புவியைச் சுற்றும் பூசணி – நூல் அறிமுகம்
நூல் : புவியைச் சுற்றும் பூசணி
ஆசிரியர் : என்.மாதவன்
விலை : ரூ.₹120
பக்கங்கள்:127
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
குழந்தைகள் மைய எழுத்தாளர் மற்றும் வாழும் கல்வியாளர் முனைவர் என்.மாதவன் ஐயா அவர்களின் புத்தகம் ஆகும்.
அறிவியல் மற்றும் வரலாற்று தகவல்களை அப்படியே தந்தால் குழந்தைகள் மனதில் பதிய காலதாமதம் ஆகும் என்பதை உணர்ந்த நம் கல்வியாளர் கதை வடிவில் எழுதியுள்ளார்.
எந்த நிகழ்வுகளையும் நேரடியாகக் கற்பித்தால் கற்றல் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதை உணர்ந்த நமது கல்வியாளர் காய்கறிகளே பேசுவது போன்று எழுதியுள்ளார்.
அட்டைப்படத்தில் உள்ள விமானத்தில் பறக்கும் உருளையும் பூசணியும் நம்மை இந்தப்புத்தகத்தை நோக்கி ஈர்க்கிறது.
படித்தவுடன் மனதில் அப்படியே பதிகிறது.
கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகளுக்கு இடையே ஒரு சண்டைஏற்படுகிறது. இதன் மூலம் பூசணியும், உருளைக்கிழங்கும் தங்கள் வரலாற்றைத் தெரிந்துகொள்ள முயற்சிக்கின்றன இதற்கு காய்கறி நடராஜன் உதவுகிறார்.
காய்கறிகள் பிறந்த நாடுகளைப் பட்டியலிட்டுத் தந்து அவற்றின் வாழ்க்கையை அறிமுகப்படுத்தி, ஒரு பயணத் திட்டத்தையும் வகுத்து கொடுக்கிறார் பேராசிரியர் கண்ணன்.
விமானத்தில் பயணம் செய்து பூசணியும், உருளையும் இந்தியாவிலும், இந்தியாவிற்கு வெளியே தென் சீனா ,ஈரான் (கேரட்), எகிப்து(வெண்டைக்காய்), ஆப்பிரிக்கா (பச்சைப்பட்டாணி) , தென் அமெரிக்கா (தக்காளி), ஐரோப்பா (பீட்ரூட் ,கோஸ்) போன்ற நாடுகளில் வலம் வந்து தன் இனத்தாரைக் கண்டு பேசி வந்து தகவல்களை நமக்குத் தருகின்றன.
காய்கறிகளின் உரையாடல்களை சுவையோடு தகவல்களாக நமக்குத் தருகிகால்.
கத்திரிக்காயில் புரதம், நார்ச்சத்து, இரும்பு, பாஸ்பரஸ், பொட்டாசியம், வைட்டமின் B சத்துகளும் நிறைந்து உள்ளது எனப்படிக்கும் போதே கத்தரிக்காய் ஒதுக்காமல் சாப்பிடத் தோன்றுகிறது.
ஒவ்வொரு கட்டுரைத் தலைப்பும் இதுபோல் பல்வேறு தகவல்களைத்தருகிறது.
ஒவ்வொரு காய்கறிகளின் வரலாறும் அருமை மனதைக்கவர்கிறது.
சீனாவில் இருக்கும் பெய்ஜிங் விமான நிலையம், கசகஸ்தான் தலைநகர் நூர் சுல்தான் விமான நிலையம், உஸ்பெகிஸ்தான் நாட்டின் தாஷ்கண்ட் விமான நிலையம், ஈரான் நாட்டின் டெஹ்ரான் விமான நிலையம், ஜோர்டான் தலைநகர் அம்மான் விமான நிலையம் என ஒவ்வொரு நாட்டின் விமான நிலையங்களின் பெயர்களையும் கொடுத்து அறிவியலோடு வரலாறும் அறிந்து கொள்ளும் விதம் எழுதியுள்ளார் மிக அருமை காய்கறிகளின் உரையாடல்களில் நகைச்சுவை கலந்து எழுதியுள்ளதால் படிக்கும் போதே நம்மையறியாமல் சிரிப்பு வருகிறது.
மிக எளிமையான தெளிவான எழுத்து நடை படித்துவிட்டு கண்ணை மூடினால் காய்கறிகள் நம்மை பார்த்து பேசுவது போல் உள்ளது. சிலரால் மட்டுமே இப்படி எழுத முடியும்.
குழந்தைகளுடன் அதிகம் இருப்பதால் தான் என்னவோ இவரின் படைப்புகளில் குழந்தைகளைக்கவரும் எழுத்து நடை உள்ளது.
புத்தகத்தின் உள்ளே உள்ள படங்களை குழந்தைகள் எளிமையாக வரைந்து பயிற்சி செய்ய ஏதுவாக எளிமையாக இருக்கிறது என் வழிகாட்டி மற்றும் என் முன்மாதிரிகளில் இவரும் முக்கியமானவர் முதன்மையானவர்.
பூசணியோடு நமக்கும் செலவில்லாமல் உலகைச்சுற்றி காட்டுகிறார்.
கண்டீப்பாக குழந்தைகளை விரும்பும் பெற்றோர்கள் இந்தப்புத்தகத்தை உங்கள் குழந்தைகளுக்குப் பரிசு கொடுங்கள் படிப்பதோடு காய்கறிகளையும் ஒதுக்காமல் சாப்பிடுவார்கள்.
நூல் அறிமுகம் எழுதியவர்:
வ.பெரியசாமி
புத்தக ஆர்வலன், தன்னம்பிக்கை பேச்சாளர்,போட்டித்தேர்வு பயிற்சியாளர்
பட்டதாரி ஆசிரியர் கணிதம்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி – சங்ககிரி- 637301
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

