கவிஞர் சிற்பியின் கவிதை

கவிஞர் சிற்பியின் கவிதை

அவதூறுகள்

அவதூறுகளின் குப்பைக் கூடை
என் மேல் கவிழ்க்கப்படுவது
இது முதன்முறை அல்ல

எனக்கு அது புனித நீராட்டுப் போல்
பழகிப்போய்விட்டது
முதலில் மூச்சுத் திணறலாக இருந்தது
இப்போது சுவாச மதுரமாகிவிட்டது

அட,
இன்றைக்கு வரவேண்டிய
வசை அஞ்சல் இன்னும் வரவில்லையே
இணையத் துப்பாக்கி வெடிக்கவில்லையே
முக நூல் சுடுசரம் பாயவில்லையே
என்று என் தோட்டத்தில்
கவலை அரும்புகள் கன்றிப் பூக்கின்றன.

ஒவ்வொரு குப்பை அபிஷேகத்துக்கும்
ஒரு மரக்கன்று நடுகிறேன்
மகிழம் தேக்கு மரமல்லிகை
சந்தனம் தேவதாரு மருது வாகை
வசையின் ஆழத்துக்கு ஏற்றபடி.

ஒருபோதும்
நடுவதில்லை நான்
எட்டி மரங்களை.

என் உறவுப் பறவை

Image

ஊஞ்சலில் என்னை உட்கார வைத்து
‘உந்து கால்’ என்று ஊக்கப்படுத்தி
மேலே மேலே நான் பறக்கும்போது
கெக்கலி கொட்டி
புல்லாங்குழலெனத் தேனிசை பாடும்
அந்தப் பறவை.
அதற்கு நான் உவகை என்று பெயரிட்டேன்

கானக நடுவில்
மூங்கில் வனத்தில்
மொட்டை மரங்கள் பேய்க் கரம் நீட்ட
காட்டு நெருப்பில்
சுட்ட கரியெனப் புல்லும் கருகத்
தன்னந்தனியாய் என் கண்கள் கலங்க
மூங்கிலின் உச்சியில்
தூங்கும் சருகெனக்
குந்தி நொந்திருக்கும் அந்தப் பறவை.
அதற்கு நான் துக்கம் என்று பெயரிட்டேன்

தொலைவுகள் மறைத்து
நீலத் தகடாய் நீளும் கடலில்
திமிங்கிலம் போல நீந்தும் கப்பலில்
உச்சித் தளத்தில் சுக மதுவருந்திச்
சாய்வு நாற்காலியில் உறங்கும் தருணம்
சாட்டை சுழற்றிய சூறைக் காற்றும்
அடரும் முகிலில் மின்னல் வீச்சும்
சின்னக் குழந்தை எறிந்த பந்து போல்
திரை கடல் மீது கப்பலைத் தகர்க்க
அய்யோ என நான் அலைகளில் புதைய
எங்கிருந்தோ ஒரு கரம்
என்னை ஓர் படகினில் ஏற்றிக் கொள்ளப்
படகைச் சுற்றிப்
படபடக்கும் ஒரு பறவை.
அதற்கு நான் நம்பிக்கை என்று பெயர் வைத்தேன்.
***
கொட்டிய தானியங்களைக்
கொத்தி முடித்து
இன்னும் என்று தலையைத் தூக்கும்
என் இதயம் என்கிற
நீலப் பறவை.

———-

–சிற்பி

Show 1 Comment

1 Comment

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *