கவிஞர் அரங்க மல்லிகாவின் இரண்டாம் கவிதைத் தொகுப்பு நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது வெளிவர இருக்கிறது. எத்திராஜ் மகளிர் கலைக் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவராக இருக்கும் இவரது முதல் கவிதைத் தொகுப்பு “நீர் கிழித்த மீன்”. ஆய்வுக் கட்டுரைகள், இலக்கியக் கட்டுரைகள் என்று பயணிக்கும் இவரது பன்முகப் பாதையில் கவிதையில் அவ்வப்போது மகிழ்வுடன் இளைப்பாறிக் கொள்கிறார்…..
மரங்களில் பனை தனிச் சிறப்பு பெற்று விளங்கும். தமிழ் அழகியலில் அதற்கெனத் தனிச் சிறப்புண்டு. பெண்ணும் அப்படியான தனிச் சிறப்புப் பெற்று விளங்குகிறாள் என்கிற ஒரு கவிதைதான் இத்தொகுப்பில் இடம்பெறுகிற பனையெனவே நிற்கிறாள் என்று கம்பீர கவிதை.
ஓசையோடு புரண்டு
மோதும் அலையைத்
தடுத்து!
ஒரு பெருமூச்சோடு
உள் நுழைய
காற்றுறங்கும்
அந்தப் பின்னிரவில்
நிலாவும்
எட்டிப் பார்த்தது.
ஓசையோடு
புரண்டு மோதும் அலையைத்
தடுத்தே நிற்கிறது
பனை!
படலைத் தாண்டிப்
பார்த்தது அப்போதும்
பனையெனவே
நிற்கிறாள் அவள்!
தட்டாம்பூச்சி
பிடித்து
விளையாடுபவளைத்
துரத்துகிறது
அலை
மூச்சு பிடித்துச் சொல்ல வரும்
அந்த அலையின்
பேரோலியைக்
கண்டுகொள்ளாது
நிற்கிறாள்
பனையென!
ஆர்ப்பரிக்கும்
நினைவைப்
பட்டுத் துணிக்குள்
பத்திரப்படுத்தி
மழை இரவை அழைக்கிறது
மேகம்!
அலை மடிகிறது புரள்கிறது
என்ன
நிகழ்ந்திடும்
அவளுக்கு?
எப்போதும் போலவே
நிற்கிறாள்
பனையெனவே!
— அரங்க மல்லிகா
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

