‘குறி நசுக்கப்பட்ட கிழவன்’
மரணத்தின் சாயல் படிந்த
கிழவன் ஒருவன் மெல்ல ஊர்ந்தே
நடைபயிற்சிக்கு வருகிறான்
எதிர்ப்படும் போதெல்லாம் ஏதேதோ
பிதற்றுகிறான்
விலகி இருந்த கால்களுக்கிடையில்
சுகித்துக் கிடந்தவள்
அவனைப் புழுபோல் பாவிக்கிறாளாம்
சொல்லிச் சொல்லி
மாய்ந்து போகிறான்
அந்தப் பெயர் தெரியாத கிழவன்
பேராண்மை கொண்ட பொழுதுகளில்
அவனின் ஆளுமையில்தான்
உலகம் இயங்கியது என்பதை
அவன் என்னைக் கடக்கும்போதெல்லாம்
சொல்லி நகர்கிறான்
இரண்டாம் தாரமாய் வாக்கப்பட்ட அவள்
ரத்தம் சுண்டிவிட்டதென்று
இவனை கண்டுகொள்வதேயில்லையாம்
குரல் கம்முகின்றான்
விடாப்பிடியாய் நடக்கிறான்
கை காலை அசைக்கிறான்
கால்களை அகட்டி வைத்து
தண்டால் எடுக்க முயல்கிறான்
ஆமையென ஊர்கிறான்
குளிர்தாங்காது மப்ளரை காதுவரை
இழுத்துவிட்டுக் கொள்கிறான்.
வாழ்வின் பரஸ்பர புரிதலின்
இறுதி நிலையை எட்டிவிட்ட
அவனது கண்களில்
மரணத்தின் சாயல் தெரிகிறது
நாளை நடைபயிற்சிக்கு
அக் கிழவன் வருவானா ?
தெரியவில்லை…?
வரவில்லையெனில்
அதற்கான அறிவிப்பை
யாரிடமிருந்து
நான் பெறக்கூடும்….?.
சுரேந்தர் ஜீயின்
அடகுக்கடை
ஓரத்தில்தான் இன்று இடம்
கிடைத்தது.
யாருமற்ற கடையில்
நானும் அவளுமே
தனித்திருந்தோம்
நட்சத்திரங்கள்
சூல் கொண்ட இரவில்,
அந்த சாலை முழுவதும்…
சவஊர்வலத்தில்
சிந்திய பூக்கள்
இறைக்கப்பட்டிருந்தன
காலில் மிதிபடாத சில
சம்மங்கியும் அரளியும்
எங்களோடு ஒன்றிக்கிடந்தன
நிர்வாணம் பளிச்சிடும்
நிலவொளியில்…
வியர்வை பிசுபிசுக்காத
அந்தப் பனிபெய்யும்
அகாலக் குளிரில் நாங்கள்
கடையின் ஷட்டர் ஓரம்
இயங்கிக் கொண்டு இருந்தோம்.
இதோ உலகம் விழிக்கப் போகிறது.
சேட்டு அடகு கடையை திறக்க போகிறார்.
இனி எங்களின்
ஏகாந்தப் பெருவெளியில்
உங்களின் நடைபாதை
உலகம் உயிர்பிடிக்கப்போகிறது!
– மகேஷ் நந்தா


பேராண்மை கொண்ட பொழுதுகளில்
அவனின் ஆளுமையில்தான்
உலகம் இயங்கியது…
– 👌செம வரிகள்👍
அடகுக்கடை
ஓரத்தில்
நட்சத்திரங்கள்
சூல் கொண்ட இரவில்,
சவஊர்வலத்தில்
சிந்திய பூக்கள் …
கடையின் ஷட்டர் ஓரம்
இயங்கிக் கொண்டு இருந்தோம்.
__ கண் சிமிட்டும் நேரம்
காண நேர்ந்தாலும்
அருவருத்து அகலும்
காமக்கூத்தைக் கூட
கவிதையாய்
காட்சிப்படுத்தி விட்டீர்…🤩👍