Payanam Thodarnthathu Short Story By Shanthi Saravanan. பயணம் தொடர்ந்தது.... சிறுகதை - சாந்தி சரவணன்

பயணம் தொடர்ந்தது…. சிறுகதை – சாந்தி சரவணன்




யாழினி பயங்கர கோபத்தோடு இருந்தாள். என்னாச்சு இந்த புவனா அம்மாவிற்கு. ஊரடங்கு, கொரானா தொற்று என உலகமெங்கும் முடங்கி கிடப்பதால் , வீட்டு வேலை செய்யும் புவனா அம்மாவை அந்த காலனியில் இருக்கும் அனைவரும் நிறுத்திவிட்டனர். ஆனால் யாழினி மட்டுமே அவர்களை நிறுத்தவில்லை. காரணம் தினமும் பேப்பர் போடுகிற பையன், பால் பெக்கட், காய் கறிகள் விற்கும் அண்ணா என இவர்களிடம் இருந்து வராத கொரானாவா இந்த வீட்டு வேலை செய்யும் புவனாவிடமிருந்து மட்டுமா வந்துவிட போகிறது? அதுமட்டுமின்றி. அவளின் 9 வயது மகன் பாலு அவளையே நம்பியே இருக்கிறான்.

அவளின் கணவன் அவன் பிறந்து இரண்டு வருட குழந்தையாக இருந்த போது திடிரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டான். பாலுவை நல்லபடியாக வாழ்க்கையில் உயர்ந்த நிலையில் வாழ வைக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே புவனாவின் இலக்கு. இது யாழினிக்கு நன்கு தெரியும். அதனால் தான் அவள் புவனா மேல் சற்று அளவிற்கு மிறிய கரிசனத்தோடு நடந்து கொள்வாள். ஊரடங்கு தொடங்கியவுடன் பாலுவின் பள்ளிக்கும் முற்று புள்ளி வைத்துவிட்டாள் புவனா. யாழினி கணவன் அமுதனிடம் சொல்லி அவள் வீட்டில் கார் துடைக்கும் பணிக்கு அவனை வேலைக்கு அமர்த்தினாள்.

அதுமட்டுமின்றி தன் தோழிகளிடமெல்லாம் அவனை சிபாரிசு செய்து பல இடங்களில் அவனுக்கு கார் துடைக்கும் வேலையை வாங்கி கொடுத்தாள். அதில் அவளுக்கு பெருமை. அதுமட்டுமல்ல மாலையில் பூ கட்டி கடையில் அமர்ந்து விடுவாள் புவனா அம்மா. பாலு தான் வீதி வீதியாக சென்று பூக்களை விற்று வருவான்.

தன் மகன் சித்தார்த் வயது ஒத்த பாலுவை அவளுக்கு அவளுடைய மகனாகவே தோன்றும். அதனால் தான் புவனா அம்மாவிற்கு வீட்டு வேலை தொடர்கிறது.

காலிங்பெல் சத்தம் கேட்டு புவனா அம்மா தான் என வேகமாக போய் கதவை திறக்க போகையில் இருக்கிறது இந்த புவனா அம்மாவிற்கு இன்று என யோசித்தப்படி திறந்தவளுக்கு பாலு அழுத நிலையில் நின்று கொண்டு இருந்தை பார்த்து வந்த கோபம் பறந்தது.

வாடா பாலு, “என்னாச்சு, அம்மாவிற்கும் பிள்ளைக்கும் இரண்டு நாளா ஆளைக் காணோம்”

உடனே தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தான் பாலு.

“அக்கா அம்மா அம்மா”

“என்னாச்சு டா”, அம்மாவிற்கு

அம்மாவிற்கு இரண்டு நாளாக நல்ல காய்ச்சல். கொரானாவா இருக்கலாம் என அம்மாவை கவர்மென்ட் அஸ்பட்டலுக்கு ஆம்புலன்ஸ்க்கு போன் போட்டு பக்கத்து வீட்டுகாரவுங்க அனுப்பி விட்டாங்க.

அதனாலா தான் வரல, என பேசிக் கொண்டே இருக்கும் போது யாழினிக்கு தலை சுத்த ஆரம்பித்து விட்டது.

அய்யோ அப்ப நம்ம எல்லாம் முதல் கொரோனா செக் செய்யனும்.

சரியாகிவிடும். சரி, “நீயும் போய் ரெஸ்ட் எடுத்துக்கோ..”.

“அம்மா வந்துடுவாங்க”, என்றாள் மனிதாபம் எல்லாம் மறந்து போய்….

“அவன் அழுதபடி சென்றான்.”

சிறிது நேரத்தில் தகவல் புவனா அம்மா இறந்து விட்டார். தகனத்திற்கு கூட உடலை தரவில்லை. இனி பாலுவின் நிலை? பெரிய கேள்விக்குறியாக யாழினி நெற்றியில்.

அன்று இரவு மனம் சுழன்றுக் கொண்டே இருந்தது. விரைவில் தூங்கிவிட்டாள்.

குட்டி மனிதர்கள் தவழந்தும், மூட்டி போட்டு கொண்டும், நடை வண்டி பிடித்து கொண்டும், நடந்தும் ஓடியும் குழந்தைகள் தொழிலாளர் ஒழிப்பு மாநாட்டிற்கு வேகமாக வந்து கொண்டே இருந்தனர். மாநாடு துவங்கி விட்டது.

இது என்ன மாற்றம். குழந்தை தொழிலாளர் ஒழிப்பு என சமூக ஆர்வலர்கள் தான் கொடி பிடிப்பார்கள். இது என்ன புதுசா இருக்கே? குழந்கைகளே தங்கள் உரிமைகளை கேட்கின்றனரே!

தீப்பெட்டி பெக்டரியில் பணிபுரியும் குட்டி மனிதர்கள், சாயப் பட்டறையில் பணிபுரியும் குட்டி மனிதர்கள், ரப்பர் தோட்டங்களில் வேலை செய்யும் குட்டி மனிதர்கள், உணவு விடுதிகளில் வேலைச் செய்யும் குட்டி மனிதர்கள், பழைய குப்பைகளை அகற்றும் குட்டி மனிதர்கள், பால் போடும் குட்டி மனிதர்கள், பேப்பர் போடும் குட்டி மனிதர்கள், பூ விற்கும் குட்டி மனிதர்கள் மட்டுமே குழந்தை தொழிலாளர் என தவறுதலாக நினைக்கும் உங்களை என்ன சொவ்வது?

திரைப்படத்தில் பிறந்தவுடன் காட்சிகளில் காட்டப்படும் மழலை. ஊடகங்களில் டைபர் விளம்பரத்தில் வரும் இரண்டு மாத குழந்தை? அது சம்பாதித்து தருவதும் பணம் தானே! அவர்கள் குழந்தை தொழிலாளர் இல்லையா?

வூட்வர்ஸ் விளம்பரம்
பேம்பர்ஸ் விளம்பரம்
அனையாடை விளம்பரம்
ஹல்த் டிரிங்ஸ் விளம்பரம்
சாக்லேட் விளம்பரம்
ஆடை விளம்பரம்
மருந்து விளம்பரம்
தின்பண்டங்கள் விளம்பரம்!
அவர்கள் குழந்தை தொழிலாளர் இல்லையா?
இதுமட்டுமா?

சீரியலில் குழந்தை கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து போட்டி பொறாமை போன்ற தூர் எண்ணங்களை மழலையர் மனதில் விதைப்பது. அவர்களின் நடிப்பை காசாக்குவது! அவர்கள் குழந்தை தொழிலாளர் இல்லையா?

ஸ்டேஜ் ஷோ என்ற பெயரில் குழந்தைகளை ஆடல் பாடல் என மேடைகளில் அவர்களை வதைப்பது? யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிவிட்டர்…. இன்னும் ஏதாவது இப்படி எத்தனை வெளி தளங்களில் இந்த குட்டி மனிதர்களின் உணர்வை சிதைப்பது! அவர்கள் குழந்தை தொழிலாளர் இல்லையா?

பெரிய பணக்கார வீடுகளில் அவர்கள் குழந்தைகளை தூக்கி கொள்ள 7 வயது சிறார்களை பணியில் அமர்ந்துவது.! அவர்கள் குழந்தை தொழிலாளி இல்லையா?

இப்படி விளம்பரங்களில் அவர்களை நடிக்க வைத்து பணம் சாம்பாதித்தால் அவர்கள் குழந்தை தொழிலாளி இல்லையா?

குழந்தைகள் என்ற பெயரில் இந்த குட்டி மனிதர்கள் ஒவ்வொன்றும் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல திரானியில்லாமல் திணறினரார்கள் …… அவர்களை பல விதங்களில் ஆட் கொண்டவர்கள்?

அந்த கூட்டத்தில் பாலுவின் மெல்லிய உருவம் யாழினியின் மேல் கேள்வி கணைகளை தொடுக்க ஆரம்பித்தது.

சித்தார்த்தை கார் துடைக்க விடுவிர்களா அக்கா? அப்படி இருக்கும் போது எனக்கு தாங்கள் செய்தது நியாயமா? நானும் படிக்க வேண்டும் என ஆசையாக இருந்தேன். முன்னாடி ஒரு வேளை சோறு கிடைக்கும் என என் அம்மா வேலைக்கு அனுப்பாமல் பள்ளிக்கு அனுப்பினார்கள்? ஆனால் கொரோனா ஏற்படுத்திய புதிய யூகம் ஆன்லைன் வகுப்பு. அலைபேசி வாங்கவோ கணினி வாங்கவோ எது எங்களிடம் காசு? என் கற்றல் நின்றது. தொழில் தொடங்கியது. இப்போது அம்மா கூட இல்லை. தற்காலிக குழந்தை தொழிலாளியாக இருக்கும் என்னை இந்த சமூகம் இனி நிரந்தர குழந்தை தொழிலாளியாக உருவாக்கிவிடும். ஏன் படிப்பு கனவாகி காலாவதியாகும்…. என அவனது தொடர் கேள்வி ஏவுகணைகள் அவள் மேல் பாய்ந்துக் கொண்டே இருந்தது?

“அதிர்ந்து கண் விழித்தாள்”, யாழினி.

உடல் முழுவதும் வேர்த்து போய் இருந்தது.

“அமுதனை எழுப்பினாள்”

“என்னப்பா இந்த நேரத்தில்”, என்றான்

“தயவு செய்து வாங்க பாலுவை போய் அழைத்து வரலாம்”, என்றாள் கலக்கத்தோடு

“அரை தூக்கத்தில் எழுந்த அமுதன் விழித்தான்”

“என்னடி உளருர”

“இல்லைங்க…..”

“எனக்கு அவன் இப்போ இங்கே வேண்டும் என அழ ஆரம்பித்தாள்”.

அமுதன், “சரி சரி அழாதே நான் போய் அழைத்து வருகிறேன்”, என கிளம்பி சென்று குடிசையில் தனியாக தூங்கி கொண்டு இருந்த பாலுவை அழைத்து வந்தான்.

யாழினி அவனை கட்டிப் பிடித்து முத்தமிட்டாள்.

காலம் யாருக்காகவும் காத்து இருக்காது. நாட்கள் கடந்தன.

கொரோனா அலை ஒயிந்தது மக்கள் இயல்பு நிலை வாழ்க்கை வாழ ஆரம்பித்தனர்.

பள்ளிகள் வழக்கம் போல துவங்கியது.

சித்தார்த், பாலு இருவரும் ஒரே அரசு பள்ளிக்கு கிளம்பிக் கொண்டு இருந்தார்கள்.

யாழினி இருவருக்கும் உணவு கட்டிக் கொண்டு இருந்தாள்.

அமுதன் அவர்களை அழைத்துச் செல்ல ஆயுதமாகிக் கொண்டு இருந்தான்.

தொழிலுக்கு மட்டுமன்றி பாலுவின் கல்வி நிற்றலுக்கும் முற்று வைத்து பாலுவின் கல்வி பயணம் தொடங்கியது……..

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Show 1 Comment

1 Comment

  1. Moorthi

    பிரமாதம்
    அற்புதம்
    எளிய நடை
    படிக்க ஈர்க்கும் கலை
    பள்ளி பருவத்தை
    கண்ணெதிரே
    காட்டிற்று

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *