கவிதை: பொழுது - தங்கேஸ் | தங்கேஸ் எழுதிய "பொழுது" கவிதை | Poluthu Tamil Poetry Written By Thanges | www.bookday.in

கவிதை: பொழுது – தங்கேஸ்

கவிதை: பொழுது – தங்கேஸ்
*********************************

வாசற் கோலத்தை
இழுத்துச் செல்லும்
சிற்றெறும்புகளை
வேடிக்கை பார்க்கத்
தொடங்கியதிலிருந்து
ஆரம்பித்து விட்டது
இன்றைய பொழுது

இன்னும் கட்டி முடிக்கப்படாத
மதில் சுவரின் மீது
குறுக்கும் நெடுக்குமாக நடந்தபடி
சோம்பல் முறிக்கும்
வெள்ளைப் பூனைக்கு
எந்த எலி உணவாகப் போகிறதோ
இன்று

சற்று ஆசுவாசமாய்ப்
புரண்டு படுத்திருந்த
தெருக்களெல்லாம்
கயமையின் காலடிகளைச் சுமக்க
தங்கள் முதுகுகளை
தயார்படுத்திக் கொள்கின்றன

சற்று முன் அவள்
நின்ற பால்கனி
காலியாகி விட்டது
இனி நீ போகலாம் மனமே!

மனிதனை மனிதன்
கையகப்படுத்தும்
விளையாட்டுத் திடல்களெல்லாம்
அதிகாலையிலேயே
ஒவ்வொன்றாய்
திறக்கப் படுகின்றன
இந்த நகரத்தில்

ரொட்டித் துண்டுகள்
என்ன வடிவத்தில்
வீசப்படும் என்பதை
சந்தைக் கடவுள்கள் தாம்
தீர்மானிப்பார்கள்
இன்று

உலகமே நாடக மேடை
என்று சொன்ன
ஷேக்ஸ்பியர்
இப்போது
எந்த நாடகக் கொட்டகையில்
டிக்கெட் கிழித்துக்
கொண்டிருக்கிறானோ
யார் கண்டது ?

எழுதியவர் : 

✍🏻 தங்கேஸ்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Show 1 Comment

1 Comment

  1. திவ்யாஸ்ரீதர்

    கவிதை மிகவும் அருமை👌👌👌👌👌👌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *