வளவ. துரையன் கவிதைகள்

வளவ. துரையன் கவிதைகள்




தோல்வி
**********
எதைச் செய்தாலும்
எப்பொழுதும் எனக்குத்
தோல்வியே மிஞ்சுவதேன்?

அப்போதுதான் நான்
ஆனந்தத்தை அனுபவிக்கலாமா?

தொட்டுவிடும் தொலைவிலிருந்தது
கோடு எனக்கு.
எட்டாக்கனியானதேன்?
எட்டியதுதான் இனிக்குமா?

ஓரிரு மதிப்பெண்கள்
கிடைக்காததால் கண்ட
ஒரு தோல்விதான்
எனக்குப் பாடம் சொன்னது.

கோயிலுக்குச் சென்று
முறையிடலாமென்றால்
அங்குக் கொற்றவை முன்
திரையிடுகிறார்கள்.

எப்பொழுதும் பெரும்பான்மை
எங்கும் வெல்வதுபோல்
என் தோல்வியே
என்னிடம் வெற்றி பெறுகிறது.

சோகம்
**********

எங்கு பார்த்தாலும் சோகம்
எதைப் பார்த்தாலும் சோகம்

சோகத்திற்கே சோகம் வருகிறது.
எல்லா இடத்திலும் சோகம்;

சோகத்திலிருந்து ஒளிய முடியவில்லை
தப்பிக்க இயலவில்லை

ஏனிந்த சோகமென்று
சோகமே கேட்கிறது.

எதைச் செய்தாலும்
பின்னிருந்து நாலு பேர்
கால்களை இழுத்துச்
சோகக் குழிக்குள் தள்ளுகிறார்கள்.

நரிவேடம் மறைத்து
நண்பனாயிருப்பவரின்
நாலைந்து செயல்கள்
நன்றாகப் புரிந்தபின்
சோகம்தான் மிச்சம்.

என்ன செய்வது?

அறுந்து அறுந்து விழுந்தபின்னும்
மீண்டும் கட்டுவதுதானே
சிலந்தியின் வாழ்வு.

நாவற்பழக் கண்கள்
***********************
உன்னை இதுநாள்வரை பார்த்ததில்லை.

என் கண்களுக்கு விருந்தாக நீ
இன்று வந்து காட்சி தருகிறாய்.

கறுப்பும் வெண்மையும் கலந்த
கன்றுக்குட்டியாய் நீ
‘ம்மா’ என்றழைக்கையில்
நான் அகிலத்தையே மறக்கிறேன்.

கூட்டத்தைவிட்டுப் பிரிந்து விட்ட
உன் கூக்குரல் அன்னையின் காதில்
விழுந்திருக்கும் கண்ணே!
சீக்கிரம் வந்திடுவாள் அவள்.

பட்டுப் போன்ற உன் மேனியைப்
பார்வை விட்டு அகற்றாதே.

மெலிந்த கால்களுடன்
நீ துள்ளித் துள்ளி
ஆடும் நாட்டியம்
பார்க்கப் பார்க்கப்
பரவசம் தருகிறது.

நாவற்பழக் கண்களில்
நல்லதொரு மிரட்சியும்
சிற்றுடலில் நல்ல திரட்சியும்

உன் அழகின் போதையே
இனிமையான கவிதைதான்.

யட்சி
*******
அந்தச் சுடுகாட்டுப் பாதையின்
வழியெங்கும் பிச்சிப்பூக்கள்
பூத்துச் சிரிக்கின்றன.

அங்கு அவை மட்டுமே
சிரிக்க இயலும்.

அருகிலுள்ள ஆலமரத்தடிதான்
கணக்குகள் தீர்த்துப்
பஞ்சாயத்து செய்யும் இடம்.

அரசு செலவில் அமைந்த
கொட்டகையைச் சுற்றிப்
பயணம் வந்தவரின் பாடைகள்;
ஆடு தின்ற மீதிப் பூக்கள்.

உள்ளே பல சாம்பல்கள்
எலும்புகள் ஏதுமில்லை
பாலுக்குப் போயின போலும்.

உடைந்து கிடந்த
பானையிஞ் சில்லுகள்
உலக உண்மையைச்
சொல்லாமல் சொல்லின,

உண்மையாகவே அழுத
உள்ளங்களின் கண்ணீர்
உறைந்த தடம் தெரிகிறது.

எப்பொழுது காரியம் முடியும்
போகலாம் என்று
காத்திருக்கும் ஒரு சிலர்.

காலம் வரவேண்டுமே!

மரத்தின் மீதுள்ள யட்சி
அனைத்தையும்
பார்த்துக் கொண்டுதான்
இருக்கிறது.

வளவ. துரையன்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *