ராணுவமும் காவல் துறையும் அரசின் அடக்குமுறை கருவிகளே என்றார் லெனின். ஆளும் கூட்டம் தங்களது ஆட்சியையும் அதிகாரத்தையும் தக்கவைத்துக் கொள்வதற்கு ராணுவமும் காவல்துறையும் உளவு அமைப்புகளும் முக்கியம் என்பது நாம் அறிந்ததே. அது மன்னர் ஆட்சியாக இருந்தாலும் சரி, ஜனநாயக அரசாக இருந்தாலும் சரி அடக்குமுறை கருவிகள் இல்லாமல் அரசால் செயல்பட முடியாது.
உளவு அமைப்புகள் எதற்காக ?
இந்தியா சுதந்திரத்திற்கு பிறகு பாகிஸ்தானுடனும் சீனாவுடனும் இரண்டு போர்களை சந்தித்தது. அதற்குப்பிறகு இந்திரா காந்தியால் ஏற்கனவே இருந்த ஐ.பி என்ற உளவு அமைப்பை இரண்டாக பிரித்து அந்நிய நாட்டை உளவு பார்க்க ‘ரா‘ என்கிற ஒரு உளவுப்பிரிவு 1968 -ல் உருவாக்கப்பட்டது. இதுபோன்ற உளவுத் துறை அமைப்புகளை வளர்ந்த நாடான அமெரிக்கா முதல் வளர்ச்சி அடையாத நாடுகள் வரை அனைத்து நாடுகளும் உருவாக்கி வைத்துள்ளன. அரசுக்கு எதிராக யாரெல்லாம் இருக்கிறார்களோ அவர்களை எல்லாம் கண்காணிப்பதே உளவுத் துறையின் முக்கய வேலையாகும்.
அந்நிய நாடுகளை உளவு பார்க்க இந்தியா உருவாக்கிய உளவு அமைப்பான ‘ரா’ உருவாக்கப்பட்டபோது அமெரிக்காவின் சி.ஐ.ஏ, இஸ்ரேல் நாட்டின் மொசாட் போன்ற உளவு அமைப்புகள் அதற்கு பயிற்சி அளித்தது. ராவின் முக்கிய வேலை என்னவென்றால் அண்டை நாடுகளில் அரசியல் ராணுவ மாற்றங்களை கண்காணிப்பது. சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கங்களை கண்காணிப்பது. அந்நிய நாடுகளில் வாழும் இந்தியர்களை வைத்து அந்த நாட்டிற்கு அழுத்தம் கொடுப்பது போன்றவைகளாகும்.
இந்தியா செய்தது என்ன ?
உளவுத்துறையில் எப்படி தகவலை சேமிக்கிறார்கள். அதற்கான படிநிலைகளையும், சேகரித்த தகவல்களை எப்படி பாதுகாப்பாக வைக்கிறார்கள் என்பதையும் இந்த நூல் விளக்குகிறது. அமெரிக்காவின் சிஐஏ அவரகளது நாட்டுக்கு எதிரான போக்கை மேற்கொள்ளும் நாடுகளில் ஊடுருவி, அந்த நாட்டின் ஆட்சியை கலைத்து, அங்கு அவர்களுக்கு ஆதரவான அரசை அமைப்பதுவரை செய்கிறது. அதுபோன்று இந்தியா செய்யவில்லை என்றாலும் பாகிஸ்தானை திசைதிருப்பும் வேலைகளை அது செய்துள்ளது. இதுபோன்று ‘ரா’ வில் அவருடைய செயல்பாடுகளையும் வெற்றிகளையும் ஆசிரியர் குறிப்பிடுகிறார். மேலும் ரா இலங்கை விடுதலைப் போராளிகளுக்கு பயிற்சி அளித்ததும் ஆயுதம் வழங்கியதும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
உலக நாடுகளை இந்தியாவை திரும்பிப் பார்க்க வைத்ததுதான் ‘ரா’ வின் முக்கியமான வெற்றியாகும். அது பொக்ரானில் நடைபெற்ற அணு ஆயுத சோதனை ஆகும். இந்த அணு ஆயுத சோதனைக்கு திட்டம் தீட்டியதும் அதை செயல்முறை படுத்தியதும் ரா என்பதை அவர் குறிப்பிடுகிறார்.
இந்தியாவில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு ‘ரா’ விற்கு ஒதுக்கும் நிதியை குறைத்ததும் தொடர் ஆட்சி மாற்றங்களால் ‘ரா’ வின் செயல்பாடுகள் எந்த அளவிற்கு இருந்தது என்பதையும் அவர் இந்நூலில் குறிப்பிடுகிறார். இதுபோன்ற ‘ரா’ வில் நடந்த சில நிகழ்வுகளை பத்திரிக்கை செய்திகளை தொகுத்து இந்த நூலை எழுதியுள்ளார். இந்தியாவின் உளவு துறையைப் பற்றி அறிந்துகொள்ள இந்நூல் உதவியாக அமையும்.
புத்தகம் – ரா
ஆசிரியர் – குகன்
பதிப்பகம் – வி கேன் புக்ஸ்
விலை – ₹140
பக்கங்கள் – 160