நூல் அறிமுகம்: கே.ஸ்டாலின் *கவிதைத் தொகுப்பு – “அப்பாவின் நண்பர்”* – கார்த்திக் திலகன்

நூல் அறிமுகம்: கே.ஸ்டாலின் *கவிதைத் தொகுப்பு – “அப்பாவின் நண்பர்”* – கார்த்திக் திலகன்



நண்பர் கே.ஸ்டாலின் அவர்கள் எழுதிய “அப்பாவின் நண்பர்” என்கிற சமீபத்திய கவிதைத் தொகுப்பை வாசித்தேன்.
இறந்தவர்கள் குறித்த அமானுஷ்ய கவிதைகள் என்றில்லாமல் இந்த உலகமே இறந்தவர்களுக்கான அமானுஷ்ய உலகம்தான் என்று நம்ப வைக்கிற கவிதைகள் ஸ்டாலினுடையவை.
நாம் காணும் மனிதர்கள் அனைவரும் இறந்தவர்களின் நகல்கள்தான் என்பதாக ஒரு மனோவசியத்தை உண்டாக்குகின்றன இந்த தொகுப்பிலுள்ள பல கவிதைகள். நடுகல் போன்றோ கல்திட்டைகள் போன்றோ இறந்தவர் நினைவுகளை போற்றுகிற ஈமச்சின்னங்களாக, எழுத்துச் சாட்சிகளாக இந்த கவிதைகள் இருக்கின்றன. unresolved grief என்று உளவியல் மொழியில் சொல்லப்படுகிற தீராத இழப்புத் துயரின் நிழல் ஒவ்வொரு கவிதையின் மீதும் படிந்திருக்கிறது. மரணத்துயர் அல்லது இழவிரக்கம் என்பதிலிருந்து மரணச்சடங்குகள் மூலமாகவோ இறந்தவர் தொடர்புடைய பொருட்களை அழித்துவிடுவதன் மூலமாகவோ பெரும்பான்மையினர் விடுபட முனைகின்றனர். ஆனால் கவிஞன் அத்துயரத்தை நிலைப்படுத்தி இலக்கியமாக்க முனைகிறான். அந்த வகையில் இத்தொகுப்பு ஒரு அற்புதமான முயற்சி.
முன்பக்க அட்டையில் துவங்கி கடைசி அட்டை வரை மரணத்தின் வாசனை இத் தொகுதி முழுக்க ஒரு நதியைப்போல நம் கைகளை பற்றிக் கொண்டு ஓடுகிறது. தலைக்கு மேல் இருக்கிற வானத்தை நம்மாலெப்படி தவிர்க்க முடியாதோ அப்படித்தான் மரணத்தை நம்மால் தவிர்க்க முடியாது. மரணத்தின் விளிம்பில் நின்று கொண்டு வாழ்க்கையை பார்ப்பது எப்படி என்று இந்த கவிதைகள் நமக்கு கற்றுத் தருகின்றன.
இறந்தவர்கள் எல்லோரும்/ இருந்து கொண்டேதான்/ இருக்கிறார்கள்/ எந்நேரமும் யார் வழியாகவேணும்/ வெளிப்பட்டுவிடக்கூடிய/ சாத்தியங்களுடன்/
என்ற வரிகள்தான் இந்த தொகுதியின் மையச்சரடு. இந்த மையச்சரட்டை துயரத்தின் பொன்னால் இழைத்து இழைத்து மின்ன வைத்திருக்கிறார்.


இறந்த நண்பனின் சாயலில் உணவகத்தில் ஒருவனைக் காணும் போது அந்த உணவகம் உணர்வகமாக மாறிவிடுவதும் அச்சரட்டின் ஒரு ஒளித்தெறிப்புதான்.
உச்சியில் சுழலும் மின்விசிறி/ வாரி இறைத்துக் கொண்டிருந்தது/ இறந்தவனின் மூச்சுக்காற்றை/
என்று ஓரிடத்திலும்
கடைசியாக நீங்கள் தரிசித்த/ அவனது சிதையின்/ கடைசி தழலொன்று/ ஆரஞ்சு நிற மின் விளக்காய்/ உங்கள் அறை நிறைக்கிறது/ என்று மற்றொரு இடத்திலும் வருகிறது.
காணும் பொருளில் எல்லாம் இறந்தவரின் ஆன்மா அலைவுறுவதாக காட்டி இருக்கிறார். திடப் பொருள்களுக்கு உயிர் இருப்பதாக பேசும் சமணத்தை விட ஒரு படி மேலே போய் இங்கு இருக்கும் பொருட்கள் எல்லாம் இறந்தவர்களின் ஆன்மாக்கள் தங்கி இருக்கும் கூடுகள்தான் என்ற புதியவகை மெய்யியலை கவிதைக்குள் கொண்டு வந்திருக்கிறார்.
உலர்ந்த காற்று உட்புக/ ஆளுயரத்தில்/சாவு நிகழ்ந்த வீட்டின்/ வாசலில் அலைவுறும்/ மாலை வாங்கி வந்த நெகிழிப்பையென/ அலைவுறுகிறது/ அகல மறுக்கும்/ கோடையின் மரணங்கள்/
என்பதாக ஒரு கவிதை முடிகிறது. கவிதை தொகுப்பை படித்து முடித்ததும் மரணத்தின் காற்று நிரம்பிய நெகிழிப்பையாக நம் மனம் லேசாகிவிடுகிறது. சிறப்பான இக் கவிதைத் தொகுப்பு டிஸ்கவரி வெளியீடாக வந்திருக்கிறது. நண்பர்கள் வாங்கிப் படித்து விவாதிக்க அருமையான ஒரு கவிதைக்களம் இத்தொகுப்பில் இருக்கிறது. வாழ்த்துக்கள் ஸ்டாலின்.
கவிதைத் தொகுப்பு – “அப்பாவின் நண்பர்”
கே.ஸ்டாலின்


Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *