ப்ளீஸ் இந்தப்புத்தகத்தை வாங்காதீங்க – நூல் அறிமுகம்
புத்தகத்தலைப்பு : ப்ளீஸ் இந்தப்புத்தகத்தை வாங்காதீங்க – பாகம் ஒன்று
ஆசிரியர்: கோபிநாத்
விலை : ரூ.158
பக்கங்கள் : 112
பதிப்பகம் : சிக்ஸ்த்சென்ஸ் பதிப்பகம்
மனித மனம் எப்போதும் எதிர்மறையான நிகழ்வுகளை எளிதில் ஈர்த்து விடும் என்பது உளவியல்..அப்படிதான் இந்தப்புத்தகம் என்னை ஈர்த்தது.
புத்தகத்தை வாங்குங்கள் என்பவர் மத்தியில் இந்தப்புத்தகத்தை யாரும் வாங்காதீர்கள் என்ற தலைப்பை பார்த்தவுடனே வாங்க வேண்டும் என்று தோன்றியது.
உடனே வாங்கிவிட்டேன் புத்தகத்தைப்படிக்க படிக்க என்னை நான் உள்நோக்கிப்பார்க்க ஆரம்பித்துவிட்டேன்.
இந்தப்புத்தகம் மூலம் தொடர்ந்து அவரின் எல்லாப்புத்தகங்களையும் வாங்கிப்படித்துவிட்டேன்.அந்த அளவிற்கு அவரின் கருத்துக்கள் அருமை
பதினைந்து பிரிவுகள் இருக்கிறது தலைப்பே கிடையாது தலைப்பிற்கு பதில் மேற்கோள்கள் தான்.
தன்னம்பிக்கை பற்றியும் ஆளுமை மேம்பாடு பற்றியும் பல புத்தகங்கள் வந்திருந்தாலும் கோபிநாத் அவர்களின் இந்த புத்தகம் கொஞ்சம் வித்தியாசம்.
ஒரு நல்ல நண்பனிடம் இயல்பாக உரையாடுவதை போன்ற அவரது எழுத்து நடை மனதை எளிதாக கவர்கிறது.
நம்கனவுகள், குறிகோள்கள், உழைப்பு, மகிழ்ச்சி, வருத்தம், நம்பிக்கை பின்னணியில் நம் மனம்தான் அத்தனையையும் தீர்மானிக்கும் சக்தி என்பதை எளிதாக உளவியல் ரீதியில் அலசாமல் அன்றாடம் நாம் எதிர்கொள்ளும் நிகழ்வுகளில் இருந்தே எடுத்துகாட்டியிருப்பது சிறப்பு.

எல்லாவற்றிற்கும் இது அறிவுரை செய்கிற புத்தகம் அல்ல. மகிழ்ச்சியான நம் வாழ்கையே மிகவும் மகிழ்ச்சியாக மாற்றுவதற்கு சில சுவாரசியமான கருத்துக்கள் நிறைந்துள்ளது.
நமக்கு நாமே கேள்வி கேட்டு பதில் சொல்லும்படியான சூழ்நிலைகளை புத்தகம் முழுதிலும் நிறைந்துள்ளது.
நம்மை நாமே சுய பரிசோதனை செய்து கொள்ள அருமையான வாய்ப்பு இந்த புத்தகம்.
மனதை மையமிட்ட சில வரிகள்.
“சந்தோஷம் எதில் இருக்கிறது?
ரொம்ப சுலபம்.
சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற உங்கள் எண்ணத்தில்தான் அது இருக்கிறது”
“உங்களை அடுத்தவர் ரசிக்க வேண்டும்,கவனிக்க வேண்டும், உங்கள் சிறப்பியல்புகளை, உங்கள் தனித்துவங்களை அடையாளங்கண்டு பாராட்ட வேண்டும் என்று நீங்கள் ஆசைபடுவது உண்மை என்றால், அதை உங்களில் இருந்து நீங்கள்தான் தொடங்க வேண்டும் “
“சந்தோஷத்தை உங்களுக்குள் வைத்திருங்கள்..அப்படி வைத்திருந்தால் யாராலும் அதை தொந்தரவு செய்ய முடியாது”
“சிரிப்பு வந்தால் சிரியுங்கள் நாளைக்கு அழுகை வந்தால் அழுது கொள்ளலாம். கொஞ்சமாக சிரித்து கொஞ்சமாக அழுவதை விட நிறைய சிரித்து நிறைய அழுங்களேன்”
“தோல்வி உங்களைத் துரத்தட்டும் பரவாயில்லை ஆனால் தோல்வியை துரத்திக் கொண்டு நீங்கள் ஓடாதீர்கள்.”
“உங்களுக்கென்று தனிப்பட்ட கருத்துகளை வைத்துக் கொள்வதில் குறையொன்றுமில்லை, வம்படியாய் எந்த சூழலிலும் அதை விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று சொன்னால் உங்களை விட்டு விட்டு எல்லோரும் போய் விடுவார்கள்”
“யார் யாருக்கோ வெளிப்படுத்துகிற அன்பு உங்களை சந்தோஷப்படுத்தும் என்றால் நீங்கள் அன்பாயிருப்பதும் நம்மிடம் அடுத்தவர் அன்புடன் நடந்து கொள்வதும் எவ்வளவு அலாதியான விஷயம்.”
“உங்கள் பிள்ளைக்கு தெரியாமல் வெளிப்படுத்த அன்பு ஒன்றும் மோசமான விஷயமில்லையே”
“எல்லோரையும் நம்புவது ஆபத்து யாரையும் நம்பாமல் இருப்பது பேராபத்து ”
படிக்க படிக்க ஒரு புதுமையான அனுபவம் கண்டிப்பாக ஏற்படும் என்பது உறுதி.
நூல் அறிமுகம் எழுதியவர் :
வ.பெரியசாமி
தன்னம்பிக்கை பேச்சாளர் மற்றும் போட்டித்தேர்வு பயிற்சியாளர்,
பட்டதாரி ஆசிரியர் கணிதம்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
சங்ககிரி
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

