இடைவெளி
” மயக்கும் வாசம் மல்லிகை” என்பேன்
” ரோஜா போல வருமா?” என்பாள்
” மாங்கனியின் சுவை இனிமை” என்பாள்
” பலாச்சுளை போல வருமா?”
என்பேன்
“ஆலமர நிழல் சுகம்” என்பேன்
” வேப்பமர நிழல்தான் நல்லது”
என்பாள்
” கர்நாடக இசை கலக்கும்” என்பாள்
“கிராமிய இசை மெய்மறக்க வைக்கும்” என்பேன்
” கனமழையில் நனைவது ஆனந்தம்” என்பேன்
“சாரல்தான் சிலிர்க்க வைக்கும்” என்பாள்
” அருவிக்குளியல் பேரின்பம்” என்பாள்
“அலைகளில் நுழைவது அற்புதம்” என்பேன்
“புதுக்கவிதை புதுமை” என்பேன்
” மரபுதான் மனங்கவரும்” என்பாள்
“சூரிய உதயம் அழகு” என்பாள்
” மயக்கும் மாலைதான் அதிசயம்” என்பேன்
சுவைகளிலும் சரி
நிறங்களிலும் சரி
கலைகளிலும் சரி
உடைகளிலும் சரி
இருவருக்குமிடையே
இடைவெளி தான்
ஆரம்ப பொழுதுகளில்
ஆச்சரியத்தோடு பார்த்தார்கள்
பிள்ளைகள்
இடைப்பட்ட காலங்களில்
பிரமிப்போடு பார்த்தார்கள்
பேரப் பிள்ளைகள்
நிகழ்கால நிமிடங்களில்
வியப்போடு பார்க்கிறார்கள்
கொள்ளு பேரர்கள்
நாங்கள்
இணைபிரியாமல்
இருப்பதை…
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

