Pithirvanam Novel By Anbathavan Bookreview By Puthiyamathavi நூல் அறிமுகம்: அன்பாதவனின் பிதிர்வனத்தில் அலையும் வேதாளங்கள் - புதியமாதவி

நூல் அறிமுகம்: அன்பாதவனின் பிதிர்வனத்தில் அலையும் வேதாளங்கள் – புதியமாதவி




இந்த  வேதாளம் பிதிர்வனத்திலிருந்து வந்திருப்பதாகச் சொன்னது. கருகிப்போன உடல்களின் நாற்றமும் எரியாதக் கனவுகளின் மிச்சமும் வேதாளம் சொல்வது உண்மைதான் என்று நம்ப வைத்தன. என் சன்னலுக்கு அருகில் தண்டவாளத்தைப் பார்த்துக்கொண்டே என்னோடு வேதாளம் கதைகள் பேச ஆரம்பித்தது. ஜனக்கடலில் கரைந்துவிட்ட நினைவுகளின் சாம்பலை கடலில் கரைத்துவிட்டு அடுத்த நாள் எதுவும் நடக்காதது போல அதே தண்டவாளத்தில் இரயில்கள் ஓடின. நாங்கள் பயணித்தோம்.

நீங்களும் மனிதர்கள் தானா! என்று வேதாளம் கேட்டது. இல்லை நாங்கள் மனிதர்கள் இல்லை. நாங்கள் இப்பெரு நகரத்தை தின்று துப்பும் பெரு நகரப்பிசாசுகள் என்றேன். வேதாளம் சிரிக்க ஆரம்பித்தது. தண்டவாளத்தில் ஓடும் ரயில்களின் சத்த்த்துடன் கலந்து ஒலித்த வேதாளத்தின் சிரிப்போசை…யில் வீட்டிலிருந்த சமையல் குக்கர்கள் டிபன்பாக்ஸ்கள் அலற ஆரம்பித்தன. 11 நிமிடங்கள்.. அந்த அலறலை நிறுத்தமுடியவில்லை! தண்டவாளங்கள் குலுங்கி அழுதன.

11 ஜூலை 2006 மாலை 18. 24 முதல் 18.35 வரை 11 நிமிடங்களின் கதை பிதிர்வனம். பிதிர்வனம் நாவல் என்று சொன்னது வேதாளம். பிதிர்வனம்” நாவல் இல்லை” என்றேன். வேதாளம் புருவங்கள் சுருக்கி பதிலுரைக்கு காத்திருந்தது. விக்கிரமாதித்தனுக்கு வராத சோதனைகள் வேதாளம் அறியாத ரகசியங்களை எப்படி சொல்வது? வேதாளம் என் விளக்கவுரையில் திருப்தி அடையவில்லை என்றால்… என்ன நடக்கும்? 

தலை சுக்கு நூறாக உடைந்து சிதறிவிடும்! வேதாளம் கதை சொல்லி கேட்ட  நாட்கள் மறந்துவிடவில்லை. இருப்பதோ ஒரே ஒரு தலை. அதுவும் சில்லு தேங்காய் மாதிரி உடையும் என்றால் வேதாளம் பயமுறுத்தியது. பிதிர்வனம் நாவலில்லை என்றால் வேறு என்னவென்று சொல்வாய்?

வேதாளம் விடுவதாய் இல்லை. சிறுகதைகள் பலவற்றின் தொகுப்பு என்றால் அதுவுமில்லை. ஒவ்வொரு கதைகளும் தனித்தனியானவை தான் என்றாலும் அத்தனையும் சந்திக்கும் அந்தப் 11 நிமிடங்கள்  சிறுகதைகளிலோ சிறுகதை தொகுப்புகளிலோ காணக்கிடைக்காத சரடு. சிறுகதைகள் தனித்தனியானவை. ஒன்றுக்கொன்று தொடர்புகள் அற்றவை.

பிதிர்வனத்தில் தொடர்பற்றவர்கள் அனைவரையும் ஒரே நேரத்தில் பயணிக்க வைத்திருக்கிறது அந்த 11 நிமிடங்கள். அப்படியானால் பிதிர்வனத்தில் அந்த 11   நிமிடங்கள் தான் கதைப்பாத்திரம், களம், காலம் எல்லாமும். கதைகளுக்கான எல்லா சுவைகளையும் ஒவ்வொரு துளியாக எடுத்து அந்த 11  நிமிடத்திற்குள் கொண்டுவந்து வாசகனைப் மிரட்டுகிறது  பிதிர்வனம்.

வழக்கமான நாவல்களில் இருக்கும் கதைப்பாத்திரங்களின் வலுவான சித்திரங்கள் இல்லை. அவை பென்சிலில் வரையப்பட்ட கோட்டோவியங்களாகவும் சில இடங்களில் முழுவதும் வரைந்து முடிக்காத கோடுகளாகவும் இன்னும் சில இடங்களில் வேண்டுமென்றே வண்ணங்களில் அழகாகத் தீட்டப்பட்டிருந்த ஓவியத்திரைச்சீலையின் மீது  மிச்சமிருந்த வண்ணங்களை வேதாளம் தெளித்துவிட்டு சென்றது போலவுமான தோற்றங்களை “ஓர்மையுடன் “ வரைந்திருக்கிறது பிதிர்வனம். கதைகளின் ஊடாக அவர் வைக்கும்  நுண் அரசியல் அவருடைய அனைத்து படைப்புகளில் அவரை அடையாளப்படுத்தும். பிதிர்வனத்தில் கூட வஞ்சமில்லாமல் நிறையவே அள்ளிவிட்டிருக்கிறார். 

பருத்திவீரன் திரைப்படம் , இயக்குநர் அமீர் குறித்த  உரையாடல் பகுதி: “பருத்திவீரன்.. ஒரு உயர்சாதி ஆணின் கீழ்சாதி காதலிக்குப் பிறந்தவன், அந்தக் காதலி பன்றி வளர்க்கும் குறவர் சமூகம்” 

.. “ஆமாண்ணா… அதில் என்ன பிரச்சனை?”

“இயக்குனர் சொல்லவரும் செய்தி இதுதான் என நான் புரிந்து கொள்கிறேன். 

உயர்சாதி ஆணும் கீழ் சாதிப் பெண்ணும் காதலித்து திருமணம் செய்து கொள்வதை சாதியச் சமூகம் அனுமதிக்காது. அப்படி அவர்கள் இணைந்து வாழ்ந்தாலும் கொல்லப்படுவார்கள். அவர்களுக்குப் பிறப்பவன் பொறுக்கியாக லும்பனாகத் திரிவான். .. அப்படிப்பட்ட ஒருவனை நம்பி எவளும் காதலித்தால், அவளும் பாலியல் வன்முறை செய்து கொல்லப்படுவாள்”

(பக் 75)
நாவலுக்கான சில அடிப்படை அம்சங்களான வலுவான கதைப்பாத்திரங்கள் பிதிர்வனத்தில் இல்லை. No  Main characters அதனால்தான் வாசகன் பிதிர்வனத்தை நாவல்தானா, இது என்ன? என்ற கேள்வியோடு  அல்லாடுவது நடக்கிறது. எழுத்தாளர் அன்பாதவனின் எழுத்தகள் கலக இலக்கியத்தின் குரல் மட்டுமல்ல, அதற்கான பாதைப்போட்டு கொடுப்பவை. வடிவத்திலும் உத்தியிலும் புதிய சோதனை முயற்சிகளின் பரிசோதனைக் கூடங்கள். 

ஏற்கனவே அறியப்பட்டிருக்கும் வடிவங்களச் சிதைத்தும் வெட்டியும் ஒட்டியும் ஒரு புதியவடிவத்தைக் கொடுக்க நினைத்திருக்கும் வேதாளத்தின் மாயஜாலம் புரிந்து கொள்ள அன்பாதவனைப் புரிந்து கொள்ள வேண்டியதும்  அவசியமாகிறது.

அவருடய முதல் கவிதை தொகுப்பில் ஒரு கவிதை  திமிங்கலத்தில் எழுதப்பட்டிருக்கும். தமிழ்க்கவிதை வரிகளுக்கு நடுவில் இடம்பெறும் அந்த ஆங்கில வரிகள் கவிதையின் மைய0ப்புள்ளியை விசாலமாக்கி ஒரு சூறாவளியைப் போல அதற்குள் நம்மை இழுத்துச் செல்லும் ஆற்றல்மிக்கவை. 

இலக்கிய உலகில் ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் அழகியல் வடிவங்களை விலக்கி ஒவ்வொரு இலக்கிய வடிவத்திற்கும் இருக்கும் எல்லைக்கோடுகளை ஓர்மையுடன் சிதைத்து புதியதோரு வடிவத்தையும் இலக்கிய வகைப்பாட்டையும் கொடுத்துக்கொண்டே இருக்கிறார் அன்பாதவன். அதில் “பிதிர்வனம்” வேதாளத்துடன் வந்து விக்கிரமாதித்தன் அறியாத கதைகளைச் சொல்கிறது.

வேதாளத்திற்கு ஒரு சின்ன வேண்டுகோள்… கதையை எப்படி வேண்டுமானாலும் சொல்லிவிட்டுப் போ. கதைக்கு முன்னுரையாக பிதிர்வனம் என்றால் சுடுகாடு என்று “அந்தம்” பாட வேண்டாம். அதே போல கடைசிப்பக்கத்தில் வேதாளத்தை விக்கிரமாதித்தன் தோள்களில் சுமந்து கொண்டு அலைகிற அதே காட்சி வேண்டாம் வேண்டவே வேண்டாம். பிதிர்வனம் ஒரு பாக்கெட் நாவல் வடிவத்தில் அச்சிடப்பட்டிருப்பது வேதாளமும் பதிப்பகத்து மொதலாளியும் சேர்ந்து செய்த ஒரு சதிவேலையாத் தெரியுது.

மீண்டும் இதோ.. வேதாளம் எட்டிப்பார்க்கிறது. பிதிர்வனம் நாவல்.. என்று எதோ சொல்ல ஆரம்பிக்கிறது. பிதிர்வனம்  நாவலில்லை.. என்று சொல்கிறேன். இதோ என் தலை சுக்கு நூறாக உடையப்போகிறது. விக்கிரமாதித்தன் தன் உறைவாளை எடுத்துக்கொண்டு வருகிறான். 

“படைப்பாளி என்பவன் மாய எதார்த்தத்தில் திளைப்பவன்! மாயங்களில் நம்பிக்கை கொண்டவனல்ல…! புனைவெனும் எலும்புத் துண்டினை ரசித்து ருசிக்கும் தெருநாயின் மனநிலைக்காரன்”

(பக் 143)
எல்லா கருகல் நாற்றங்களுக்கு நடுவிலும் ஆண் பெண் காதலும் மனைவியின் அக்கறையும் சினிமா எடுக்கும் ஆசைகளும் தாபங்கள் தீராத இரவுகளும் கதை சொல்கின்றன. சர்ச் கேட் வாசலில் வணங்கிய கரங்களுடன் யாசிப்பவனை ஏளனமாய் வெறிக்கும் தலால் வீதியின் பங்குச்சந்தைக் கட்டடம் முன்னிரவிலேயே இரயிலடியில்  வாடிக்கையாளரை எதிர்ப்பார்த்துக் காத்திருப்பாள் அதீத ஒப்பனைக்காரி.

பிச்சையெடுத்து போதை சுவைத்து மரணம் வாங்கும் ஏதிலிகள் பிதுங்கி வழிகிறது பெட்டி. கூடு திரும்பும் களைத்து சலித்த மானிடர் எதிர்பாராத் தருணத்தில் ஒலிக்கிறது பார்வையற்றவனின் இசைக்குழல். கைப்பையில் நிரம்பி வழிகிறது நல்லிசையின் சுகந்தம் இன்றிரவு நல்லிரவு..”

(பக் 92)
தண்டவாளத்தில் எப்போதும்போல மின்சார இரயில்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. வேதாளமும் விக்கிரமாதித்தனும் டிரெயின் பிடிக்கும் அவசரத்தில் ஓடுகிறார்கள்.

அதோ… பிதுங்கி வழியும் அந்த ஜனக்கூட்டத்தில் தலைகீழாக தொங்கிக்கொண்டிருப்பது வேதாளமா? விக்கிரமாதித்தனா!  பிதிர்வனங்களை நோக்கி, கதைகளைச் சுமந்து கொண்டு ஓடிக்கொண்டே இருக்கிறது பெருநகரம். 

அன்பாதவனின் வேதாளத்திற்கு வாழ்த்துகளுடன்.. தலை தப்பியதற்கு நன்றியுடனும். ….. அதே பெரு நகரத்திலிருந்து புதியமாதவி.. 

நூல்: பிதிர்வனம் நாவல்
ஆசிரியர்: அன்பாதவன்
வெளியீடு
உதயகண்ணன்,
பெரம்பூர், தமிழ் நாடு/
விலை:ரூ. 150/

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *