அதிகாரச் சிலுவை..
****************************
அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கிறது வாழ்க்கை.
ஏதாவது நடக்கும் என்ற கடைசி நம்பிக்கையின் வேர் அறுந்து போனது.
எதிர்காலம் கண்முன் நிழல்கட்டி நிற்கிறது.
படித்துக் கொண்டிருக்கும் பிள்ளைகள்….
மணமுடிக்கக் காத்திருக்கும் பிள்ளைகள்…..
வயதான பெற்றோர்….
நம் கையை எதிர்பார்த்து நிற்கும் உறவுகள்…
என நம்மைச் சுற்றிய
பொறுப்புகள் எல்லாம்
கழுத்தை நெரிக்கும்
கயிறுகளாய் தெரிகின்றன…..
கொள்ளை நோய்க் காலத்தில்
இழந்த பொருளாதாரம்….
கற்பிக்காத கல்விக்காக
அழுது தொலைத்த
பொருளாதாரம்…..
எந்தக் கணக்கில் சேர்ப்பது
‘அந்த’க் கணக்கில் உள்ள பொருளாதாரத்தை?
பணியிடத்தின் சவால்கள் பற்றிய கவலைகளோடும்.
பணி ஓய்வுக்குப் பிந்தைய காலத்தைப்
பற்றிய கவலைகளோடும்
சொல்லொண்ணாத் துயரத்தில் சிதறிக்கிடக்கிறேன்…..
அலுவலகம் செல்ல மனமில்லாமல்
வேறுவழியின்றி
தளர்நடையோடு நுழைகிறேன்….
உணவு உண்ணாத
அடிமை முதுகில்
ஏற்றப்படும் பொதியாய்
பணிப் பளுவைத் திணிக்கிறார்கள்….
பக்கத்து மாவட்டத்தின்
சக அலுவலரின் அழைப்பை ஏற்க தொலைபேசியை எடுக்கிறேன்…..
எந்தப் பதட்டமுமின்றி
நண்பர் கேட்கிறார்….
“ஆன்லைன் அப்டேட் செய்ய நாளைக்கு லாஸ்ட் டேட்.
எனக்கு கொஞ்சம் டவுட் இருக்கு.
சிஸ்டத்தை ஆன் பண்ணுங்க.” என அன்புக் கட்டளை இடுகிறார்.
எப்படி முடிகிறது…?
ரத்தம் சொட்டச் சொட்ட இருவரும்
ஒரே சிலுவையில்தான் தொங்கிக் கொண்டிருக்கிறோம்.
எப்படி முடிகிறது…
வலிகளை மறந்துவிட்டு
சிலுவையில்
கடமையே கண்ணெனத்
தொங்கிக் கொண்டிருக்க….
மற்றவர்களையும்
அவ்வாறிருக்கச்
செய்ய….
இன்னும்
எத்தனைகாலம்தான்
சிலுவையில் தொங்கிக் கொண்டே பரிசுத்தமானவர்களுக்கு
எதிர்சேவை செய்யப் போகிறோமோ…..
காலமே
பதில்சொல்.
–இரா. தங்கப்பாண்டியன்

