வாசித்த கவிதை
இதமாய் இருக்கிறது
வார்த்தை தென்றல்
யாரோ எழுதிய கவிதை
தூண்டி விடுகிறது
உறக்கத்தின் எதிரியை.
உங்கள் கவிதையிலிருந்து
உதயமாகிறது
எனக்கான வார்த்தைத் தேடல்
நுகரத் தொடங்கினேன்
மண்வாசனையில் கலந்தது
எனை நனைத்த மழை
மலர்கள் வியக்கின்றன
மழை வாசம் வந்ததும்
மண்ணைத் தவிக்கவிட்டு.
மலைத் துண்டுகளை
ஒட்டவைத்துப் பார்க்கிற்து
மேகத்தின் கண்ணீர்
பிளந்த மலைகளுக்குள்
காற்றை நிரப்புகிறது
மரத்தின் தாய்மை
வானத்தை வரைகையில்
வானவில்லைக் குடிக்கிறது
சிறுமியின் தூரிகை
பருகாத தேநீர்
சுவைத்துப் பார்க்கின்றன
ஊறும் எறும்புகள்.
மாநிலங்கள் விற்பனை
வயிறு நிரம்புகிறது
வரைபடம் விற்பவன்
பசியின் இருப்பிடம்
வரைவதேயில்லை
சித்திரக்காரன் தூரிகை
உப்பைத் துப்பும் கடல்
குடித்துக் கொள்கிறது
ஒற்றைத் துளி மழையையும்.
கடவுள் பொம்மைகள்
கரைந்து விட்டன
கறைபடிந்த கலவரத்தில்
தூண்டிலைத் துறக்கிறேன்
சுண்டி இழுக்கிறது
பசிப்புழு
புழுவைத் தாங்கிய தூண்டில்
நீருக்குள் நகர்கிறது
போக்குக் காட்டும் மீன்
குளத்தை வரைபவன் கையில்
வண்ணங்களுக்கு பதிலாக
அரும்பத் தொடங்கின புற்கள்.
எழுதியயவர்:

இளையவன் சிவா
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


அர்த்தமுள்ள கவிதைகள்…
சிறப்பான வார்த்தைகளின் அணிவகுப்பு.
வாழ்த்துகள்!