கால மரம்
************
மனிதனை விட மரங்களுக்கு ஆயுள் அதிகம். பல நிகழ்வுகளைப் பார்த்த மரங்கள் மௌன சாட்சியாக நின்றிருக்கின்றன. சுந்தர ராமசாமியின் “ஒரு புளிய மரத்தின் கதை” ஒரு ஊருக்கே சாட்சியாக நின்றிருக்கிறது. உண்மையில் சு.ரா. தனது ஊரில் கண்டது வேப்ப மரம். நாவலுக்காக வேப்பமரம் புளிய மரமாகிவிட்டது என்று சு.ரா அவர்களே சொன்னதாக நினைவு.. இந்தக் கவிதையில் வருகிற ஆலமரம் உண்மையில் காலமரம்; பல காட்சிகளின் சாட்சியம். காலம் என்னும் சதுரங்கத்தில் மனிதன் நகர்த்தப்படும் காய்… அவ்வளவுதான். காலத்தின் வேர்களைக் கண்டுபிடிக்க அறிவியல் இன்னும் அகழ்வாராய்ச்சி நடத்திக் கொண்டேயிருக்கிறது.

கவிஞனிடம் காலம் வேறு வகையில் பயன்படுகிறது. கால மரம் தன் நினைவுகளைத் தானே அகழ்ந்தெடுக்கிறது. அகழ்ந்தெடுக்க அகழ்ந்தெடுக்க ஆழம் அதிகரித்துக் கொண்டே செல்வதுதான் காலத்தின் கதை. அறிவியலில் அகப்படாத காலத்தின் சூட்சுமத்தை வரலாற்றில் கண்டுபிடிக்கிறான் கவிஞன்.
“நான்
வயதான ஆலமரம்
நூறு கால் மண்டபமாய்.

என் வேர் எதுவென்று
நிறைய பேர்
ஆராய்ச்சி செய்தார்கள்
காணத்தான் முடியவில்லை.”

கால மரம் கவனித்துக் கொண்டேயிருக்கப் பல அரசியல் நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. இந்த மண்ணையும் மனிதர்களையும் புரட்டிப் போட்ட மகாத்மா முதல் பாட்டுக்களாலேயே வையத்தைப் பாலித்திட வந்த பாரதி வரை கால மரத்தின் நிழலில் நிற்காதவர்களே இல்லை.
“எங்களூருக்கு
மகாத்மா வந்தபோது
என்னடியில்தான் கூட்டம்.

மரக்கிளைகளில் எல்லாம்
மனிதர்கள்
காய்த்ததைப் பார்த்திருக்கிறேன்.

பாரதி ஒருமுறை
என் நிழலின் கீழிருந்துதான்
கனகலிங்கத்திற்கு
பூணூல் மாட்டி காயத்ரி மந்திரம்
ஜெபிக்கச் சொன்னதைக் கேட்டிருக்கிறேன்”.

காலம் தனது வரவு செலவு கணக்கை மனிதர்களை வைத்துத்தான் சரி பார்த்துக் கொள்கிறது. காலம் யாருக்கும் தயவு காட்டுவதில்லை. காலம் யாருக்கும் வஞ்சனை செய்வதுமில்லை. காலம் என்பது தயவு தாட்சண்யமோ, ஓர வஞ்சனையோ பார்க்காத இயற்கையின் அறம்.
காலமெல்லாம் ருசிக்க அமுதக் கனிகளாகக் காய்த்தவர்கள் பெரியார், ஜீவா, காமராஜர் என்கிறது கால மரம். வரலாறு வரிகளாக ஆகியிருக்கின்றன. மறந்து போகக் கூடிய மனிதர்களுக்கு மருந்தாகியிருக்கிறது கவிதை. சில நேரங்களில் கசப்பு மருந்தாக….
“பெரியார்
இளைஞர்களுக்கு
அறிவாயுதம் கொடுத்ததெல்லாம்
என் மடியில்தான்.

முள் குத்திக் கொள்ளாமல்
சுட்ட கருவாட்டை
பிய்ச்சி எடுத்து ஊட்டுவதுபோல்
கஞ்சிக்கிலாக் காரணம் கூறி
தீப்பொறியைப் பற்றவைத்த
தோழர் ஜீவா
இரவெல்லாம் படுத்துக் கிடந்ததும்
என் வேரில்தான்.

ஆல மரத்தடியை
ஆரம்பப் பள்ளியாக்கி
மாடு மேய்த்த பிள்ளைகளை
மாணவர்களாக்கி மகிழ்ந்த
காமராசருக்கு
நிழல் கொடுத்து நின்றதும் நான்.”

1967 இல் திராவிடத்தின் திருவிளையாடல் தொடங்குகிறது. அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என்று அடுத்தடுத்து நிகழ்ந்த ஆட்சி மாற்றங்களை நினைவுகூர்கிறது. சுவற்றில் ஒரு வெடிப்பு போல காட்சி தந்தது காலப் போக்கில் சுவரே இடிந்து விழுந்துவிடுகிறது. ஒரு சின்ன நிகழ்வு போலத் தோற்றம் தந்த ஒன்று பெரிய பிளவாக மாறியதைக் காலம் கூறாமல் கூறி குமைகிறது.

என் உச்சி முடியில் கொடிகட்டும்
தம்பிகளின்
மன சிம்மாசனத்தில் இருந்து
அழகு தமிழ்பேசி
அன்பால் அரசாண்ட
அண்ணாவின்
அடுக்கு மொழிக்கு மேடையும் நான்.

அரசு கட்டிலானாலும்
முரசு கட்டிலானாலும்
வார்த்தை ஜால வித்தைக்காரர்
கலைஞருக்கு
கோடையிலே இளைப்பாற
நிழல்கொடுத்த குளிர் தருவும் நான்.

பொன்மனச் செம்மல்
புரட்சித் தலைவியென
எத்தனையோ தலைவர்கள்
என்னடியில் கூட்டமிட்டு
எழுச்சியைக் காட்டுவார்கள்.

அப்போதெல்லாம்
நான்
அகம் மகிழ்ந்து
குளிர்ந்த காற்றெடுத்து
கூட்டத்தார் மேனியெலாம் பூசி
மகிழ்வித்திருக்கிறேன்.

குளிர்காலம், மழை காலம், இளவேனிற் காலம், முன்பனி காலம், பின்பனி காலம், வசந்த காலம் என்று பருவ காலங்களைப் பார்ப்பதுதான் ஆலமரம். பல அரசியல் காலங்களைப் பார்ப்பது கால மரம். எப்படி எப்படியான அரசியல் முழக்கங்கள், கொள்கைக் கூட்டங்கள், பிளவுகள், பிரிவினைகள்…. ஆனால் மனிதநேயமே அடிப்படையாய் இருந்தது. மனித நேய நூல்களாலான அரசியல் இழைகள். இழைகள் அத்தனையையும் இணைத்துச் சேலைகள் நெய்வதே ஆட்சியதிகாரம். இப்போதெல்லாம் மதம், சாதி, இனம் என்று பிரிவினை பேசும் பிற்போக்கு ஆணவங்கள். அம்மணமே ஆடையாகும் அவலநிலை. நினைவுகளைச் சுமந்த மரம் நிர்க்கதியாக நிற்கிறது. இலைகளை உதிர்த்து எதிர்ப்பைச் சொன்ன மரம் நிழலையும் உதிர்க்க நினைக்கிறதோ?
“மனிதர் நோக மனிதர் சாக
மகுடி ஊதும்
மதவெறிக் கூட்டமின்று
என் நிழலில்
கூடாரம் அடிப்பதைக் கண்டு
தடுக்க முடியாமல்
ஓர் இலைகூட இல்லாமல்
உதிர்த்துவிட்டேன்
இனி
சூரியன்தான் சுட வேண்டும்.”

– சோலை பழநி

நான்
வயதான ஆலமரம்
நூறு கால் மண்டபமாய்.

என் வேர் எதுவென்று
நிறைய பேர்
ஆராய்ச்சி செய்தார்கள்
காணத்தான் முடியவில்லை

எங்களூருக்கு
மகாத்மா வந்தபோது
என்னடியில்தான் கூட்டம்.

மரக்கிளைகளில் எல்லாம்
மனிதர்கள்
காய்த்ததைப் பார்த்திருக்கிறேன்.

பாரதி ஒருமுறை
என் நிழலின் கீழிருந்துதான்
கனகலிங்கத்திற்கு
பூணூல் மாட்டி காயத்ரி மந்திரம்
ஜெபிக்கச் சொன்னதைக் கேட்டிருக்கிறேன்.

பெரியார்
இளைஞர்களுக்கு
அறிவாயுதம் கொடுத்ததெல்லாம்
என் மடியில்தான்.

முள் குத்திக் கொள்ளாமல்
சுட்ட கருவாட்டை
பிய்ச்சி எடுத்து ஊட்டுவதுபோல்
கஞ்சிக்கிலாக் காரணம் கூறி
தீப்பொறியைப் பற்றவைத்த
தோழர் ஜீவா
இரவெல்லாம் படுத்துக் கிடந்ததும்
என் வேரில்தான்.

ஆல மரத்தடியை
ஆரம்பப் பள்ளியாக்கி
மாடு மேய்த்த பிள்ளைகளை
மாணவர்களாக்கி மகிழ்ந்த
காமராசருக்கு
நிழல் கொடுத்து நின்றதும் நான்.

என் உச்சி முடியில் கொடிகட்டும்
தம்பிகளின்
மன சிம்மாசனத்தில் ருந்து
அழக தமிழ்பேசி
அன்பால் அரசாண்ட
அண்ணாவின்
அடுக்கு மொழிக்கு மேடையும் நான்.

அரசு கட்டிலானாலும்
முரசு கட்டிலானாலும்
வார்த்தை ஜால வித்தைக்காரர்
கலைஞருக்கு
கோடையிலே இளைப்பாற
நிழல்கொடுத்த குளிர் தருவும் நான்.

பொன்மனச் செம்மல்
புரட்சித் தலைவியென
எத்தனையோ தலைவர்கள்
என்னடியில் கூட்டமிட்டு
எழுச்சியைக் காட்டுவார்கள்.

அப்போதெல்லாம்
நான்
அகம் மகிழ்ந்து
குளிர்ந்த காற்றெடுத்து
கூட்டத்தார் மேனியெலாம் பூசி
மகிழ்வித்திருக்கிறேன்.

மனிதர் நோக மனிதர் சாக
மகுடி ஊதும்
மதவெறிக் கூட்டமின்று
என் நிழலில்
கூடாரம் அடிப்பதைக் கண்டு
தடுக்க முடியாமல்
ஓர் இலைகூட இல்லாமல்
உதிர்த்துவிட்டேன்
இனி
சூரியன்தான் சுட வேண்டும்.

– சோலை பழநி

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *