பழையன கழிதலும் , ஆனந்தாயி, குறுக்குவெட்டு , உண்மைக்கு முன்னும் பின்னும் என்று தமிழ் இலக்கியத்தில் தலித் எழுத்தினை தனது நாவல்களின் வழியே விதை மண்ணைப் பிளப்பது போல வீரியத்தோடு எழுதிகிறவர் எழுத்தாளர் ப.சிவகாமி. 2011 ல் கதவடைப்பு என்னும் முதல் கவிதை தொகுப்புக்கு பிறகு 2012 ல் வெளிவந்த அவரது இரண்டாவது கவிதை தொகுப்பு இது. ” மலர் என்பது ஒரு பொதுச் சொல்லாக இருந்தாலும் அதற்கான பொதுக் குணங்கள் இருந்தாலும் மலர் என்ற பெயரில் எந்த மலரும் இல்லை “ என்று தனது கவிதையினை பற்றி அவர் குறிப்பிடுவது போல இந்தத் தொகுப்பும் மலையில் மலர்ந்த மலரென நம்மை கிறங்கச் செய்கிறது.
நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகள், கட்டுரைகள் என எழுதி தீர்த்தப் பின்பும் கவிதையில் எழுதுவதெற்கன சிவகாமிக்கு தனித்த பொருளும் மொழியும் இருக்கிறதென்பதை இத்தொகுப்பு முழுமையிலும் காணமுடிகிறது. தன்னை ஒரு சமூகபட்சியென அரூபி சுற்றும் முற்றும் நோக்கி கொத்தியெடுத்தவற்றை ஊதி மொழிதடவி கொதிக்கும் குருதியென கவிதையாக்கி தந்திருக்கிறார். விதைப்புட்டியிலிருந்து உழுத நிலத்தில் விதைப்பதற்காக கைகளின் வழியே கடலை பருப்புகளை உதிர்ப்பதை போல வந்து விழுந்திருக்கிறது இவரது கவிதை மொழி.
” பெரிய ஒற்றைக் கண்ணென குளம் ” என்ற வரிகளை இவரது கவிதையொன்றிலிருந்து நாம் வாசிக்கும்போது இந்த பிரபஞ்சத்தையே வானத்திலிருந்து பார்ப்பதை போலிருக்கிறது.
“ எத்தனைமுறை எழுதிப்பார்த்தும்
மனிதனும் இயற்கையின் அங்கமென
ஏற்க இயலவில்லை “ என்றெழுதி இயற்கையோடு நாம் எப்போதும் இயைந்ததில்லை என்பதை வலியுறுத்துகிறார். நமக்குள்ளேயே நாம் அந்நியப்பட்டு கிடப்பதை முகரதம் என்ற கவிதையில் கீழ்கண்டவாறு போட்டுடைக்கிறார்.
“ புன்சிரிப்பின் பன்னீர் ரோஜாக்களை
மாலை வரை வாடாதிருக்க
எத்தனை முறை நீர் தெளித்து
ஈரத்துணியில் போர்த்தி வைப்பது “
தனது நாவல்களில் காணப்படுவதை போலவே இவரது பெண்ணியப் பார்வை தவிர்க்கவோ விலக்கவோ முடியாதது என்பதை கவிதையிலும் காணமுடிகிறது.
“ அம்பறாத் தூணியை இன்னமும்
அணிந்திருக்கும் வேடன் கண்டு
எந்தப் புறா மயங்கும் அவனழகில் “.
வேறொரு கவிதையில் “ ரொம்பவும் புனிதப்படுத்தப்பட்ட காதலின் மீது / வசதியாக அமர்ந்துவிடுகிறான் சாத்தான்” என்று காதலை நேர்நிறுத்தி கல்லெறிகிறார்.
திட்டமிட முடியாத நமது வாழ்வின் போதமையை..
“ இன்னும் கூட சிறியதாய்
முன்பே திட்டமிட்டிருக்கலாமோ
காலை எழுந்தவுடன் படிப்பு போல
ஆறடி நிலத்தில் மட்டும் “ என்ற வரிகளினூடே எழுப்பும் உணர்வுகள் அடங்கிடவேயில்லை.
மட்டுமின்றி மதம், சாதி, கடவுள், பிற்போக்கு என எல்லாவற்றிலும் ஊடுறுவிப் பாயும் மெல்லிய கத்தியென விரவி நிற்கிறது இவரது சொற்கள். புதினத்தை விடவும் கவிதைகளின் சொற்களுக்காக காத்திருக்கிறேன் என்று குறிப்பிடும் சிவகாமியின் கவிதைகள் அதனை பெற்று நிரைந்திருக்கின்றன.
’ சிறுமிகளின் சடலங்களில் கருணை ’ என்ற தலைப்பிலான ஒரு கவிதையில்..,
“ முட்புதர்களில் ஒளித்து வைக்கப்பட்டு
வல்லுறவு கறைகளுடன் கிடந்த
பூக்களின் கடைவாய் பற்களில்
முழுதும் தின்று முடிக்காத
பாதி சாக்லேட்டைப் பார்க்கும் போது
கதறி அழுகிறது கருணை
அதன் நேரம் குறைக்கப்பட்டதென்று “ ……. என்ற வரிகளை வாசிக்கும்போது உடலெங்கும் முள்தைத்த அந்தச் சிறுமியின் உடல்போல் கணக்கிறது இந்தப் புத்தகம்.
நூல் : பயனற்ற கண்ணீர் ( கவிதை )
ஆசிரியர் : சிவகாமி
வெளீயீடு : உயிர்மை பதிப்பகம்
விலை : 60/-
ப.செல்வகுமார் பெரம்பலூர்.