நாம் வாசிக்க கூடிய புத்தகங்கள் வந்த கதையினை அறிந்திருப்போமா? புத்தகத்தை எப்படி எல்லாம் வைத்துக்கொண்டு வாசித்துக் கொண்டிருக்கின்றோம். நம் வாசிப்பு காலம் காலமாக இப்படியேதான் இருக்கிறதா? புத்தகத்தின் வடிவமும் அளவும் இப்படியேதான் இருந்துவந்துள்ளதா? மனிதன் எப்படி புத்தகத்தை வாசித்து வந்தான்? முக்கியமானதை இட்டாலிக்கில் எப்போது இருந்து போட ஆரம்பித்தார்கள் என்று கேள்விகளை கேட்டு அதற்கு விடையும் தருகிறது இந்தப் புத்தகம்.
1984இல் சிரியாவில் டெல் பிராக்கில் சித்திர எழுத்துகள் வரையப்பட்ட இரண்டு சிறிய களிமண் பலகைகள் கிடைத்தன. அவற்றில் சில குறிகளும் ஏதோ ஒரு விலங்கின் படமும் வரையப்பட்டிருக்கிறது. ஆராய்ந்து பார்த்ததில் கிமு நான்காயிரமாண்டைச் சேர்ந்ததெனத் தெரியவந்தது. இவைதான் நமக்கு கிடைத்தவற்றிலேயே மிகப் பழமையான எழுத்துக்கள். இந்த எழுத்துகளிலிருந்துதான் புத்தகத்தினுடைய வரலாறும் வாசிப்பின் வரலாறும் ஆரம்பிக்கிறது என்று சுப்பாராவ் துவங்குகிறார்.
நாட்டின் தகவல் பரிமாற்றத்தின் கையாகவும், கண்ணாகவும், குரலாகவும் அவர்கள்தான் எழுத்தர்கள் தான் இருந்தார்கள். அவர்களுக்கு முக்கியத்துவம் அங்கே வழங்கப்பட்டிருக்கிறது.
வாசிப்பு என்பது எதிரில் இல்லாத படைப்பாளியுடன் பேசுவதாகக் கருதப்பட்டது என்பது உண்மை. அதனை இங்கே சுட்டியிருக்கிறார். முதன்முதலில் குறிப்பிடப்பட்ட மௌன வாசகர் அம்புரோஸ் தான் என்பது ஒரு புதிய தகவல்.
அனைத்து விதமான புத்தகங்களையும் அலெக்ஸாண்ட்ரியா நூலகத்தில் சேர்த்திருக்கிறார்கள். நூலகத்தில் புத்தகங்கள் எண்ணிக்கை கூடக் கூட வாசகர்களால் தேடி அவற்றை எடுக்க இல்லாத சூழ்நிலை வருகிறது. காலிமாச்சஸ் என்ற புதிய நூலக வருகிறார். அவர் ஒரு கவிஞர். அவர்தான் நாடகம், சொற்பொழிவு கவிதை, சட்டம் மருத்துவம், வரலாறு, தத்துவம், இதர வகை என்று எட்டு வகைகளாக பிரித்து அடுக்குகிறார். இப்படித்தான் கேட்லாக் முறை அமலில் வருகிறது.
இன்று புத்தகங்களை பைண்ட் செய்வதென்பதில் பெரிய தொழில்நுட்பம் எல்லாம் இல்லை. ஆனால், அது முதல் முதலாக வரும் பொழுது ஒரு பெரிய மலைப்பாக தான் இருந்திருக்கிறது. பசையைக் கண்டுபிடித்து பைண்டிங் செய்த ஃபிலாட்டியஸ் என்பவருக்கு ஏதென்ஸ் மக்கள் சிலை வைத்திருக்கிறார்கள். பைண்டிங் என்பது மிகவும் விலையுயர்ந்த விஷயமாக அப்போது இருந்திருக்கிறது.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் இருந்துதான் ஆபாச எழுத்துக்கள் வர ஆரம்பித்திருக்கின்றன. புத்தகத்திருடனுக்கு அந்தக் காலத்தில் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது போன்ற தகவல்களை ஆங்காங்கே விதைத்திருக்கிறார். கிமு 200 வாக்கில் அரிஸ்டோஃபேனஸ் நிறுத்தக்குறிகள் போன்ற குறியீடுகளை கண்டுபிடித்தாலும் அது அப்போது குழப்பமாகவே இருந்திருக்கிறது. தலைப்புகள் வைக்கும் பழக்கம், கேப்பிட்டல் லெட்டரில் எழுதுவது ஸ்பேஸ் விட்டு எழுதும் பழக்கம் போன்றவை கிபி எட்டாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் காரோலிஞ்சியன் ஆட்சிக்காலத்தில் இருந்துதான் தான் ஏற்பட்டிருக்கிறது.
1494ல் ஆல்டஸ் அச்சு வரலாற்றில் மிக அழகான, அற்புதமான புத்தகங்களை பதிப்பித்தார். இத்தாலிய மொழியில் எழுதிய தாந்தேயின் படைப்புகளையும் சேர்த்து வெளியிட்டார். இது ஒரு மிகப் பெரிய புரட்சி. ஏனெனில் கிரேக்கம், இலத்தீனில் எழுதினால்தான் மரியாதை மக்கள் பேசும் மொழிகளில் எழுதினால் கேவலம் என்ற கண்ணோட்டம் மிகக் கடுமையாக இருந்த காலத்தில் அதனை இது எழுதப்பட்டது. பிரான்சிஸ்கோ கிரிஃபோ என்பவரே தற்போது நாம் பயன்படுத்தும் ரோமன் ஃபாண்டைக் கண்டுபிடித்தவர். 1515ல் ஆல்டஸ் என்பவர் இறந்தபோது அவரது சவப்பெட்டியை சுற்றி புத்தகங்களை போட்டுப் புதைத்து வைத்திருக்கிறார்கள்.
புத்தகங்கள் வந்த நாளிலிருந்தே அதனை வாசிப்பதற்கான அனைத்துக் கருவிகளும் கண்டுபிடிக்கப்பட்டன. மின்விளக்கு தற்போது நாம் அணியும் கண்ணாடி போன்றவை அப்படி கண்டறியப்பட்டதே. வாசிப்பாளர்கள் அநேகம்பேர் கிட்டப்பார்வை கொண்டவர்கள்தான். கண்ணாடி அணிந்தால் தான் எழுத மற்றும் வாசிக்க இயலும் என்று நிறைய எழுத்தாளர்களைக் குறிப்பிட்டு அவரைப் போன்றே தாமும் கண்ணாடி அடைந்திருப்பதாக தனக்குத்தானே எள்ளல் புரிந்து கொள்கிறார் சுப்பாராவ்.
புக் ஆஃப் டெத் என்ற மந்திரங்கள் அடங்கிய புத்தகத்தை இறந்தவர்களுடன் புதைத்திருக்கிறார்கள். புத்தகத்தின் முதல் பக்கம் காலியாக இருக்கும். அதில் இறந்தவரின் பெயரை நிரப்பி புதைப்பார்கள் என்ற ஒரு அரிய தகவலையும் அவர் பதிவு செய்திருக்கிறார்.
மெடிசி என்ற பெரும் வர்த்தகர் 1444ல் நேப்பிள்ஸ் அரசருக்கு ஒரு புத்தகத்தைப் பரிசாக அனுப்பி இருக்கிறார். அதுதான் முதன்முதலாக அனுப்பப்பட்ட புத்தகப் பரிசு.
எழுத்தும் புத்தகமும், வாசிப்பும்தான் உலகில் அனைத்தையும் உருவாக்கியது என்பது மிகையல்ல என்பது அனுபவப்பூர்வமான உண்மை.
இன்று வந்திருக்கும் கணினி தொழில்நுட்பம், மின் புத்தகம் போன்றவை அச்சுப் புத்தகத்தினுடைய மதிப்புக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பது உண்மை. குட்டன்பர்க் காலத்திலும் இதுதான் நடந்தது. புத்தகங்கள் நிறைய கிடைத்ததால் நிறைய வாசகர்கள் படிக்க கற்றுக் கொண்டதைப் போலவே எழுதவும் கற்றுக் கொண்டார்கள். எழுத கற்றுக் கொண்டதென்றால் புதிய படைப்புகளை படைப்பது மட்டுமல்ல சிறப்பாக எழுதுவதுமாகும். மிக அழகான கையெழுத்தில் எழுதப்பட்ட காலங்களும் உண்டு.
நமது நினைவு, நமது வீட்டு நூலகத்தில் உள்ள புத்தகங்களை மாறி மாறி நமக்குள் அடுக்குகிறது, வரிசைப்படுத்துகிறது சிலவற்றை வேண்டாம் என்றும் தள்ளுகிறது. நம் வார்த்தைகளும் நமது உலகமும் ஒருபோதும் மாறாது. அப்படி இருப்பதில்லை.
புத்தகத்தின் வரலாறு நமக்கு சொல்வதெல்லாம் நீங்கள் படிக்கும்போதெல்லாம் அது மாறுகிறது. அதோடு உங்களையும் மாற்றுகிறது என்று நிறைவு செய்து இருப்பது உண்மை. புத்தகங்கள் நம்மை புரட்டிப் போடுகிறது. நம்மைத் தேட வைக்கிறது. நமது சிந்தனையைத் தூண்டுகிறது. நம்மை வேறு ஒரு உலகிற்கு அழைத்துச் செல்கிறது. நம்முடைய எண்ணத்தை வேறு ஒரு பரிணாமத்தில் பரிணமிக்க உதவுகிறது.நாம் நூல்களைத் தேடி வாசிப்போம்.
புத்தகத்தின் கதை…
ச.சுப்பாராவ்…
பாரதி புத்தகாலயம்..
முதற்பதிப்பு ஏப்ரல் 2018
பக்கங்கள் 16.
விலை ரூ. 10.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.