காலச்சுவடின் வெளியீடாய் வந்திருக்கும் பூனாச்சி நாவல் அற்புதமான கதையமைப்பைக் கொண்டுள்ளது. எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்கள் ஆட்டின் வழியாக அசுர வாழ்க்கையைப் பகிர்ந்துள்ளார்.
பசி பாடுகளுக்கிடையே அன்பை விட்டுவிடாமல் போராடும் சம்சாரிகளின் வாழ்வியல், எவ்வளவு துன்பகரமானது,உடல் உழைப்பைக் கொட்டிக்கொடுத்த போதும் எதுவும் மாற்றமடையாமல்,பசிப் போராட்டத்தைத் தூக்கிச்சுமக்கும் அவர்களின் முதுகு அதிகாரத்திற்குக் கீழ் அடிபணிந்தே செல்வதை வார்த்தைக் கோர்வையில் அழகாக இணைத்திருப்பார் சாட்டையாய்.
மனித உணர்வுகளுக்கு கொஞ்சமும் சலித்தவையல்ல ஆடுகளும் என காதல் வயப்படும் காட்சிகளில் அகநானூற்றுச் சாற்றைப் பிழிந்து தந்திருக்கிறார். பிரிவு என்பது எல்லோருக்குள்ளும் நிகழ்த்தும் ஒரு துன்பயியல் காப்பியம் விலங்கு என்ன?மனிதன் என்ன? உயர்வு என்ன? தாழ்வு என்ன? என்பதை நயம்பட நகர்த்தியுள்ளார்.
காமம் இனம்புரியா உணர்வு அதனை தடுக்க முடியா ஆண் ஆட்டை என்ன செய்கிறார்கள் என்பதை கதையோட்டத்தின் வழியாகக் காட்சிப்படுத்துகையில் கண்ணீர் வராமலில்லை. ஆடுகள் உண்ணும் பலவிதமான பெயர் தெரியாத இலை,தளைகளை அறிமுகப்படுத்தி அசைபோட வைத்துவிடுகிறார்.
கண்முன்னே அழியும் தன் இனத்தை முட்டி மோதமுடியா ஈனப்பிறவியாய் பிள்ளைகளைப் பறிகொடுத்து குரலெடுத்து அழமுடியா ஊமையாய் பாசத்திற்கும், பசிக்கும், அதிகாரத்திற்கும் போராடும் உணர்வாய்
மே…மே.. கத்தியபடி
எனக்குள்ளும் மேய்ந்தபடியே இருக்கிறாள் பூனாச்சி.
செ.புனிதஜோதி

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

