பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் (Pattalikalin Kathaippadalgal) - 2 | சர்வதேசத் தாயான நீலவ்னா (International Mother Nilovna) | கார்க்கியின் தாய்

பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் – 2:- சர்வதேசத் தாயான நீலவ்னா – எழுத்தாளர் ம.மணிமாறன்

சர்வதேசத் தாயான நீலவ்னா…

பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் – 2

– எழுத்தாளர் ம.மணிமாறன்

நாங்கள் சோஷலிஸ்டுகள்! அதாவது தனிநபர் சொத்துரிமைக்கு (சொத்துரிமையின் பெயரால் மக்கள் சமுதாயத்தை பிளவுபடுத்தி,மக்களை ஒருவக்கொருவர் எதிராகத் தூண்டி மோதவிட்டு, தமது நல உரிமைகளின் மீது வெறுப்புணர்ச்சியை உண்டாக்கும் சமுதாய அமைப்புககு) நாங்கள் எதிரிகள். ‘தனிச் சொத்துரிமை ஒழிக!’’ ‘ ‘உற்பத்திச் சாதனங்கள் அனைத்தும் மக்கள் கையில ‘. அதிகாரம் அனைத்தும் மக்களிடம் ‘’உழைப்பது ஒவ்வொருவருக்கும் கடமை’. இவைதான் எங்கள் கோஷங்கள். இவற்றிலிருந்து நாங்கள் வெறும் கலகக்காரர்கள் அல்ல என்பதை அறிந்திருப்பீர்கள்.

நாங்கள் அனைவரும் புரட்சிக்காரர்கள். ஒரு சிலர் வேலை வாங்கவும் மற்றவர்கள் அனைவரும் அவர்களுக்கு அடிமை வேலை செய்யவுமாக இருக்கின்ற நாள் வரையிலும் நாங்கள் புரட்சிக்காரர்களாகவே இருப்போம்..

பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் (Pattalikalin Kathaippadalgal) - 2 | சர்வதேசத் தாயான நீலவ்னா (International Mother Nilovna) | கார்க்கியின் தாய்

உலகப்புகழ் பெற்ற மாக்சிம் கார்க்கியின் (Maxim Gorky) காவியமான தாய் (Mother Novel) நாவலுக்குள் பாவெல் பேசுகின்ற நீதிமன்றக் காட்சிகளின் சொல்லடுக்குகள் இவை. புரட்சியின் கொதிநிலைக் காட்சிகளை கவனப்படுத்திடும் வேட்கையில் எழுதப்பட்ட நாவல் தாய். கார்க்கி தன்னுடைய கதையின் நாயகனை பிரபுக்களின் பின்புலத்தில் இருந்து உருவாக்கவில்லை. பாவெல் எளிய உழைப்பாளர்களான தாயுக்கும் தந்தைக்கும் பிறந்த குடும்பத்துச் சிறுவனாகத்தான் நாவலுக்குள் காட்சிப்படுகிறான். அவனுடைய தாய் நீலவ்னாவும்கூட எளிய பாவலின் தந்தையை மணம் செய்வதற்கு முன்பிருந்தே எளிய உழைப்பாளக் குடும்பத்தைச் சேர்ந்தவளே. அவளே ஒரு தொழிலாளர் குடும்பத்தின் குடும்பத்தலைவிதான். அன்றாடத்தைக் கடத்திட அல்லல் பட்டுக்கொண்டிருந்த பாவெலும், நீலவ்னாவும் எப்படி புரட்சியின் நாயகர்களாக உருவானார்கள் என்பதையே நாவலாக ஆக்கியிருக்கிறார் கார்க்கி.

வேறு எந்த சோவியத் நாவலையும் விட தாய் தமிழ் வாசகர்களுக்கு மிக மிக மன நெருக்கமானது. தமிழர்கள் தாங்கள் நேசிக்கிற கதைமாந்தர்கள், அரசியல் தலைவர்கள், பெரும் விருப்பமான கடவுளர்களின் பெயர்களை தங்கள் குழந்தைகளுக்கு சூட்டி பெருமை கொள்பவர்கள். இது தமிழர்களுக்கு என்றிருக்கும் வரலாற்று பிரக்ஞையின் அடையாளம். காந்தி, காமராஜ், நேரு, போஸ் எனும் பெயர்கள் எழுபதுகளின் தமிழ்க்கிராமங்களில்கூட இருந்தது. ஆனாலும் அம்பேத்கர் எனும் பெயரை தன்னோட குழந்தைகளுக்கு சூட்டாமல் இருந்து கொண்டிருப்பதற்கு நிச்சயம் இந்தியாவின் தனித்த சிக்கலாக இருக்கிற சாதீயம் தான் என்பதில் எள்முனையளவுகூட சந்தேகம் இல்லை. அதனைப் பிறிதொரு சந்தர்ப்பத்தில் விரிவாகப் பேசுவோம். அரசியல் செயல்பாட்டில் இருப்பவர்களைப் போலவே இலக்கிய வாசகர்களும் இதில் விதிவிலக்கல்ல. தங்களுடைய விருப்பத்திற்குரிய படைப்பாளிகளான மு.வ, கல்கி, தி.ஜானகிராமன் போன்ற எழுத்தாளர்களின் கதாபாத்திரங்களான அரவிந்தன், பொன்னி, யமுனா என அவர்கள் நேசித்த கதாபாத்திரங்களின் பெயர்களைத் தங்கள் குழந்தைகளுக்கு சூட்டியிருக்கிறார்கள். இந்த தொல் பழக்கம் வேள்பாரி நாவலின் ஆதினி வரையிலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. தமிழ் நாவல்களைத் தாண்டி அவர்களை தங்கள் குழந்தைகளுக்கு பெயர் சூட்டும் அளவிற்கு வசீகரித்த ஒரே பிறமொழி நாவல் கார்க்கியின் தாய் மட்டும்தான். அதற்கு தமிழ்நாட்டிற்குள் வாழ்கிற பாவெல், பாவெல் பாரதி, பாவெல் சக்திகளும், சோபியாக்களும், நீலவ்னாக்களுமே சாட்சிகள்.

தாய் நாவலை இரண்டு பாகங்களாக எழுதியிருக்கிறார் கார்க்கி. முதல் பாகம் தொழிலாளர்கள் தங்கள் வாழ்க்கையை நெட்டித் தள்ளப்படுகிற அவல வாழ்கையில் இருந்தே துவங்குகிறது. நாவலுக்குள் வாழ்க்கையும் காலத்தின் தேவையும் எப்படி புரட்சிக்கான மனித ஆற்றலை உருவாக்கும் என்பதை நீலவ்னா எனும் தாய் கதாபாத்திரத்தை மட்டும் கவனித்து பின்தொடர்ந்தால் வாசகர்கள் உணர முடியும். நீலவ்னா தினமும் குடித்துவிட்டு மனைவியை அடித்து நொறுக்கும் ஆலைத்தொழிலாளியின் மனைவி. அப்போதும் கார்க்கி தொழிலாளிகள் ஏன் குடிக்கிறார்கள். அல்லது குடிக்க வைக்கப்படுகிறார்கள் என்பதையும் சேர்த்தே வாசகர்களுக்குப் பகிர்கிறார். கசக்கிப்பிழிந்து சக்கையாக பின் வெளித் தள்ளப்படும் தொழிலாளிகளும் அவர்களுடைய குடியிருப்புப் பகுதிகளும் நாவலுக்குள் காட்சிப்படும் இடம் அந்த நாட்களின் சோவியத் ரஷ்ய நிலத்தின் தன்மையையும் தொழிலாளிகளின் வாழ்க்கையையும் காட்டுவதாக இருக்கிறது. மிகுந்த மதநம்பிக்கை கொண்டவள் அவள். புரட்சிக்கான தஸ்தாவேஜ்களை மகனும் அவனுடைய சகாகக்களும் தயார் செய்து கொண்டிருக்கும் பொழுதிலும்கூட அவள் கடவுளிடம் முழந்தாழிட்டு வேண்டுகிறாள். இந்த பிள்ளைகள் மிகவும் நல்லவர்கள் அவர்களுடைய காரியத்தை நீரே வெற்றியுடையதாக ஆக்கித் தரவேண்டும் என ஜெபிக்கும் அளவிற்கு பக்தி மிகுந்தவள்.. நடப்பது எதுவும் நம்கையில் இல்லை. இறைவனின் பிரியப்படியே எதுவும் நடக்கும் என்பதில் உறுதியிலும் உறுதியாக இருப்பவள்.

பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் (Pattalikalin Kathaippadalgal) - 2 | சர்வதேசத் தாயான நீலவ்னா (International Mother Nilovna) | கார்க்கியின் தாய்

நீலவ்னாவிற்கு வரும் கனவொன்றில் அவளுடைய கணவன் அவளை அடித்து துவைத்ததால் கிழிந்து தொங்கும் ஆடையோடு நடுரோட்டில் விழுந்து கிடக்கிறாள். மகனோடு கண்ணீர் சிந்தி தெருவில் கிடக்கிறாள். அவளுடைய கைக்குள் பொதியக் கிடப்பவன்தான் கதையின் நாயகனான பாவல். எப்போதும் அச்சமும், பயமும் நிறைந்திட தன் ஒவ்வொரு நாளையும் நகர்த்திக் கொண்டிருப்பவள் நீலவ்னனா. கனவனின் மரணத்திற்குப் பிறகு தன் மகனான பாவெலுடன் தனித்து வாழ்பவள். அச்சமும் பயமும் கொண்டிருந்த இந்த நீலவ்னாதான் பிறகான நாளில் வேறு ஒரு தனித்த ஆளுமையாக உயர்கிறாள். அஞ்சிக் கிடந்தவள்தான் ஆலைத் தொழிலாளிகளுக்கான போராட்ட சர்க்குலர்களை சோற்றுக்கூடைக்குள் ரகசியமாக கொண்டுபோய் விநியோகம் செய்பவளாக உருமாறுகிறாள். விவசாய தோழர்களுக்காக புரட்சிக் குழுக்கள் உருவாக்கிய துண்டு பிரசுரங்களை அவர்களிடம் கொண்டு சேர்க்கிறாள். புரட்சியின் வசந்தத்தை அறிவிக்கும் பிரசுரங்களை காடு, மலைகள் எல்லாம் அலைந்து திரிந்து கொண்டு சேர்ப்பதற்காக அவள் நிகழ்த்திய சாகசங்கள் அசாத்தியமானவை. தலைமறைவு கால வாழ்கையை எப்படி கம்யூனிஸ்ட்கள் உறுதியாக எதிர்கொண்டு வாழ்ந்திருப்பார்கள் என்பதற்கான சாட்சிகளாக நாவலை வாசிக்கும் எவருக்குள்ளும் நீலவ்னா எனும் தாய் நிறைந்து நிற்பாள். . அரசின் கெடுபிடிகள், காவல்துறையின் அத்துமீறல்கள் என யாவற்றையும் கடந்து புரட்சியின் தூதுவராய் வாழ்ந்திருக்கிறார் தாய் நாவலுக்குள் நீலவ்னா. ரகசியமாக மட்டுமே இயங்கிக் கொண்டிருக்க புரட்சி ஒருபோதும் தோழர்களை அனுமதிப்பதில்லை. தேவை ஏற்படுகிறபோது நாங்கள் யார்?. எதற்காக இந்தச் செயலை செய்கிறோம் என்பதை உலகிற்கும் அதிகார வர்க்கத்திற்கும் சொல்லத்தான் வேண்டும். அதனால்தான் நாவலின் கடைசிக்காட்சியில் புரட்சியின் தளகர்த்தாவான தன் மகன் பாவெலின் வழக்குமன்ற உரையை பிரசுரமாக்கி புகைவண்டி நிலையத்தில் போலிஸ்காரர்கள் முன்னிலையிலேயே பகிரங்மாக விநியோகம் செய்கிறாள் தாயான நீலவ்னா. தன் மகனின் வழக்கு மன்ற உரைகள் அடங்கிய பிரசுரத்தை பொதுமக்களுக்கு விசிறி விநியோகம் செய்யும் அந்தக் காட்சி நாவலை காவிய அந்தஸ்திற்கு உயர்த்துகிறது.

இரண்டு பாகங்களாக தொடரும் தாய் நாவலின் கடைசிச்சொற்றொடர் “ 1907 ஆம் ஆண்டு” என்பதை அழுத்தமாக பதிவுசெய்து நிறைவு செய்கிறார் கார்க்கி. புரட்சியின் வெப்பம் சோவியத் ரஷ்யாவில் கனன்று கொண்டிருந்த நாளின் வரலாற்றுப் பதிவிது என்பதை ஒற்றைச் சொல்லில் அறியத்தருகிறார். இது மகாக் கலைஞர்களால் மட்டுமே நிகழ்த்த முடியும். காலத்தை எழுதும் கலைதானே நாவல். யுகப்புரட்சியின் பாடலை கார்க்கி பாவெல், நீலவ்னா, சோபியா, அந்த்ரோய், நதாஷா, நிகலாய் எனும் சாஷா என்கிற எளிய மனிதர்களைப் பின்புலமாகக் கொண்டு பாடியிருக்கிறார். நாவல் முழுக்க யுவன்களும், யுவதிகளும் புரட்சியின் தூதுவர்களாக வந்து கொண்டேயிருக்கிறார்கள் அறிக்கைகள் எழுதுகிறார்கள். பிரசுரங்களை தயாரிக்கிறார்கள். அரசதிகாரத்திற்கெதிராக மக்களோடு உரையாடுகிறார்கள். அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட புத்தகங்களை எடுத்துக்கொண்டு போய் வாசிக்கத் தருகிறார்கள். மிகவும் குறிப்பாக விவசாயிகளுக்கான தனித்த பிரசுரங்களையும், புத்தகங்களையும் ரகசியமாக பதுக்கி எடுத்து வந்து தருகிறார்கள். தந்தை இறந்த பிறகு அவனைப் போலவே நிரம்ப குடித்துவிட்டு வந்து தலைகுப்புற கவிழ்ந்த இந்த சிறுவன் பாவலை இப்படி மக்கள் தலைவனாக உயர்த்தியது எது எனும் கேள்வியை தாய் கேட்டு கேட்டு பார்க்கிறாள். அதற்கான பதிலையும் நாவலுக்குள் கார்க்கி பாவலின் குரலில் சொல்கிறார்.. “அவன் வீட்டிற்கு புத்தகங்களைக் கொண்டுவர ஆரம்பித்தான். அவற்றை ரகசியமாக படிப்பான். படித்து முடித்ததும் அவற்றை ஒளித்து வைத்துவிடுவான். சமயத்தில் அந்தப்புத்தகங்களில் இருந்து ஏதாவது சில பக்கங்களை நகலெடுப்பாபான். பின் அதனையும் ஒளித்து வைத்துவிடுவான்”..

பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் (Pattalikalin Kathaippadalgal) - 2 | சர்வதேசத் தாயான நீலவ்னா (International Mother Nilovna) | கார்க்கியின் தாய்

தன் மகனின் நடவடிக்கையைக்கண்டு இப்போதும் அச்சம் கொள்கிறாள் தாய். தாயின் கலக்கத்தைப் புரிந்த பாவெல் அவளிடம் எல்லாவற்றையும் விளக்குகிறான்.
“நான் தடை செய்யப்பட்ட புத்தகங்களைப் படிக்கிறேன். இவை ஏன் தடை செய்யப்பட்டிருக்கிறது தெரியுமா? . இவை நம் போன்ற தொழிலாளரைப் பற்றிய உண்மையைச் சொல்கின்றன இவையெல்லாம் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக அச்சிடப்படுகின்றன””என்கிறான் பாவெல். ஒரு மனிதனின் ஆளுமையை வளர்த்தெடுப்பதிலும், இயக்கத்தின் அன்றாட நடவடிக்கைகளை பழுதின்றி நிறைவேற்றிட கம்யூனிஸ்ட்களுக்கு சுய கல்வியும், புத்தக வாசிப்பும் எவ்வளவு முக்கியம் என்பதை தாய் நாவலின் வாசிப்பின் ஊடாக வாசகர்கள் புரிந்து கொள்ள முடியும். நாவல அதன் சர்வதேசத் தன்மையை அதிலும் குறிப்பாக பாட்டாளி வர்க்க அரசியலை பேசிடும் பிரதியாக உருமாற்றிய இடங்களை வாசகர்கள் கவனித்து உள் வாங்க வேண்டியவை.

“உலகில் பல்வேறு இன மக்கள் குடியிருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். யூதர்கள், ஜெர்மானியர்கள், தாத்தாரியர்கள், ஆங்கிலேயர்கள் என எத்தனையோ பெயர்களை அவர்களுக்குச் சொல்கிறார்கள்.. நான் அதை உறுதியாக நம்பவில்லை. உலகில் இரண்டே இரண்டு இனங்கள்தான் இருக்கின்றன. ஒன்றுக்கு ஒன்று ஒத்துக்கொள்ளாத இரண்டே மனித குலங்கள் அவைகள். ஜெர்மானியராகட்டும், ஆங்கிலேயராகட்டும் அவர்களில் முதலாளிகளாக இருப்பவர்கள் ஏழைத் தொழிலாளிகளை எப்படி நடத்துகிறார்கள். எப்படியெல்லாம் அவர்கள் தொழிலாளிகளின் உழைப்பை உறிஞ்சி குடிக்கிறார்கள் என்பதை உற்று கவனியுங்கள். இதில் எந்த இன பேதமும் இல்லை. இரண்டு வர்க்கங்கங்களுக்கு இடையேயான தீராத பகைமையின் சாட்சியங்களே இவைகள் யாவும். ஒடுக்குபவனுக்கும், ஒடுக்கப்படுபவனுக்கும் இடையில் உலகெங்கும் நடந்து கொண்டிருக்கும் வர்க்கப்போரின் காட்சிகளை நாவலெங்கும் பாவலின் வழியாக கார்க்கி உரத்து முழங்கிக் கொண்டேயிருக்கிறார். இப்படி முழக்கங்களாக வரிசைப்படுத்துவது கலையாகுமா? எனும் கேள்விக்கான பதிலையும் கூட தாய் நாவல் தனக்குள் பொதிந்தே வைத்திருக்கிறது.

எந்த படைப்பும் காலத்தின் விளைச்சல்தான். தாய் நாவலில் இரண்டு முக்கியமான புள்ளிகள் இருக்கின்றன. ஒன்று ஆலை நிர்வாகம் ஆலையைச் சுற்றியிருக்கும் சதுப்பு நிலங்களைச் சுத்தப்படுத்த தொழிலாளிகளிடமே பணம் கேட்கிறது. அவர்களுடைய தினக்கூலியில் இருந்து பிடித்தம் செய்ய உத்தரவிடுகிறது. இதை எதிர்த்தே பாவெலும் அவனுடைய சக தோழர்களும் போராட்டத்தை நடத்துகின்றனர். ஆலையை பராமரிக்க ஆலை நிர்வாகம் மட்டுமே முயற்சிக்க வேண்டும். தொழிலாளிகளை வஞ்சிப்பதை அனுமதிக்க முடியாது என்று பாவெல் நடத்திய போராட்டம் சதுப்பு நிலக்காசு போராட்டம் என வரலாற்றில் பதிவாகிறது. மற்றொன்று சோவியத் நிலமெங்கும் மாபெரும் மே தினப் பேரணிக்கு திட்டமிடுகிறார்கள் தொழிலாளிகள். இந்த மே தினப் பேரணிக்கான தயாரிப்பில்தான் தன்னைத் தளகர்த்தாவாக தத்தம் செய்கிறாள் தாய் நீலவ்னா. இந்த வரலாற்று நிகழ்வுக்கான உத்வேகம் கார்க்கிக்கு சோவியத் போராட்ட நிகழ்வுகளில் இருந்தே கிடைத்திருக்கிறது. அதிலும் புரட்சித் தலைவர் தோழர் லெனினின் போராட்ட வாழ்வில் இருந்தே அதனை எடுத்திருக்கிறார். 1896 ஆம் ஆண்டு தோழர் லெனின்
சிறையில் இருந்தபோது செயின்ட் பீட்டர்ஸ்பர்க் தொழிலாளர் விடுதலைப் போராட்ட சங்கம் எனும் மார்க்ஸிய அரசியல் குழுவிற்காக மே தின துண்டறிக்கை ஒன்றை எழுதினார். அந்த பிரசுரம் சிறையிலிருந்து கடத்தப்பட்டு 200 பிரதிகள் எடுக்கப்பட்டு 40 தொழிற்சாலை வாயில்களில் தொழிலாளர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. பிரசுரம் வெளிவந்த ஒரு மாதத்திற்குள் ரஷ்யாவெங்கும் பஞ்சாலைத் தொழிலாளிகளின் போராட்டங்கள் கனன்று எழுந்தது. வரலாற்றில் ஒரு முறை நடந்தேறிய இந்த சம்பவங்களையும் அதன் உடன் விளைவுகளையும்தான் தாய் நாவலின் மைய அச்சாக்கியிருக்கிறார் கார்க்கி. ஒரு தேர்ந்த இலக்கியம் அதிலும் குறிப்பாக நாவல் காலத்தைத்தான் பதிவு செய்யும். சோவியத் புரட்சிக்கு முன்பான நாட்களில் புரட்சிக்கான வேட்கையும் அதற்கான செயல் திட்டங்களையும் தொழிலாளிகளும் விவசாயிகளும் எப்படித் திட்டமிட்டார்கள் அதனை எப்படி நடத்தினார்கள் என்பதற்கான சாட்சியக் காட்சிகளையே தாய் எனும் நாவலாக ஆக்கித் தந்திருக்கிறார் எழுத்தாளர் தோழர் மாக்சிம் கார்க்கியின் (Maxim Gorky).

பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் (Pattalikalin Kathaippadalgal) - 2 | சர்வதேசத் தாயான நீலவ்னா (International Mother Nilovna) | கார்க்கியின் தாய்

கலையின் விளைவுகளைக் குறித்த தர்க்கங்கள் நிகழும் போதெல்லாம் கட்சி சார் மார்க்ஸியர்கள் சம்பவங்களைத் தொகுத்து கதையென நிரவுவதையே நாவல் என நம்பிக் கொண்டிருக்கிறார்கள் எனும் பெரும் குற்றச்சாட்டு நம்மீது தொடர்ச்சியாக முன் வைக்கிறார்கள். இந்த போலி குற்றச்சாட்டுகளை எழுத்தாளர் கார்க்கி எப்படியெல்லாம் புறந்தள்ளி தன்னுடைய உலகப்புகழ் பெற்ற தாய் நாவலுக்குள் கலையின் அசாலான வெகுமதியை அடைந்திருக்கிறார் என்பதையும் வாசகர்களுக்கு அறியத்தருவது மிகவும் முக்கியம். தத்துவங்களின் கலைவடிவம் என்றே நாவலுக்கான வரையறை உலகெங்கும் முன் வைக்கப்படுகிறது. தாய் நாவலுக்குள் தீராத தத்துவ விவாதங்களை பாவெலும் அவனுடைய சக தோழர்களும் நடத்திக் கொண்டேயிருக்கிறார்கள்.

நாவலில் பல இடங்களில் கடவுள் எனும் கருதுகோளைக் குறித்து மிக விரிவான தர்க்கம் நடக்கிறது. “அவர்கள் உண்மையான கடவுளைக்கூட நம்மிடமிருந்து பிடுங்கிக்கொண்டுவிட்டார்கள். நம்மைத் தாக்குவதற்கு கடவுள் உட்பட எல்லாவற்றையும் தமது கைக்கருவிகளாக மாற்றிக்கொண்டார்கள். அம்மா.. நீ நன்றாக யோசித்துப்பார். கடவுள் தன் உருவம் போலவே மனிதனையும் படைத்தான் என்கிறார்களே, அதற்கு என்னம்மா அர்த்தம். கடவுள் மனிதனைப் போல இருக்கிறார். மனிதன் கடவுளைப் போல இருக்கிறான் என்பதுதானே. மனிதர்களில் பெரும்பான்மையான தொழிலாளத் தோழர்கள் எப்படி இருக்கிறார்கள். கடவுளைப் போலவா?

இல்லையே காட்டு மிருகங்கள் மாதிரியான தோற்றத்தில் தானே இருக்கிறோம். இத்தனை ஆண்டுகளாக உனக்குள் ஊறிக்கிடக்கும் உன்னுடைய நம்பிக்கையை சட்டென என்னால் பிடுங்கி எறிய முடியாது என்பதை நான் அடிக்கடி மறந்து போகிறேன். அறிவுதான் நிச்சயமாக மனித குலத்தை விடுதலை செய்யும்.

வர்க்கம் என்பதன் அர்த்தம் என்ன?. சொந்த வர்க்கத்தின் சிந்தனையை விட்டொழித்து வெளியேறுவது ஒன்றும் எளிதில்லை. நாவலுக்குள் வருகிற முஜிக் எனும் இளைஞன் எல்லோருடனும் பேசிக் கொண்டே இருக்கிறான். சீமாட்டிகளும், சீமான்களும் புத்தகங்களின் வழியே சோசலிச கருத்துக்களை ஆழமாக கற்றுத் தெளிந்திருக்கலாம். அதனால் தன்னுடைய சொந்த வர்க்க வாழ்நிலையில் இருந்து முற்றிலுமாக வெளியேறவும் செய்திருக்கலாம். ஆனாலும் அவர்களால் நிச்சயமாக தொழிலாளர் வர்க்கம் நடத்துககிற போராட்டங்களுக்கு அவர்களால் தலைமை தாங்க முடியாது. இப்படி நாவல் முழுக்க தர்க்கங்களையும் வியாக்கியனங்களையும் செய்து கொண்டே இருக்கிறார். ஒரு நாவலின் வழி ஒன்றாயிருந்த சோவியத் மண்ணில் நடந்த புரட்சிக்கான முன் தயாரிப்புக் காலத்தை அந்த மக்களுக்கே எடுத்துச் சொல்ல வேண்டும். எடுத்துச் சொல்ல முடியும் என்பதை தாய் நாவலை வாசித்து முடித்த நாளில் வாசிக்கிற எவரும் உணர முடியும்..

இந்திய மன்னில் மக்கள் எழுச்சிக்கான உத்வேகத்தை தரக்கூடிய சக்தி மிக்க நாவல் தோழர் கார்க்கியின் தாய்.

(சோவியத்தின் புரட்சியின் நாட்களை கதையாடிக் கடத்திய மாக்சிம் கார்க்கியின் (Maxim Gorky) தாய் நாவலுக்கு எழுதப்பட்ட வாச்சியம்.)

தமிழில் எழுதப்பட்ட தனித்த பாட்டாளி வர்க்க படைப்பான தொ.மு.சி யின் பஞ்சும் பசியும் நாவலைக் குறித்த வாச்சியத்துடன் அடுத்த வாரம் சந்திப்போம்..

காத்திருங்கள்

காத்திருக்கும்…

கட்டுரையாளர்:

பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் (Pattalikalin Kathaippadalgal) - 2 | சர்வதேசத் தாயான நீலவ்னா (International Mother Nilovna) | கார்க்கியின் தாய்

ம.மணிமாறன்

முந்தைய தொடரை வாசிக்க: பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் – 1 : ஏன் எழுத வேண்டும் – எழுத்தாளர் ம.மணிமாறன்

 

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Show 2 Comments

2 Comments

  1. வியட்நாம்

    மிக அற்புதமான கட்டுரை. கடல் அளவு ஆழமான ஒரு நாவலுக்கான மதிப்புரையை ஒரே கட்டுரையில் அளிப்பது மிகச் சிரமமான கலை. அதனை நேர்த்தியாக வழங்கிய கட்டுரையாளருக்கு நன்றி. இந்த தொடர் பின்னர் புத்தக வடிவில் வரவேண்டுமென விழைகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *