பூவை “ப்பூ” வென ஊதமுடிவதெல்லாம்
உன்னால் தான் நிகழ்கிறது
கண்ணம்மா …
பறிப்பதற்கு முன்னிருந்த
அதே காதலோடு
பறித்தப் பின்னும் அதேயன்போடு
காதலிக்கத் தொடங்குகிறாய் ..
நீ ஊதிய காற்றில் நிறைய முத்தங்கள் பூவின் மேல் விழுகிறது
வெட்கித் தொலையட்டும்
மண்ணையுங் குவித்து
எதையும் புதையாமல் பூவை
வைத்து விடுகிறாய்
கண்ணைக்குவித்து நானல்லவா புதைந்து விடுகிறேன்
எலுமிச்சைச் செடியில்
பூவைச் சொருகி
அழகுச் சேர்க்கிறாய்
பூனையின் காதருகில் வைத்துவிட்டு
“மியாவ்” என்கிறாய்
கொஞ்சம் பூக்களோடு உன்னால்
இவ்வளவு எளிதாக பயணங்கொள்ள முடியுமா ..?
இரு கண்ணம்மா …
நான் பட்டுப்போனதும்
என் உடம்பிலிருந்து உனக்காக
ஒரு அப்பா அம்மா
பொம்மை செய்துத் தர சொல்கிறேன் ..
ராம் பெரியசாமி


பேரன்பும் மகிழ்வும்