வீடான மரம்!
*****************
உடன் விளையாடியோர் வீடு செல்ல
மரத்தடியில் ஒதுங்குகிறான்
பிளாட்பாரச் சிறுவன்!
காற்று போன மனுஷி
***************************
பலூன் உடைத்தல் போட்டிக்கு
பெயர் கொடுத்தது ரோட்டோரக் குழந்தை!
போட்டி ஆரம்பித்தது!
வேகமாய் ஓடி
பலூனைக் கையில் எடுத்து
தன் பிஞ்சு விரல்களால்
தடவிப் பார்த்தது!
சந்தோஷம் ஊற்றெடுக்க
முக மலர்ச்சியுடன்
ஊத ஆரம்பித்தது!
பலூன் வெடிக்கக் கூடாதென
வேண்டிக் கொண்டிருந்தாள் பிளாட்பாரத்தில் நின்றிருந்த தாய்!
பரிசீலனை
**************
கோயிலில் பெருங்கூட்டம்!
கடவுளை அடியாளாக்கி
பேரம் பேசிக் கொண்டிருந்தார்கள்!
இந்த காரியம் முடித்துத் தந்தால்
இன்னும் ஐந்து லட்சம் தருவேன்
என்றான் ஒருவன்!
வைர நெக்லஸ் தருவதாகச் சொன்னாள் ஒருத்தி!
விண்ணப்பங்கள் முடிந்து கூட்டம் வெளியேற
நான் உள்ளே நுழைந்தேன்!
நாளை வரச் சொன்னவன்
ஒருவேளை கடவுளின் பினாமியாக இருக்கலாம்!
சூட்கேசில் ஒரு கோடியைக் காட்டினேன்!
கதவை திறந்து விட்டான்!
உள்ளே கடவுளைத் தேடினேன்!
அவர் பொறுமையாக விண்ணப்பங்களைப் படித்துக் கொண்டிருந்தார்!
முரண்
*********
இலட்சங்களின் மினுமினுப்பில்
கோவிலில் திருவிழா!
வாசலில் கையேந்துகிறாள்
பிச்சைக்கார சிறுமி!
அனுபவம்
**************
தசம பின்னத்தில்
காதலையும் காமத்தையும்
எவ்விடத்தில் வைப்ப தென்பதை
அவனுக்கு புரியவைத்தது முதலிரவு!
பின்விளைவு
****************
குழந்தையின் மழலைச் சொற்கள்
கரைத்த பெரும் மனபாரம்
கன்னத்து முத்தத்தின் எண்ணிக்கையை
இரு மடங்காக்கிக் கொண்டிருக்கிறது!
கடைசியில் எல்லாம்….
***************************
தேன் கலந்த பால் குடிக்க
ஆசைப்படும் பிச்சைக்காரனுக்கும்
தங்க பஸ்பம் சாப்பிடும்
சர்க்கரை நோய் முதலாளிக்கும்
இரவும் நிலவும் ஒன்றுதான்!
யதார்த்தம்
***************
சிட்டுக்குருவி லேகியம் விற்பவன்
இரவில் தூங்குவ தென்னவோ
வீட்டுத் திண்ணையில் தான்!
காலத்தின் பின்கட்டு
****************************
விரக்தியில் போதிமரம் தேடி
காட்டுக்குள் நடந்து கொண்டிருந்தேன்!
தூரத்தில் சிங்கத்தின் கர்ஜனை கேட்டது!
கொஞ்சம் தைரியத்தை எடுத்து
சட்டைப் பைக்குள் வைத்துக் கொண்டேன்!
வழியெங்கும் குட்டிகளுடன் மான்கள் உற்சாகமாய் துள்ளித் திரிந்தன!
கை நிறைய சந்தோஷத்தையும் பைக்குள் போட்டுக் கொண்டேன்!
காதலால் இணை பிரியாது கட்டிக் கொண்ட தட்டான்களைப் பார்த்து மோகமும் ஒட்டிக்கொண்டது!
வேகமாய் நடந்தேன்!
மலை அருவி அருகில் புத்தர் அழுது கொண்டிருந்தார்!
கொஞ்சம் தைரியத்தை கிள்ளிக் கொடுத்தேன்!
ராகுலனை பார்க்க வேண்டும் என்றார்!
மனதில் வேரூன்றிய போதிமரம்
மெதுவாய்க் கரைய ஆரம்பித்தது!
உள்ளே வெளியே
************************
கதவைத் தட்டிய சந்தோஷம்
கடவுள் கொடுத்த கடவுச்சீட்டைக் காட்டி உள்ளே நுழைந்தது!
உள் அறையை தனக்காகக் கேட்டது!
அங்கிருக்கும் ஆசையோ
வைர நெக்லஸ் கேட்டு அடம்பிடிக்கும்
மனைவி போல நகர மறுத்தது!
சோகமாய் வெளியேறிய சந்தோஷம் வாசலில் காத்திருக்கிறேன் என்றது!
ஒரு கிலோ சந்தோஷம்
நூறு கிலோவாய்ப் பல்கி
வாசலிலேயே காத்துக் கொண்டிருக்கிறது!
செய்வதறியாது திகைத்துக் கொண்டிருக்கிறேன் நான்!
கொஞ்சம் கமர்ஷியல்
*******************************
சீதக்காதியிடம் பசிக்குணவு கேட்டாள்!
பேகனிடம் புத்தாடை கேட்டாள்!
கவிதையை மட்டும் என்னிடம் கேட்டாள்!
நான் என்ன அம்பிகாபதியா என்றேன்!
என் பெயர் அமராவதி என்றாள்!
தேவை
***********
காலைக்குளிர் உண்ணும்
கோழி வளர்க்கணும்!
சொக்காய் இல்லா
சிறுவனின் பேராசை!!
காத்திருக்கும் காதல்
***************************
ஆற்றுமணலில்
தலை குளிக்கும் நத்தை
தெளிவாகத் தெரியும்
இரண்டடி உயர
நீரோட்டத்தில்
இரு கரையும் புல்வெளியாய்
அழகிய ஓடை!
தளை நார் மாலையுடன்
தலைமகனின் கால்கள்
இணைந்திருக்க
நெஞ்சப்பட்டை
பனையோடு உரச
பதநீர் சேகரித்தவன்
பாளை அரிவாளை
இடை செருகி
இதமாக கீழிறங்க
பாவாடை தூக்கிக் கட்டி
காதலுக்குக் கூடுதல்
சந்தோஷம்!
கன்னங்கள் உரசின!
காதலுக்கோ
உச்ச கட்ட சந்தோஷம்!
உதடுகள் ரசங்களைப்
பரிமாறின!
காதலுக்கோ-
கொரோனா காலத்தில்
வீடுவந்த
வெளிநாட்டு கணவன்
பதினான்கு நாட்களும்
கள்ளத்தனமாய் மனைவியை
புணரும் சந்தோஷம்!
திருமணம் நடந்தது!
அவளுக்கு ஓரிடத்தில்!
அவனுக்கும் வேறிடத்தில்!!
காதல் அழுதது!
கரைந்தது!!
புலம்பியது!!!
பொடிநடையாய் தான்
பிறந்த நீரோடை வந்தது!
சோகத்தில் கரையில் அமர்ந்தது!
மீண்டும்-
உண்மைக் காதலர்கள்
வருகைக்காக காத்திருக்கிறது
இந்த மெய் காதல்!
காலம் காத்திருக்கு
**************************
மணம் காத்திருக்கு
மல்லிகை மலர்ந்ததும்
மர்மமாய் ஒட்டிக்கொள்ள!
புழுக்கம் காத்திருக்கு
முழுவெயில் வந்ததும்
முழுமையாய் கலந்துகொள்ள!
வீரனே!
சோம்பல் முறித்து
எழுந்து வா!!
சாதனைக்குப் பிடித்தவனாய்
அதனை உன் சாதகமாக்கு!
காலம் காத்திருக்கு
உன் கழுத்தில் மாலை சூட!
அறுமின்! அறுமின்!!
***************************
புத்தர் புகைப்படம்
சுவரில் மாட்டினேன்!
புத்தர் சிலை வாங்கியிருக்க
ஆசைப் பட்டது மனம்!!
– ச்ஜேஸூ ஞானராஜ், ஜெர்மனி
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.