Kannan's Poems. கண்ணனின் கவிதைகள்

கண்ணனின் கவிதைகள்




தியாகி தோட்டம்
***********************
எழுபத்தி நான்கு ஏறி
செல்லியம்மன் நகரில்
இறங்குங்கள்
தியாகி தோட்டம் என்றால்
எவரும் வழிகாட்டுவர்
எட்டி மரம் தாண்டி
வந்தீர்கள் என்றால்
மலை அடிவாரத்தில்
இருந்தது தோட்டம்
தாகத்திற்கு எளனி
பசியுடன் வந்தால்
சாப்பாடு
வந்தவருக்கு எப்போதும் உண்டு
பத்தில் பாதி மேட்டுக்காடு
குண்டன் ஒன்று
ஊசிக்கொம்பன் ஒன்று
ஏர்ஓட்ட
மாடு மேய்த்தது
தண்ணி பாய்ச்சியது
தொட்டியில் குளித்தது
கிணறு வெட்டுகையில்
தரை தொட்டுப் பார்த்தது
எல்லாம் கனவுபோல
தாத்தாவும் அப்பாவும்
ஓய்வூதிய பணத்தையெல்லாம்
காடு திருத்தப் போட்டதும்
அங்கு தான்
பத்தாம் வகுப்பில்
பிடித்த தென்னையடியில்
படித்ததும் அங்கு தான்
பிடித்தநாய் மணிக்கு
கோவில் கட்டிக்
கும்பிட்டதும்
அங்கு தான்
தாத்தாவும் பாட்டியும்
அப்பாவும்
மண்குழிக்குள் போனதும்
அங்கு தான்
துள்ளத் துடிக்க
கையெழுத்திட்டுக்
கைமாறியபின்
சென்று பார்க்க
இன்று வரை ஒப்பவில்லை
மனசுக்கு

கோதமலைக் குறிப்புகள்-நான்கு
பொன்னம்மா பாட்டி
************************************
ஆறில் மிஞ்சியது
நான்கு
தாத்தா பிரசங்கத்திற்கு
ஊர் சுற்றி வர
பணியாரம் சுட்டு
பிள்ளைகள் வளர்த்திருக்கிறாள்
சற்றே அதிகமான மீசை
குள்ள உருவம்
வட்டப் பொட்டு
அவள் சுடும்
ஆப்பம் அவ்வளவு ருசி
மூன்று பேரன்களில்
அண்ணனிடம் மட்டும்
அவ்வளவு பாசம்
கீற்றுக் கொட்டகையில்
மணலில் அமர்ந்து
மம்பட்டியான் பார்த்தது
நேற்று போல நிழலாடுகிறது
அம்மாவுக்கும் அவளுக்கும்
எப்போதும் ஆகாது
பையனுக்கே பால் விற்றவள்
நீர் கலக்க வலுத்தது சண்டை
கோபம் வந்தால்
வாயில் வசவும்
புடவையும் சற்றே
மேலேறும்
விஷப்பூச்சிக் கடித்திட
மகமாயி புள்ளய காப்பாத்து
எனைத்தூக்கி ஓடிப்போய்
மருத்துவமனை சேர்த்தவள்
கனகாம்பரம் விற்றுக்
காசு சேர்த்தவள்
பசப்பு வார்த்தை கேட்டு
சொந்தத்திடம் இழந்து விட்டு
நெஞ்சைப் பிடித்தபடி
தோட்டத்துக்கே கூட்டிக்கிட்டுப்
போய்டுங்க
கேட்டுக் கொண்டே
யார் முகமும் பார்க்காமல்
போய்ச் சேர்ந்தாள்
மகராசி

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Show 1 Comment

1 Comment

  1. K.Balaji

    உணர்வுகளை அள்ளித் தெளித்த வரிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *