“அன்னையின் அமுத மொழிகள்” – நூல் அறிமுகம்
“பழமொழி என்பது வெறும் சொல்லாடல் அல்ல; அது பல தலைமுறை மனிதர்களின் கூட்டு அறிவின் வெளிப்பாடு.”
பழமொழிகள் என்பவை மனித குலத்தின் பல நூற்றாண்டு கால அனுபவங்கள், நாகரிக வளர்ச்சி, மற்றும் வாழ்க்கை முறை ஆகியவற்றின் சாரம் ஆகும். “ஆழம் அறியாமல் காலை விடாதே”, “அகத்தின் அழகு முகத்தில் தெரியும்” போன்ற பழமொழிகள் சில சொற்களுக்குள் மிகப்பெரிய தத்துவங்களை அடக்கி விடுகின்றன.
நூலின் நோக்கம்:
நம் முன்னோர்கள் அனுபவத்தால் கண்டறிந்த உண்மைகளைப் பிழைபடாமல் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்ப்பதும் வாழ்வியல் நெறிகளை உணர்த்துவதும் தான். அது போன்று தமிழர்களின் பாரம்பரியம், பண்பாடு, வழக்காறுகள் மற்றும் கிராமிய வாழ்க்கையை இளைய தலைமுறைக்கு அறிமுகப்படுத்துவது, பேச்சு வழக்கிலும் எழுத்து வழக்கிலும் பழமொழிகளை எவ்வாறு உரிய இடத்தில் பயன்படுத்தி மொழி நடையைச் செழுமைப்படுத்துவது என்பதை விளக்குவதும் அவசியம். இது ஒரு சிறந்த பழமொழி ஆய்வு நூல் என்றால் மிகையாகாது.
இயற்கையும் சுற்றுப்புறமும், மனித உறவுகளான குடும்பம், நட்பு, சமூகம் மற்றும் நற்பண்புகளை விளக்கும் பழமொழிகள், உள்ளூர் வழக்காறுகளான தமிழகத்தின் வெவ்வேறு மாவட்டங்களில் புழங்கும் வட்டார மொழிப் பழமொழிகளை தனது அன்னையின் வழியாக கற்றுக் கொண்டதை நமக்கு இந்நூல் வழியாக கடத்தியுள்ளார் நூலாசிரியர்.
மேற்கண்ட ஒவ்வொரு பழமொழியின் பின்னணியில் உள்ள சுவாரஸ்யமான கதைகள் அல்லது நேரடி மற்றும் மறைமுகப் பொருள்களை தனது அன்னையின் மூலம் அறிந்து கொண்ட அனுபவத்தோடு விரிவாகப் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர்.
மாணவர்கள், ஆய்வாளர்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் அனைவரும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் தெளிவான தமிழ் நடையில் எழுதப்பட்டு உள்ளது இந்த நூல்.
நூலில் பதிவு செய்யப்பட்ட சில பழமொழிகள் …
“மலைச்சமாடு மலையேறாது”
மலை அடிவாரத்தில் நிற்கின்ற மாடு மேலே சென்றால் தான் நிறைய புல் மேய முடியும் ஆனால் மலை இவ்வளவு உயரமாக இருக்கிறதே எப்படி ஏறுவது என்று தயக்கம் என்ன ஏற்பட்டால் பட்டினி கிடக்க வேண்டியது தான்.
நாம் ஒருவேளை செய்ய முற்படும் பொழுது செய்யலாமா வேண்டாமா என்ற தயக்கம் ஏற்பட்டால் எதிலும் நாம் வெற்றி பெற முடியாது. என்னால் முடியும். இதை உடனே செய்து முடிப்பேன் என்ற உற்சாகத்துடன் கூடிய மனத்தெளிவு கொண்டு ஒவ்வொரு செயலில் இறங்க வேண்டும் என்பதே இந்த பழமொழியின் கருத்தாகும்.
“புத்திக்குத் தகுந்த சுகம்”
நமது முன்னோர்கள் கூறும் அனுபவ அறிவுரைகளை கேட்டு நடக்க வேண்டும். ஏதேனும் ஒரு செயலை செய்யும் பொழுது இது சரி இது தவறு என்று முன்னோர்கள் தெரிவிப்பார்கள். ஆனால் நாம் அதை மீறிப் போகும்போது ஏற்படும் விளைவுகளை சந்திக்க தயாராக இருக்க வேண்டும். துன்பத்தை சந்தித்த பின்பு தான் நாம் நம் முன்னோர்கள் சொன்னதை கேட்காமல் நடந்து விட்டோமோ என்று வருந்துவது உண்டு . அதையே புத்திக்குத் தகுந்த சுகம் என்ற பழமொழியில் நமக்கு தெரிவித்துள்ளார் நூலாசிரியர்.
“கடும் காத்து மழையாகும் கடுத்த உறவு பகையாகும்”
பெரிய காற்று அடித்ததும் பெரும் மழை பெய்யும். மழை வருவதற்கான அறிகுறியே இருக்காது ஆனால் திடீரென்று காற்று பலமாக அடித்து மழை பெய்ய வைக்கும். அதுபோல
ஒருவரிடம் நாம் அளவுக்கு அதிகமாக பாசமும் அன்பு கொண்டு பழகி வந்தாலும் திடீரென ஏதோ ஒரு காரணத்தால் அவர் நம்மிடம் ஏதோ ஒரு காரணம் கூறி கோபம் கொண்டு பகையை ஏற்படுத்திக் கொள்கிறார். அது தீரா பகையாக மாறிவிடுகிறது. பொறாமை உணர்வு வந்து விட்டால் எத்தகைய நட்பும் கெட்டுவிடும் எனவே நாம் யாரிடமும் பழகும் போது ஒட்டியும் ஒட்டாமல் பழக வேண்டும் என்பதை இந்த பழமொழி நமக்கு அறிவுறுத்துகிறது.
இதுபோன்ற பழமொழிகள் என்பது “வெறும் சொல்லாடல் அல்ல; அது பல தலைமுறை மனிதர்களின் கூட்டு அறிவின் வெளிப்பாடு” ஆகும். இத்தகைய நூல்கள் தமிழ் மொழியின் தொன்மையையும், நம் முன்னோர்களின் நுண்ணறிவையும் பறைசாற்றுவதோடு, இன்றைய நவீன கால மக்களுக்கும் சரியான வழிகாட்டியாகத் திகழ்கின்றன. பழமொழிகளைப் பாதுகாப்பதும் அவற்றின் பொருளுணர்ந்து வாழ்வதும் நமது பண்பாட்டுக் கடமையாகும்.
இந்நூலினை நாம் வாசிப்பதோடு நம் வருங்கால சந்ததியினருக்கு கொண்டு செல்ல வேண்டியது அவசியமாகும்.
📚 நூலின் விவரங்கள்:
| தலைப்பு | விவரம் |
| நூலின் பெயர்: | அன்னையின் அமுத மொழிகள் |
| ஆசிரியர்: | முனைவர் ஜி. வல்லரசி |
| தொடர்பு எண்: | 9443697382 |
| விலை: | ₹.100 |
| அறிமுகம் எழுதியவர்: | ✍🏻 MJ பிரபாகர் |
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

