சைதை ராமு.. ஆட்டோ ராமு… பூ ராமு இப்படி எத்தனை பெயர் கொண்டு அழைத்தாலும் அவர் எனக்கு சித்தப்பா ராமு மட்டுமே என்றும். கருப்பு கருணாவின் அறிவுறுத்தலோடு தலைநகர் சென்னைக்கு 1987ஆம் ஆண்டின் இறுதியில் வந்து சேர்கிறேன். 1989ல் சென்னை கலைக்குழுவில் இணைகிறேன்.

1990 ஆம் ஆண்டில் சென்னை கலைக்குழு சத்யாகிரகம் மேடை நாடகத்தின் தயாரிப்பு பணியில் கலைஞர்களின் சந்திப்பு ஒன்றை நிகழ்த்தியது.. அந்த சந்திப்பின் போது தான் ராமுவின் அறிமுகம் எனக்கு. அன்று தொடங்கிய சந்திப்பு, கலைக்குழு.. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மார்க்சிஸ்ட் கட்சி.. குடும்பம்.. திரைப்படம் இப்படி பல தளங்களிலும்.. அவரின் மரணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக இயக்குனர் கௌதம் ராஜ் அவர்களின் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படத்தில் நடிப்பது வரையிலும் எங்களின் சந்திப்பு தொடர்ந்து வந்தது.

சென்னை நகரில் இந்திய மாணவர் சங்கம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் இளம் தோழர்களை சரியானதொரு அரசியல் புரிதலோடு வளர்த்தெடுப்பதிலும் களமாட செய்வதிலும் திறன் மிகுந்த தோழர்.

அமெரிக்க தூதரகத்திற்கு எதிரில் ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டம் செய்வதற்கு சென்னை ஸ்பென்சர் அருகில் பல ஆயிரக்கணக்கான தோழர்கள் அணி திரண்டு இருக்கிறார்கள். அமெரிக்காவின் நயவஞ்சகத்தை தோலுரிக்கும் வகையில் வேடமணிந்து ஊர்வலத்தின் முதலாவது
ஆளாக ராமு நிற்கிறார். அன்றைக்கு இருந்த திராவிட முன்னேற்றக் கழக அரசு அதன் காவல்துறை ஊர்வலத்தை நடத்த அனுமதி மறுக்கிறது. அனுமதியை மீறி ஊர்வலம் செல்ல முற்படும் பொழுது காவல்துறை கடுமையான தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்கச் செய்தது. கடுமையான தாக்குதலுக்கு உள்ளான ராமு அங்கே பெண் தோழர்களும் தாக்கப்படுவதை கண்முன்னே கண்டு வெகுண்டு சினம் கொள்கிறார்.. அவரின் கோபம் காவல்துறையினர் மீது பதில் தாக்குதலாக நடைபெறுகிறது. அதைக்கண்ட தோழர்கள் அவர்களும் பதில் தாக்குதலை நடத்துகிறார்கள் காவல்துறைக்கு எதிராக.. அந்த நேரத்தில் காவல்துறை பின்வாங்கியது. அதன் காரணமாகவே பல பெண்
ஊழியர்களை.. இளைஞர்களை நம்மால் காவல்துறையின் தாக்குதலில் இருந்து காப்பாற்ற முடிந்தது. அதன் பிறகு பெரும்படையோடு காவல்துறை வந்து சேர்ந்தது என்பது வேறு விஷயம்.. அந்த நேரத்தில் நடைபெற்ற எதிர் தாக்குதல்தான் நம்முடைய ஊழியர்கள் பலரை காவல்துறையின் கடுமையான திட்டமிட்ட தாக்குதலில் இருந்து தப்பிக்க வைத்தது. எதிர் தாக்குதல் என்பதுதான் நம்முடைய ஊழியர்களை காவல்துறையிடம் இருந்து அந்த நேரத்தில் காப்பாற்ற முடியும் என்று யூகித்து அதைச் சரியாக செய்து முடித்தார். எந்த திமுக அரசு காவல்துறை கொண்டு நம்மை தாக்கியதோ.. அதே திமுக அரசை அன்றைக்கு மத்திய அரசு கலைத்த பொழுது அதை கண்டித்து முதல்
போராட்ட முழக்கமிட்டவர் தோழன் ராமு.. கைகளால் சுவரொட்டி எழுதி சைதாப்பேட்டை முழுவதும் தன்னுடைய ஆட்டோவில் எடுத்துக்கொண்டு ஒட்டி முடித்தவர் தோழன் ராமு. அந்த அளவிற்கு மிகச்சரியான அரசியல் புரிதலோடு களத்திலும் அறிவுத் தளத்திலும்
இயங்கக் கூடியவர்.

கலை இலக்கிய இரவு என்கிற வடிவம் திருவண்ணாமலையில் அறிமுகப்படுத்தப்பட்டது என்றாலும் அதனை தமிழகம் முழுவதிலும் கொண்டு சென்றதில்.இப்படியான கலை இலக்கிய இரவுகளை நடத்திட நம்முடைய ஊழியர்கள் கவனம் செலுத்தி நடத்துவது அவசியம் என்கிற ஒரு
கருத்தினை மாநிலத் தலைமை உணர்ந்து பேச வைத்ததில், யோசிக்க வைத்ததில் சைதை கலை இரவு முக்கிய பங்காற்றியது. 1993 ஆம்
ஆண்டு டிசம்பர் 31ல் சென்னையில் நடைபெற்ற அந்த முதல் கலை இரவை மிகச் சிறப்பான முறையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட
பார்வையாளர்களை; சென்னை நகரம் முழுவதும் இருந்து பொதுமக்களை ஊழியர்களை அணிதிரட்டியதில் கலை இரவு மேடையை வடிவமைத்ததில்; நகரம் முழுவதிலும் தன்னுடைய வித்தியாசமான மாற்றி யோசிக்கும் பிரச்சார உத்திகளை கொண்டு சென்றதில்.. சென்னை மாவட்டம் முழுவதும் இருக்கக்கூடிய கலை இலக்கியம் சார்ந்து இயங்கக் கூடிய பலதரப்பட்ட ஊழியர்களை அரவணைத்து கலை இரவை
நடத்திக் காட்டியதில் ராமுவின் பங்கு மகத்தான ஒன்றாகும்.

அறியாமையிலும் சரியானதொரு அரசியல் புரிதல் இல்லாமலும் இருக்கும் உழைக்கும் ஒடுக்கப்பட்ட மக்களை அணி திரட்டுவதில் தமிழகத்தில் ஆகப் பெரிய பங்களிப்பு என்பது கலை இலக்கியத்திற்கு மட்டுமே உண்டு என்பதில் உறுதியாக நம்பினார் தோழன் ராமு. கலை இலக்கியங்கள் எல்லாமும் எளிய மனிதர்களின் மொழியிலேயே இருக்கவேண்டும் என்று விரும்பினார்.

மார்க்சிஸ்ட் கட்சியின் தென் சென்னை மாவட்டத்தில் பெண்களைக் கொண்ட “சக்தி கலைக்குழு’ உருவாக்கப்பட்ட பொழுது அந்த கலைக்குழுவின் கலைஞர்களுக்கு போதிய நாடகப் பயிற்சி அளித்து அவர்களை தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரத்திற்கு கொண்டு
செனன்றதில் இவரின் பங்கு மிகவும் பாராட்டுக்குரியது.

சென்னை ரிசர்வ் வங்கியில் 2006 ஆண்டு என நினைக்கிறேன் மார்ச் 8 சர்வதேச பெண்கள் தினத்தையயொட்டி அங்கே இருக்கக்கூடிய பெண் ஊழியர்களை இணைத்து “மனிதி” என்கிற நாடகத்தை வங்கி நிர்வாகம் பாராட்டக்கூடிய அளவில் சிறப்பான முறையில் நடத்திக் கொடுத்தார். ரிசர்வ் வங்கி நிர்வாகம் 2007 ஆம் ஆண்டில் நடத்திய இலக்கிய விழா ஒன்றில் அங்கே இருக்கக்கூடிய அருந்தக ஊழியர்களை வைத்து “மனிதம்”
என்கிற நாடகத்தை இயக்கிக் கொடுத்தார்.

தி ஸ்பாஸ்டிக் சொசைட்டி ஆஃப் தமிழ்நாடு என்கிற குழந்தைகளுக்கான பள்ளியில் சிறப்பு குழந்தைகளை வைத்து அவர்களாகவே தானும் மாறி; அவர்கள் நடிக்கும் நாடகம் ஒன்றினை இயக்கி தயாரித்து அளித்தார்.

மனிதர்கள் இறப்பு நிகழ்வில் மட்டும் பாடக்கூடிய “மரண கானா விஜய்” என்கிற கானா பாடகரை அறிந்து, அவரை அணுகி அவர் குறித்தான வாழ்வியலை ஆவணப்படமாக எடுத்தளித்து மரண கானா விஜி என்கிற கானா பாடல் கலைஞனை தமிழகம் அறிந்த கலைஞனாக மாற்றியதில் ராமுவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது.

இப்படி எல்லா நிலையில் இருக்கக்கூடிய மனிதர்களோடு தன்னை எப்பொழுதுமே இணைத்துக் கொண்டு அவர்களோடு ஒருவராகவே வாழ்ந்து வந்தார். தன்னுடைய வாழ்நாள் முழுவதும் குழந்தைகளை கொண்டாடுவதும் அவர்களை தூக்கி சுமப்பது என்பது அவருக்கு நிகர் அவரே தன்னுடைய மரணம் மட்டும் . அவரோடு நெருங்கிய அனைத்து தோழர்களின் குடும்பங்களிலும் அவர் ஒருவராக மாறி போவார்.. அந்த குடும்பத்து குழந்தைகளுக்கு மாமாவாக இருப்பார், பெரியப்பாவாக இருப்பார், தாத்தாவாக இருப்பார் குழந்தைகளின் தோழனாக இருப்பார் . .
குழந்தைகளோடு குழந்தையாக இருப்பார் ராமு. தான் வாழ்ந்து மறைந்த மண்ணில் சாக்கி (சாக்லேட்) தாத்தாவாக இருந்திருக்கிறார்.

இன்றைக்குத் தமிழ்நாடு முழுவதும் நாட்டுப்புறக் கலைஞர்களின் வாழ்வாதாரம் குறித்து பேசப்படுகிறது என்றால் அதற்கு முழுமுதற் காரணமும் கலைஞன் ராமு. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் தென்சென்னை மாவட்ட நிர்வாகிகள் ஒருவராக இருந்த பொழுது தமுஎகச மாநிலக் குழுவின் வழிகாட்டுதலோடு அருகில் இருக்கக்கூடிய மற்ற மாவட்டங்களில் இருந்து மிகப் பெரிய அளவிற்கு நாட்டுப்புறக் கலைஞர்களை அணிதிரட்டி சென்னை அண்ணா சாலையில் மிகப்பெரிய ஊர்வலத்தை நிகழ்த்தி அவர்களின் வாழ்வாதாரம் குறித்து; அவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை பல்வேறு தரவுகளை திரட்டி மறைந்த தோழர் நன்மாறன் அவர்களின் உதவியோடு முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றார். கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு உடனடியாக அன்றைக்கிருந்த கலைஞர் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக அரசு நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு என்று தனி நலவாரியம் ஒன்றினை அமைத்தது.. நாட்டுப்புறக் கலைஞர்களின் உழைப்பினை சுரண்டி வாழும் பலர் அமைதியாக இருந்த பொழுது அக் கலைஞர்களின் வாழ்வாதாரம் குறித்து பேசிய மக்கள் கலைஞன் தோழன் ராமு.

இயக்குனர் சசி அவர்களின் “பூ” என்ற திரைப்படத்தில் “பேனாகாரர்” என்கிற கதாபாத்திரத்தின் வழியாக தமிழக திரைத்துறைக்கு குணச்சித்திர நடிகராக அறிமுகமாகிறார். சைதை ராமு, ஆட்டோ ராமு, என்பது மறைந்து தமிழகம் முழுவதிலும் “பூ” ராமு என்ற மாபெரும் மக்கள் கலைஞன் தமிழ்த் திரைத்துறைக்குள் ராஜபாட்டையை தொடங்குகிறார் பூ திரைப்படத்தின் வழியாக. திரைத்துறைக்குள் பல்வேறு திரை ஆளுமைகள் தனது தொடர்பில் இருந்தாலும் . . திரைத்துறையில் தவிர்க்கமுடியாத திரைக் கலைஞனாக முன்னேறி இருந்தாலும்
எப்பொழுதும் எளியவாழ்க்கையை மேற்கொண்டார்.. எளிய மக்களோடு தன்னுடைய அன்றாட பயணத்தை வைத்துக் கொண்டார்.. தான் பேசிடும் வார்த்தைகளுக்கு அரிதாரம் பூச தெரியாதவர். தான் ஏற்றுக் கொண்ட கருத்துக்களுக்கு எப்பொழுதுமே நியாயம் சேர்ப்பிக்க தன்னால் முடிந்த அனைத்து தளத்திலும் அறிவு மற்றும் உடல் உழைப்பினையும் தொடர்ந்து செலுத்தி வந்த மகா கலைஞன் ராமு.

செயல் என்ற சொல்லுக்கு உதாரணமாக தன்னுடைய வாழ்வினை கம்யூனிஸ்டாக வாழ்ந்து முடித்திருக்கிறார்.

– கருப்பு அன்பரசன்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *