அழிஞ்சில்

கோவில்களில் காண்க அபூர்வமாய்
போகருக்கு வாய்த்த புத்தழிஞ்சில்
டீக்கடை மணிக்கு அழிஞ்ச மரம் ஆகாது
பெயரைப் பார்த்துமா ஆசைப்பட்டாய்
என்றார்
பூவிழுந்த கண் கோவிந்தராஜு ஆசாரி
கேட்டுச் சென்றார் ஐநூறுக்கு-
ஆகாதாம் அதனால்.
மனதுக்குள் வெட்டியவன் கெட்டியவன்.
ஐநூறு ஐநூறாய் நூறு நூறாய்
ஐம்பது ஐம்பதாய் இப்போது
பத்துப் பத்தாய் பத்தும் பத்தாததாய்
போகாறு அகலக் கடை வீட்டில்
முன்பணம் கொடுத்து முதலில் நின்ற இடம்
மூத்திர நாற்றம்
சுற்றிய நாற்றங்கால் சேறு
கால் பதிய வாள்பதியும் மரக்கிளைகள்
கிளை தரித்த மரம் தரித்ரம்
வான் இறக்கும் வெயில் தலை.
தேக்கும் பூவரசும் கோங்கு வேங்கை
கொடும் படாக்கும்
இட்டார்க்கு இட்டவழி
யாமென்றிருந்தவனை யானெனக் காட்டியது வீடு
மனக் கனம் தெரியாத வேம்பு
கல்தேக்கு பென்சில்
அறுவர் கூடி ஆராய்ந்தறுக்க
ஆவென்று விட்ட மூச்சு
மரம் சாயச் சாய
உண்ணக் கொடுத்த மரப்பசிய
வாசம் வீசும்
இலையூறி மறையும் பச்சையும்
கொம்பேறியும் பாதை கேட்டு
சீடர்களுக்குப் பிட்ட துண்டங்களாய்
மரப்பொதி அறுத்து மடக்கி
ஏற்றிய ஜன்னலும் சட்டமும்
நிலைத்த வீட்டில்
பெயரைப் பார்த்துமா ஆசைப்பட்டாய்
என்றார் பெரியோர்
எளியவனுக்குப்
பெயரில் என்ன இருக்கிறது..
வசிப்பிடம்
ஜன்னலோர விழிகளில் புன்னகைத்து
யாருமற்ற காற்றில் கையசைத்து
சாமிக்குப் படைக்கும்
முளைப்பாரியாய் வெளுத்து வேர்விட்டு
நாதஸ்வரத் தவிலின்
ஒரு பெட்ரோமாக்ஸ் இரவில்
எல்லோரும் பார்க்க
வேறு இடம் சேர்வாய்.
இந்த ஸ்நேகமான
காற்றும் ஜன்னலும்
எனக்கு சாட்சி சொல்லும்
நீயற்ற வெற்றிடத்தில்
நான் வசித்தேன் என்று.

