Prof. Raju has a lot more work to do article by pralayan. Book Day And Bharathi TV Are Branches of Bharathi Puthakalayam.



பேராசிரியர்.ராஜூ அவர்கள் எனக்குப் பரிச்சயமானது என்பது அவரது நெறியாள்கையில் தயாரிக்கப்பட்டு தஞ்சை அரங்கம் குழுவினர் மேடையேற்றிய இந்திரா பார்த்தசாரதியின் ‘நந்தன் கதை’ நாடகம் மூலமாகத்தான். நான் இந்நாடகத்தை 1980களின் இடைப்பகுதியில் பார்த்தேன். அதற்கு முன்பாக தமிழில் நடந்த பல நவீன நாடக முயற்சிகளை நான் பார்த்திருந்த போதிலும் பேரா ராஜுவின் ‘நந்தன் கதை’ எனக்கு மிக நெருக்கமாகவும் அண்மையானதாகவும் இருந்தது. அதற்குப் பல காரணங்கள் உண்டு. எதார்த்தவாத பாணியில் எழுதப்பட்டிருந்த ‘நந்தன் கதை’ நாடகம், இசை, நடனம், குழுவினரின் ஒழுங்கமைக்கப்பட்ட அசைவுகளென ஒரு ‘காவிய அரங்கிற்கான’ நாடக மொழியில் தயாரிக்கப்பட்டிருந்தது. விரிந்த பார்வையாளர் வட்டத்தினிடையே உரையாடுவதற்கான பல கூறுகளை அது கொண்டிருந்தது. ‘காவிய அரங்கென’ இங்கு நான் கூறுவது எதார்த்தவாத பாணியில் இருந்து விலகி நின்று பெர்டோல்ட் பிரக்ட் உருவாக்கிக்கொண்ட ‘காவிய அரங்கு ‘ எனும் நாடக பாணியைத்தான். உண்மையில் ‘காவிய அரங்கு’ என்பது தனக்கான ஓர் நாடக அணுகுமுறையை எழுத்து முறையைக் கொண்டது. ஆனால் நாடகாசிரியர் இந்திரா பார்த்தசாரதி, அத்தகைய ஓர் அணுகு முறையில் ‘நந்தன் கதையினை’ எழுதியிருக்கவில்லை.

எனினும் பேராசிரியர். ராஜூ அவர்கள் தனக்கான ஓர் ஒயிலாக்கம் செய்யப்பட்ட ஒரு மேடை மொழியில் ’நந்தன் கதையினை’ உருவாக்கம் செய்திருந்தார். இவரது ‘நந்தன் கதை’ தயாரிப்பு பற்றி இன்னொரு சமயத்தில் விரிவாக எழுத வேண்டும். பின்னர் 1991 இல் இந்திரா பார்த்தசாரதியின் ‘ஔரங்கசீப்’ நாடகத்தை புதுவை மத்திய பல்கலைக்கழக நிகழ் கலைத்துறை மாணவர்களைக் கொண்டு தயாரித்து மேடையேற்றினார். இந்நாடகத்தை சென்னை, தி.நகரிலுள்ள தென்னிந்திய நடிகர் சங்க வளாகத்திலிருந்த சங்கரதாஸ் சுவாமிகள் அரங்கில் மேடையேற்றியபோது நான் பார்த்திருக்கிறேன்.

பெத்தவன் நாடகத்தில் ஒரு காட்சி

இந்திரா பார்த்தசாரதியின் முக்கியமான நாடகங்களில் ஒன்று ‘ஔரங்க சீப்’. இந்தியாவின் பலமொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு பல மொழிகளில் நிகழ்த்தப்பட்ட நாடகம் இது . எனது வீதிநாடகங்களில் சில, பிற பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு மேடையேற்றம் கண்டிருக்கின்றன. எனினும் பல மொழிகளிலும் மேடையேற்றப்பட்ட ஒரு முழு நீள மேடை நாடகம் ‘தமிழில்’ உண்டென்று சொன்னால் அது ஔரங்கசீப் தான்.

ஓர் எதார்த்தவாத படைப்பான இந்நாடகம், பல வித சவால்களை நடிகனுக்கும், நெறியாளுநருக்கும் அளிக்கக்கூடியதாக இருந்தது. தனது அரண்மனையிலேயே சிறைவைக்கப்பட்டிருக்கும் ஷாஜகான், ஷாஜகானின் மூத்த மகள் ஜெகன்னோரா, இளைய மகள் ரோஷனோரா, ஔரங்கசீப்பின் தமையன் தாரா, பாதுஷா ஔரங்கசீப் என இப்பாத்திரங்களுக்கிடையே உள்ள மன இறுக்கங்களின் மூலம் வளர்ச்சியுறுகிற நாடகம் இது. ராஜா ரவிவர்மா ஷாஜகானாகவும், குமரவேல் ஔரங்கசீப்பாகவும் ஜெகன்னோராவாக ஜீவாவும் திறம்பட நடித்திருந்தனர். தமிழில் மேடையேற்றப்பட்ட முக்கியமான எதார்த்தவாத நாடகம் என இதைச்சொல்லமுடியும்.

பேரா.ராஜூ அவர்கள், புனே திரைப்படக்கல்லூரியில் படித்துவிட்டு பிறகு புதுடில்லியில் தேசிய நாடகப்பள்ளியில் பயின்று கேரளாவின் திருச்சசூர் நாடகப்பள்ளி, தஞ்சை தமிழ்பல்கலைக்கழகத்தின் நாடகத்துறை என்று பணியாற்றிய பிறகு புதுவை மத்திய பல்கலைக்கழகத்தின் நிகழ்கலைத்துறையில் பணியாற்றத் தொடங்கியவர். பேராசிரியர்,துறைத்தலைவர், புல முதன்மையர் எனப் பல பொறுப்புகளில் செயல்பட்டவர் தற்போது பணி ஓய்வு பெற்றுவிட்டார்.
அவரது நீண்ட நெடிய பயணத்தில், தமிழ் நாடகச்செயல்பாடுகளுக்கு அவரது அளித்த பங்களிப்புகள் ஏராளம். தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் நவீன நாடகச்செயல்பாடுகளை தொடங்கி வைத்ததில் அவரும் ஒருவர். சரியாகச்சொல்லவேண்டுமெனில் பேரா.ராமானுஜத்தினுடைய தொடக்க காலச்செயல்பாடுகளில் அவரது வலது கரமாயிருந்தவர்.

தேசிய நாடகப்பள்ளியில் பயின்றபோது அங்கு மேடை அமைப்பை [stage design] சிறப்புப்பாடமாக பயின்றவர். அவரது அனைத்து தயாரிப்புகளிலும் மேடை அமைப்பின் நேர்த்தியை நம்மால் காணமுடியும்.

அன்றைய தமிழ் நாடகச்செயல்பாடுகளில் பேரா.ராஜூவினது தயாரிப்புகளை தனித்து அடையாளம் காணவியலுமெனில் அதற்குக்காரணமாயிருந்தது எதார்த்த பாணியையும், ஒயிலாக்க அணுகுமுறைகளையும் ஒன்றிணைத்து பெறப்பட்ட அவரது தனிப்பட்ட பாணியிலான நாடகங்கள்தாம்.

பெத்தவன் நாடகத்தில் ஒரு காட்சி

ஒளிப்பதிவாளர் செழியனின் ‘கதை’ என்னும் சிறுகதையினை பேரா.ராஜூ நாடகமாக மேடையேற்றியது அவரது அண்மைக்கால படைப்புகளில் குறிப்பிடத்தகுந்த ஒன்றாகும். இந்நாடகம் அதிகமான முறைகள் மேடையேற்றப்படவில்லையெனினும் எதார்த்த வாத நடிப்புக்கும், ஒரு நடிகர், பாத்திரங்களை மேடையில் உயிர்பெறச்செய்வதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்பதற்கும் மிகப்பெரும் கதவுகளை திறந்து விட்ட அனுபவமாக அமைந்த நாடகம் அது.
எழுத்தாளர் இமயத்தின் ‘பெத்தவன்’ , ‘கக்கன்ஜீ ’ போன்றவற்றை மேடையேற்றிய பேரா. ராஜூ, இந்நாடகங்கள் மூலம் ஒரு புதிய இடத்திற்கு வந்து சேர்ந்திருந்தார்.
மிகவும் குறைவான எளிய மேடைப்பொருட்கள், நேரடியான எளிமையான மேடை உத்திகள், நடிகனது இயற்பண்பு சார்ந்த எதார்த்தவாத நடிப்பை மட்டுமே நம்பியிருக்கக்கூடிய ஒரு நாடகமொழி, கற்பனைவளத்தோடு பயன்படுத்தப்பட்ட இசை, இவற்றையெல்லாம் ராஜூ, வலுவாகக் கையாண்டிருந்தார். இந்நாடகங்கள், பார்வையாளர்களிடத்தில் மிகவும் நெருக்கத்தை உருவாக்கிக்கொண்ட நிகழ்வுகளாகவும் உருவெடுத்தன.

2008ஆம் ஆண்டு, புதுவை மத்திய பல்கலைக் கழக நிகழ்கலைத்துறைத் தலைவராக பேரா.ராஜூ அவர்கள் பொறுப்பு வகித்தபோது நிகழ்கலைத்துறை மாணவர்களுக்காக ஒரு நாடகத்தை தயாரித்து இயக்குமாறு என்னை அழைத்தார். வெளியிலிருந்து ஒருவரை அழைத்து நாடகத்தை தயாரிக்கச்சொல்வது என்பது கிட்டத்தட்ட 18 ஆண்டுகளாக புதுவைப் பல்கலைக்கழக நிகழ்கலைத்துறையில் இல்லாது போன ஒரு சூழலில் என்னை அவர் அழைத்திருந்தார் என்பதுதான் இங்கே குறிப்பிடப்படவேண்டிய ஒரு விஷயம். அந்த ஓர் அரிய வாய்ப்பில்தான், நான் எழுதி நெறியாள்கை செய்த ‘பாரி படுகளம்’ நாடகம் உருவானது.

அப்படி உருவாக்கப்பட்ட அந்நாடகம், நிகழ்கலைத்துறை மாணவர்கள் சார்பில் தமிழகம்,புதுவை ஆகிய இடங்களில் எட்டுமுறையும், பின்னர் கேரளா திருச்சூரில் நடைபெற்ற சர்வதேச நாடகவிழாவிலும் [ITFOK], புது டில்லி தேசிய நாடகப்பள்ளி நடத்து கிற அனைத்திந்திய நாடகவிழாவிலும் [BRM-Bharath Rang Mahotsav] பங்கேற்றது. தமிழ்நாட்டு நவீன நாடகச்செயற்பாடுகளில் ஒரு செயற்பாட்டாளர் இன்னொரு செயற்பாட்டாளரை ஏற்பதில்லை; உறவு பேணுவதில்லை. அப்படியொரு சூழலில் பேரா.ராஜூ அவர்கள் எனக்கு விடுத்த அழைப்பை தமிழ் நாடகச்சூழலில் செய்யப்பட்ட ஒரு மிகப்பெரும் ‘சமிக்ஞை’ யாகவே நான் கருதினேன்; உணர்ந்தேன். அதன் பொறுப்பை உணர்ந்தவனாகவே ‘பாரி படுகளம்’ நாடகத்தயாரிப்பிலும் நான் செயல்பட்டேன். இந்த வாய்ப்பினை எனக்கு அளித்ததற்காக புதுவை மத்திய பல்கலைக்கழக நிகழ்கலைத்துறைக்கும் அதன் தலைவராயிருந்த பேரா.ராஜு அவர்களுக்கும் நான் என்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

தேசீய நாடகப்பள்ளியின் மண்டல வள மையம் செயல்பட்டபோது அதன் ஆலோசனைக்குழுவில் நான், பேரா.ராஜூ அவர்களோடு இணைந்து பணியாற்றியிருக்கிறேன். அத்தருணங்களில்தாம் பல நாடகப்பயிலரங்குகளை தமிழகத்திலும் நடத்துவதற்கு நமக்கு வாய்ப்புகள் கிடைத்தன. அப்படியொரு வாய்ப்பில்தான் 2012ஆம் ஆண்டு தென்னகப் பண்பாட்டு மையமும், தேசிய நாடகப்பள்ளி பெங்களூரு மண்டல வளமையமும் இணைந்து நடத்திய ஒரு மாத கால உண்டு-உறைவிட நாடகப்பயிலரங்கு. இப்பயிலரங்கிற்கு நான் ஒருங்கிணைப்பாளன்; பேரா.ராஜூ அவர்கள் இயக்குநர். இப்பயிலரங்கில்தாம் நான் எழுதிய ‘வஞ்சியர் காண்டம்’ நாடகத்தை பேரா.ராஜூ நெறியாள்கை செய்தார். இந்நாடகம் தமிழ்நாடு, புதுவை, கேரளா, கர்நாடகா என நான்கு மாநிலங்களிலும் 27 முறை மேடையேற்றம் கண்டது; பெருவாரியான வரவேற்பையும் பெற்றது.

எஸ்.பி. ஸ்ரீனிவாசனுடன் பேரா. ராஜு

இந்நாடகத்தயாரிப்பில் அவரோடு பணியாற்றியது உண்மையில் எனக்கு ஒரு பேரனுபவம். ‘வஞ்சியர் காண்டம்’ நாடகம் குறித்து ஆங்கிலம் தமிழ் உட்பட பல பத்திரிகைகளில் இதழ்களில் திறனாய்வும் மதிப்பீடுகளும் வெளியாகியுள்ளன. எனவே அது குறித்து இங்கு நான் அதிகம் கூறவேண்டியதில்லை.

1980களில் இந்திய ஒன்றிய அரசின் சங்கீத நாடக அகாதெமி ‘இளம் இயக்குநர்களுக்கான’ நிதி நல்கை ஒன்றை அறிவித்தது. இதன் படி ‘நிதி நல்கை’ பெறுவோர் இந்திய நாடக மரபுகளை பிரதி பலிக்கும் வகையில் ஒரு நாடகம் ஒன்றினை தயாரித்திடல் வேண்டும் .அப்படித்தயாரிக்கப்படும் நாடகங்கள் மண்டல அளவில் நடைபெறும் நாடகவிழாவிலும் பின்னர் அனைந்திந்திய அளவில் நடைபெறும் நாடகவிழாவிலும் மேடையேற்றப்படும். இப்படி நிதி நல்கை பெற்றுதான் பேரா.ராஜூ, இந்திரா பார்த்த சாரதியின்’நந்தன் கதை’ நாடகத்தை நெறியாள்கை செய்து தயாரித்தார்.

இப்படி சங்கீத நாடக அக்காதெமியினது நிதி நல்கை பெற்று 1980களின் தொடக்கத்திலிருந்து 1990 களின் இடைப்பகுதியில் இத்திட்டம் நிறுத்தப்படும் வரை இந்திய நாடு முழுதும் 200க்கும் மேற்பட்ட நாடகங்கள் தயாரிக்கப்பட்டன. பின்னர் ஒரு சமயம் இப்படித்தயாரிக்கப்பட்ட 200க்கும் மேற்பட்ட நாடகங்களில் சிறந்த பத்து நாடகங்களை பட்டியலிடச்சொல்லி ஒரு வல்லுனர் குழுவிற்கு பொறுப்பளிக்கப்பட்டது. அவ்வல்லுனர் குழு தேர்ந்தெடுத்த பத்து நாடகங்களில் மூன்று நாடகங்கள் தமிழ் நாடகங்கள். ராஜூ நெறியாள்கை செய்த இந்திரா பார்த்தசாரதியின் ‘நந்தன் கதை’ , மு.ராமசாமியின் ‘துர்க்கிர அவலம்’, வ. ஆறுமுகத்தின் ‘கருஞ்சுழி’ ஆகிய இவையே அம்மூன்று நாடகங்கள். தொடக்க கால தமிழ் நவீன நாடகச்செயல்பாடுகளின் திறனை உணர்ந்துகொள்ள இந்த ஓர் உதாரணமே நமக்கு போதுமானது.
மற்றொன்று , இன்றைக்கு ஒரு நடிகனின் உடலைப் பழக்குவதில் வசக்குவதில் இந்தியாவிலுள்ள சிறந்த பயிற்சியாளர்களில் ஒருவர் பேரா.ராஜூ என்பதை தேசிய நாடகப்பள்ளியின் மூத்த நாடக ஆளுமைகள் சிலர் சொல்ல நானே என் காதுபட கேட்டிருக்கிறேன். இன்றைக்கு நவீன நாடகச்செயல்பாடுகளில் ஈடுபடும் அனைவரும் இவ்வுண்மைகளை தெரிந்து கொள்வது நல்லது.

அண்மையில் திருப்பத்தூர் தூயநெஞ்சுக்கல்லூரியில் நடந்த பயிலரங்கு ஒன்றில் நானும் பேராசிரியர் ராஜூவும் கலந்துகொண்டோம். பயிலரங்கில் பங்கேற்ற மாணவர்களது திறனை வெளிக்காட்ட ஒரு சிறு நாடக நிகழ்வொன்றையும் இறுதியில் தயாரிக்க வேண்டியிருந்தது. நான் இப்சனின் ‘ பொம்மை வீடு’ நாடகத்திலிருந்து ஒரு காட்சியை எடுத்துக்கொண்டு தயார் செய்தேன். பேரா.ராஜு, இமையத்தின் ‘காதில் விழுந்த கதைகள்’ தொகுப்பிலிருந்து ஒரு கதையை எடுத்துக்கொண்டு நிகழ்வாக்கி இருந்தார். நடித்தவர்கள் பெரும்பாலோர் மாணவிகள். பெண்களின் பாலியல் விழைவுகளை சங்கோஜங்களின்றி முகத்திலடித்தாற்போல் பேசுகிற கதையாடல் அது. பெரும்பாலும் மாணவிகளைக் கொண்டே ஒரு வலுவான நிகழ்வாக அதை உருமாற்றியிருந்தார் ராஜூ.
எழுதப்பட்ட நாடகப்பிரதிகளுக்காக பேரா.ராஜூ காத்திருப்பதில்லை. படிக்கிற செய்திகளில் புனைவுகளில் உள்ள நாடகார்த்தமான தருணங்களை முரண்களை உள்வாங்கிக்கொண்டு அவற்றை நாடகமாக்கிவிடுகிறார். அண்மைக்காலமாக அவர் வளர்த்தெடுத்து வருகிற அணுகுமுறை இது.

பேரா. ராஜூ எழுதிய ‘நெறியாளுகை நோக்கில் தெருக்கூத்து’ எனும் நூல் தமிழ் நாடக உலகிற்கு அவரளித்த மதிப்புமிக்க பங்களிப்பு எனலாம். நாடகக்கலையில் நெறியாளுநர் என்கிற ஆளுமை உள்ளே நுழைந்தது, ஒரு 120 ஆண்டுகட்கு முன்புதான். அதற்கு முன்பு நாடகாசிரியர் இருந்தார்; அண்ணாவியார் இருந்தார்; சூத்திரதாரர் இருந்தார்; கட்டியங்காரர் இருந்தார். நெறியாளுநர் செய்கிற பணிகளை இவர்களே செய்துவந்தனர். இவரது முனைவர் பட்ட ஆய்வினடிப்படையில் எழுதப்பட்ட இந்நூல், நெறியாளுகையின் வரலாறு, நெறியாளுமையின் முறைமைகள், மேற்குலகில் தோன்றிய பல்வேறுவிதமான நாடகக்கோட்பாடுகள், தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் தொன்று தொட்டு இருந்துவந்த நாடக அணுகுமுறைகள் இவற்றையெல்லாம் சுருக்கமாகவும் ஆழமாகவும் தெளிவாகவும் இந்நூல் அறிமுகம் செய்து வைக்கிறது. ‘அபிநய வர்ஷினி கலைக்கூடம்’ சார்பில் அவரே வெளியிட்ட நூல் இது. இந்நூல் மறுபதிப்பு காணவேண்டியது தமிழ்நாடகக்சூழலுக்கு மிகவும் தேவையான ஒன்று.

பேராசிரியர் ராஜு அவர்களின் துணைவியார் ஹேமமாலினி அவர்கள் கடந்த ஆண்டு, எதிர்பாராத விதமாக காலமானார். ஹேமமாலினி அவர்கள் சிறந்த நடனக்கலைஞர். தனது வீட்டிலே நடனப்பள்ளி ஒன்றையும் நடத்திவந்தார். பேராசிரியர் ராஜூவுக்கு எல்லாமாக இருந்தவர் அவர். உண்மையில் அவரது மறைவு ராஜூவுக்கு ஒரு பேரிழப்புதான். தனது துணைவியாரின் நடன வாழ்வு குறித்த ஓர் ஆவணப்படம் தயாரிக்கிற முயற்சியில் தற்போது ராஜூ ஈடுபட்டுள்ளார். தனது துணைவியார் குறித்த நினைவுகளை ஒரு காத்திரமான கலை அனுபவமாகப் பதிவு செய்ய இம்முயற்சி அவருக்கு உதவக்கூடும்.

இன்றைக்கு தமிழின் நவீன நாடகச்செயல்பாடுகள் முன்பு போல் இல்லை. நீளத்திலும் அகலத்திலும் விரிந்தும் பரந்தும் உள்ளது. 2017-ஆம் ஆண்டு தொடக்கத்தில் தஞ்சையில் எனது ஒருங்கிணைப்பில் தமுஎகச சார்பில் நடத்தப்பட்ட ‘தென்னிந்திய மக்கள் நாடக விழாவில்’ 29 குழுக்கள் அழைக்கப்பட்டன. அவற்றில் நான்கு குழுக்களைத்தவிர 25 குழுக்களும் தமிழ்நாடு,புதுவை போன்ற தமிழ் பேசும் மக்கள் பகுதிகளில் செயல் படுபவைதான். அது போல 2019 இல் சென்னையில் 5 நாட்கள் நடைபெற்ற தென்னிந்திய நாடக விழாவில் 32 குழுக்கள் பங்கெடுத்தன. இச்செயல்பாடுகள் எதிர்காலத்தில் மென்மேலும் விரிவடைய சாத்தியங்களுள்ளது.

தனது இணையர் ஹேமாலினியுடன் ராஜூ

தொடக்க காலத்தில் அதாவது 1970களின் இறுதியில் எண்பதுகளில் தொடக்கத்தில் நாடகத்தை ஒரு பயில்நெறியாக கல்விப்புலத்தில் பயின்று நாடகம் செய்தவர்கள் என பார்த்தால் பேரா.எஸ்.பி.சீனிவாசன், பேரா.ராமானுஜம், பேரா.ராஜூ ஆகிய மூவரும்தான். கோபாலி, ராஜாமணி போன்றோர் நாடகப்பள்ளியில் பயின்றவர்களெனினும் நாடகச்செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபடாது போய்விட்டார்கள். பின்னர் கே.எஸ்.ராஜேந்திரன் தேசிய நாடகப்பள்ளிக்கு சென்றார். பணி நிமித்தமாக டில்லியிலேயே இருந்துவிட்டார். அவ்வப்போது வந்து ஒரு சில தயாரிப்புகளை தமிழ்நாட்டில் செய்தபோதிலும் பெரும்பாலான அவரது நாடகப்பணிகள் டில்லியில்தான். கடந்த இருபதாண்டுகளில் தேசிய நாடகப்பள்ளியில் பயின்றவர்கள் என்று பார்த்தால் 18 பேருக்கு மேல் தற்போது தமிழகத்திலுள்ளனர்.

தேசிய நாடகப்பள்ளியில் பயின்றவர்கள் வந்து விட்டால் நமதுநாடகச்செயல்பாடுகளில் மிகப்பெரும் ‘மாயம்’ நிகழ்ந்துவிடும் என்றெல்லாம் நான் நினைக்கவில்லை; அப்படிச் சொல்ல வரவுமில்லை. தேசிய நாடகப்பள்ளியில் போய் ச்சேர்ந்து படிப்பதற்கான சூழலையும் உந்துதலையும் கடந்த கால நமது நாடக செயல்பாடுகள் அளித்துள்ளன என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டுமென்பதற்காக மட்டுமே இதைச்சொன்னேன்.

எனினும் அண்டை மாநிலங்களான கேரளா,கர்நாடகாவில் நவீன நாடகச்செயல்பாடுகளுக்கு இருப்பது போன்ற ஒரு சமூக ஆதரவு, அரசு நிறுவனங்களின் ஆதரவு நமது தமிழ்நாட்டில் நவீன நாடகங்களுக்கு இல்லை. இன்றைய நாடகச்செயற்பாட்டாளர்கள் முன் உள்ள சவால் அது. அதற்காக நாம் என்ன செய்யவேண்டும் என்றும் யோசிக்கவேண்டும். பணி ஓய்வு பெற்ற பேரா.ராஜூ அவர்களுக்கு இன்னும் நிறைய வேலை இருக்கிறது என்றே நான் கருதுகிறேன்.

எனவே பேரா.ராஜூ அவர்கள் பணி ஓய்வுக்காலத்தினை நமது நாடகச்செயற்பாட்டாளர்கள் தங்களுக்கு கிடைத்த நல்வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும், ஏனெனில் பேரா.ராஜூவிடமிருந்து தமிழ் நாடக உலகம் பெறவேண்டியது இன்னும் நிறைய உள்ளது.

கட்டுரையாளர்: [email protected]

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



2 thoughts on “பேரா.ராஜூ அவர்களுக்கு இன்னும் நிறைய வேலை இருக்கிறது – பிரளயன்”
  1. மிக சிறப்பான கட்டுரை. பேராசிரியர் ராஜு அவர்களின் நாடகத் துறையின் பங்களிப்பை பெரும்பாலோருக்கு எடுத்துச் செல்ல இந்த கட்டுரை மிகவும் உதவும். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அரசு வரும் காலத்தில் நாடகத் துறைக்கு கவனம் செலுத்தும் என்று நம்புகிறோம். நன்றி.

  2. I have never seen such a honest and descriptive article on Prof Raju despite his life long contributions to the cause of Modern Theater. And hanks Mr.Pralayan for writing about Prof.Raju in a way that’s truly a tribute but also a very healthy sign of how Tamil/ National Theater should be where one expert appreciates open heartedly another expert. Hope to see both of you contribute more in days to come!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *