வளரி எழுத்துக்கூடம் ஆசிரியர் அருணாசுந்தரராசன் அவர்களின் பதிப்புரையோடு கவிதை தொகுப்பு துவங்குகிறது. “பொன்னின்நல் பெண் கவிஞர்கள்” -கவிஞர் முனைவர் ஆதிரா அவர்களின் வாழ்த்துரை சிறப்பு.
“பெருவனம் எழுப்பும் காலத்தின் கவிக்குரல்” -மு.முருகேஷ்.
தாய் வழி சமூகம் எப்படி தோன்றியது, அதன் பயணம் என்ன? பயணத்தில் பெண்களின் இன்றைய நிலை என்ன? என பெண் சமூகத்தின் படிநிலைகளை தனக்கேயுரிய பாணியில் பதிவு செய்துள்ளார் தோழர் முருகேஷ். பெண் சமூகத்தின் பயண காலத்தை படிப்படியாக நமக்கு தொகுத்து அளித்துள்ளார்.
ஒரு ஆண் 9 மணிக்கு அலுவலகம் செல்ல 8 மணிக்கு எழுந்தால் கூட சாத்தியப்படும். ஆனால் ஒரு பெண் அதே 9 மணிக்கு அலுவலகம் செல்ல விடியற்காலை 5 மணிக்கு எழ வேண்டும். அப்படி எழுந்தாலும் அவளால் சரியான நேரத்தில் போய் சேர முடியாது. அந்த வித்தியாசத்தில் தான் பெண்களின் நிலை புதைந்த உள்ளது. அந்த புதைந்த நிலையிலும் மலர்ந்த பெண் கவி தோழமைகளின் கவிதைகள் ஒவ்வொன்றும் ஒரு மலர். மலர் என்றாலே வாசம் தானே. மகளிர் படைத்த கவிதை தொகுப்பு.
“பிழைகள்”
பிறப்புறுப்பு பிழையால்
பிறப்பே பிழையாகிவிடவில்லை
குரோமோசோம்கள் குளறுபடியானதில்
குற்றமென்ன செய்தோம் நாங்கள்?
வல்லினமும் இல்லாமல்
மெல்லினமும் இல்லாமல்
இடையினமாய் மாற்றிய இயற்கையின் பிழைகள்
அ. ஈடித் ரேனா
புதுக்கோட்டை
தமிழ்நாடு
உணவு இப்போது துரித நஞ்சாக மாறிவிட்டது. அதை தனது
“துரித நஞ்சு” என்ற கவிதை தலைப்பில் அருமையாக பதிவு செய்துள்ளார் -பி.ஹேமா. முசிறி தமிழ்நாடு
கவிதையின் தலைப்பு: சுவாசம் விற்று – மரீனா இல்யாஸ் நியூசிலாந்து
இளமையைத் தொலைத்து
நோய் நொடி சுமந்து
நாளை வெறுங்கையுடன்
நாடு திரும்பும் எனக்கு
இளைப்பாற இடம்
உண்டா வீட்டில்?
இல்லை
விரட்டப்படுவேனா
முதியோர் இல்லம் ?
குடும்பத்தினருக்காக ஊரைவிட்டு உழைத்து அவர்களை நன்றாக வாழவைத்து கடைசி காலத்தில் தாய் நாட்டிற்கு திருப்பி வரும் போது அந்த தாயின் இருப்பிடம் வீடா அல்லது முதியோர் இல்லம்? பல குடும்பங்களில் நடக்கும் நிகழ்வு காட்சிப்படுத்தி வலிகளை வரிகளாக படைத்துள்ளார்
“சுவாசங்களாய்” – கவிஞர் நெல்லை சு. சோமசுந்தரி சென்னை, தமிழ்நாடு
நிஜமாவே இன்று
நம்முடன் இருப்பது எது?
காற்றில் கலந்த
அவர்களின் சுவாசங்கள்
மட்டுமே
நம்முடன் வாழ்ந்த மனிதர்களை இறப்பு பிரித்து விடுகிறது. ஏன் அவர்கள் நினைவுகள் கூட அதிகபட்சம் 3 தலைமுறை மட்டுமே நினைவில் நிறுத்தி இருக்கும். சில இடங்களில் 2 தலைமுறை. ஆக அவர்களின் சுவாசங்கள் மட்டுமே நமது நினைவில் கலந்திருக்கும் என்ற கவிதையிலிருந்து சில வரிகள்.
“தொலைதல்” என்ற தலைப்பில் இராம. பெருமாள். ஆச்சி, சென்னை கவிதையின் பாடு பொருள் மன அழுத்தத்தை எப்படி தொலைப்பது. சமகாலத்தில் மழலை முதல் முதியோர் வரை உளவியல் சிகிச்சை எடுத்துக் கொள்ளும் நிலை உள்ளது. அதை எது கொண்டு தொலைப்பது. அருமை அரிசிப்பானையும் அம்மாச்சியும் என்ற கவிதை படைத்துள்ளார் கவிஞர் மருத்துவர் பு. சுதர்சன் லவுனியா, இலங்கை. படிக்கும் போது எனது பாட்டி எனது நினைவில் அருமை.
“கடிதங்களின் காதல் தடம்” கவிஞர் பா. மகாலட்சுமி மதுரை காதல் கடிதங்கள்- மன வெளியில் கிழிக்கப்படாமலேயே இருக்கும் என்பதை அழகான கவிதையாக படைத்துள்ளார்.
“நானா நீயா? “ கவிஞர் ஆர். ஆர் ஆனந்தி பீட்டர், மலேசியா திருமணம் முடிந்தவுடன் பிள்ளை பற்றிய கேள்விகள் தொடுக்க ஆரம்பித்து விடும் சமூகம். அதிலும் பிள்ளை பெறாமல் போவதற்கு கணவன் காரணமா அல்லது மனைவியா என்பதில் அவர்களுக்கு எத்தனை ஆர்வம். தம்பதியர் வாழ்வில் வசந்தம் வராத என்ற ஏக்கத்தை அழகாக பதிவு செய்துள்ளார்.
“தனிமையின் மேல் ஒளிரும் பிறை நிலாக்கள்” -கவிஞர்.க.கவிதா, சூரப்பேடு தமிழ்நாடு.
சமகாலத்திய கவிதை. பண தேடலில் மழலையர் மனம் அறியாமல் ஓட்டமாக ஓடும் பெற்றோர்கள் . மழலையர் அம்மாவிற்காக ஏங்கும் ஏக்கத்தை பாடு பொருளாக கொண்டு உள்ள கவிதை. சிறப்பு.
“அப்போது எனக்குத் தெரியவில்லை “ கவிஞர் பூ.கீதா, சென்னை.
சாதி இன்னும் நம்மிடம் உயிர்போடு உலா வருகிறது என்பதை பாடு பொருளாக கொண்டுள்ள கவிதை. சிறப்பு
“வெளிச்சத்தின் கீற்று” – சாந்தி, சென்னை.
என்னுடைய படைப்பு எது நடந்தாலும் ” அதனால் என்ன?” என்ற சொல்லாடலில் கடந்து விடுகிறோம் என்பதை பதிவு செய்துற்ளேனா
“சத்தமில்லா சாதனை” – கவிஞர்.பா. அனிதா அபுதாபி – பெண் கருவில் இருந்து படும் பாடுகளை பேசும் கவிதை. அருமை
“அக்னி பிரவேசம்” கவிஞர் பரிமளா, சென்னை.
வேலையாட்கள் மேல் நமக்கு இருக்கும் அவநம்பிக்கையை பதிவு செய்துள்ள கவிதை சிறப்பு.
அனைத்து கோழிகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். தோழர் அருணாசுந்தரராசன் அவர்களுக்கு அனைத்து கவிஞர்கள் சார்பில் வணக்கமும் நன்றிகளும்.
நன்றி
திருமதி சாந்தி சரவணன்
சென்னை 40
புத்தகத்தின் பெயர் : “பெண்ணில் பூத்த பெருவனம்”
பன்னாட்டுப் பெண் கவிஞர்களின் கவிதைகள்
தொகுப்பாசிரியர்: அருணாசுந்தரராசன்
பக்கங்கள்: 142
விலை: ரூ. 150/-
இலங்கையில்: 600/-
வெளியீடு: வளரி எழுத்துக்கூடம்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

