ஏப்ரல் 2021 வெளியான மலையாளப் படம். கோ கோ விளையாட்டைப் பிரதானமாகவும் அதன் பயிற்சியாளரின் வாழ்க்கையை அதனூடாகவும் சொல்கிறது. ராகுல் ரிஜி நாயர் எழுதி இயக்கியுள்ளார்.ரஜிஷா விஜயன் கதாநாயகியாக பிரதான பாத்திரத்தில் நடித்துள்ளார்.மமிதா பைஜூ, ரெஞ்சித் சேகர்,வெங்கிடேஷ்,வெட்டுக்கிளி பிரகாஷ்,ராகுல் ரிஜி நாயர் ஆகியோரும் நடித்துள்ளனர்.
இரண்டு தடகள வீரர்கள் ஒருவரையொருவர் காதலிக்கின்றனர். பெண் வீரர் மரியா முக்கியப் போட்டிக்கு தேர்ந்தெடுக்கும்போது ஊக்க மருந்து உட்கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டு விலக்கப்படுகின்றார். மனமுடைந்து போகின்றாள். பிறகு இருவரும் திருமணம் செய்துகொள்கின்றனர். அவனுடைய வணிகம் நஷ்டத்தில் விழுகிறது. குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக சிறிய தீவில் இருக்கும் பள்ளிக்கு உடற்பயிற்சி ஆசிரியராக மரியா சேர்கிறாள். அங்கு பெண்கள் கோ கோ விளையாட்டை முறையான பயிற்சியில்லாமல் விளையாடுகிறார்கள். அவர்களுக்கு பயிற்சியளித்து சிறந்த அணியாக மாற்றுகிறாள்.
முதலில் அதை விரும்பாத தலைமையாசிரியர்,பெற்றோர்கள் பிறகு ஏற்றுக்கொள்கிறார்கள். அங்கு நடந்த ஒரு பஸ் விபத்தில் பலர் இறந்து போனதற்கு அந்த பஸ்ஸை ஓட்டிய மரியாவின் தந்தைதான் காரணம் என்று தெரிந்து அவளை சிலர் தாக்குகிறார்கள். எல்லா எதிர்ப்புகளையும் சமாளித்து பள்ளி அணியை வெற்றி பெற உதவுகிறாள். கணவனுக்குக் கொடுத்த வாக்குறுதியின்படி ஆசிரியர் வேலையை ராஜினாமா செய்துவிட்டு வெளிநாட்டில் வேலை செய்யும் கணவனுடன் மரியா சேர்கிறாள்.
விளையாட்டை மையமாகக் கொண்ட திரைப்படம் என்றால் ஒரு குறிப்பிட்ட பாணியில்தான் செல்லும். முதலில் சரியாக விளையாடாத அணியை பயிற்சியாளர் மிகுந்த சிரமப்பட்டு வெற்றி பெறச் செய்வார். அதிகாரிகள் அல்லது எதிர் அணிப் பயிற்சியாளர்கள் பல இடைஞ்சல்களை ஏற்படுத்துவார்கள்.இறுதிக் காட்சியில் வெற்றிக்குக் காரணமான பயிற்சியாளர் பங்கு கொள்ள முடியாத ஒரு சூழ்நிலை உருவாகும். கடைசிப் பாயிண்ட் அல்லது ரன் அல்லது கோல் அடிக்கும்வரை அந்த அணி தோல்வியின் விளிம்பில் இருக்கும்.கடைசி நிமிடத்தில் நாக் அவுட் அல்லது கோல் அல்லது சிக்சர் அடித்து வெற்றி பெறுவார்கள். இந்தப் படத்திலும் இப்படிப்பட்ட சில அம்சங்கள் உள்ளன. ஆனால் கோ கோ விளையாட்டின் நுணுக்கங்களை சிறப்பாகக் காட்டியுள்ளார்கள்.
பாராட்டப்பட வேண்டிய விஷயம் மரியாவின் பாத்திரப் படைப்பு. வாழ்க்கையில் நடக்கும் பல துயரங்களைத் தாங்கிக்கொண்டு மாணவிகளுக்கு விளையாட்டைக் கற்றுக் கொடுப்பதை ஒரு இலட்சியமாக எடுத்துக் கொள்வது; உடைந்து போகும் வேளையில் ஆறுதலுக்காக தந்தையை துணைக்கு அழைப்பது; மாணவிகளிடம் கண்டிப்பும் பரிவும் மாறி மாறி காட்டுவது என அந்தப் பாத்திரம் வடிவமைக்கபப்ட்டுள்ளது. தந்தை பாத்திரத்தில் இயக்குனர் ஒரு டிவிஸ்ட் வைத்திருக்கிறார்.
விளையாட்டையும் மரியா மற்றும் மாணவிகளின் குடும்ப சிக்கல்களையும் மாறி மாறி காட்டுவது சற்று புதிய முறை. ஆனால் சில இடங்களில் போதனைகள் வருவது சற்று அலுப்பைத் தரலாம். ஆனால் மொத்தத்தில் ஒரு இனிமையான அநுபவத்தையும் நேர்மறை உணர்வையும் தருகிறது என அன்னம்மா வெட்டிக்காட்(Firstpost Anna MM Vetticad) கூறுவது சரியான மதிப்பீடாக இருக்கிறது.
இரா. இரமணன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.