“கோணல் மரமான மனிதகுலத்திலிருந்து நேரான எதுவும் ஒருபோதும் உருவாக்கப்பட்டதில்லை”- இம்மானுவேல் கான்ட் அவர்களின் மொழியோடு
‘புதிய இந்தியா எனும் கோணல் மரம்’
தன் பயணத்தை தொடங்குகிறது.
“பிரபாகரனின் உரைநடை ஹைதராபாத்திலிருந்து வந்திருக்கிறது. இன்றைய இந்தியாவையும், அவளின் எதிர்காலத்தையும் குறித்து இந்த நாட்டிலும் சர்வதேச அளவிலும் கவலைப்படும் எவரும் வாசிக்க வேண்டிய நூல் இது”- என்னும் சஞ்சய பாரு அவர்களின் முன்னுரையோடு நூல் கடக்கிறது.
“அம்ரித் கால் (அமிர்த காலம்) அச்சே தின்(நல்ல நாட்கள்) என்றெல்லாம் நாம் கேட்கும் ‘புதிய இந்தியாவில் அதே புதிய இந்தியாவை பல தாட்சயண்யமின்றி விமர்சிக்கும் ஒரு நூலை வெளியிட பல பதிப்பகங்கள் மறுத்த போது ரவி அதைச் செய்ய முன் வந்தார். புதிய இந்தியா எனக் கொழுந்துவிட்டெறியும் புதர்த் தீயினால் அனைத்துமே அழிக்கப்பட்டு விடவில்லை என்கிற நம்பிக்கையை இத்தகைய மனிதர்கள் எனக்கு கொடுக்கிறார்கள்” – என்னும் முகவுரைவுடன் நூலை அறிமுகப்படுத்துகிறார் எழுத்தாளர் பரகால பிரபாகர் அவர்கள். அவர் யார் என்று எல்லோருக்கும் தெரியும். இந்நூலை தமிழில் மிகச் சிறப்பாக மொழி பெயர்த்துக் கொடுத்துள்ளார் தோழர் விஜய்சங்கர் ராமச்சந்திரன் அவர்கள்.
2014 இல் இருந்து 2024 தற்போது வரை கடந்த பத்து ஆண்டுகளாக ஒன்றிய அரசு மக்களை நடத்தி வரும் மிக மோசமான நிலை குறித்து இந்த நூல் பல கட்டுரைகளோடு நம்முன் தோன்றியுள்ளது. இவ்வளவு தொழில்நுட்பம் வளர்ந்த இந்த காலத்திலும் ஒரு தனிநபருக்கு விமான நிலையத்தை எல்லாம் சர்வதேசமாக மாற்றத் தெரிகிறது. அப்படி என்றால் 2014ல் எப்படி இருந்திருப்பார்கள் இவர்கள். மக்களின் பொருளாதாரத்தை ஒட்டச் சுரண்டி உள்ளனர். மக்களிடம் எதுவும் இல்லாமல் சுரண்டியுள்ளனர். ஒருபுறம் மக்களிடம் ஆகா ஓகோ என்று பந்தா காட்டிவிட்டு மறுபக்கம் தன்னுடைய சூழ்ச்சி வலைகளை பின்னுவதற்கான அனைத்து தகிடுதத்த நாடகங்களையும் அரங்கேற்றியுள்ளனர்.
2021ல் இந்தியாவில் வறுமைக் கோட்டில் 7.5 கோடி பேர். இது உலக அளவில் 191 நாடுகளில் 131வது இடம் இந்தியாவுக்கு. நமக்கு முன்னால் இலங்கை- 73, சீனா- 79 ஆகிய நாடுகள் உள்ளன. பாகிஸ்தான்161, மியான்மர்149, நேபாளம்143. இம்மூன்று நாடுகளும் மதம் சார்ந்தஅடிப்படையில் அமைந்தவை. பசிக் குறியீட்டிலும் நாம் பின்னாடியே இருக்கிறோம் 107வது இடத்தில். இது அறிமுகத்தில் மட்டுமே. இன்னும் நிறைய ஏராளம் உள்ளே கொட்டிக் கிடக்கிறது.
75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாக் கொடியை நாட்டு மக்களை ஏற்ற வைத்து விட்டு 2002ல் குஜராத்தில் பில்கிஸ் பானு அவர்களை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கும்பல்களை மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலோடு விடுதலை செய்தது குஜராத் மாநில அரசு. நாமெல்லாம் நமது வீடுகளில் கொடி ஏற்றிக் கொண்டிருந்தோம் அப்போது. இதுபோல இன்னும் ஏராளமான உதாரணங்கள் உள்ளே இருக்கின்றன.
வறுமைக்கோட்டின் அளவை எப்படி அளவிடுவது; வெளிநாட்டினருக்கு எப்படி தவறான தகவல்கள் கொடுப்பது; வெளிநாட்டில் இருந்து மக்களுக்கு தேவையில்லாதவற்றை உள்ளே இறக்குமதி செய்வது எப்படி உட்பட எல்லா தகிடுதத்து வேலைகளையும் செய்தனர். அனைத்தையும் அம்பலப்படுத்தியுள்ளார் ஆசிரியர்.
*புதிய இந்தியா எனும் கோணல் மரம் உண்மையான மோடி எழுந்து நிற்பாரா;
*முயலா வாத்தா என்கிற மாயை;
*பாஜகவின் மக்கள் தொகை அரசியல்;
*ஆன்மீக இந்திய அரசியல் இந்தியா ஓர் ஆய்வு அறிக்கை; *அசாதாரணமாக்கு அதை காட்சிப்படுத்து;
*தன்முனைப்பாட்சி இணைய சுதந்திரம் தரவுத் தனியுரிமை;
*பொதுத்துறை மெகா விற்பனையும் விசாகப்பட்டினத் திருட்டும்;
*பாதிரியார் ஸ்டேன்ஸ்வாமியை கொன்றது யார்;
*பயங்கரவாதமும் இந்திய அரசும் விவசாய சட்டங்கள் ஒரு அகந்தையின் கதை;
இறுதியில் ஒரு *பெருந்தொற்றின் பதிவேடு 2021′ மற்றும் முடிவுரையோடு நூல் முடிகிறது.
இன்னும் ஏராளமான தலைப்புகள் உள்ளே கொட்டிக் கிடக்கிறது. ஒவ்வொன்றும் எழுத்தாளர் எழுப்பும் கேள்விகள் உண்மையிலேயே ஆட்சியாளர்களுக்கு கோபம், ரோஷம் இருக்கிறது என்றால் அவர்கள் ஆட்சியை விட்டு கீழே இறங்கி ஓடிட வேண்டும். அதெல்லாம் அவர்களுக்கு இருப்பதாக தெரியவில்லை.
இவர்களை இதற்கு மேலும் அனுமதித்தால் எதுவும் மிச்சம் இருக்காது நாட்டில். தாங்கள் சொல்வதே எல்லாம் தீர்ப்பு. மக்கள் நில் என்றால் நிற்க வேண்டும் உட்கார் என்றால் உட்கார வேண்டும்.
‘நீ எக்கேடாவது கெட்டுப் போ எனக்கு கார்ப்பரேட் தான் முக்கியம்’ என்று நேரடியாகவே மக்களிடம் துணிச்சலாக பேச ஆரம்பித்து விடுவார்கள் மீண்டும் வந்து விட்டால்.
இந்நூலில் ‘பாஜக ஆர் எஸ் எஸ் முயலா வாத்தா என்கிற மாயை’ குறித்த கட்டுரையில் ஒரு காட்சி இருக்கும். அதைப் பார்த்தால் உடனடியாக வாத்து போன்று தெரியும். உற்று கவனித்தால் அதில் ஒரு முயல் இருப்பதாக புரியும். அடடே முயல் இருக்கிறதே என்று நாம் நினைத்தால் நமது பார்வை மாறுபாடாக இருக்கும். அந்தப் பார்வைக்கு நம்மை போகவிடாமல் தடுத்து ‘இல்லை இல்லை அங்கே வாத்து தான் இருக்கிறது’ என்று நம்மை நம்ப வைப்பதற்கான வேலையை செய்தால் எப்படி இருக்குமோ அதுபோலத்தான் நம்முடைய நவீன வரலாற்றில் ‘இந்தியா’ என்னும் அடையாளத்தை ‘இந்து-இந்துத்துவ’ அடையாளமாக கட்டமைக்கும் வேலையை இவர்கள் தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றனர். அது குறித்த மிக சிறப்பான பதிவை இதில் வழங்கிருப்பார். நம் பார்வை எங்கே எப்படி செல்ல வேண்டும் என்பதை தீர்மானிப்பதற்கு நம்முடைய சிந்தனை சுயமாக செயல்பட வேண்டும். அப்படி செல்லவிடாமல் ஒரு பக்கமாக தள்ளி விடுவதற்கான வேலையை செய்வதற்குத்தான் தொடர்ந்து இந்துத்துவ அடையாள வாதிகள் தங்களுடைய வேலையை செய்து கொண்டிருக்கிறனர். இதிலிருந்து மீள்வதற்கான வேலையை நாம் 2024 செய்தே ஆக வேண்டும். அதற்கு இந்நூலை அவசியம் வாசிக்க வேண்டுகிறேன். ஒரு முறை அல்ல நாம் நினைக்கும் போதெல்லாம் எடுத்து வாசிக்கலாம். ஒவ்வொரு முறையும் நமக்கு கண்ணில் படாத சில செய்திகள் புதியதாக படும். எனவே அவசியம் வாசிக்க வேண்டுகிறேன்.
இந்நூலை வழங்கிய ஆசிரியர் பரகால பிரபாகர் அவர்களுக்கும், தமிழில் மிகச் சிறப்பாக மொழிபெயர்த்த தோழர் விஜய்சங்கர் ராமச்சந்திரன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்!
வாசிப்போம்!
உலகை நேசிப்போம்!!
நூலின் தகவல்கள்
நூல் : “புதிய இந்தியா எனும் கோனல் மரம்”
ஆசிரியர் : பரகால பிரபாகர்
தமிழில் : ஆர் விஜய்சங்கர்
வெளியீடு : எதிர் வெளியீடு
ஆண்டு : ஜனவரி 2024
நூலைப் பெற : www.ethirveliyeedi.com
செல் : 99425 11302; 04259-226012
நூலறிமுகம் எழுதியவர்

இரா சண்முகசாமி
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

