புரட்சியின் பயணம் கவிதை – சந்துரு ஆர்.சி

புரட்சியின் பயணம் கவிதை – சந்துரு ஆர்.சி




கட்டிட வேலை செய்யும்
வட இந்திய இளைஞன்
பனியனைத் தடவிக்கேட்டேன்
அவர் யார் எனத் தெரியுமா என்று…
காரை படிந்த பற்கள் சிரிக்க
நை மாலும் என்று
கைவிரித்தான்
பின் அவனே
ஷினிமா இஸ்டார் என்றான்…

கிராமத்து விவசாயியிடம்
அவர் அணிந்திருந்த ஆடையை காட்டி
யார் இவர் என்றேன்
தன் மகனுக்குத்தான்
அது தெரியுமென்று
பதிலை மடை மாற்றி
வேலைக்கு நகர்ந்தார்

நகரத்தின் தெருவோரச் சிறுவனிடம்
செல்லமாய் கேட்டேன்
யாரடா இவரென்று
சிகரெட் ஊதும் பாவனையில்
விரலிடுக்கில் உதடுகுவித்து
ரஜினி ஸ்டைல் என்றான்

நடுத்தர வாலிபனின்
தோள் தொட்டு கேட்டேன்
தெரியுமா இவரை என்றேன்
சிறு புன்னகையை பதிலாய் தந்து
தலையசைத்து
வேறிடம் நகர்ந்தான்

கல்லூரி இளைஞனின்
கரம்பற்றி கேட்டேன்
அவனோ அவரை
அவரை ஒரு
விளம்பர மாடல் என்று
சந்தேகமாய் உறுதி செய்தான்

ஐ.டி. இளைஞனைக்
கேட்டுப்பார்த்தேன்
மே பி ஹி இஸ் அன்
ஹாலிவுட் ஆக்டர் என்று
தோள் குலுக்கி
நம்மிடமே பதிலைத் திருப்பினான்

ஒரு நாள்
நண்பரின் வீட்டில்
குவியலாய் கிடந்த
அவர் படத்தைப்பார்த்து
அவர் மனைவியிடம் கேட்டேன்
இப்படி கரித்துணியாய்
வைத்திருக்கிறீர்களே
இதிலிருக்கும் மனிதர்
யார் எனத்தெரியுமா என்று..
அப்பாவியாய் சிரித்துக்கொண்டே
போஸ்டர்ல பாத்திருக்கேன்
சுடு தண்ணி தூக்கவும்
சோறு வடிக்கவும்
இந்த துணிதான் வழுக்காம
சூடு தாங்குதுண்ணா
வெள்ளந்தியாய்ச் சொன்னார்

இறுதிவரை யாருக்குமே
தெரியவில்லை
இவர் யாரென்று

கடைசியாய்
விளையாடி முடித்து
வழியில் நடந்து செல்லும்
பள்ளிச் சிறுவனிடம் கேட்டேன்
தயங்காமல் சொன்னான்
சேகுவேரா என்று..
அடையாளம் கேட்டதற்கு
பிறந்தது அர்ஜெண்டைனா
வென்றது கியூபாவில்
வாழ்வது உலகத்தின் இதயத்தில்.
பராட்டை எதிர்பாராமல் கடந்து செல்கிறான்

உலகில்
புரட்சியின் அடையாளமாய்
அறியப்பட்டவரை
யாரெனத்தெரியாமலே
தங்கள் பனியன்களில்
அணிந்துகொண்டு
திரிபவர்கள் மத்தியில்
இளங்குருத்திடம் அழுத்தமாய்
அவர் சேர்ந்திருப்பதுடன்
தெரிந்தவர் தெரியாதோர்
எல்லோருடனும் சேர்ந்து
அதே புன்னகையுடன்
மீண்டும் ஒரு புரட்சியைக் காணமுடியும்
என்ற நம்பிக்கைகளோடு
வெவ்வேறு வடிவங்களில்
சேவும் பயணிக்கிறார்…

சந்துரு ஆர்.சி

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *