அகவியின் ‘பட்டப் பெயர்கள்”
*****************************************
கவிதைகள் பல விதமாய் அவதாரங்கள் எடுத்துவிட்டன. இதுதான் கவிதை இப்படித்தான் எழுத வேண்டும் என்றெல்லாம் சொல்கிற அந்த ஒற்றை வார்ப்பட அச்சினை காலம் தன் காலச் சக்கரத்தால் நசுக்கிவருகிறது. விளிம்புகள் மையங்களாகின்றன. காலம் புரண்டு படுக்கிறது. அதனால் காளி கடைசி பென்ச்சு மாணவர்கள் என்று காலக் கொடுமையால் ஒதுக்கப்பட்டவர்களின் நாவுகளில் எப்போதோ கவிதையை எழுத ஆரம்பித்துவிட்டாள்.
கவிதையின் நிலப்பரப்பு என்று தனியாகச் சுட்ட வேண்டிய அவசியமே இல்லை. நிலப்பரப்பு எதுவென்று கவிதையின் மொழிப் பரப்பு காட்டிக் கொடுத்துவிடும். பெயர்களை வைத்தே ஊர்களைக் கண்டுபிடிக்கும், சாதியை மோந்து பார்க்கும் துப்பறிவாளர்கள் நிறைந்த நாடல்லவா?
இங்கு இடம்பெறுபவர்களின் பெயர்களே அவர்களை இன்னார் என்று இனம் காட்டிவிடுகின்றன. அவனது பிள்ளைகள் பச்சை மையில் கையெழுத்துப் போட்டாலும் அவனது பட்டப்பெயர் ‘தொள்ளகாதன்’. அண்ணன் சாவுக்கு வெளியூரிலிருந்து கார் மேல கார் வந்தாலும் அவனை எல்லோரும் கூப்பிட்டது ‘ஓட்டவண்டி’ பல சமயங்களில் பட்டப் பெயர் ஒருவனின் தன்னகங்காரத்தைக் கீழே இழுத்துச் சரித்துவிடும். கிராமங்களில் பட்டப்பெயர்கள் ரொம்பவும் சுவாரசியமான விஷயம். ஒவ்வொரு பட்டப் பெயருக்குள்ளும் ஒரு கதையே இருக்கும். ஒவ்வொரு கதைக்குள்ளும் அவர்களின் வாழ்நிலையும் இருக்கும். அவசரத்துக்கு சந்தில் பிள்ளைத்தாச்சிப் பெண் ஒதுங்குகிறாள். அங்கேயே பிள்ளை பிறந்துவிடுகிறது. அந்தப் பிள்ளைக்கு ஊர் வைத்த பெயர் சந்துகாத்தான். ஒதுங்க இடம் இல்லாத குடிசை வாழ்க்கைதான் அவர்களின் இருப்பிடம் என்பது எந்தக் குறிப்பும் இல்லாமலேயே பெறப்படுகிறது. அடுத்து, ஆண்கள் நினைத்தால் இயற்கையின் அழைப்புகளுக்கு அங்கங்கும் உட்கார்ந்து போய்விடலாம். பெண்கள் ஒதுங்குவதற்கு யாரும் பார்க்காத சந்துகளைத் தேட வேண்டியிருக்கிறது. அவசரத்துக்கு ஒதுங்க முடியாத உடல் உபாதைகளுடனும், மன எரிச்சலுடனும் வாழ விதிக்கப்பட்டவர்கள்.
‘உவ்வா’ இல்லாவிட்டால் மாரியாத்தா கண் திறக்க மாட்டாளாம். அப்படியொரு பூசாரியாம்! அப்படியான விசேஷ சக்தி கொண்ட பூசாரியானாலும் அவர் எல்லாக் கோயிலுக்குள்ளும் நுழைந்து விட முடியுமா? இந்தக் கேள்வியைக் கவிஞன் கேட்கவில்லை. ஆனால் வாசகனைக் கேட்க வைத்துவிடுகிறான்.
ஒருவருடைய பிள்ளை நகரத்தில் படித்தவன். அவனைப் பார்த்து கிராமத்து சனங்கள் கேட்கிறார்கள் – “தொப்புளான் புள்ளயா நீ”. “இம்புட்டுப் படிப்பு படிச்ச புள்ள கிட்ட தொப்புளான் புள்ளயா” என்று கேட்ட நொடியில் அப்பாவுக்கு அப்படியொரு முகவெளிச்சம். அடுத்த வரியில் மகனின் உளவியலை உடைக்கிறான் கவிஞன் – “பையன் திகிலடைந்து போகிறான்“. இந்த இரண்டு வரிகளுக்கு நடுவில் ஒரு தலைமுறை இடைவெளியை அநாயசமாக உட்காரவைத்து விடுகிறான் கவிஞன்.
“மத்து குத்திக்கு என்னடா, சிங்கம் போல மூணு பசங்க
சொன்னது போலவே ஆளாளுக்கு அரசுப் பணியில் கொடி நாட்ராங்க… குருணிமகன் டாக்டர் பட்டம் வாங்கிட்டான்.” என்கிற வார்த்தைகளில் கிராமத்துக்காரர்களின் இயலாமையின் சாயல் ஒரு ஏக்கமாகப் படிந்திருப்பதைப் பார்க்கலாம்.
போத போட்டு கிடந்த சொறிஞ்சானும், சாராயம் குடிக்கும் கொக்காயி யும் கிராமத்தில் சர்வ சாதாரணமாகத் தினமும் பார்க்க முடிகிற தள்ளாடும் பிம்பங்கள்தாம். சீரழியும் குடும்பங்களின் கானல் சித்திரங்கள்!
//கக்கபுக்காவை தாய்மாமனுக்கே
கட்டி வச்சி
வாழாம ஓடி வந்துருச்சி//
கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன் என்பதை எவ்வளவு அநாயசமாக எத்தித் தள்ளிவிட்டு ‘வாழாம ஓடி வந்துருச்சி’ என்கிறான் கவிஞன். மத்தியதர வர்க்கத்துக்கே உரிய போலி கௌரவப் பூஞ்சைக் காளான்கள் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையில் முளைப்பதேயில்லை. வாழாவெட்டி என்பது ஒரு பெண்ணைக் குறிவைத்துத் தாக்குகிற வசைச் சொல். எழுத வாய்ப்பிருந்தும் அந்தச் சொல்லைத் தவிர்த்துவிடுகிறான் கவிஞன். ஒரு சந்தோஷமான செய்தியையும் கவிதையின் இடையில் வைக்கத் தவறவில்லை. அதிலொன்றுதான் “சாமியாடி வீட்டில் இப்ப யாரும் சாமி ஆடுறது இல்ல” என்ற வரிகள். எத்தனை காலம் சாமியாடிக் கொண்டேயிருப்பது? ஒன்றிலிருந்து இன்னொன்று போக அதிலிருந்து விடுபட்டாக வேண்டும் அல்லவா? எத்தனை நாட்களுக்குக் குப்பிக்குள்ளேயே குந்தியிருப்பது?
நவுந்தான், உய்யி மாமா, நண்டு, மூக்கன், எம்எல்ஏ, டீமேக்கர், வழுக்கையன், பூச்சிப் பள்ளி, மொசக்கறி ஓலவாயன், அய்யாயிரம், ஆந்தங்காட்டுப் பசங்க இவையெல்லாம் கவிதையில் வருகிற சில பட்டப் பெயர்கள். சில பெயர்களில் அவர்களின் வரலாற்றுக் குருதி வழியலாம். சில பெயர்களில் கிராமத்தின் நக்கல் நையாண்டி கசியலாம். சிலவற்றில் ஏக்கமும் இயலாமையும் பொருமலாம். இந்தக் கவிதையை வாசிக்கிறபோது ஒரு கிராமத்துக்குள் நுழைந்து அவர்களின் “ஒரு வார்த்தை வரலாறு” களில் வாழ்ந்துவிட்டுத் திரும்புகிறத் திருப்தி. கடைசியில் கவிதையை கவிஞன் தன்னையே பகடியாக்கி முடிக்கிறான்.
//எங்களுக்கெல்லாம்
பட்டப் பெயர் வைக்கும்
முன்பே
ஊரை விட்டு
வெளியே வந்து விட்டோம்
கவிஞர், விநாயகமூர்த்தி , ஆசிரியர், தோழர் என
விதவிதமாய் அழைக்கிறீர்கள்
ஊரில் என்னவோ
என்னை
பீக் காட்டாயா பேரன்
என்றுதான் சொல்கிறார்கள்.//
இனிக் கவிஞனின் முழுக் கவிதையையும் படியுங்கள்.
பட்ட பெயர்கள்
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,…,,,,,,,,,,,
அகவி
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,..,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
தொள்ளகாதன் பரவாயில்லை.
மனைவி செத்துப் போய்
நிர்கதியா நின்ன போதும்
மறுவாழ்வு துளிர்ப்பால்
பசங்க ரெண்டு பேரும்
பச்சை மையில
கையெழுத்து போடு ரானுவ.
நவுந்தான் அப்ப எப்படி
இருந்தானோ அதே முகம்
அம்பது வயதாகியும்
ஒன்றுக்குப் போன பிள்ளைத்தாய்ச்சி
சந்திலேயே
ஆண் பிள்ளை ஈன்று விட்டாள்
அன்றைக்கு எவரோ ஒருவர்
சந்து காத்தான் என்றது
எழுபதை எட்டும் அவர்க்கு
இன்றும் அதே பேர் தான்
உவ்வா இல்லாவிட்டால்
மாரியாத்தா
கண் திறக்க மாட்டாள்
அப்படியொரு பூசாரி
எஸ்டேட்டுக்கு
வேலைக்குப் போன
உய்யி மாமா
ஊர்த் திருவிழாவிற்கு
வந்த போது செத்துப் போனார்.
கொஞ்சம் மனபேதகம்
அப்பா வைத்தியகாரர் நுணுக்கம்
அத்தனையும் தெரியாவிட்டாலும்
பச்சலை பொடி கொடுத்தே காலத்தை
செலவு செய்தார்
ஒட்ட வண்டி அண்ணன் சாவுக்கு
வெளியூரிலிருந்து
கார் மேல கார் வந்து
கவுரவம் பொங்குச்சி.
கிராமத்து பெருசுகள்
நகரத்துப்பிள்ளையைப்
பார்த்து
தொப்புளான்
பேரனா நீ
எனக் கேட்டபோது
அப்பாவுக்கு அப்படி ஒரு முகவெளிச்சம்
பையன் திகிலடைந்து போகிறான்.
மத்து குத்திக்கு என்னடா
சிங்கம் போல
மூணு பசங்க என்று
சொன்னது போலவே
ஆளாளுக்கு
அரசுப் பணியில்
கொடி நாட்ராங்க.
குருணிமகன்
டாக்டர் பட்டம் வாங்கிட்டான்
வழுக்கையன்
செத்து ஐந்தாண்டு
முடியவில்லை
பழைய வீட்டை இடித்து
பெரிய வீடு கட்டி விட்டார்கள் பிள்ளைகள்
காலமெல்லாம்
போத போட்டு கிடந்த
சொறிஞ்சான்
எண்பது வயசிலேயும்
போதை தான்
சாராயம் குடித்து
வீடு வரும் போதெல்லாம்
சாமக்கோழியை
நாலு அறை விடுவாள்
கொக்காயி.
கக்கபுக்காவை
தாய்மாமனுக்கே
கட்டி வச்சி
வாழாம ஓடி வந்துருச்சி
நண்டும் மூக்கனும்
இப்ப பேசிக்கிறது இல்ல.
ஓலவாயன்
செத்த பிறகு
மொசக் கறி திங்க முடியல.
அய்யாயிரம் குடும்பத்தில்
ஒருத்தரும் படிக்கல
ரெண்டு கேணிவெட்டி
வெவசாயத்துல
வெளுத்து வாங்குறான்
சாமியாடிக்குப் பிறகு
அந்தக் குடும்பத்தில
யாருமே சாமி ஆடுறது இல்ல.
எம்எல்ஏ வீடும்
டீமேக்கர் வீடும்
கலை இழந்து போச்சி
ஆந்தங்காட்டுப்பசங்க
இன்னக்கும்
நூறு மூட்டை நெல்லடிக்கிறானுங்க.
பூச்சிப் பள்ளி
புருசனோடு
திருவிழாவுக்கு வந்தால்
மூக்குல வெரல வைச்சப்
பாக்கும் சனம்
எங்களுக்கெல்லாம்
பட்டப் பெயர் வைக்கும்
முன்பே
ஊரை விட்டு
வெளியே வந்து விட்டோம்
கவிஞர், விநாயகமூர்த்தி , ஆசிரியர், தோழர் என
விதவிதமாய் அழைக்கிறீர்கள்
ஊரில் என்னவோ
என்னை
பீக் காட்டாயா பேரன்
என்றுதான் சொல்கிறார்கள்.
தொடர் 1ஐ வாசிக்க
தொடர் 2ஐ வாசிக்க
தொடர்3ஐ வாசிக்க
https://bookday.in/poetry-sannatham-3-indrajalam-na-ve-arul/
தொடர் 4ஐ வாசிக்க
தொடர் 5ஐ வாசிக்க
சாமியாடிக்குப் பிறகு
அந்தக் குடும்பத்தில
யாருமே சாமி ஆடுறது இல்ல.
அந்நியமாகிப் போவது அழுத்தமாக தெறிக்கிறது.
உண்மைதான் தோழர்.