Poruthamanavan Shortstory By N. Jagadeesan பொருத்தமானவன் சிறுகதை - ந. ஜெகதீசன்

அபினவ் காலையிலேயே கார்த்திக்கை போனில் அழைத்தான். இன்று மாலை வேலை முடிந்ததும் இருவரும் காபி கடைக்கு செல்லாம் என்றான். அவன் குரல் வெளிப்படுத்திய தொனியை வைத்து,

“ஏன்.. எதாவது பிரச்சனையா?” என்றான் கார்த்திக்.

“சாயந்தரம் நேர்ல பேசலாமே” சுருக்கமாக சொல்லிவிட்டு போனை வைத்தான்.

கார்த்திக் அபினவ் இருவரும் இரு சக்கர வாகனம் தயாரிக்கும் தனியார் நிறுவனத்தில் நிர்வாக அதிகாரிகளாக பணிபுரிகிறார்கள். அபினவ் மனித வளத்துறையில் மேலாளராகவும் கார்த்திக் தர மேம்பாட்டுத் துறையில் மேலாளராகவும் பணிசெய்து வருகின்றனர்.

இருவரும் மேலாளர்களாக பணிபுரிவதால் பணியிடத்தில் பிரச்சனைகள் ஏற்படும் போதும் மன அழுத்தத்தை உணரும்போதும் இந்த மாதிரி ரிலாக்ஸ் செய்ய இருவரும் வெளியே போவதுண்டு. சில நேரங்களில் நீண்ட தூரம் காரில் சென்று அங்கே ஏதாவதொரு உணவகத்தில் சிற்றுண்டி உண்டு விட்டு வருவது கூட உண்டு.

மாலை கக்கன் தெருவிலிருந்த அமுதம் காபி கடையில் இருவரும் உள்ளே நுழைத்தனர். ஒரு ஓரமாக இருந்த மேசையில் அமர்ந்தனர்.

ரெண்டு பாலில்லாத கருப்பட்டி காபியை ஆர்டர் செய்தான் அபினவ்.

“அப்படியே எனக்கு ரெண்டு மெதுவடை” என்று சொன்னான் கார்த்திக். அபினவ்வை பார்த்து “உனக்கு..?” என்றான்.

“எனக்கு பசியொண்ணுமில்ல காபி மட்டும் போதும்”

அபினவ்விற்கு என்ன பிரச்சனையென்று தெரிந்து கொள்ள கார்த்திக்கின் மனம் பரபரத்தாலும் அதைப் பற்றி கேட்காமல் கால அவகாசம் கொடுத்து பொது விஷயங்களை பேசலானான்.

கடை பணியாளர் காபியையும் வடையையும் கொண்டு வந்து மேசையில் வைத்தார். காபியை எடுக்கையில் அபினவ்வின் முகத்தை பார்த்தான் கார்த்திக். அபினவ் முகம் வாட்டத்துடன் இருப்பது மிதமான வெளிச்சத்திலும் நன்றாக தெரிந்தது.

“என்னாச்சு, ஏதாச்சும் பிரச்சனையா” மெதுவான குரலில் கேட்டான் கார்த்திக்.

“ஆமாடா.. இந்த வருஷம் புரமோஷன் லிஸ்ட்ல எம்பேரு வரல”

அதிர்ச்சி அடைந்த கார்த்திக் “என்னடா சொல்ற ?? நீதான் எச். ஆர்ல பெஸ்ட் பெர்மார்மர். ஒனக்கே புரமோஷன் வரலயா? நெஜமாவா சொல்ற? என்னால நம்பவே முடியலடா”

பதிலேதும் பேசாது முதல் மடக்கு காப்பியை மெதுவாக உறிஞ்சினான் அபிநவ்.

கார்த்திக் தொடர்ந்தான் ” உனக்கும் ஜி.எம்முக்கும் ஏதாவது பிரச்சினையா?”

“இப்ப எல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல. ஏழெட்டு மாசத்துக்கு முன்னாடி நடந்த அந்த இன்டர்வியு விஷயத்தை மனசுல வெச்சுட்டு தான் பழி வாங்கிட்டாறோன்னு தோனுது”

“அன்னைக்கு நடந்த இண்டர்வியூ குழப்பத்த பொறுத்தவரைக்கும் உம்மேல ஒரு துளி தப்பும் இல்லையேடா. அப்புறம் ஏன் உன்னோட பதவி உயர்வுல கை வச்சாரு ஜி.எம்?.” புருவங்களை சுருக்கி நிஜமான வருத்தத்துடன் கேட்டான் கார்த்திக்.

தரக்கட்டுப்பாட்டு துறையில் இருக்கும் ஒரு முக்கியமான பணியிடத்தை நிரப்ப ஏழெட்டு மாதங்களுக்கு முன் ஒரு இன்டர்வியூ நடத்தப்பட்டது. தரக்கட்டுப்பாட்டுத் துறை என்பதால் டெக்னிக்கல் தேர்வை கார்த்திக் நடத்துவான். இறுதி நேர்முகத் தேர்வை அபிநவ் நடத்தி ஆட்களைத் தேர்வு செய்வது வழக்கம். ஆகையால் ஜிஎம் கார்த்திகையும் அபினவ்வையும் அழைத்து மணி என்று ஒருவன் இண்டர்வியூவிற்கு வருவான். அவனையே மேற்கண்ட போஸ்ட்டுக்கு தேர்வு செய்ய வேண்டும் என்று பரிந்துரை செய்தார்.

டெக்னிக்கல் டெஸ்ட்டின் போது ஜி.எம் பரிந்துரை செய்த மணி உட்பட மொத்தம் ஆறு பேரைத் தேர்வு செய்து அனுப்பினான் கார்த்திக். இவர்கள் ஆறு பேரும் இறுதி நேர்முகத்தேர்வுக்கு அபினவ்வின் அறைக்கு அனுப்பப்பட்டார்கள். அபினவ்வும் மணி என்பவனையே தேர்வு செய்தான்.

ஒரு வடையை உண்டுவிட்டு “என்னடா அமைதியாயிட்ட?” என்று குரல் கொடுத்தான் கார்த்திக்.

“அந்த பையன் ஜி.எம்முக்கு நெருங்கின சொந்தமாம் டா”

“அதனாலென்ன. நம்ம மேல எந்த ஒரு தப்பும் தப்புமில்லையேடா..”

அபினவ் நிதானமாக பேசினான் “அந்த நேர்முகத் தேர்வுக்கு அப்புறம் அவர் எம்மேல ரொம்ப கடுப்பாயிருட்டாரு. என் கோப்புகளை மட்டும் நிலுவைல போட்ருவாரு. பல நாள் வேலை நேரம்‌ முடிஞ்ச பிறகும் தேவையில்லாமல் ஆஃபீஸ்லயே தங்கி இருந்துட்டு போக சொல்லுவாரு. சம்பந்தமே இல்லாம கோபப்படுவாரு. இப்படியே போய்ட்டிருந்தது. இதெல்லாம் மனசுல வச்சுக்கிட்டு என்னோட வேலையில சின்ன தவறு கூட வராமல் பார்த்துக்கிறேன்… அதனால ப்ரமோசன்ல கைவைக்க மாட்டார்ன்னு நம்பிக்கையோட இருந்தண்டா.”

அன்றைய நேர்முகத் தேர்வு நாளின் நினைவுகளில் மூழ்கினான்.

அன்று இறுதிச் சுற்றுக்கு வந்த ஆறு பேர்களும் வறவேற்பறையில் அமர்ந்திருந்தார்கள். அந்த வழியாக உள்ளே வந்த ஜி.எம் உட்கார்ந்திருந்த ஆறுபேரில் ஒருவரைப் பார்த்து கண்ணால் பேசினார். பின் ஜன்னலருகே நின்றவர் யாரும் பார்க்காத போது தமது ஆட்காட்டி விரலை உயர்த்தி அவனுக்கு ரகசிய செய்கை செய்து விட்டு நகர்ந்து சென்றார். இவற்றை கண்ணாடி அறையின் உள் பக்கத்திலிருந்து அபிநவ் பார்த்துக்கொண்டிருந்தான். பொது மேளாளர் பரிந்துரைக்கின்ற ஆள் யார் என்பதை அடையாளம் கண்டு கொண்டான் அபினவ்.

ஒவ்வொருவரின் ரெஸ்யூம், போட்டோ மற்றும் முகவரி ஆகியவற்றை மீண்டும் ஒரு முறை பார்த்த பிறகு ஜி.எம் யாரை உண்மையில் பரிந்துரை செய்துள்ளார் என்பதை தெரிந்து கொண்டான் அபினவ்.

பின் ஆறுபேரையும் தனித்தனியாக நேர்க்காணல் செய்தான். நேர்காணல் செய்து அவர்களின் தனித்திறன்கள் குடும்ப பின்னணி முதலியவற்றை குறிப்பெடுத்துக் கொண்டான். மணி கிராமப்புறத்தில் இருந்து வந்திருக்கிறான். அவனுக்கு கூர்மையான அறிவும் பிரச்சனைகளை எளிதாக கையாளும் திறனும் இருப்பதாக அபினவ் உணர்ந்தான். அவனது குடும்பமும் பொருளாதாரத்தில் பின்தங்கியதாக இருந்ததை தெரிந்து கொண்டான். ஆறு பேரையும் நேர்முகத் தேர்வு செய்ததில் அந்த காலியிடப் பணிக்கு மணி என்பவன் தான் பொருத்தமானவன் என்று தோன்றியது. துணிந்து மணியை தேர்வு செய்துவிட்டான்!

காபியை இன்னொரு வாய் நிதானமாக உறிஞ்சிய‌ அபினவ் “கார்த்திக் எனக்குள்ள ஒரு சஞ்சலம். உங்கிட்ட ஒண்ணு கேக்கட்டுமா?”

“ம் .. கேளுடா”

“அன்னைக்கு இண்டர்வியூல…” என்று தொடங்கிய அபினவ்வை இடைமறித்த கார்த்திக்

“அதையே திரும்ப திரும்ப ஏன் பேசிட்டிருக்க… அன்னைக்கு நம்மகிட்ட மணின்ற பையன் வருவான் அவனை தேர்வு செய்யுங்கன்னு ஜி.எம் சொல்லியிருந்தாரு. அதை வச்சு நாம மணின்றவனையே தேர்வும் பன்னிட்டம். அதுக்கப்புறந்தான் தெரிஞ்சது அவர் குறிப்பிட்ட பையனோட முழுப்பேரு மணிவண்ணன்னு. அவர் அந்த பையன வழக்கமா அழைக்கிற மாதிரி மணின்னே நம்மகிட்டையும் சொல்லிட்டாரு. அன்னைக்கு பார்த்து மணின்ற வேற ஒரு பையனும் இண்டர்வியூக்கு வந்துட்டான். இதுல நம்ம தவறு எதுவுமே இல்லையேடா”

“இருந்தாலும்…. நாம மணியை தேர்வு செஞ்சிட்டம். அந்த வேலைக்கு மணி பொருத்தமானவன் தானா..? அதான் மனசுக்கு சஞ்சலமா இருக்கு. நல்லா யோசிச்சு சொல்”

கார்த்திக் சிறிதும் தயங்காமல் “அந்த மணின்ற பையன் என்னோட டிபார்மெண்ட்ல இருக்குறதால அவனோட திறமையை இப்போ வரைக்கும் நான் தொடர்ந்து கவனிச்சிட்டு தான் வரேன் அபினவ்… பையன் நல்லா வேலை பார்க்குறான். வேலையில் புதுப்புது ஆலோசனைகள் சொல்லி நடைமுறைப்படுத்தறான். நாஞ்சொல்லுவன் மணி நூ…று சதவீதம் அந்த வேலைக்கு பொருத்தமானவன் தான்” என்றான்.

அபினவ் பதவி உயர்வு பற்றிய எண்ணங்களற்று உள்ளுக்குள் இன்னொருமுறை நிறைவாய் உணர்ந்தான்.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *