பேரணி
***********
தலைநகரை நோக்கிய
லட்சம் கோடி உழவர்களுடன்
எனது கவிதைகளும் பயணிக்கின்றன
ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை
எனது கவிதைகள் மறியல் நடத்தும்
எனது கவிதைகளுக்குப்
போராட்டங்களும் புதிதல்ல.
வெள்ளைத்தாளில் எழுதுகோல் முனையால்
கீறி உழுகிறபோதும்
கணினித் தொடுதிரையில்
மின்னம்பை நகர்த்துகிறபோதும்
கண்ணில் படுவதோ கலப்பை நுனி.
மாடுகள் இல்லாதபோது
கணவனும் மனைவியுமே
கலப்பையை இழுப்பது மாதிரி
தன்னந்தனியாகக்
கவிதையை இழுத்துவருகிறேன்.
விலை கட்டுப்படியாகாதபோதும்
ஓர் உழவனைப்போல
வார்த்தை விதைகளைத் தூவுகிறேன்.
எனது கறுப்பெழுத்துகளின் உமி நீக்கிப்பார்த்தால்
அரசியல் அரிசிகள் முகங்காட்டும்.
உழவனின் கிணற்றைப்போலவே
வற்றிப்போய்க் கிடக்கும்
எனது வாழ்க்கையும்.
உழவனைப் போலத்தான்
அடக்கவிலையை நிர்ணயிப்பதில்
எனது கவிதைப் பயிர்களுக்கும்
கட்டுப்படியில்லை.
ஒரு புயலுக்குப்பின் வயலிழந்துபோன உழவனைப்போல
இலக்கியப் புயல்களால்
நானும் வலுவிழந்து போய்விடுகிறேன்.
விவசாயிகளுடையதைப் போலவே
எனது கவிதை நிலமும்
காய்ந்துகிடக்கிறது.
இலக்கியத்திலும்
விருது நிவாரண நிதிகள்
விலை பேசப்படுகின்றன.
சமூக பயங்கரவாதத்தால்
உழவர்களின் தற்கொலைகளைப் போலவே
எனது கவிதைகளும் கொலையுண்டு போகின்றன.
ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை
அதனால்தான்
தலைநகரை நோக்கிய
லட்சம் கோடி உழவர்களுடன்
எனது கவிதைகளும் பயணிக்கின்றன
நா.வே.அருள்
சொல்லேர் பிடித்த நெம்புகோல் கவிதைகள் பயணப்படட்டும்.தமிழ்மொழியின் பேரணி விவசாயிகளின் நலன்காக்கட்டும்.
சூர்யமித்திரன்
மிக்க நன்றி தோழர். உங்கள் முகநூல் பெயர் தெரிவிக்க முடியுமெனில் மகிழ்வேன். நீங்கள் அனுப்பியுள்ள உங்கள் கவிதைக்கு எனது வாழ்ததுகள்.