வெண்டிலேட்டர்கள், மருத்துவர்கள், பணியாளர்களுக்கான தற்காப்பு சாதனங்கள், பெருமளவு பற்றாக்குறையாக இருக்கும் இந்த நேரத்தில் பொதுத்துறை நிறுவனங்கள் தான் அரசின் உதவிக்கு வருகின்றன. இந்தச் சூழல் அரசின் இறக்குமதி சார்ந்த தொழிற்கொள்கையில் மறுசிந்தனையின் தேவையை உணர்த்துகிறது.
எந்தவித முன் தயாரிப்பும் இல்லாமல், அரசு அறிவித்த 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமுலுக்கு வந்துவிட்டது. ஊரடங்கு மட்டுமே அத்தியாவசிய நடவடிக்கை அல்ல. ஒருவேளை அப்படியொரு நிலை வந்தால், அத்தோடு நோய் அறிகுறி தென்படுபவர்களை அடையாளம் காணுதல், தேடிக் கண்டறிதல், பரிசோதனைக்காக தனிமைப்படுத்துதல், மருத்துவ சிகிச்சை அளித்தல் ஆகியவையும் சேர்த்து இத்துடன் தொடர வேண்டும் என்கிறது உலக சுகாதார நிறுவனம்.
அத்தோடு, தொற்று நோய் பரவுகின்ற சமயத்தில், பரவலைத் தடுக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் கூறுகிறது. இப்படித் தேவையான நேரத்தில் முன்னேற்பாடுகளை செய்யாததால் தான் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் மருத்துவம், மருத்துவர்கள், மருத்துவ மனைகள் என சுகாதாரக் கட்டமைப்பு முழுவதும் பெரும் கஷ்டப்படுகிறது என்பதை, உலக மக்கள் அனைவரும் நன்கு அறிவர். அந்த நாடுகளின் பொருளாதாரம் எவ்வளவு தூரம் சீரழிந்து உள்ளது என்பதையும் நன்கு அறிவோம்.
இந்தியாவில் ஊரடங்கு
“கோவிட்- 19 தொற்று நோயைத் தடுக்க ஊரடங்கு உத்தரவை தவிர வேறு வழி இல்லை” என்று பிரதம மந்திரியும் அவரதுஅலுவலர்களும் ஓயாமல் கூறிவருகின்றனர். எல்லாவித நடவடிக்கைகளும் எடுத்தும் ஒன்றும் செய்யமுடியாமல் போகின்ற நிலையில் தான் ஊரடங்கு இறுதி நடவடிக்கையாக இருக்கலாம். அதுவும் தொற்று நோய் தடுப்பின் முன்னேற்பாடாக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.
கொரோனா தோற்று சீனாவில் தொடங்கி, பின்னர் உலகம் முழுவதும் பரவத்தொடங்கியது. ஜனவரி மாத இறுதியிலேயே முதல் தொற்று இந்தியாவில் உறுதி செய்யப்பட்டது. இதையெல்லாம் கண்டு கூட இந்திய அரசு எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்கு மாறாக, விமான நிறுவனங்களில் இந்திய தேசத்தவர் உட்பட பலர் கொரானா பாதித்த தேசங்களிலிருந்து வந்தவர்கள் மீது மார்ச் மாதம் வரை, கண்துடைப்பு கண்காணிப்பு பணிகளே மேற்கொண்டு வந்தது. துறைமுகங்களுக்கு கட்டுப்பாடுகள் மிக தாமதமாகவே விஸ்தரிக்கப்பட்டது. எங்கிருந்து அவை வருகின்றன என்ற கவனம் கூட கண்காணிப்பில் இல்லை.
அமெரிக்கா, ஐரோப்பா, துபாய் வழியாக, மேற்காசியா, கிழக்காசியா என எந்த நாட்டிலிருந்து வருவோர் மீதும் கட்டுப்பாடுகள் விதிக்கப் படவில்லை. கண்காணித்தல் கூட இல்லை. இதன் விளைவாக, நோய் தொற்றுக்கு ஆளான இந்தியர்கள், வெளிநாட்டினர் இந்தியா முழுவதும் சுதந்திரமாக உலா வந்து கொண்டு இருந்தனர். மார்ச் 18ஆம் தேதி அன்று சர்வதேச விமானங்களுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்ட போதிலும்கூட நோய் தொற்றோடு வந்தவர்களை தீவிரமாக தேடுதல், கண்காணித்தல் , தனிமைப்படுத்துதல் ஆகிய உலக சுகாதார நிறுவனம் கூறிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.
காலதாமதமே காரணம்:
இதே காலகட்டத்தில் இந்தியா மிகக்குறைந்த முன் தயாரிப்பு பணிகளையே சுகாதார கட்டமைப்பில் செய்திருந்தது. மருத்துவ பணியாளர்கள் போதாமை, குறைவான படுக்கை வசதிகள், மிகக்குறைவான அவசர சிகிச்சைப் பிரிவுகள் மட்டுமே இருந்தது. ஏற்கனவே சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகளை அப்புறப்படுத்திவிட்டு ,கொரானா சிகிச்சை வார்டுகள் தயார் செய்யப்பட்டன.
பரிசோதனைக் கருவிகள் மிகவும் பற்றாக்குறை என்பதே மிக மிக முக்கிய குறைபாடாகும். தற்போதைய நிலையில் 3.2 கோடி பேருக்கு ஒரு பரிசோதனை கருவி என்ற அளவிலேயே நம்மிடம் பரிசோதனை உபகரணங்கள் இருக்கிறது. நோய் பரவும் வேகமும் இறப்பு விகிதமும் நம்மை விட குறைவாக இருக்கும் ஜெர்மனியில் 5800 பேருக்கு ஒரு பரிசோதனைக் கருவி, தென்கொரிய நாட்டில் 7 600 பேருக்கு, ஒரு கருவியும் இருக்கிறது. இப்போது இருப்பதை காட்டிலும் 20 மடங்கு பரிசோதனை கருவிகள் அதாவது 10 லட்சம் சோதனை கருவிகள் தற்போது தேவைப்படுகிறது.
அதேபோல், வெண்டிலட்டர்கள் பெருமளவு தேவைப்படுகிறது. தற்போது நம்மிடம் உள்ள வெண்டிலேட்டர்கள், பல்வேறு மருத்துவமனைகளில் பயன்பாட்டில் உள்ளவை. அமெரிக்கா இத்தாலி ஆகிய நாடுகளில் அனுபவங்களோடு ஒப்பிடும் பொழுது நம் நாட்டிற்கு 10 முதல் 40 லட்சம் வெண்டிலேட்டர்கள் தேவை என்று ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகம் மற்றும் சில இந்திய நிறுவனங்களின் கணிப்புகள் கூறுகின்றன.
சனிடைசர் மிகப்பெரும் அளவு பற்றாக்குறையாகவே உள்ளது. அதேபோன்று என்95 முக கவசம் மிகக் குறைவாகவே உள்ளது. பீதியின் காரணமாக பொதுமக்கள் இதனை அதிக அளவில் வாங்கியதும் பற்றாக்குறை மேலும் அதிகரிக்க காரணமாகிவிட்டது.
மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் ஆகியோருக்கு தேவைப்படும் கையுறைகள் காலணிகள் உடல் முழுக்க கவசம் ஆகியவை பற்றாக்குறையாக உள்ளது. இதன் காரணமாக, பல மருத்துவர்கள், செவிலியர்கள் நோய் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இதன் காரணமாக அவர்களின் போராட்டங்களும் பல இடங்களில் வெடித்துள்ளது. இதைச் சமாளிக்க இருசக்கர வாகனங்களின் ஹெல்மெட்டுகள், நீச்சல் கண்ணாடிகள், சாதாரண சன் கிளாஸ்கள் பிளாஸ்டிக் சீட்டுகள் ஆகியவற்றை பயன்படுத்தும் அவலம் நேர்ந்துள்ளது. நோய்த் தொற்று பரவலாகும் போது 38 லட்சம் முகக் கவசங்கள் 62 லட்சம் தற்காப்பு சாதனங்கள் தேவைப்படும் என்று ‘இந்தியா இன்வெஸ்ட்’ என்ற முகமை கணித்திருக்கிறது.
ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை இதனை சமாளிக்க, நமக்கு இரண்டு மாத கால இடைவெளி இருந்தது. அந்த நேரத்தில் எதுவும் செய்யவில்லை. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட மார்ச் 24ஆம் தேதி அன்றுதான் மேற்படி உபகரணங்களின் தேவை மற்றும் உற்பத்தி பற்றிய விவரங்களையும் அதன் இடைவெளிகள் ஆகியவற்றில் அரசு கவனம் செலுத்த தொடங்கியுள்ளது. உலகம் முழுவதும் நோய் தொற்று பாதிப்பு இருப்பதால் உலக அளவில் இந்த உபகரணங்களின் ஏற்றுமதி இறக்குமதி மெதுவாக பாதிக்கப்பட்டுள்ளது. பல நாடுகள் தற்காப்பு சாதனங்களையும் பரிசோதனை கருவிகளையும் தங்கள் தேவைகளுக்காக பதுக்கி வைத்துக் கொண்டன. பொதுவாக, இறக்குமதியின் மூலம் இந்தப் பற்றாக்குறையை சமாளிக்க முடியாது. இந்த நேரத்தில், மிகவும் பலவீனமடைந்து விட்ட நல்ல பொருளாதார தத்துவமான தற்சார்பு கொள்கையை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டிய தருணம் வந்துள்ளது.
ஒரு காலத்தில் இந்தியத் தொழில்துறையின் முதுகெலும்பாய் விளங்கிய இந்திய பொதுத்துறை திட்டமிட்டு புதிய தாராளமயக் கொள்கைகளால் சீரழிக்கப்பட்டு விட்டது. பொதுத்துறை நிறுவனங்கள் வலுவாக இருந்தால் அதுவே இந்தப் பற்றாக்குறையை ஈடு செய்திருந்திருக்கும். பொதுத்துறை நிறுவனங்களில் மட்டுமே இந்தப் பற்றாக்குறை ஈடுசெய்ய, உற்பத்தி செய்ய அழுத்தம் கொடுக்க முடியும். அவர்கள் மட்டுமே, இந்த அளவு உற்பத்தி செய்யும் ஆற்றல் படைத்தவை. மிகவும் விதந்து ஓதப்பட்ட தனியார் துறை பொதுத்துறையில் பின்னுக்குத்தள்ளி சென்றுவிடும் என்று நம்பப்பட்டது. ஆனால் சில விதிவிலக்குகளைத் தவிர, பல நிறுவனங்கள் நெருக்கடியில் தான் உள்ளன.
பரிசோதனை கருவிகள்:
நோயை கண்டறிய இரண்டுவிதமான பரிசோதனை முறைகள் உள்ளன. கோவிட்- 19 தொற்றைக் கண்டுபிடிக்க தேவையான உபகரணங்கள் மற்றும் அது தொடர்பான பரிசோதனைகள். இதில் முக்கியமான பரிசோதனை தான் கோவிட்-19 நோய் தொற்று, ஒருவரைத் தாக்கி உள்ளதா? இல்லையா? என்று முடிவாக கண்டறியும் பரிசோதனை ரிவர்ஸ் ட்ரான்ஸ்கிரிப்ஷன் பாலமரேஸ் செயின் ரியாக்சன் (RT PCR) என்கிற பரிசோதனை ஆகும். இந்த பரிசோதனை முடிவுகள் கிடைக்க 24 முதல் 48 மணி நேரம் ஆகும்.
எதிர்ப்பொருள் (Antibody) பரிசோதனை முறை என்ற ஒன்று வெளிநாடுகளில் நோய்த் தொற்றை துரிதமாக கண்டறிய பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் இந்தப் பரிசோதனையை நோயை உறுதி செய்ய பயன்படுத்துவது இல்லை. இது ரத்த மாதிரிகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுவது. நோய் தாக்குதல் ஏற்பட்டு இருக்கும் ஆனால் அதற்கான அறிகுறிகள் இல்லாமல் இருக்கும். மிகவும் லேசான அறிகுறி தென்படுவோரிடம் பரிசோதித்து அறிவதற்கு இந்த பரிசோதனை பயன்படுத்தப்படுகிறது. இத்தகைய பரிசோதனை முறையில் எளிதாக நோயை உறுதி செய்ய முடியும். குறுகிய நேரத்தில் பரிசோதனை முடிவுகள் கிட்டும். எனவே இந்தவகை பரிசோதனைகளை அதிகமாக்க வேண்டும்.
கோவிட்- 19 பரிசோதனை
குறைந்த எண்ணிக்கையிலான பரிசோதனை கருவிகளை RT PCR முறையில் செய்ய வேண்டும். ஆனால் இந்த வகையான பரிசோதனை முறை இந்தியாவில் வளர்த்து எடுக்கப்படவில்லை. எனவே இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு இதனை இந்தியாவில் நடைமுறைப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனாலும் 10லட்சம் பரிசோதனை கருவிகளை இந்தியா , தென்கொரியாவிடம் ஆராய்ச்சிக்கு என கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இது பற்றி இந்திய அரசு எதுவும் கூறாவிட்டாலும், ஆராய்ச்சி நிறுவனங்கள் இதற்கான பதிலை வெளிப்படையாக கூறவேண்டும்.
RT PCR பரிசோதனையை நடத்தும் எந்திரங்கள் முற்றிலும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுபவை. இந்த எந்திரத்தை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் உலகம் முழுவதும் சேர்ந்து சுமார் 12 மட்டுமே இருக்குமென கூறப்படுகிறது. அமெரிக்காவில் இருக்கும் மிகப்பெரிய பரிசோதனைக் கூடங்களிலேயே இந்த எந்திரங்கள் போதுமானதாக இல்லாததால் ஒரு பத்து நாளைக்கு பரிசோதனை முடிவுகளை வெளியிட முடியவில்லை என்று கூறப்படுகிறது. RT PCR பரிசோதனை செய்யும் இந்த எந்திரங்கள் மிகவும் பற்றாக்குறையாக இந்தியாவில் இருக்கிறது. இந்த எந்திரங்கள் தயாரிப்பில் எந்த வித அடிப்படை ஆராய்ச்சியும் தேவையில்லை.
உடனடியாக வளர்த்தெடுத்து ஒப்புதல் கொடுத்தால் உற்பத்தியை தொடங்கிவிட முடியும். நோய்தொற்று பரவலாகும் சமயத்திலேயே இதற்கு தேவைப்படும் கருவிகளை தென் கொரியா சொந்தமாகவே உருவாக்கிக் கொண்டது. பெரிய அளவில் பொதுத்துறை நிறுவனங்களை வளர்த்து எடுக்காத சூழலிலும் கூட, பரந்த திட்டமிட்ட நிதி உதவியை சீ போல்ஸ் இன்ற தனியார் நிறுவனத்திற்கு செய்திருந்தது. உயிரி அறிவியலில் தென்கொரிய அரசு நிறைய சிறந்த சிறு நிறுவனங்களுக்கு உதவிகளை வழங்கி இருந்தது. இந்த நிறுவனங்களால் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்தி, பரிசோதனை கருவிகளை உருவாக்க முடிந்தது.
தென்கொரிய அரசு இதனை பயன்படுத்துவதற்கு தேவையான அனுமதியை வழங்கி பயன்பாட்டுக்கு கொண்டு வந்தது. கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி நாளொன்றுக்கு 20000 கிட்டுகள் என்று, கிட்டத்தட்ட அதன் தேவைக்கு ஏற்ப உற்பத்தி செய்யும் நிலைக்கு வந்துவிட்டது. எனவேதான் தென் கொரியா இன்றுவரை 5 லட்சம் பரிசோதனை கிட்டுகளை உற்பத்தி செய்துள்ளது. இதன் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிலேயே தனிமைப்படுத்தியும் பரிசோதனைகளை மேற்கொண்டு நோய்த் தொற்றை கட்டுக்குள் கொண்டு வந்தது. நாடுமுழுவதும் சேர்த்து ஒரே ஒரு இடத்தில் மட்டுமே ஊரடங்கு உத்தரவை அது பயன்படுத்தியது.
சீனா தயாரித்த பரிசோதனை கருவி
சீனாவிலும் கூட சில நிறுவனங்கள் 50000 பரிசோதனைக் கிட்டுகளை பிப்ரவரி மாத முதல்வாரத்தில் உருவாக்கியது. பின்னர் வூகானிலேயே தினமும் 10, கிட்டுகளைத் தயார் செய்யத் தொடங்கியது. பூனாவில் இருக்கும் இந்திய நச்சு உயிரியல் நிறுவனம் (NIV) பரிசோதனை கருவிகளை தயாரிக்க போதுமான ஆய்வுகளை நடத்தி, ஒரு கருவியை உருவாக்கி, தன் சொந்த ஆய்வாளர்களுக்கு வழங்கியுள்ளது. இது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி குழு மத்திய அரசின் செலுலார் மற்றும் மாலிக்குலர் உயிரியல் மையம் மற்றும் மரபியல் மற்றும் ஒருங்கிணைந்த உயிரியல் நிறுவனம் ஆகியவை மேற்கொள்ளத் தொடங்கி உள்ளது. அதற்கும் கூட இந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி தான் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் காப்புரிமை கொண்டுள்ள சில தனியார் ஆய்வகங்கள் நீண்ட நாட்களாக 12க்கும் மேற்பட்ட ஆய்வகங்கள் (ICMR) ஐ சி எம் ஆர் நிறுவனத்திடம் ஒப்புதலுக்காக காத்திருக்கின்றன. அதில் இரண்டு மட்டுமே இதுவரை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ICMR நிறுவனத்தின் குழப்பமான சுற்றறிக்கையின் காரணமாகவே இந்த தாமதம் ஏற்பட்டு வருகிறது. இந்தியாவை மையமாகக் கொண்டிருக்கும் வெளிநாட்டு ஆய்வகங்கள் தங்கள் தாய்நாட்டு அரசிடம் அனுமதிக் கடிதம் பெற்று சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறுகிறது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம்
ஆனால் தற்போது இந்த விதியில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இப்போது இந்தியாவில் இயங்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என்று கூறியுள்ளது. 100 விழுக்காடு சரியாக இருந்தால்தான் அனுமதி வழங்க முடியும் என்கிறது தேசிய நச்சு உயிரியல் நிறுவனம். ஆனால் அப்பாடி ஒரு பரிசோதனைக் கருவியை வடிவமைப்பது மிகவும் கடினம் என்பது உண்மை.
பெரும்பகுதியான இத்தகைய உபகரணங்களுக்கு ஏற்றுமதியை நம்பி இருந்தால், வெளிநாட்டு நிறுவனங்கள் உரிமங்கள் மட்டுமே நம்பகமானவை என்ற ஊரிப் போன நம்பிக்கை, ‘நமக்கு எதற்கு வம்பு’ என்று பொறுப்புகளை ஏற்க தயங்கும் அதிகார வர்க்கம் என எல்லாம் சேர்ந்து ஐ சி எம் ஆர் நிறுவனத்தின் தலைமேல் கத்தியாக தொங்கிக் கொண்டிருக்கிறது.
இறுதியாக விண்ணப்பித்த ஒன்பது நிறுவனங்களில் இரண்டு ஆய்வுகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவை மையமாகக் கொண்டு செயல்படும் மைலேப் என்ற ஆய்வகம் இந்தியாவின் உற்பத்தியாகும் பொருட்களை கொண்டு இரண்டு மாதங்களுக்கு முன்னர் தன் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பணிகளை தொடங்கியது. இதன் விளைவாக இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தி செய்யப்படும் பரிசோதனைகளை ரூ.4,500 விட மிகக் குறைந்த விலையில் 1200 முதல் 1500 விலையிலேயே செய்ய முடிகிறது. மைலேப் கூடிய விரைவில் 50 ஆயிரம் பரிசோதனைக் கிட்டுகளை உருவாக்க உள்ளது.
வெண்டிலேட்ர் மற்றும் தற்காப்பு சாதனங்கள்:
இந்திய பொதுத்துறை மருத்துவ உபகரணங்கள் தற்காப்புக் கருவிகள் ஆகியவற்றை எப்பொழுதும் உருவாக்க அனுமதிக்கப்பட்டது இல்லை. தனியார் நிறுவனங்கள் இந்த விஷயத்தில் அதிக எண்ணிக்கையில் உற்பத்தி செய்ய வேண்டும் என்றோ, உலகத் தரத்தை எட்ட வேண்டும் என்றோ கருதியது இல்லை. குறைந்தபட்சம் மற்ற வளர்ந்து வரும் நாடுகளில் ஏற்படும் தேவைக்கேற்ப உபகரணங்களை கூட இந்தியா ஏற்றுமதி செய்ய முடியவில்லை. இந்தியாவின் சராசரித் தேவை 8000 வெண்டிலேட்டர்கள். இவை அனைத்தும் பயன்பாட்டிலுள்ள வெண்டிலேட்டர்கள் ஆகும். தற்போதைய நிலையில் ஏப்ரல் மாத இறுதி வரை 2,00,000 வெண்டிலேட்டர்கள் தேவைப்படும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
சீனா மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சை பிரிவு
கூடுதல் வெண்டிலேட்டர் தேவையை மார்ச் மாத இறுதியில் உணர்ந்து, மிகப்பழமையான பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் மிக வேகமாக 30000 வெண்டிலேட்டர் என்று கணக்கீட்டு உற்பத்தி செய்து வருகிறது. மத்திய அரசின் சுகாதாரத் துறையின் கீழ் இயங்கி வரும் மற்றுமொரு பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் லைஃப் கேர் என்ற நிறுவனம் பத்தாயிரம் வெண்டிலேட்டர்களை உற்பத்தி செய்யும் முயற்சியில் இறங்கியிருக்கிறது . இந்திய ரயில்வே துறையும் இன்டகிரல் கோச் ஃபேக்டரியும் இதே அளவு உற்பத்தி செய்யும்பணியில் இறங்கியுள்ளது. பல சிறு நிறுவனங்களுக்கும் ஆர்டர்கள் கொடுக்கப்பட்டு வருகிறது.
இவை குறைவான எண்ணிக்கையில் மட்டும் தயாரிக்கும் சக்தி படைத்தவை. அதில் சிலவற்றின் உற்பத்தி இறக்குமதி உதிரிபாகங்களை தவிர்த்து, இந்தியக் கருவிகளை வடிவமைக்க முயன்று வருகின்றன. மேலும் சில சிறிய நிறுவனங்கள் மாருதி டாடா மகேந்திரா போன்ற பெருந்தொழில் நிறுவனங்களோடு கூட்டு வைத்து உற்பத்தியில் இறங்கியுள்ளன. குறைந்த செலவிலான புதிய உற்பத்தி யுக்திகளுடன் பல ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வரத் தொடங்கியிருக்கின்றன. ஆனால் இவை இன்னும் உற்பத்தியை தொடங்கவில்லை.
தற்காப்பு கவசங்கள் 3.2 லட்சம், என்95 முக கவசம் 11.5 லட்சம் ஆகியவை தற்போது இருப்பில் உள்ளன. இந்தப் பொருட்களுக்கான ஆர்டர்களை அரசு வழங்க தொடங்கியுள்ளது. இதிலும் இரண்டு பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு முக்கியப் வகிக்கிறது. பொதுத்துறை நிறுவனங்கள் 40 லட்சம் முகக் கவசங்கள் உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. டி ஆர் டி ஓ எனப்படும் மத்திய அரசின் வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் அதிக எண்ணிக்கையில் n99 கவசங்களை உற்பத்தி செய்யத் தொடங்கியுள்ளது. தனியார் நிறுவனங்கள் வாரத்திற்கு 20 ஆயிரம் என்ற அளவில் உற்பத்தியை பெருக்க உள்ளது. தனிநபர் தற்காப்பு சாதனங்களுக்கு தேவையான பொருட்கள் தொடர்ந்து தேவைக்கேற்ப உற்பத்தி செய்ய தொடங்கியுள்ளது. உள் நாட்டிற்கு ஏற்ப மாற்றங்களை மேற்கொள்ள தொடங்கியுள்ளன. 12 தனியார் நிறுவனங்களுக்கு 26 லட்சம் தற்காப்பு சாதனங்கள் தயாரிக்க ஆர்டர்கள் வழங்கப்பட்டுள்ளது.
வெண்டிலேட்ர்
இதுவும்கூட ஏற்கனவே கொடுக்கப்பட்ட அளவுகளை குறைக்கும். நடப்பு மூலதனத்தை அதிகரிக்கும். தரம் பற்றிய சந்தேகங்கள் தொடரும் அதே சமயத்தில் வியட்நாம் துருக்கி ஆகய நாடுகளில் இருந்து தற்காப்பு சாதனங்களை இறக்குமதி செய்ய உள்ளது. தொழில் துறையில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மிகவும் பின் தங்கியிருந்த வியட்நாம் உள்ளிட்ட நாடுகளை கூட நாம் நம்பியிருக்க வேண்டிய அளவுக்கு தொழில் துறையில் சீரழிந்து உள்ளோம். இவையெல்லாம் சேர்ந்து நம் நாட்டின் கொள்கை முடிவு எடுப்பவர்கள் அரசியல் தலைமையையும் தற்போதைய இறக்குமதி சார்ந்த தொழில் கொள்கையில் மறு சிந்தனையை உருவாக்கும் என்று நம்ப வைக்கிறது.
இப்போதும், எப்போதும் பொதுத்துறை நிறுவனங்களில் மட்டுமே இவ்வளவு பெரிய தேவையை நிறைவு செய்ய முடியும். ஒருவேளை தனியார் துறையும் ஊக்குவிக்கப்பட்டாலும் அவை தங்கள் உற்பத்திக்கு இறக்குமதி சார்ந்த உதிரிபாகங்களை கொண்டு இருக்கக் கூடாது. ஏற்றுமதி தரம்வாய்ந்ததாக இருக்கும்படி செய்ய வேண்டும். பொருளாதார தற்சார்பு என்பது ஒரு தத்துவார்த்த மந்திரம் அல்ல. அது அத்தியாவசியமானது நுட்பமான தேவைகளை உடையது . அதன் உண்மையான மதிப்பு, உண்மையான தேவை ஆகியவற்றை நெருக்கடி காலங்களே நமக்கு உணர்த்துகின்றன.
குறிப்பு: டி. ரகுநந்தன், மேனாள் தலைவர், அகில இந்திய மக்கள் அறிவியல் இயக்கங்களின் கூட்டமைப்பு. Newsclick.in இணையதளக் கட்டுரை.
தமிழில்: பேராசிரியர்.நா.மணி
பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் மயமாக்கல் பொருளாதாரத்தை உலகச் சந்தையாக்கி உலக வங்கியிடம் அடகு வைத்தல் என்ற நிலைகளை நீக்கி இனியாகும் காலங்களில் உள்நாட்டுத் தயாரிப்பு பொதுத்துறை நிறுவனங்களின் உற்பத்தி பங்களிப்பு என்ற அவசியமான மாற்றங்கள் குறித்து கட்டுரை பேசுவது சிறப்பு இன்றைய தொற்று பாதிப்பில் இருந்து மீள்வது மட்டுமல்லாமல் இதன் உப பாதிப்புகளானவற்றிலும் இருந்து இந்தியாவே முட்டுக் கட்டமைக்க வேண்டும் .