி பாடங்களை படித்து தேர்ச்சி பெற வேண்டும் என்பது தான்…தோழர் குமரன் அவர்களின் கதாபாத்திரம் இதனை தெளிவுடன் கூறியிருக்கும். ஓட்டுக்கு எவ்வளவு பணம் கொடுப்பீர்கள்? என்று கேட்கும் மனநிலை அரசியலிலிருந்து விலகி அதனை காதில் வாங்க கூட தயாராக இல்லாத நபர்களின் கேள்வியாக இந்நாவல் பார்க்கிறது…
ஓட்டுக்கு பணம் கொடுப்பதை விமர்சனம் செய்யும் இந்நாவல் ஓட்டுப் போட வேண்டிய கட்டாயத்தையும் அதன் பின்னணியையும் எடுத்து வைக்கிறது… வேட்டி என்பது ஒரு சமத்துவ உடை என்று பெருமிதம் கொள்கிறது… இந்நாவலை வாசிக்கும் பொழுது கேரள மழைச்சாரலில் நனைந்த மரத்தின் வாசனையை நுகர்வது போன்ற ஒரு உணர்வு நம்மை அங்கே ஒரு மாணவர் சங்கத் தோழனாக நிற்கச் செய்து அங்கு நடக்கும் நிகழ்வுகளை வேடிக்கை பார்க்கச் செய்யும் விதமாக இந்நாவல் உள்ளது…. முத்தச்சி மரத்தின் மீதான அன்பு நம் அனைவரையும் மெய் சிலிர்க்க செய்கிறது..அங்கு இருக்கும் அரசியலை இங்கு நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்பது ஆசிரியரின் விருப்பம்… இக்கல்லுரி ஆசிரியர் பரிதி அவர்களின் இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் வடு அவரது நெற்றியில் தெரிகிறது. தோழர் ஆயிஷா இறந்த செய்தி படித்தவுடன் சில நிமிடங்கள் தன்னை மறக்கச் செய்து கண்களில் நீரை பெருகியது.
அவரின் ஆசை சகாவு ஏ கே கோபாலன் காட்டிய வெளிச்சத்தை கையில் தொடுவது.. அதுவே அவரது கடைசி ஆசையாக மாறிப்போனது. அவர் கொண்டு வரும் பிரியாணியின் வாசம் மூக்கைத் துளைக்கிறது… மாட்டுக்கறி அரசியல், சாதி அரசியல் என ஒவ்வொன்றையும் விமர்சனம் செய்திருக்கிறது இப்புத்தகம். இப்புத்தகத்தில் அதிகம் உபயோகப் படுத்தப் பட்டிருக்கும் வார்த்தை இதுவாக இருக்கும் எனில், அது” மாணவர் சங்கம் ஜிந்தாபாத் ” என்ற முழக்கங்களை ஆண்களுக்கு இணையாக பெண்களும் முஷ்டியை உயர்த்தி மாணவர் சங்கம் ஜிந்தாபாத் என்று கூறும்பொழுது இந்திய மாணவர் சங்கத்தின் ஒரு மாவட்ட குழு தலைவராக இயங்கிக் கொண்டிருக்கும் எனக்கு ஒரு உத்வேகத்தை அளிக்கிறது… பல்கலைக்கழக முற்றுகை போராட்டம் நம் மனதை விட்டு அகலாதவை.. சஹாவு விஜயன் எதிரிகளால் கொலை வெறித் தாக்குதலுக்கு ஆளாக்கப்படும் பொழுது சகாவு அபிமன்யு நம் கண்முன் விரிகிறார்… எங்களுக்கு காதல் இல்லை என்று எண்ணிவிடவேண்டாம் எங்களுக்கும் காதல் உண்டு கடுங்காப்பி யின் மீதும் சுதந்திரம் ஜனநாயகம் சோசலிசத்தின் மீது…
மாணவர் சங்கத்தில் உறுப்பினராக உள்ள ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய புத்தகம்… மாணவர்களுக்கு அரசியல் சார்ந்த அறிவும் ஒருங்கிணைந்து செயல்பட கூடிய அமைப்பு தேவை என்பதை வலியுறுத்திக் கூறி இருக்கிறது இந்நாவல்… இதில் எனக்கு இருக்கும் ஒரு கருத்து இந்நாவலில் மையக் கதாபாத்திரம் சகாவு விஜயன் அவர்கள் அவர் ஏற்கனவே கம்யூனிஸ்ட் கட்சி பின்புலமுள்ள ஒரு குடும்பத்தில் இருந்து வந்திருக்கிறார்…புதிதாக எந்த ஒரு அரசியல் பின்னணியும் இல்லாது மாணவர் சங்கத்திற்கு வரும் மாணவனை ஒரு தலைவனாக காட்டியிருந்தால் புதிதாக வரக்கூடிய மாணவர்களுக்கு உத்வேகமாக இருந்திருக்கும்….. ஆசிரியருக்கு எனது நன்றி கலந்த வாழ்த்துக்கள் ….. மாணவர் சங்கம் பற்றிய அருமையான பதிவிற்கு…
புத்தகம்: பதிமுகம்
ஆசிரியர்: செழியன் கோ
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
பக்கங்கள் :168
விலை : ரூ.150
– வினிஷா
ஈரோடு மாவட்ட தலைவர்
இந்திய மாணவர் சங்கம் (SFI)