1
நகரும் நாட்களுக்குள்
ஒளிந்து கொள்கிறது
பெண்ணின் ஆசைகளும் கனவுகளும் வருகிற
தறுவாயில் விட்டு கொடுக்கிறாள்
ஒரு நாள் அப்பாவுக்காக
ஒரு நாள் கணவருக்காக
ஒருநாள் தன் குழந்தைகளுக்காக
ஒவ்வொரு முறையும் தோற்கும் பெண்
என்றுமே சிரித்து கொண்டிருக்கிறாள்
வென்றதும் தன் உறவுகள் தானே…..
தினமும் மனதில் தென்படும் கேள்விகளுக்கு
ஆயிரம் அர்த்தங்களை தனக்கு தானே கொடுத்து கொள்கிறாள்….
ஒரு நாள் திரும்பிப் பார்க்கிறாள்
இழந்த ஆசைகளுக்காக
தொலைந்த கனவுகளுக்காக வேதனைப்படுவதா?
எதுவும் மாறுவதுமில்லை
நானும் மாற போவதில்லை
அடிக்கடி பழகிய இடத்தில்
ஒவ்வொரு பொருளோடு தன்னையும் பொருத்திப் பார்க்கும் போது
மனம் மாறாமல் இருக்கும் மனிதர்களிடம்
இன்னும் மனிதத்தை எதிர்பார்ப்பது வீணென்பதை
உடைத்து எறிகிறாள் அமைதியென்னும் பெருமூச்சை….
2
தினமும் நடக்கும் சாலையில் தலை நிமிர்ந்து நிற்கும் ஊரின் பெயர்
சற்று தலையை திருப்பினால் போகலாம் தெருவிற்குள்
திரும்பி பார்த்தாலும் நம்மைத் திரும்பிக் கூடப் பார்க்காத ஆலமரம்
திண்ணையில் உட்கார்ந்து அசை போடும் பெரியவர்கள்
தனியாக அமைந்திருக்கும் நூலகம்
அங்கும் இங்குமாய் ஓடி விளையாடும் குழந்தைகள்
பக்கவாட்டில் தலை தூக்கி நிற்கும் தண்ணீர்த் தொட்டி
ஒரே நேர் கோட்டில் வல இடப்புறமாக அமைந்த வீடு
இன்னும் அப்படியே தான் இருக்கிறது ஒவ்வொரு கிராமமும்
இன்னும் அப்படியே தான்
இருக்கிறார்கள் மனிதர்களும்
இன்னும் அனிச்சையாய் அப்படியே தான் இருக்கின்றன
சில பால்ய நினைவுகளும்…..!
ச. சத்தியபானு
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

