அவர் ஒரு விசைத்தறித் தொழிலாளி. பணியிடம் சார்ந்த உழைப்பால் நீண்ட கால உழைப்பால், உடல் நலிவடைந்து, நுரையீரல் தொற்றுக்கு ஆளாகி, மூச்சுத் திணறல் கோளாறுகளால் அவதிப்பட்டு வந்தார். தன் இரண்டு பெண்களையும் படிக்க வைக்கவும் வாழ்க்கையில் போராடிக் கொண்டிருந்தார். நண்பர்கள் அறிமுகத்தால், எங்கள் கல்லூரியில் தன் மூத்த மகளை சேர்த்துவிட்டார். கொஞ்ச நாட்களில் “என்னால் படிக்க வைக்க இயலாது நான் நிறுத்தி விடுகிறேன்” என்றார் .நாங்கள் தடுத்து நிறுத்தி, செலவுக்குப் பொறுப்பேற்று படிக்க வைத்தோம். இப்படியான உதவிகள் வழியாக அவர் போராடிப் போராடி எம்எஸ்சி பிஎட் வரை படித்தார்.எப்படியோ, ஒரு தனியார் பள்ளியில், எட்டாயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலைக்கும் சேர்ந்துவிட்டார். இந்த நிலையில், தன் தந்தை மரணப்படுக்கையில் தள்ளப்பட்டார்.
ஈரோடு நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவச் செலவு இரண்டு லட்சத்தை தொட்ட போது, அவர் இயற்கை எய்திவிட்டார். மருத்துவமனை செலவுகளை, மாதம் ஐயாயிரம் ரூபாய் வீதம் கொடுத்துக் கழிக்க வேண்டும் என்று பிரமாண வாக்குப் பத்திரம் எழுதிப் பெற்றுக் கொண்டுதான் தன் தந்தையின் உடலை எடுத்து வந்து நல்லடக்கம் செய்தார். மாதம் 5000 ரூபாய் வீதம் எப்போது அந்த கடனை அவர் கட்டி முடிப்பார்? எப்பொழுது தன் தங்கை மற்றும் தாயின் குறைந்தபட்ச கடமைகளைச் செய்து முடிக்கப் போகிறார்? எப்பொழுது திருமணம் செய்து கொள்ள இயலும் என்பதும் தெரியவில்லை. இந்தப் பெண்ணின் தந்தை அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனை ஒரு சாதாரண தனியார் மருத்துவமனை. ஐந்து நட்சத்திர விடுதிகளைப் போலத் தோற்றம் கொண்ட மருத்துவமனையின் மருத்துவ செலவுகள் எப்படி இருக்கும் என்று கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்?
இந்த ஐந்து நட்சத்திர மருத்துவமனைகள் தொடங்கி சாதாரண தனியார் மருத்துவமனைகள் வரை எத்தனை தனியார் மருத்துவமனைகள் இன்றைய கொரானா தொற்று சிகிச்சைக்குப் பயன்படுகின்றன என்றும் எண்ணிப் பாருங்கள். “கொரானா சிகிச்சைக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்று எத்தனை தனியார் மருத்துவமனைகள் அறிவித்து இருக்கின்றன? ஏன் தனியார் மருத்துவமனைகள் இந்தநேரத்தில் ஓடி ஒளிந்து கொண்டன? ஏன் பல தனியார் மருத்துவமனைகள் இரவில் கூட விளக்குகளை அணைத்துவிட்டு நீடுதுயில் காண்கிறது?
தனியார் மருத்துவமனைகள் தற்காலிகமாக கொரானா சிகிச்சைக்காக மருத்துவமனைகளைப் பயன்படுத்த வேண்டியது மருத்துவ அறநெறி அல்லவா? சாதாரண காய்ச்சல் கண்ட அரசு மருத்துவர் ஒருவர், இந்த தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடியாமல் அலையாய் அலைந்து, மாவட்ட ஆட்சி தலைவர் தலையீட்டின் பெயரில் சிகிச்சை பெற முடிந்தது என்பதை செய்திகள் வழியாக அறிகிறோம். ஏனிந்த அவல நிலை?
மருத்துவம் என்பது பொது மருத்துவமனையில்சேவையாக இருக்கிறது. அது சேவையாகவே நீடிக்கிறது. மருத்துவர்கள்,செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட குறைந்தபட்ச நோய்தடுப்பு உபகரணங்கள், பாதுகாப்பு கவசங்களைக் கொண்டு சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவைகள் போதுமானதாக இல்லாத நிலையிலும் கூட, உயிரைப் பணயம் வைத்து பணியாற்றுகிறார்கள். ஆனால், அதே சேவை, தனியார் வசம் சென்று, ஒரு பண்டமாக மாற்றமடைந்து விட்டால் என்ன நடக்கிறது என்று பாருங்கள்? ஒரு சேவை, பண்டமாக மாறும் பொழுது, அது அதன் இயல்பை இழந்து விடுகிறது. பண்டம் – பணத்திற்கு உரிய இயல்பான சந்தையின் குணங்கள் அதற்கு வந்துவிடுகிறது. லாப நட்ட கணக்குகள் வந்துவிடுகிறது. லாபம் கிடைக்கும்போது உற்சாகமாகப் பணியாற்றுவதும், நட்டம் ஏற்பட்டால் கடையைச் சாத்தி விடுவதும் சேவை என்ற பன்பை அரித்துத் தின்றுவிடுகிறது.
இத்தகைய சந்தையின் இயல்பு, தனியார் மருத்துவமனைகளுக்கும் தொற்றிக்கொண்டது. சரி! தனியார் மருத்துவமனைகள் லாபத்தை மட்டுமே பிரதானமாகக் கொண்டு செயல்பட்ட காலத்தில்கூட, சந்தையின் நெறிமுறைகளையேனும் பின்பற்றி வந்ததா? என்பதையும் இந்த நேரத்தில் சிந்திப்பது அவசியம். மருத்துவ துறையின் மூலம் கிடைக்கும் அதிக லாபம் அவர்கள் கண்களை மறைத்து விட்டது. எவ்வளவு படித்தவர்களாக, பணம் படைத்தவர்களாக, அறிவுஜீவிகளாக, பகுத்தறிவுவாதிகளாக இருந்தாலும் மருத்துவம், சிகிச்சை உடல் நலம் என்று வந்துவிட்டால், மருத்துவர் சொல்வதைதான் அப்படியே நம்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிடுகிறது. சொன்ன பணத்தை சொன்ன நேரத்திற்கு செலுத்த வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது. இதன் காரணமாகத்தான் தனியார் மருத்துவத் தொழிலில் லாபம் கொடி கட்டிப் பறக்கிறது. மருத்துவமனைகளில் வசூலிக்கும் கட்டணங்கள் எந்த அடிப்படையில் யாரால் எப்படித் தீர்மானிக்கப்படுகிறது? எந்த அளவு கட்டணங்கள் நியாயமானவை? என்று மருத்துவ சேவையைப் பெறுவோருக்கு எந்தவிதமான வழிகாட்டுதலும் இல்லை.
ஏன், அவசர காலத்தில் கூட பணத்தைப் பார்க்காமல் சிகிச்சை அளிக்க முன் வந்த தனியார் மருத்துவமனைகள் எத்தனை? அவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகள் தேவைதானா என்று தெரிந்துகொள்ளும் வசதி நம்மிடம் ஏதாவது இருக்கிறதா? பரிந்துரைக்கும் பரிசோதனைகள் தேவையா? இல்லையா? என்பதைத் தெரிந்து கொள்ளக் கூட ஒரு வழி இல்லை. தனியார் மருத்துவமனைகள் சேவை மனப்பான்மையோடு செயல்பட்டு இருந்தால் “நாட்டின் துயரத்தில் நாங்களும் பங்கு கொள்கிறோம்” என்று இந்நேரம் அறிவித்திருக்கும். ஒரு நம்பகத்தன்மை இந்த மருத்துவமனைகள் மீது உருவாகியிருக்கும். ஆனால், தனியார் மருத்துவத்தில் சேவை உள்ளம் மறைந்து போனதையே தற்போதைய சூழல் எடுத்துக்காட்டுகிறது.
ஒரு சாதாரண லாபம் ஈட்டும் தொழில் போல மருத்துவ தொழிலும் மாறிவிட்டது. தனியார் மருத்துவமனைகளைக் கட்டுவதற்காக நிலம் மருத்துவ உபகரணங்கள், மானியங்கள், வரிச் சலுகைகள் இன்னபிற சலுகைகளை அரசு பலவிதங்களில் அளித்த சலுகைகள் மானியங்கள் வரிச் சலுகைகள் எவ்வளவு இருக்கும்? என்பதைக் கணகிட்டால் மலைத்துப்போவோம்!
தற்போதைய கடினமான நேரத்தில் கூட இந்தத் தனியார் மருத்துவமனைகள் நெருக்கடி தீர்க்க பயன்பட வில்லை எனில் மக்கள் வரிப்பணத்தில் அரசு செய்த சலுகைகளுக்குப் பிரதிபலன் என்ன?
ஒரு சராசரி லாபமீட்டும் தொழில் போல் மருத்துவ தொழில் முற்றிலுமாக மாறிவிட்டதை அரசு அப்படியே ஏற்றுக் கொள்கிறதா? நோயின் தாக்கம் அதிகரிக்கும் போது கூட பள்ளி கல்லூரிகளை அரசு தேடிச் செல்கிறார்களே தவிர தனியார் மருத்துவமனைகளை தேடிப் போகவில்லை.
பள்ளி கல்லூரிகளில சிகிச்சை அளிக்க என்ன வசதி இருக்கிறது? தொற்று பாதித்த ஒருவரை தனிமைப்படுத்தி தனியாக வைத்தால் மட்டும் போதுமா? வேறு சிகிச்சைகள் வேண்டாமா? அத்தகைய சிகிச்சைகளையும் ஊழியர்களையும் மேற்படி பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கு. கொண்டு சேர்ப்பது எவ்வளவு கடினமான செயல்? இதற்கு மாறாக, தனியார் மருத்துவமனைகளை முற்றிலுமாகப் பயன்படுத்திய பிறகு, அடுத்தகட்டமாகப் பள்ளி கல்லூரிகளைத் தேடிப் போனால் என்ன?
கொரானா நோய்த்தொற்று பரிசோதனை செய்ய சில தனியார் மருத்துவமனைகளில் தான் வசதி வாய்ப்புகள் உள்ளன. இந்த வசதி வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளக்கூட அரசு யோசனை செய்கிறது. அரசு மானியத்துடன் கூடிய சேவைகளை மேற்படி மருத்துவமனைகளில் தொடங்குவதற்குப் பதிலாக, தனியார் மருத்துவ மனைகளுக்கு அரசே கட்டணங்களைத் தீர்மானிக்கிறது. இதை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தனியார் மருத்துவமனைகளை அரசு எச்சரிக்கிறது
அரசு விதிக்கும் கட்டணங்களை மீறுவது ஒருபுறம் இருக்கட்டும். கொரோனா என்ற கொடிய நோய்த் தொற்று சகல பகுதி மக்களையும் பீடித்திருக்கும் இந்த வேளையில், எந்தவகை வருவாய்ப் பிரிவினராக இருந்தாலும், அனைவரையும் ஒரு பீதி, மன அழுத்தம், பதட்டம் தொற்றிக் கொண்டுதான் இருக்கிறது. இந்த நேரத்தில் தனியார் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டுமென்றால் கட்டணத்துடன் செல்ல வேண்டும் என்ற எண்ணமே மேலும் வலியை தோற்றுவிக்கும்.
எனவே பரிசோதனைக்கான செலவுகள் முழுவதையும் அரசே ஏற்றுக் கொள்வது தான் பொருத்தமாக இருக்கும்.
இது ஒருபுறமிருக்க, அரசின் பொது சுகாதாரத் துறையின் கீழ் இயங்கும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை மருத்துவ மையங்கள் தொடங்கி மாவட்ட மருத்துவமனைகள் ,அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் வரை போதுமான செவிலியர்கள் இல்லை. மருத்துவர்கள் இல்லை.மருத்துவப் பணியாளர்கள் இல்லை. மருந்துகள் இல்லை. மருத்துவ உபகரணங்கள் இல்லை. இவை மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடலாம். ஆனால் பற்றாக்குறை நீக்கமற எல்லா மாநிலங்களிலும் நிலவுகிறது. இப்படிப் பலவற்றின் பற்றாக்குறையோடு இயங்கி வரும் பொது சுகாதாரத்துறை இன்றைக்கு உயிர்காக்கும் துறையாக மாறியிருக்கிறது. மக்களின் ஒரே நம்பிக்கையாக இருக்கிறது. இத்தகைய பற்றாக்குறைகள் வட இந்திய மாநிலங்களில் மிக மிக அதிகம். தற்போது அவர்கள் படும் பாடு நமக்குக் கண்ணீரை வரவழைக்கிறது. எந்தவித சிகிச்சைக்கும், அரசு மருத்துவமனைக்குத் தான் செல்ல முடியும் என்ற நிலையில் இருக்கும் ஏழை எளிய மக்கள் விளிம்புநிலை மக்கள் அரசு மருத்துவமனைகளுக்கே வருகிறார்கள். மருத்துவர்கள் மருந்துகள், மருத்துவப் பணியாளர்கள் உள்கட்டமைப்பு வசதிகள் ஆகியவை இல்லாமல் அரசு மருத்துவமனைகள் திண்டாடுகிறது.
போதுமான சிகிச்சை போதுமான விதத்தில் மக்களுக்குக் கிடைக்காத சூழ்நிலையில், மக்களின் கோபம், அரசு மருத்துவர்கள் மீதும் மருத்துவப் பணியாளர்கள் மீதும் திரும்புகிறது. அரசின் மீது திரும்பவில்லை.மருத்துவம் என்பது, இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் படி மாநில பட்டியலில் இடம் பெற்றிருக்கிறது. இதனைத் திறம்பட பயன்படுத்திக்கொண்ட மாநிலங்களான தமிழ்நாடு கேரளம் போன்றவை ஒப்பீட்டளவில் மருத்துவ சேவையில் முன்னேறியிருக்கிறது. இன்றைக்குக் கொரோனா மேலாண்மையில் வட மாநிலங்களைக் காட்டிலும் மிகவும் மேம்பட்ட நிலையில் இருக்கிறது. ஆனால், இன்னும் இந்த மாநிலங்கள், பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதில் வெகுதூரம் செல்ல வேண்டும் என்பதையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த நெருக்கடியான நேரத்தில் மிகுந்த ஆறுதலான செய்தி, உச்சநீதிமன்றம், அரசியல் சாசனத்தில் குடிமக்களின் அடிப்படை உரிமைகள் என்று வரையறுக்கப்பட்ட 21 வது ஷரத்தின் படி மருத்துவ சேவை ஓர் அடிப்படை உரிமையாக கருதப்பட வேண்டும் என்று கூறியிருப்பது தான்.
தற்போதைய கொரானா நோய்த் தொற்று நெருக்கடி நமக்கு கற்பிக்கும் மிகப்பெரிய பாடம், பொதுசுகாதார முறை மிகவும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்பதே. தற்போதைய உடனடி அரசின் செயல் திட்டம் கொரானா தொற்றுநோய் மேலாண்மையில் தனியார் துறையைச் சிறப்பாகப் பயன்படுத்துவது. தனியார் மருத்துவமனைகளை நெறிப்படுத்த, கண்காணிக்க, மேலாண்மை செய்ய, சீரிய வரைமுறைகள் தேவைப்படுகின்றன. அதனை உருவாக்கம் செய்தல் நடைமுறைப்படுத்துதல் ஆகியவை அரசு நினைத்தால் முடியாதது அல்ல. பன்னாட்டு மூலதனம் இந்திய மருத்துவத் துறைக்கு வந்து குவிந்து கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் அதற்கு நேர் முகமாகவும் மறைமுகமாகவும் தடைகள் வரலாம்.ஆனால், அவற்றைப் புறந்தள்ளி செயல்படுவதே மக்கள் நலனுக்கும் அரசுக்கும் மிகவும் நல்லது.