முத்தத்தின் பாடல்
*
பேரன்பின் உன்னைச்
சந்தித்திருக்காவிட்டால்
இவ்வளவு இளமையில்
மகிழ்ந்து புசித்திருக்காது
மரணம் என்னை !
*
மனமுவந்து நீயளித்த
ஏமாற்றத்தின் துயரத்தை
எளிதில் ஆறுதல் செய்ய
ஒரு தூக்குக் கயிறே
போதுமானதாய் இருந்தது
பிரிய எனக்கு!
*
முதன் முதலாய்
நீயளித்த முத்தத்தின் சுவை
தேனில் ஊறிய
நெல்லிக்காயின்
துவர்ப்பாய் இருந்தது
நான் உன்னிடம் பகிராதது.
*
உன் வீட்டிற்கு
வந்த எனக்குத்
தண்ணீர் அளித்து
உபசரித்தாய்
இதயத்தின் தாகம்
பன்மடங்கானது.
*
நீ எதைக்கேட்டும்
மறுத்ததில்லை நான்
அதற்காக
உன்னை விலகிடும்
வன்மத்தையுமா
கேட்கத் துணிந்தாய் நீ!
*
நீ கூந்தலை ஒதுக்கும்
அழகில் மயங்கி
குடிகாரனாய்த்
தள்ளாடி மகிழ்கிறது
உன் காதணி.
*
சில நாட்கள் முன்
நீ விலகிய
ஆறா இரணங்களைக்
கடலிடம் ஒப்புவிக்கிறேன்
பேரலையால் அணைத்து
ஆழ்மடியில் உறங்கிட
பேரன்புடன் அழைக்கிறது
நானும் சம்மதித்து
உள்நுழைகிறேன்
அங்கும் ஓயாமல் ஒலிக்கிறது
உன் முத்தத்தின் பாடல்.
*********************************
எழுதியவர்:
பொன்.தெய்வா
ஐவேலி
விழுப்புரம் மாவட்டம்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

