மனசு
~~~~~
உள்ளத்தையும் உடலையும்
பறிமாறிக்குங்கன்னு..
ஊரைக்கூட்டி விழா எடுக்க
நாள் குறிச்சாங்க…
காத்து கருப்பு அண்டாம
காக்கா குருவி பாக்காம
பத்திரமாய்ப்
பொத்திப் பொத்திப் பாதுகாத்த..
பொக்கிஷத்தை எல்லாம்..
ஒத்த நாளில் உன்கிட்டே
ஒப்படைச்சேன்…
உன்னோட எச்சத்துல ..
உயிர் ஒன்னு வளருது
என் வயித்தில..
பிடிச்ச அத்தனையும்
பிடிக்காம போக..
சாம்பலும் மாங்காயும்..
சப்புக்கொட்டி சாப்பிடுறேன்…
அத்தன வலியையும்
தாங்கிகிட்டு..
என் வயித்தையும் தள்ளிகிட்டு..
உன் வயிறு வாடாமா இருக்க…
உலையா கொதிக்கிறேன்,
நீ ஒருவா சாப்பிட்டியான்னு
எப்ப கேப்பேன்னு ஏக்கத்தோட….

கோணலா பொட்டுவச்சேன்..
நீ கவனிச்சு திருத்துவேனு..
கனகாம்பரமும் வச்சு பாத்தேன்..
கவனிக்கவே இல்ல நீ…
என்னுடைய அத்தனையும்
பார்த்த நீ…ருசிச்ச நீ..
எனக்குள்ள ஒரு மனம்
இருக்குன்னு எப்ப
பார்ப்ப?
எச்சில் இலைக்கு கூட
ஒரு விமோச்சனம் உண்டு …
எனக்கெப்ப விடியும்னு
தெரியலையே..
கடைசியில புழங்கற பாத்திரத்தையும்
போட்டுடச்சுப் பாத்தேன்…
உன்ன பெத்தவ
ஒன்னு சொன்னா பாரு…
“பேப்பைய மவளே..
நீ செஞ்ச அத்தனையும்
நானும் தான் செஞ்சி பார்த்தேன்..
மவராசன் திரும்பல..
மறுவார்த்த பேசல,
புள்ளக்குட்டிக்கு மட்டும்
எந்தக் குறையுமில்லே..” ன்னு …
இன்னொன்னு சொன்னாபாரு..
“இத எனக்கு சொன்னது யாரு…
என் மாமியாதான்னு”…
அப்ப ஒன்னு நினச்சிகிட்டேன்..
பிறக்கிறது ஆணுன்னா.. நல்லதனமா
சொல்லி வளக்கனும்..
“மவனே..
மனசுன்னு ஒன்னு இருந்தா …
அதுக்கும் மரியாத கொடுன்னு”…
— நேயா புதுராஜா


பெண்களின் மனக்குமுறலை கவிதை வடிவில் படைத்திட்ட தோழர் நேயாவிற்கு நன்றியும் ப்ரியமும்.
ஒவ்வொரு வரியும் அழுத்தமாகவும் ஆழமாகவும் இருக்கிறது.தொடரட்டும் தங்கள் கவிதை படைப்புகள்.
நன்றி தோழர்.💐
அருமையான கவிதை வரிகள் தோழர் நேயா புதுராஜா. மிகச் சிறப்பாக “நீ ஒருவா சாப்பிட்டியான்னு, எப்ப கேப்பேன்னு ஏக்கத்தோட….” வரிகள் அனைத்துலக பெண்மையின் ஏக்கம்.. மேலும் எழுதுங்கள் தோழர்.
நன்றி தோழர்💐
அப்ப ஒன்னு நினச்சிகிட்டேன்..
பிறக்கிறது ஆணுன்னா.. நல்லதனமா
சொல்லி வளக்கனும்..
பெண்கள் கட்டாயம் படிக்க வேண்டிய வரிகள். படித்ததை செயல் படுத்த வேண்டிய வரிகள். தாயால் மட்டுமே சிறந்த ஆண் மகனாக வளர்க்க முடியும் என்பதை விளக்கிய வரிகள். வாழத்துகள் தோழர்
நன்றி தோழர்💐
அருமையான கவிதை வரிகள். வாழ்த்துகள் கவிஞர் நேயா.
மிக உணர்ச்சிகரமான ஆழமான கருத்துக்கள். ஆண் மனதின் ஆணிவேரை கொஞ்சமாக ஆட்டிப் பார்த்திருக்கிறீர்கள். புரிந்துகொள்வார்கள் என்று நம்புவோம்.
அலட்டிக்கொள்ளாத ஆண் மனசை அசைத்துப் பார்க்கும் கவிதை. ஆணை வளர்க்கும் தாயின் பொறுப்பை உணர்த்தும் வரிகள் அருமை. கனக்கச்சிதமாக உணர்வுகளை எழுத்தில் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். படைப்பு பணி தொடர வாழ்த்துக்கள்..
நன்றி தோழர்💐
நன்றி தோழர்.💐
மலையாள எழுத்தாளர் எழுதிய சிறுகதை ஒன்றை அண்மையில் மதுரை பாலன் சொன்னார். கரடி ஒன்றை திருமணம் செய்துகொண்டாள் மகள். முதலில் திகைத்த தாய் அந்தக் கரடி தன்னை நன்றாக கவனித்துக்கொள்வதாக மகள் சொன்னதும் கேட்டாள் ‘ காட்டில் இன்னொரு கரடி இருக்குமா?’ என்று.
அருமையான பகிர்வு நன்றி தோழர்💐
Adults only போன்ற கவிதை போல் தோன்றினாலும், பல பெண்கள் சொல்ல முடியாமல் தவிக்கும் நிலைப்பாட்டை வெட்ட வெளிச்சமாக போட்டு உடைப்பது போல் அதே நேரம் கவிதைக்கே உண்டான மென்மையோடு .அருமை நேயா.