“புலிக்குத்தி” சிறுகதைகள் – நூல் அறிமுகம்
நம் சிறுவயதில், அக்கம்பக்க சிறுவர் சிறுமியர் எல்லோரும் சேர்ந்து விளையாடும் போது, கூடிப்பேசும்போது நமக்குச் சற்று மூத்த அக்கா, அண்ணன்கள் நம்மிடம் தமக்குத் தெரிந்த கதைகளை, சம்பவங்களை நமக்குக் கூறுவார்களே – அந்தத் தொனியில் கதை சொல்கிறார் ராம்தங்கம்.
ராம்தங்கமே முன்னுரையில் கூறியது போல அனுபவங்கள் சார்ந்தே தனது கதைகள் எழுதுவதால், கதைகள் எல்லாமே நாஞ்சில் நாட்டைக் களமாகக் கொண்டமைந்ததில் வியப்பில்லை. கூடவே ‘நாரோயில்’ வட்டார வழக்கும் கதைகளுக்குக் கூடுதல் அழகையும் உயிரையும் கொடுக்கிறது.
அன்றாடம் பார்த்த, கேட்ட அனுபவங்களே கதைகளாகும்போது அதுதானாகவே நேர்கோட்டு எதார்த்தவாதக் கதை சொல்லலைத் தேர்வு செய்து கொள்கிறது. தொகுப்பின் கதைகளை வாசக மனதுக்கு நெருக்கமாக்கும் அதே கதை கூறும் முறையும் பக்கத்து வீட்டு அண்ணனின் கதை மொழியும் சேர்ந்துதான் – உள்ளாட்சித் தேர்தலில் சாதியின் பங்கைப் பேசும் ‘சாதி வாக்கையும்’, காணாமல் போன மகனுக்காகக் காத்திருக்கும் இலக்கிய ஆர்வலர் சுப்பிரமணியன் அண்ணாச்சியின் ‘காத்திருப்பையும்’ தொகுப்பின் பிற கதைகளுடன் இயைபு கொள்ளாது, சாதாரண கதைகளாய் கடக்கவும் செய்கிறது.
நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் நீக்கமற எழுந்தருளியிருக்கும் இசக்கிகளின் கதை என்பதே ‘எவனாவது அடிச்சுக் கொன்னுருப்பான் – இல்லன்னா எவன்கிட்டயோருந்து தப்பிக்க தன்னைத் தானே கொன்னுருப்பா’ என்பதை, நாடார்களுக்கும் திருவிதாங்கூர் சமஸ்தான மன்னருக்குமான மோதல் வரலாற்றில் தொடங்கி வலிய நாடானுக்கும் பனையேறிக்குமான வர்க்கமுரணில் உயிர்மாய்த்த உடையாள் ‘பனங்காட்டு இசக்கி’யான கதை வழி மெய்ப்பிக்கிறார்.

இரு வேறு இனக்குழுக்குழுக்களிடையிலான பகை தீர்க்கும் வன்மத்தை – தொன்மக் கதையின் தடத்தில் – எவர்பக்கமும் நியாயப்படுத்தலின்றி – பிரத்யேக மொழியில் சொல்லிச் செல்கிறது தலைப்புக் கதையான ‘புலிக்குத்தி’.
குமரி மாவட்டத்து ரப்பர் தோட்டத்து தொழிலாளர்களை இயக்கமாக்கியும், இறுதி வரை தளராத போராட்ட குணத்துடனும் வாழ்ந்து மடிந்த கொச்சுமணியின் வாழ்வை முன்னிருத்தி, அப்பகுதியில் உருவாகிய இடதுசாரி இயக்கத் தோழர்களின் வரலாறை வலியுடன் கூறுகிறது ‘கம்யூனிஸ்ட்’ கதை. ஒட்டுமொத்த கதையும் ஒரு இடதுசாரித் தாத்தா தன் பேரனுக்குச் சொல்வதாக அமைந்திருப்பது சற்றே கதையின் வீச்சையும் வீர்யத்தையும் குறைப்பதாகவும் தோன்றுகிறது.
தொகுப்பில் சிறந்த கதைகளாக நான் கருதுவது – வாசம், அந்நியம், அடைக்காலபுரத்தில் இயேசு, பஞ்சுமிட்டாயும் பால்ராஜ் அண்ணனும் ஆகியவற்றையே. நான்குமே பால்ய காலத்து/பள்ளிப் பருவத்து ஆசைகள், நிராசைகள், மகிழ்ச்சி, துயர், வலி, கொண்டாட்டம் நிரம்பிய உலகினைக் கொண்ட சிறுவர்களை ஆன்மாவாகக் கொண்ட கதைகள்.
சமூகத்தின் ஒழுக்க விதிகளாலும் குடும்ப அமைப்பின் நிர்ப்பந்தத்தாலும் வீடே அந்நியமாகிப் போகும் செந்தில், விடுதியில் இருந்து விடுமுறைக்கு வீட்டுக்கு அழைத்துப் போகாத அம்மாவின் வாசத்தை கிறிஸ்துமஸ் தாத்தா கொடுத்த கேக்கில் மணத்துப் பார்க்கும் ஒன்றாம் வகுப்பு ரமேஷ், பஞ்சுமிட்டாய் விற்கும் பால்ராஜ் அண்ணன் உருக்குலைந்து அவித்த கடலை விற்பவராய் மாறிய அதிர்ச்சியை உள்வாங்கத் தவிக்கும் தாயை இழந்து தந்தையுடன் வாழும் ஜீவா, வறுமையிலும் சின்னச் சின்னக் கொண்டாட்டங்கள், சேட்டைகள் வழி வாழ்வை உயிர்ப்போடு வைத்திருக்கும் அடைக்கலபுரத்து ராஜா என இக்கதைகளில் உயிர் பெற்று உலவுகின்றனர் கைவிடப்பட்ட சிறுவர்கள். வளர்ந்து கெட்ட சமூகத்தையும் பால்யத்தை ஒடுக்கும் குடும்ப நிறுவனத்தையும் பார்த்து இந்த சிறுவர்களை தங்களுக்கே உரிய மெல்லிய புன்னகையை வீசி எறியச் செய்கிறார் இக்கதைகள் மூலம்.
பெரும்பாலான கதைகளில் உள்ளுறைந்து அமுக்கலாய் வெளிப்படும் பகடி வாசிப்பின் சுவை கூட்டுகிறது. அசலான மனிதர்களையும், அவர்களின் அசலான உணர்வுகளையும் தொய்வின்றி வெளிப்படுத்தும் கதைகள் கொண்டதாக உள்ளது இத்தொகுப்பு.
📚 நூலின் விவரங்கள்:
| தலைப்பு | விவரம் |
| நூலின் பெயர்: | “புலிக்குத்தி” சிறுகதைகள் |
| ஆசிரியர்: | ராம்தங்கம் |
| வெளியீடு: |
வம்சி பதிப்பகம்
|
| விலை: | ₹.150 |
| அறிமுகம் எழுதியவர்: |
✍🏻 அன்புச்செல்வன் |
******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
