பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் (Pattalikalin Kathaippadalgal) - 1 | எழுத்தாளர் ம.மணிமாறன் | பாட்டாளி (Proletariat) | கார்க்கியின் தாய்

பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் – 1 | எழுத்தாளர் ம.மணிமாறன்

பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் – 1

ஏன் எழுத வேண்டும்…

எது ஒன்றையும் குறித்து யோசிப்பதற்கோ அல்லது எழுதுவதற்கோ ஒரு முக்கியமான மனத்திறப்பு நிச்சயமாக எல்லோருக்கும் தேவைப்படுகிறது. எனக்கு பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் எனும் இந்த தொடரை எழுத வேண்டும் என்பதற்கான உந்துதல் ஏற்பட்டது மதுரையில்தான். சமீபத்தில் அங்கு நடைபெற்ற மார்க்ஸிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் தான் இதற்கான முதல் புள்ளி என் மனதில் விழுந்தது. விழாக்கோலத்தில் திளைத்திருந்தது மாநாட்டுத்திடல். மாநாட்டில் கண்காட்சிகள், புகைப்படங்கள், புத்தகக்கண்காட்சிகள் என ஒவ்வொரு அரங்காக பார்த்து வெளியேறிக்கொண்டிருக்கிறேன். சட்டென நான் நிற்பது ஒரு பிரதிமையின் முன். அந்த புகை கசிந்து வழியும் கருப்பு பிரதிமையை இயல்பாக என்னால் காண முடிய வில்லை. சாதி வெறியும், ஆதிக்க மனநிலையும் சேர்ந்து உச்சத்தில் ஏறியதால் ஏற்பட்ட கொடூரத்தின் சாட்சியது.

கீழத்தஞ்சையின் நில உடமையாளர்கள் நிகழ்திய வன்முறையின் காட்சிச் சித்திரமது. நான் தடுமாறி நிற்கிறேன். ஆனாலும் கூட எனக்குப் பின்னாலும், நான் வருவதற்கு முன்பாகவும்கூட பெரும் கூட்டமாக மக்கள் வருகிறார்கள். நிற்கிறார்கள். தற்படம் எடுக்கிறார்கள். கூட்டமாக முன்நின்று புகைப்படம் எடுக்கிறார்கள். நிறைந்திருக்கும் இந்த அமைதியைக் கலைத்து ஒருவிதமான விழாக்கால மனநிலை எப்படி வரமுடியும். ஒரு நொடிகூட கண்ணுற முடியாத அந்த துயரத்தின் சாம்பல் படிந்திருக்கும் வரலாற்றுப் பிரதிமையின் முன் நின்று புகைப்படம் எடுப்பதை எப்படி புரிந்து கொள்வது.. என்னால் முடியவில்லை. அறுபது வருடங்களுக்கு முன் வரலாற்றின் பக்கங்களில் ரத்த சாட்சியமாகிய அந்த கொடூர நாட்களின் பிரதிமையின் முன் நின்று புகைப்படம் எடுக்க ஏனோ என்னால் இயலவேயில்லை. மனம் எப்போதும் ஒரு புள்ளியியல் நிற்பதில்லை. அது நிலை கொள்ள முடியாமல் அலையும் விசித்திர வஸ்து. அது என்னை எங்கெங்கோ அலைத்துச் சென்றது.

பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் (Pattalikalin Kathaippadalgal) - 1 | எழுத்தாளர் ம.மணிமாறன் | பாட்டாளி (Proletariat) | கார்க்கியின் தாய்

எனக்கு திருமணமான புதிதில் நானும் என் இணையரும் வெளியூர் சென்று எடுத்த முதல் புகைப்படம் இப்போது நினைவுக்கு வருகிறது. அது வெண்மணி தியாகிகளின் ஸ்தூபியின் முன் எடுக்கப்பட்ட புகைப்படம். தொடர்ந்த பயணத்தில் ராமையாவின் குடிசையின் செந்தழலின் வெக்கையால் நிறைந்திருந்த வரலாற்றுப் பக்கங்களை என் இணையரிடம் சொல்லிக்கொண்டே வந்தேன். “நெல்மணி அரைப்படி கூடக் கேட்டதில் வெண்மணி வெந்ததடா. அதில் என் பாட்டனும் வெந்தானடா..” எனும் பாடல் வரிகளையும் பாடிக் காட்டினேன். எது எதுவோ காட்சிகளில் கரைகிறது மனம். நீண்ட அமைதியில் கரைந்திருந்த அந்த நாட்கள் ஏனோ எனக்கு இந்த நொடியில் நினைவின் ஆழத்தில் இருந்து துளி துளியாக வெளிவருகிறது. ஒருவேளை நம் தோழர்கள் அந்தப்பிரதிமையை தன் மூதாதையின் நினைவிடம் என்று நினைத்தார்களோ? அதனால் தான் எல்லோரும் படம் எடுக்கிறார்கள் என்று எனக்குள் சமாதானமாக முயற்சிக்கிறேன்.

கால்கள் அடுத்தடுத்த இடங்களை நோக்கி நகர்நந்திட மறுத்த போதும் மனம் மட்டும் அந்தப்புகை வெளியேறிக் கொண்டிருந்த கறுப்பு பிரதிமையிலிருந்து அகலவேயில்லை. இத்தனை கண்காட்சிகள் வைத்திருக்கும் தோழர்கள் ஏன் தமிழ் நிலத்தில் கம்யூனிஸ்ட்கள் நிகழ்த்திய போராட்டங்களின் வரலாற்றையும், அதனில் மக்கள் பங்கேற்பையும் இடையீடாகக் கொண்டு எழுதப்பட்ட புத்கங்களைத் தனித்துக் காட்சிப்படுத்தியிருக்கலாமே எனும் ஒரு சிந்தனை ஓடியது. அப்போதுதான் எனக்குள் இந்த நிலத்தில் உழைப்பாளிகள் நிகழ்த்திய போராட்டங்கள் அதற்கேயுரிய உறுதியான வலிமையுடன் பதிவாகியிருக்கிறதா எனும் கேள்வியும் முளைத்தது. அந்த நொடியில் எனக்குள் உதித்த பெயர் தொ.மு.சி.ரகுநாதன். அவர் எழுதிய பஞ்சும் பசியும் நாவலை தமிழில் எழுதப்பட்ட தனித்துவமான பாட்டாளி வர்க்க நாவல் என்று மதிப்பிடலாமா?. அதற்கு முன்பு வந்த தமிழ் நாவல்களில் பாட்டாளிகளின் பாடுகள் பாடப்பட வில்லையா?.

நிச்சயமாக எழுத்தாளர்கள் எழுதியிருக்கிறார்கள். கு.சி.பா, டி.செல்வராஜ் துவங்கி இன்றைக்கு எழுதிக் கொண்டிருக்கும் பாரதி நாதன் வரையிலும் சிறு பட்டியல் ஒன்று மனதிற்குள் ஒடத்துவங்கியது.

நிலவுடமைச் சமூகம் சிதைந்து முதலாளித்துவ சமூகம் உருக்கொள்ளும் காட்சிகளை உள்டக்கிய நாவல்கள் உலகெங்கும் எல்லா மொழிகளிலும் எழுதப்பட்டுக் கொண்டிருந்த காலம் ஒன்று இருந்தது. 1910ல் அப்படி எழுதப்பட்ட பாட்டாளி வர்க்க நாவல்களின் பெரும்பட்டியல் இணையத்தில் கொட்டிக்கிடக்கிறது. இழப்பதற்கு தன் உழைப்பத் தவிர எதுவுமற்ற பாட்டாளிகளின் உக்கிரமான கலகத்தை, நிறுவனங்களுக்கு எதிரான அவர்களின் போராட்ட வாழ்வினை உள்டக்கமாகக் கொண்ட நாவல்கள் இன்று வரையிலும் எழுதப்பட்டே வருகிறது.

பாட்டாளி வர்க்க நாவல்கள் தமிழ் மொழியில் எழுதப்பட்டிருக்கிறதா? அப்படி எழுதப்பட்ட நாவல்களின் மீது வாசக கவனம் குவிந்திருக்கிறதா?. எழுதப்பட்டிருந்தாலும் அதற்குள் சமூக யதார்த்தம் கச்சிதமாக பதிவாகியிருக்கிறதா?. சட்டென ஆமாம் என்று சொல்ல முடியவில்லை. வெண்மணியின் வரலாற்றையும் கூட தவறாகவும் அரசியல் கவனமின்மையிலும் பதிவு செய்த நாவல்கள் தமிழில் எழுதப்பட்டு இருக்கிறது. ஏன் இரண்டாயிரத்திற்குப் பிறகான நாளில்கூட எழுதப்பட்டதும் நடந்தது.

பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் (Pattalikalin Kathaippadalgal) - 1 | எழுத்தாளர் ம.மணிமாறன் | பாட்டாளி (Proletariat) | கார்க்கியின் தாய்

அதன் அரசியல் போதாமைகள் இன்று வரையிலும் கூட சரிவர பேசப்பட்டிருக்கவில்லை. இந்தத் தொடரில் அதனைக் குறித்தும் பேச வேண்டும். எல்லாவற்றையும் தொகுத்துப் பார்ப்பது தமிழ் மரபின் ஒருபகுதி. அந்த அடிப்படையில் இந்த நிலத்தில் நிகழ்ந்த மக்கள் எழுச்சிகள். அரசதிகாரத்திற்கு எதிரான கலகங்கள். ஆயுதம் தாங்கிய போராட்டங்கள் என ஒவ்வொன்றைப் பற்றியும் பதிவுகள் இருக்கிறதா?. இருந்தால் அந்த வரலாற்றுப் பிரதிகளின் மீது வாசக கவனம் ஏற்பட்டிருக்கிறதா?. அவற்றையெல்லாம் ஏன் தொகுத்து வாசகனின் பார்வைக்கு கொண்டுவரக்கூடாது எனும் உப கேள்வி எழுந்ததே பாட்டாளிகளின் கதைப்பாடல் எனும் தொடர் உருவாகிட முக்கியமான காரணம்.

எதை எழுத வேண்டும்..

எழுதுவது என்று முடிவான பிறகு எதை எதை எழுத்தில் கவனப்படுத்த வேண்டும் என்பதில் ஒரு தெளிவும் தேவைப்படுகிறது. மக்களிடையே தீவிரமாக செயல்பட்ட கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களின் வாழ்கை வரலாறு அவர்கள் நடத்திய மக்கள் போராட்டங்கள் எல்லாம் பநூலாகியிருக்கிறதே அதனை எழுதலாமா?
போராட்டகால வெப்பத்தை தன்னுடைய சொல் எனும் ஆயுதம் கொண்டு கூர்மைப்படுத்திய கவிதைகளைக் குறித்து எழுதிடலாமா?. இப்படி விதவிதமாக யோசனைகள் உருவாகத் துவங்கியது. இந்த தொடருக்கு பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் எனத் தலைப்பு சூட்டி முகநூலில் பதிவு செய்தவுடனே ”தோழர் நான் ரொம்ப காலமா நாட்டுப்புறப் பாடல்களை சேகரிச்சுக்கிட்டு இருக்கிறேன்.

அதுல பாட்டாளி மக்களோட துயரத்தைச் சொல்கிற பாடல்கள் நிறைய இருக்கு அதை நீங்க தாராளமாக பயன்படுத்திக்கலாம் “அப்பிடின்னு ஒரு அலைபேசி அழைப்பு வந்தது. சட்டென நான் தடுமாறிப் போனேன். சொல்வதை தெளிவாகச் சொல்ல வேண்டும். யாருக்காக எழுதுகிறோம் என்பதில் எந்த தடுமாற்றமும் வந்துவிடக்கூடடாது என்பதில் நான் உறுதியானேன். எல்லாவற்றையும் அப்படி அப்படியே புரிந்து கொள்ள மட்டுமே நாம் அறியாமலே பழக்கப் படுத்தப்பட்டிருக்கிறோம். எனவேதான் தெளிவாக இந்தத் தொடரின் உள்ளடக்கம் எதுவென கவனப்படுத்த வேண்டியது அவசியமாகிறது. தமிழ் மொழியியல் எழுதப்பட்டிருக்கிற பாட்டாளி வர்க்க போராட்டங்களை பின்புலமாகக் கொண்ட நாவல்களை மட்டுமே நாம் கவனத்தில் கொள்ளப் போகிறோம். குறிப்பாக கட்சி சார் இடதுசாரிகள், கட்சி சாராத இடதுசாரிகள் எழுதிய எழுத்துக்கள் எனப் பேதம் பிரிக்கப்போவதில்லை. நம்முடைய வர்க்க கலாச்சார எதிரிகள் நம்மீது வைத்திருக்கும் விமர்சனங்களையும், அதற்காக அவர்கள் உருவாக்கிய எழுத்துப்பிரதிகள் எப்படி அபத்தமானவை என்பதனையும் சேர்த்தே பேச வேண்டும்.

காலம் முன்பைப் போல மிகுந்த பதவிசாக இல்லை. ஒரு காலத்தில் தன்னை வலதுசாரி என்றோ அல்லது சனாதனக் கருத்தியலின் ஆதரவாளன் என்றோ சொல்லிக் கொள்வதில் எழுத்தாளர்களுக்கு அவ்வளவு உவப்பு இருந்ததில்லை. ஆனால் இப்போது சூழல் மாறியிருக்கிறது. இரண்டாம் உலகப் போர் நாட்களின் போது ஐரோப்பிய அறிவாளிகளும், எழுத்தாளர்களும் பாசிச ஆதரவாளர்களாக தங்களை கூச்சமேயில்லாமல் வெளிப்படுத்தியதைப் போலான சூழல் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் தென்படத் துவங்கி இருக்கிறது. இப்போது நாமும்கூட இன்னும் வெளிப்படையாக யாருடன் இருக்கிறோம். யாருக்காக எழுதுகிறோம் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். நாம் எழுத வேண்டியது மக்களின் பாடுகளைத்தான். மக்களின் வரலாறுகளை எழுதிய முன்மாதிரியான படைப்புகளை மட்டும் இந்தத் தொடரில் கவனப்படுத்துகிறேன். இந்த தொடரின் வாசகர்கள் என நான் புரிந்து கொள்வது எழுத்தாளர் இயக்கங்களில் எழுதும் வேட்கயுடன் இருக்கும் எழுத்தாளர்களைத்தான். எப்போதும் களத்தில் மக்கள் பணியாற்றிட பெரும் உத்வேகம் தேவைப்படுகிறது.

தத்துவத் தெளிவினை எப்போதும் ஏற்படுத்திடும் வல்லமை கொண்டவை இலக்கியங்கள். நமது வர்க்கத்தின் சொந்தக் கதைகளை நினைவூட்டுவதன் மூலம் களத்தில் பணியாற்றும் தோழர்களிடம் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் உருவாக்கிட முடியும் என்று நம்புகிறேன். எழுதப்பட்ட நாவல்களின் காலத்தோடும் அதன் வரலாற்றுப் பின்புலத்தோடும் படைப்புகளை புரிந்து கொள்வதற்கான கருவியாக மட்டுமே இந்த கட்டுரைத் தொடர்களை எழுத இருக்கிறேன்

எங்கிருந்து துவங்குவது..

நிச்சயமாக எழுத்தின் திசைவழியை அறிந்து நகர்ந்திட நமக்கு நல்ல துவக்கம் அவசியம். தமிழில் நாவல் எழுதத் துவங்கிய எல்லோரும் தனக்கான துவக்கப்புள்ளிகளை சோவியத் படைப்புகளில் இருந்து கற்றே துவங்கியிருக்கிறார்கள். இவற்றில் விதிவிலக்குகளும் இருக்கலாம். லியோ டால்ஸ்டாயும் தாஸ்தாவெஸ்கியுமே நம் எழுத்தாளர்களின் ஆதர்சங்களாக இருந்திருக்கிறார்கள். ஆச்சர்யம் அப்போதும்கூட அவர்களால் மக்ஸிம் கார்க்கியின் பெயரை சட்டென சொல்ல முடியவில்லை. அதற்கு நவீன இலக்கிய முகவர்கள் என தன்னை நம்பும் பலரும் சொல்லிக் கொண்டிருப்பது. “கார்க்கி ஒரு கட்சி சார் மார்க்ஸியர். அந்த எழுத்தும்கூட அவருடைய கொள்கை வழி நின்றுதான் பேசவேண்டும் எனும் நிர்ப்பந்தத்தை அவருக்கு ஏற்படுத்தியிருக்கும்.

பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் (Pattalikalin Kathaippadalgal) - 1 | எழுத்தாளர் ம.மணிமாறன் | பாட்டாளி (Proletariat) | கார்க்கியின் தாய்

ஆகவே கார்க்கியால் அமரத்துவமான கலைப் படப்புகளை உருவாக்க முடியாமல் போய்விட்டது. இது கார்க்கியின் பிரச்சனை மட்டுமல்ல. இது கொள்கைவழி நின்று எழுதிடும் எல்லா எழுத்தாளர்களுக்கும் உருவாகிடும் பிரச்சனை. இதில் தமிழ் இலக்கியவாதிகள் எப்படி மட்டும் விலக்காக இருக்க முடியும் என சுத்த இலக்கியவாதிகள் நம்புகிறார்கள். ஆலைத் தொழிலாளிகளின் துயரங்களையோ அல்லது விவசாயக்கூலிகளின் பாடுகளையோ நாவலாக்கினால் கலைத்தன்மை பாழ்படும் எனத் திட்டமிட்டு கருத்துக்களை உருவாக்கி நம்மிடம் அதை நம்புவதைத் தவிர உங்களுக்கு வழிகள் ஏதுமில்லை என்று விடாது சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள். அதனால்தான் அவர்கள் போரும் அமைதியும், புத்துயிர்ப்பு எனவும். அசடன், கரம சோவ் சகோதரர்கள் எனவும் சொல்லி சொல்லி கார்க்கியை கடந்து போகிறார்கள்.

அவர்களால் ஒருபோதும் கார்க்கியின் தாயை பொருட்படுத்த முடியாது. விடுபடலின் துக்கம் தனித்தது. நாம் உறுதியாக மக்ஸிம் கார்க்கயின் தாயில் இருந்துதான் துவங்க வேண்டும். தாயிலிருந்துதான் தமிழில் பாட்டாளி வர்க்க இலக்கிய இயக்கம் துவங்குகிறது. தொழிலாளி வர்க்கத்தின் பாடுகளைக் காட்சிப்படுத்திய படைப்பாளர்கள் பலரும் தாய் நாவலில் இருந்தே ஆதர்சம் பெற்றிருக்கிறார்கள். பாட்டாளிகளின் வாழ்க்கையை எழுத்தாக்க நினைத்து படைப்புகளை உருவாக்கி நிரல்படுத்தியிருக்கும் எல்லோருக்கும் கார்க்கியின் தாய் நாவலே ஆதர்ஸம் என்பதால் நானும் நம்முடைய பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் தொடரின் முதல்பாடலாக மாக்சிம் கார்க்கியின் தாய் நாவலைக் குறித்து கவனப்படுத்தலாம் என நினைக்கிறேன். அப்படியானால் உலகின் எல்லா மொழி பாட்டாளி வர்க்க நாவல்களையும் எழுதப் போகிறோமா?. நிச்சயம் இல்லை. நம்முடைய கட்டுரைகளின் காட்சி எல்லை இந்திய வரைபடத்திற்குள்தான். அதிலும் குறிப்பாக தமிழ் மொழியில் எழுதப்பட்ட நாவல்களைக் குறித்து கூடுதலாக கவனப்படுத்தலாம் என்று நினைக்கிறேன்.

(தாய் எனும் கார்க்கியின் மகா காவியம் குறித்த வாசகப் பரவசம் பாட்டாளிகளின் கதைப்பாடல்கன் தொடரின் பாடலாக அடுத்த வாரம்…)..
காத்திருங்கள் கானம் கேட்க…

தோழமையுடன்
ம. மணிமாறன்.

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Show 2 Comments

2 Comments

  1. நல்ல தொடக்கம் தோழர். தொடருங்கள். கொள்கைப் பிடிப்புடன் இருப்பவர்களால் கலைப் படைப்பினை உருவாக்க முடியாது என்று சொல்லுகின்ற சில.மொன்னைகளுக்கு பதில் சொல்லுகின்ற விதமாகவும் தங்கள் எழுத்து அமையும் என்று நிச்சயமாக நம்புகிறேன். வாழ்த்துக்கள்.
    என்றென்றும் தோழமையுடன்
    மதிகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *