ரசூலின் மனைவியாகிய நான் – புதிய மாதவி
தொகுப்பில் ஒரு குறு நாவல் உட்பட ஏழு கதைகள்.மும்பையில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்புகளில் தம் உறவுகளை இழந்து வாடும் மாநகர மக்களுக்கு இந்நூலை சமர்ப்பித்திருக்கும் புதிய மாதவியின் பூர்வீகம் நெல்லை மாவட்டமெனினும் வளர்ந்து வாழ்வது மும்பை மகாநகரம்.எனவே பெரும்பாலானக் கதைகளில் மும்பை மாநகர வாழ்வின் கோட்டோவியத் தீற்றல்கள்,மற்றும் பண்பாட்டுக் கோலங்களின் பதிவுகளும்.
12/7 அந்த விழிகள்
2006 ஆம் ஆண்டு ஜூலை திங்கள் 11 ம் தேதி மாலை மும்பை மேற்கு ரயில்வேயின் மாகிம் தொடங்கி மலாட் வரையிலான ஏழு நிலையங்களில் மின் ரயில்களில் டிபன் பாக்ஸ் குண்டுகள் எனும் வெடிகுண்டுகள் தாக்கத்தில் பல உயிர்கள் ரத்த சகதியாய் மரித்தன.மாநகரமே பீதியில் ஸ்தம்பித்து உறைந்து போய்க் கிடந்தது துயர வரலாறு.
எது நடந்தாலும் குறிப்பிட்ட சமூகமொன்றின் மீது பழி சொல்லி அபாண்டம் கற்பிக்கும் பெரும்பான்மையான மதத்தின்,விளம்பர வருவாய்க்காக உண்மை மறைத்து அரசின் ஊதுகுழல்களாக ஊளையிடும் ஊடகங்களின் மனசாட்சியை உலுக்குமா இக்கதையின் உயிர் நாடி?
அடையாளங்கள்:
மதக்கலவரம் நிகழும் நகரத்தில் கணவனின் பேண்ட்டை கழட்டச்சொல்லும் வெறியரிடமிருந்து கணவனைக் காக்க மங்கலச் சூத்திரத் தாலியைக் காண்பித்து அவனை இந்துப்பெயரொன்றால் அழைத்து உயிர் காப்பதும் வேறொரு இடத்தில் இன்னொரு மத வெறியரிடமிருந்து மனைவியைக்காப்பாற்ற இஸ்லாமியப் பெயரால் அவளை அழைத்து காக்கும் கணவன் என இரு வேறு மதங்களைச் சார்ந்த ஆணும் பெண்ணும் சமூகத் தடைகளை உடைத்து திருமணம் செய்து கொள்வதும் அதனால் ஏற்படும் பின்விளைவுகளுமே கதை.
மதம்மாறாமல் கலப்பு திருமணம் செய்து கொண்டவரின் இல்லத்தில் ஏற்படும் மரணம் ,இறப்புசடங்குகளும் கேள்விக்குறியாகும் ஒரு அவலத்தை காட்சிப்பசுத்தி கூடவே கண்தானம் ,உடல் தானம் எனத் தீர்வையும் சொல்லியிருப்பது புதியமாதவி யின் சிறப்பு.
கணபதிபப்பா சிரிக்கிறார்:
இந்தக் கதையும் மதப் பண்பாட்டு பின்னணியில் மும்பயின் மிக முக்கியமான பண்பாடு நிகழ்வான பிள்ளையார் ஊர்வலம் உளவியல் பார்வையோடும் சமூக ப் பொறுப்போடும் எழுதப்பட்ட து.
குறிப்பாக தமிழர் பெருமளவில் வசிக்கும் தாராவி பகுதியில் நிலவும் சாதி வேறுபாடுகளைக் கண்டிப்பது படைப்பாளிக்கு பெருமை சேர்ப்பது.தேச விடுதலைக்காக திலகர் ஒருங்கிணைத்த கணபதி ஊர்வலங்கள் இன்று தேசம் முழுமைக்கும் மத வெறி வளர்ப்பதற்கு, பிற மதத்தினரை துவேஷிப்பதற்கானது வரலாற்று சோகமன்றி வேறென்ன..!
வட்டமும் சதுரங்களும்:
“Living together” தமிழில் இணைந்து வாழ்தல்?…சமகாலத்திய மிக முக்கியமான சமூக வாழ்நிலை மாற்றங்களில் இதுவுமொன்று.குறிப்பாக IT SECTOR வளர்ச்சிக்குப் பின் படித்த சமூகத்தில் திருமணம் என்பதன் புனித பிம்பத்தை உடைத்த பெருமைக் கொண்டது.
தமிழில் இந்த பின்னணியில் வேறு கதைகள் உள்ளனவா …? தெரியவில்லை!.விலகிப்போகும் ஆணின் அபிலாசைகளும் விரும்பி நெந்சிக்கும் பெண்ணின் நுட்பமான மனசும் சிறப்ப்பாக சொல்லப்பட்டிருக்கும் கதையில் எதற்காக மார்க்சீயம் பேசும் ஒருவனைக் கதை நாயகனாக தேர்ந்தெடுத்ததின் பின்னணி படைப்பாளிக்கே உரிய ரகசியம்..சுதந்திரம். ஆனால் அதன் நுண்ணரசியல் படைப்பாளிக்கு எதிராக திரும்பக்கூடும் என்பதே வாசகப் புரிதல்.
எழுத்தாளர் புதிய மாதவி
பச்சைக்கிளி- சிறுகதை யோ பரதேசம் போனாலும் பயணப்பெட்டியில் தம் மதம் மற்றும் சாதுயப் பெருமைகளையும் சுமந்தே செல்லும் இந்திய ப்பாஸ்போர்ட் ஒருவனின் கதை. அமெரிக்காவில் உள்ள பார்வதி தேவி ஆலயத்தில் பார்வதி தோளில் கிளி இருக்கிறதென்பது இந்து மத வரலாற்றில் புதிய செய்தி..ம்ம்…வசகனைக் குழப்பி பறக்கும் பச்சைக்கிளி.
தொகுப்பின் சிறந்த கதையாக நான் உணர்ந்தது அனஸ்தீசியா! 8 நிமிட கண் அறுவை சிகிச்சையின் போது கொடுக்கப்பட்ட அனஸ்தீசியா மயக்கத்தில் தோன்றும் மாயயதார்த்த பிம்பங்களின் நான் லீனியர் தொகுப்பே இக்கதை.ஒரு கதைக்குள் கதை இருக்கத்தான் வேண்டுமா என்ற பின் நவீனப் பார்வையோடு கதையில்லா கதைக்குள் காட்டப்படும் காட்சிகளில் சமகாலத்திய ஜுகல்பந்தி.
ரசூலின் மனைவியாகிய நான் – குறுநாவல் மும்பை குண்டுவெடிப்புக்கு பின் ஒரு சில குடும்பங்களில் நிகழும் சம்பவங்களின் கோர்வை எனலாம். காலம் இருவாக்கும் உணர்வு மாற்றங்கள்..பண்பாட்டு விழுமியங்களின் தகர்ப்பு போன்ற சங்கதிகளை வேறு வேறு பாத்திரங்கள் மூலம் பேசும் இக்கதையின் காலவெளி மிகப்நெடியது..சற்றே கனமான விமர்சனங்களை எதிர் கொள்ள வேண்டிய கதை இதுவெனலாம்.
வாசிப்பினூடாக நெருடும் ஆங்கிலச் சொற்களின் தமிழ்ப்படுத்தல் சற்றே அயர்ச்சியூட்டுகிறது, காரணம் அவ்வார்த்தைகளின் மிகச் சரியானப் பொருள் வாசகனைப் போய்ச் சேராததுதான்.
மும்பை போன்ற பல்வேறு பண்பாட்டு கலப்பு நிறைந்த பெருநகர வாழ்க்கையை, விழுமியங்களை, அவலங்
அதேநேரம் கதை மாந்தர்களின் செயல்களும் கதை நிகழ்வுகளும் பல புதிய உடைப்புகளை… குறிப்பாக இதுகாறும் இருந்து வந்த நிலவுடைமைச் சிந்தனைகள், பண்பாட்டு விழுமியங்கள் ஆகியவை தகர்க்கப்பட்டு புதிய மாற்றங்களை அறிமுகம் செய்கின்றன. அவை எம்மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு காலமே பதிலாகும்.
– அன்பாதவன்
புத்தகத்தை வாசித்தது போன்ற உணர்வை ஏற்படுத்தியது.