Punnagaiyin Nirangal (புன்னகையின் நிறங்கள் கவிதை தொகுப்பு) | நூல் அறிமுகம்

“புன்னகையின் நிறங்கள்” நூல் அறிமுகம்

கவிஞர் ஐ தர்மசிங் அவர்களின்
இரண்டாவது கவிதைத் தொகுப்பான
“புன்னகையின் நிறங்கள் “வாசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது,

வாழ்க்கையின் வலியை வார்த்தைகள் மூலம் தணிய வைக்கும் ஒரு வடிகால் தான் கவிதை என்றே நான் நினைக்கிறன்,

சமூகத்திடம் வேறேதும் சொல்ல முடியாத நிலையில் தான் கவிஞன் வரிகளை எழுத வேண்டிய அவசியம் ஏற்படுகிறது,

“உரைநடையின் சிக்கனம் தான் கவிதை ”
மட்டுமல்ல
“மொழிநடையின் அற்புதமும் தான் கவிதை”

சங்ககாலத்தில் மட்டுமல்ல,
இக்காலத்திலும் பாட்டுடைத் தலைவனைக் கொண்டு கவிதை தொகுப்பை வெளியிட முடியும் என்று
” அப்பாவை “தன்னுடைய பாட்டுடைத் தலைவனாய் எடுத்து கவிதைப் பாடியிருக்கிறார் கவிஞர் அவர்கள்,

வாழ்க்கை பாடங்களால் நிறைந்திருக்கிறது போல,
கவிதைகளும் அனுபவங்களால் நிறைந்திருக்கிறது,

இமயம் முதல் குமரி வரை என்ற சொல்படி
குமரியில் இருந்துஎழுதும் இவருடைய கவிதை இந்தத் தொகுப்பில் முதல் கவிதையாக
மலையில் இருந்தே தொடங்குகிறது,

கங்கைகொண்டான்,
கடாரம் கொண்டான்,
வாதாபி கொண்டான்,
இமயம் கொண்டான்,
என்ற வரிசையில்
இவரும்
கவிதைக் கொண்டானாக அண்ணன் வருவார் என்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை,

” வளர்ச்சி என்று
பெயர் சூட்டப்பட்டுள்ளது
பேரழிவை
இந்த நூற்றாண்டு ”
என்று கவிதைகள் வெடிக்க ஆரம்பிக்கிறது,

எல்லா கவிஞர்களும் காதலைப் பற்றிய பாடிக்கொண்டிருக்கும் போது
கவிஞர் வாழ்க்கையைப் பற்றியே அதிகம் பாடியிருக்கிறார்,

இயலாமையை,
ஏமாற்றத்தை,
எதார்த்தத்தை,
கண்ணீரை,
கவலையை,
அனுபவத்தை,
ஆறுதலை,
முயற்சியை,
முடியாமையை,
தன்னம்பிக்கையை,
பொறுமையை,
வெற்றியை,
தனது கவிதைகளில் அள்ளி தூவியிருக்கிறார்,

“அடுத்த மாதம் பார்க்கலாம் ”
என்று
இயலாமையின் வெளிப்பாட்டை
இன்று நடுத்தர வர்க்கத்தை
அவர்களது வாழ்வியலை நம் கண் முன் அழகியலாக நிறுத்தி இருக்கிறார்,

சுதந்திரத்தைப் பறிகொடுத்த கிளியைப் பற்றி எழுதும் போது
” தனது சிறகுகளை
விரித்து சோதிப்பதை
தவிர்ப்பதேயில்லை
கூண்டுக்கிளி ”
என்று எழுதி இருக்கிறார்,

மழலைக் கவிதைகளில்
“ஈரமாகும் நேரங்களில்
அவசரமாக இடம்பெறும் குழந்தை
அம்மாவிடம் ”
என்றும்

தன்னம்பிக்கை குறித்து எழுதும்போது
“முகஸ்துதியினால் அல்ல
அவமானத்தினால்
பண்பட்டவன் நான் ”
என்றும்,

“அடுத்த இலக்கு
நோக்கி பயணப்படும் போது
அதில் அகப்படலாம்
உனக்கான வெற்றி”
என்றும் எழுதியதும் அருமை, உண்மை,

“அதிகாரத்தின் பரப்பு
அதிகரிக்கும் போது
துவங்குகிறது
மீறலின் சிறகுகள் ”

என்று அத்தனைக் கவிதைகளும்
ஒரு வகை தன்னம்பிக்கை கவிதைகளே,
இந்த “புன்னகையை நிறங்களிலும் ”
வாழ்க்கை கற்றுக் கொடுக்கும் பாடத்தின் வண்ணங்களை எண்ண முடியவில்லை,
அவைகளின் எண்ணிக்கை எண்ணற்றவையாகவே இருக்கிறது
வாழ்த்துக்கள் அண்ணன்,

இனி கவிதை தாயின் பாட்டுவண்டியில் வண்டியில் வேகமாய் ஓடும் சக்கரங்களாக இருக்கட்டும் உங்களது கவிதைகள், வாழ்த்துக்கள் அண்ணன்,

உங்கள் கவிதை தோப்புகள் தொடர்ந்து வெளிவரட்டும்
உங்களது எழுத்தின் பயணம் தொடரட்டும்
உங்கள் இலக்கிய தவம் வெற்றி பெறட்டும் என வாழ்த்துகிறேன் வேண்டுகிறேன்,

 

நூலின் தகவல்கள்: 

நூல்: புன்னகையின் நிறங்கள் (கவிதைத் தொகுப்பு )
ஆசிரியர்: திரு ஐ. தர்மசிங்
பதிப்பு: சரோஜினி பதிப்பகம், கோவை
விலை: ₹. 130
பக்கங்கள்: 140
வெளியீடு:  மே 2024
நூல் வாங்க : +918637481050

 

நூலறிமுகம் எழுதியவர்

இரா. மதிராஜ்

 




இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *