ஒரு கவிஞன் ஓவியனாகிறான்
**********************************************
ஆமாம் வாழ்க்கை கசக்கிறது
கவிதை – பாரதி கவிதாஞ்சன்
கவிஞர்கள் ஓவியர்களாக மாறிவிட்டார்களா? கவிதைகள் எழுதுவதை விட்டு ஓவியங்களைத் தீட்டுகிறார்களா? இந்த விபரீதம் கொரோனா காலத்துக் கொடையாக இருக்கலாமோ? கவிஞர்கள் தங்கள் பேனாக்களைத் தூக்கி எறிந்துவிட்டுத் தூரிகைகளை ஏந்திக் கொண்டார்களா என்றால், அதுவும் இல்லை. இத்தனைக்கும் அவர்கள் கித்தான், தூரிகைகள், வண்ணங்கள் நிறைந்த பெட்டி என்று எதுவுமே இல்லாமல்தான் ஓவியங்களைத் தீட்டுகிறார்கள். கலைடாஸ்கோப்பின் மறுமுனையில் உடைந்த வளையல் துண்டுகள் டிசைன் டிசைன்களாக ஓவியக் கோலங்களாவது போல கவிஞர்களின் கவிதைகள் கண்களின் முன் காட்சிகளாகின்றன. அதாவது கவிதை ‘கலைடாஸ்கோப்.’
கொரோனா காலத்து ஊரடங்கை வசதி படைத்தவர்களின் பால்கனியிலிருந்து பார்க்கக் கூடாது; மாதச் சம்பளத்துக் காரர்களின் ஜன்னல்களிலிருந்து நோட்டம் விடக் கூடாது;. பிளாட்பாரத்தில் இறங்கி உற்று நோக்கினால்தான் ஊரடங்கு உறிஞ்சும் ரத்தம் தெரியும். வயிறுகளின் வாதை புரியும். காவலர்களின் லாட்டிகளுக்குக் கன்னிப்போன சதைகளின் கதை தெரியும். முகக் கவசம் அணிந்தாலும் கூலிக்கு அழைக்காத சோகம் புரியும்.
கவிஞன் என்பவன் கதர் அல்லது உள்ளுடல் தெரிகிற மல்துணியில் ஒரு ஜிப்பா. அண்ணாந்து பார்த்தபடி மோவாய்க்கு முட்டுக் கொடுத்தபடி ஒரு விரலை உதட்டில் சரித்து வைத்தபடி கொடுக்கும் “ஸ்டைலிஷ் போஸ்”. இந்த பிம்பங்கள் எல்லாம் நொறுங்கி விடுகின்றன. இந்தக் கவிஞன் கொரோனா காலத்தில் வேலை கிடைக்காதா என்று கூலிக்கு வேலை தேடுகிறவன். அவன் தூக்குவாளியில் தயிர் சாதம்! கொஞ்சம் ஆடம்பரமான உணவு வகை என்றால் அது ஆச்சி ஊறுகாய்தான்! சாதம் புளித்துவிடுவதற்குள் அள்ளிக் கொட்டிக்கொள்ள வேண்டுமே என்று உள்ளுக்குள் ஊருகிற பரபரப்பு. அப்படியே புளித்துவிட்டாலும் எப்படியாவது உள்ளே தள்ளுவதற்கு இருக்கவே இருக்கிறது ஆச்சி ஊறுகாய். இவன் கொரோனா கால கொடுமையால் தலை காய்ந்த கவிஞன்தான். ஆனால் இவனது நண்பர்கள்? நபி, ராமன், யேசு என எவ்வளவு பெரிய ஆட்கள்!
“கட்டட வேலைகளில் எப்போதும் புராதனங்களை இடிக்கிற இராமன்”, “ஆணிகள் தைத்தக் காயங்களின்னும் ஆறாதக் கைகளில் குருதிசொட்டும் இயேசு”. இன்னும் ஒருவர் இருக்கிறார். அவர் எப்படிப் பட்டவர்? பொதுவாக கவிஞர்கள்தாம் அலைபேசிகளுக்கு ரீ சார்ஜ் செய்ய முடியாத மிஸ்டு கால் பார்ட்டிகள். கவிஞனுக்கே மிஸ்டு கால் கொடுக்கிற நபர் யாராக இருக்கும்? ‘நபி’ என்கிறான் கவிஞன். “மிஸ்டு கால் கொடுக்கும் நபி.” இவர்களெல்லாம் எப்படி வருகிறார்கள்? கோயில், மாதாகோயில், தர்க்கா என எல்லா இடங்களும் மூடிக் கிடப்பதால் – இவ்வளவு காலம் அடைபட்டுக் கிடந்ததால் – இவர்களும் முகக் கவசம் அணிந்து வெளியே கிளம்பிவிடுகிறார்கள். கடவுளையோ, அவர்களின் தூதுவர்களையோ, மனிதர்கள் வேலைக்கு அமர்த்துவதில்லை என்கிற விஷயம் தெரியவில்லை போலும்!
கட்டாயம் ஈ பாஸ் வேறு வாங்கியாக வேண்டும். அதை வாங்குவதற்கு என்ன பாடுபட வேண்டும் என்பது அவர்கள் அறியாதது. அதனால் திருப்பியனுப்பப் படுகிறார்கள். கூலிக்கு வழியில்லாத வாழ்க்கை குமட்டுகிறது. கவிஞன் வார்த்தைகளில் வலி வழிகிறது….
“எல்லோருக்கும் கபசுர குடிநீர் கொடுக்கிறார்கள்
இன்று கூலிக்கு வழியில்லை
குமட்டியபடி தொண்டைக்குள் ஊற்றிய
மூன்று பேரும் சொன்னார்கள்
சே… என்னமாய் கசக்கிறது?
கூடவே நானும் சொன்னேன்
ஆமாம் வாழ்க்கை மிகவும் கசக்கிறது.
இனி கவிஞனின் முழுக் கவிதையையும் படியுங்கள் :
ஊரடங்குத் தளர்த்தப்படுவதாய் அறிவித்திருந்த
அரசை நம்பி
வேலைக்குப் புறப்பட்டுப் போனேன்
மிஸ்டு கால் கொடுத்த நபியை
பேருந்து நிலையத்திற்கருகில் வரச் சொன்னேன்
தயிர்சாதம் புளிப்பேறி விடுவதற்குள்
தின்றுவிடும்படி வீட்டில் சொல்லியனுப்பியிருக்கிறாள்
ஆச்சி ஊறுகாய் இருக்கிறது கூடவே
போய்ச் சேர்வதற்குள்ளாக
கட்டட வேலைகளில் எப்போதும் புராதனங்களை இடிக்கிற
இராமனும் வந்து சேர்ந்தான்
இப்போதெல்லாம் அவமானத்தில் முகம்போர்த்தி அழுகிறான்
அவனுக்கான கட்டுமான இடத்தில் தோண்டத் தோண்ட
வெளிவரும் புத்தனைப் பற்றிய விசனம் அவனுக்கு
ஆணிகள் தைத்தக் காயங்களின்னும்
ஆறாதக் கைகளில் குருதிசொட்ட
இயேசு கிறிஸ்து வருகிறான்
பிறகு நானும்
மற்ற மூவரும் செக்போஸ்டினை நெருங்குகிறோம்
வழிமறித்த காவலர்கள் ஈ பாஸ் கேட்கிறார்கள்
-2-
அச்சத்தில் உறைந்தபடி
செய்வதறியாது திகைத்து நிற்கிறோம்
தூக்குவாளியில் புளித்துக் கொண்டிருக்கிறது தயிர்சாதம்
வேறுவழியின்றி
திருப்பியனுப்பப்பட்டு ஊர் எல்லைக்குள் நுழைகையில்
முனிசிபாலிட்டி அலுவலர்கள் கட்டாயம் முகக்கவசம்
அணியும்படி அறிவுறுத்துகிறார்கள்
எல்லோருக்கும் கபசுர குடிநீர் கொடுக்கிறார்கள்
இன்று கூலிக்கு வழியில்லை
குமட்டியபடி தொண்டைக்குள் ஊற்றிய
மூன்று பேரும் சொன்னார்கள்
சே… என்னமாய் கசக்கிறது?
கூடவே நானும் சொன்னேன்
ஆமாம் வாழ்க்கை மிகவும் கசக்கிறது.
-பாரதி கவிதாஞ்சன்
தொடர் 1ஐ வாசிக்க
தொடர் 2ஐ வாசிக்க
தொடர்3ஐ வாசிக்க
https://bookday.in/poetry-sannatham-3-indrajalam-na-ve-arul/
தொடர் 4ஐ வாசிக்க
தொடர் 5ஐ வாசிக்க
தொடர் 6ஐ வாசிக்க