சிறார் இலக்கியத்துக்குள் நுழைவது என்பது, நாமே நமது சிறு வயது காலத்திற்குள் நுழைவது போன்றது. அந்த உலகம் எந்தக் கவலையும் இல்லாமல் படிப்பு, விளையாட்டு, நண்பர்கள், ஆசிரியர், வகுப்பு, மைதானம், வீட்டுப் பாடம் என மிக அழகாக இருந்த காலம். இன்று, நமது அடுத்தத் தலைமுறை அந்தக் காலத்தைக் கொண்டாட என்னென்ன தேவையோ அதை சாத்தியமாக்குவது நமது கடமை என்று நினைக்கிறேன். அந்த வகையில், இப்போது இருக்கும் சிறார் இலக்கியங்களை தேடித் தேடி அவர்களுக்குப் பரிசளிக்க வேண்டும். அதன் மூலம், அவர்கள் வகுப்பறைக்கு வெளியேயும் நிறைய கற்றுக் கொள்ளச் செய்ய முடியும்.
குழந்தைகளின் பள்ளிப் பருவத்தில் ஒரு முக்கியமான அங்கமான பென்சில்களையே கதை மாந்தர்களாக உருவாக்கி, அவர்களுக்குள் நடக்கும் உரையாடல்களையும் தன் கற்பனை மூலம், #பென்சில்களின்_அட்டகாசம் என்ற இந்நூலை குழந்தைகளுக்கே உரிய குதூகலத்துடன் இயற்றியுள்ளார், நூலாசிரியர், விழியன். இவர், சிறார் இலக்கியம், சிறார் கல்வி சார்ந்த முன்னெடுப்புகள், ஆசிரியர் – மாணவர் உறவு குறித்த கட்டுரைகள் என பல தளங்களில் சுறுசுறுப்பாக இயங்கி வருவதோடு, தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கான பள்ளிக் கல்விக்கான துணைக் குழுவில் உறுப்பினராகவும் இருக்கிறார்.
சரி, பென்சில்களே கதையின் நாயகர்கள். அப்படியானால், அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனிப் பெயர்கள் இருக்க வேண்டுமே – அந்தப் பென்சில்களுக்கு உரிமையான மாணவர்களின் பெயர்களே, பென்சில்களின் பெயர்களாக வைக்கப் பட்டது. அவற்றின் உருவத்தையும், வண்ணத்தையும் விதவிதமாக விவரிக்கும் ஆசிரியர், குட்டையான பென்சில்கள் தன் வாழ்வில் அதிகமாக எழுதி இருக்கின்ற காரணத்தால், அவை வயது முதிர்ந்த மூத்த பென்சில்கள் எனவும், புதிதாக உயரமாக இருக்கும் பென்சில்கள் வயதில் குறைந்த, இளமையானவை எனவும் தர்க்க ரீதியாக விளக்கம் தருகிறார்.
குட்டையானவை, நீளமானவை, குண்டானவை, ஒல்லியானவை, பல வண்ணத்திலானவை, தலையில் ரப்பர் வைத்தவை, வாசனை மிக்கவை, நவீன மைக்ரோடிப் பென்சில், எனப் பென்சில்களில் தான் எத்தனை வகை..!!! இந்த வகுப்பில் உள்ள பென்சில்கள் எல்லாரும் சேர்ந்து தங்கள் எஜமானர்களுக்குத் தெரியாமல் ஒரு சுற்றுலா செல்லத் திட்டம் தீட்டுகிறார்கள். குழந்தைகளின் மீதான நூலாசிரியரின் அக்கறை, அந்தப் பென்சில்கள் சொல்லும் இந்த வரிகளில் மிளிர்கிறது:
//”அப்ப இன்று மாலையும் நாளை காலையும் வீட்டில் ஏதும் எழுத முடியாதே” என்று ஒரு பென்சில் கேட்க,
“பள்ளியில் படிப்பதே போதும். வீட்டில் சென்று அனைவரும் விளையாடட்டும்” என்றது மற்றொரு பென்சில்.//
இவ்வாறு, குழந்தைகள் உலகில் இருந்து பிரயாணித்துப் பென்சில்களின் உலகிற்கு நம்மை அழைத்துச் செல்கிறது இக்கதை. சுற்றுலா என்றால், பள்ளிச் சிறுவர்கள் போல அனைவரும் சேர்ந்து பேருந்தில் செல்ல வேண்டுமே. அதற்காக யோசித்து, பொம்மைகள் நிறைந்த, L.K.G வகுப்பிற்குள் நுழைந்து, அங்கிருக்கும் மஞ்சள் நிற பஸ் பொம்மையில் ஏறிப் பயணத்தைத் தொடங்கலாம் என்பது, அவர்களின் திட்டம். இவ்வாறு, குழந்தைகளின் கற்பனைக்குத் தீனியாகப் பல திருப்பங்களும், உணர்வுகளும் இக்கதையில் ஆங்காங்கே தேவைக்கேற்ப நிரப்பி வைக்கப் பட்டுள்ளன.
பென்சில்கள் இருந்த இடத்திற்கு வந்த சார்ப்பனர்களைத் தங்கள் எதிரியென்றும், பேனாவை தங்கள் உறவினர் என்றும் சொல்லும் இந்தப் பென்சில்கள், கிராபைட் கண்டுபிடித்த 1565ம் ஆண்டு முதல் தங்கள் முன்னோர்கள் பிறந்தனர் என்றும், 1858ம் ஆண்டு முதல் ரப்பர் வைத்த பென்சில்கள் வந்தன என்றும், பெருமையாகத் தங்கள் வரலாற்றைச் சொல்கின்றன. மறுபுறம், யாருக்கும் தெரியாமல் சுற்றுலா சென்று வந்த நேரம், அவர்களின் உரிமையாளர்களுக்கு வீட்டில் என்ன நடந்தது, பெற்றோரிடம் எவ்வாறெல்லாம் வசை விழுந்தது என்பதையும் விட்டு வைக்காமல், அந்தக் குழந்தைகளையும் காட்சிப்படுத்திய விதம் அருமை.
நூலின் இறுதியில், பென்சில்களைப் பற்றிய பல அரிய வரலாற்றுத் தகவல்களையும், புள்ளி விவரங்களையும், குழந்தைகளுக்கு மட்டுமல்ல, பெரியவர்களுக்கும் பிடிக்கும் வகையில் பட்டியலிட்டுள்ளார். இந்நூலை ஆங்கிலத்தில் ‘Pencil’s Day out’ என்ற பெயரில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளனர்.
விழியன் அவர்களுக்குக் குழந்தைகளைப் பிடிக்கும் என்பதைத் தாண்டி, குழந்தைகளுக்கு விழியன் மாமாவையும், அவரது எழுத்துக்களையும் மிகவும் பிடிக்கும். இவ்வாறு சொல்வதற்கு:
1. குழந்தைகள் அவருக்கு எழுதிய கடிதங்களும்,
2. அவருடைய கதைகளுக்குக் குழந்தைகளின் விமர்சன உரைகளும்,
3. தங்கள் பள்ளிக்கும் உரையாற்ற வருமாறு, குழந்தைகளே விடுக்கும் அழைப்புகளுமே சான்றுகளாகும்.
மேலும், விழியன் எழுதிய மற்ற சிறார் புத்தகங்களின் தலைப்புகளை: ராபுலில்லி, மலைப்’பூ’, குறுங், பெருங்கனா, 1650, காராபூந்தி, தேன் முட்டாயி, உங்கா சிங்கா மங்கா, போன்ற சிறுவர்களை ஈர்க்கும் விதத்திலேயே சூட்டியுள்ளார்.
எங்கள் வீட்டிலும், ‘விழியனின் ரசிகை’களாக இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். விழியனின் WhatsApp குழுவில் அவர் பிரசுரிக்கும் சிறார் கதைகள் எல்லாமே அவர்களுக்கு மிகவும் பிடிக்கும். சென்ற ஆண்டு சென்னைப் புத்தகத் திருவிழாவின் போது, மகள்களுக்காக வாங்கிக் கொடுத்தது இந்த அருமையான நூல்.
இன்று, இந்நூலை அவர்களுக்கே தெரியாமல் ரகசியமாக எடுத்துப் படித்தது என்பது, தங்கள் உரிமையாளருக்குத் தெரியாமல், சுற்றுலா சென்று வந்த பென்சில்களின் அட்டகாசத்திற்கும், சிலிர்ப்பிற்கும் சற்றும் குறையாத அனுபவம் தான்..!!!
நூல்: பென்சில்களின் அட்டகாசம்
ஆசிரியர்: விழியன்
வெளியீடு: புக்ஸ் ஃபார் சில்ரன், பாரதி புத்தகாலயம்
பக்கங்கள்: 32
Sankar.T.A.B,
Chennai.