தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் – 10 | ‘பாரன்ஹீட் 451’ நாவல்
புத்தகங்களைச் சாம்பலாக்கக் கிளம்பிய தீயெரிப்புப் படை!
அ. குமரேசன்
“ஒரு புத்தகத்தை எரிக்க வேண்டுமானால் அதற்கு எத்தனையோ வழிகள் இருக்கின்றன. ஆனால் கையில் தீக்குச்சியை வைத்துக்கொண்டு அலைகிறவர்கள் இந்த உலகத்தில் நிரம்பியிருக்கிறார்கள்.”
நாவல், சிறுகதை, திரைக்கதை எழுத்தாளரான ரே பிராட்பரி (Ray Bradbury) (1920 – 2012) என்ற இவ்வாறு நொந்து போனவராகப் பேசினார். கட்டற்ற சுதந்திரத்திற்கு அடையாளமாகக் கைகாட்டப்படும் அமெரிக்காவின் அதிகார வர்க்க அத்துமீறல்களும் தணிக்கைக் கடுமைகளும் அவரை இப்படிப் பேச வைத்தன.
அந்த நிலைமைகளை வைத்தே அவர் எழுதி 1953ஆம் ஆண்டில் வெளியான நாவல்தான் ‘பாரன்ஹீட் 451’. அமெரிக்காவிலும் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த தென்னாப்பிரிக்காவிலும் அந்த நாவலுக்குத் தடை விதிக்கப்பட்டது, பள்ளிகளின் நூலகங்களில் அந்தப் புத்தகங்களை வாங்கி வைக்கக்கூடாது என்று அரசாங்கங்கள் ஆணையிட்டன. அமெரிக்காவில் 1967இல் ஆட்சி நிர்வாக அமைப்பு மீது அவநம்பிக்கையை ஏற்படுத்துகிறது எனக் கூறி முதல் முறையும், பின்னர் 2006இல் மோசமான சொற்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன எனக் கூறி இரண்டாவது முறையும் தடை விதிக்கப்பட்டது.
ஆனால் அந்தத் தடை நடவடிக்கைகள், தணிக்கை முறை பற்றிய விரிவான விவாதங்களுக்கு இட்டுச் சென்றன. அதற்கு எதிரான கருத்துகள் மேலோங்கின. தடை விலக்கப்பட்டது.
நாவலின் கதையே புத்தகங்களுக்கு எதிரான தடை பற்றியதுதான். ஆனால் அந்தத் தடை வெறுமனே புத்தகத்தை விற்கவோ வாங்கவோ கூடாது என்பதோடு நிற்கவில்லை. புத்தகங்களைக் கைப்பற்றி எரித்துச் சாம்பலாக்குகிற அளவுக்குப் போனது. அதற்கென்றே ஒரு ‘தீயெரிப்புப் படை’ அமைக்கப்படுகிறது! ‘பாரன்ஹீட் 451’ என்பது காகிதம் எரிவதற்கான வெப்பநிலையாகும். ஆகவே அந்தத் தலைப்பு புத்தகங்கள் எரிக்கப்படுவதன், அதன் மூலம் புத்தகத் தணிக்கையின், ஒடுக்குமுறையின் குறியீடானது. மேலும், கருத்துரிமை ஒடுக்குமுறைகளுக்கு எதிரான மக்கள் மனக் கொந்தளிப்பின் குறியீடாகவும் அந்தத் தலைப்பு அமைந்தது.
தடையின் கதை
உண்மையான நிகழ்கால அரசியலைத் தாக்குவதற்குக் கற்பனையான எதிர்கால சமூகத்தை நடமாட விடுகிற புனைவு உத்தியைத்தான் இந்த நாவலில் ரே பிராட்பரி (Ray Bradbury) கையாண்டிருக்கிறார்.
ஓர் எதிர்காலச் சமூகத்தில் புத்தகங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. தீயணைப்புப்படை இருக்கிறது – ஆனால் அதன் ஒரு முக்கிய வேலை, எங்காவது யாராவது புத்தகங்கள் வைத்திருக்கிறார்களா என்று கண்டுபிடித்து அவற்றை எரிப்பதுதான். ஆம் உண்மையில் அது “தீயெரிப்புப்படை”! அதன் பணியாளர்கள் தீயணைப்பு வீரர்கள் அல்ல, தீயெரிப்பு வம்பர்கள்தான். அந்தப் படையில் கய் மோன்டாக் ஓர் எரிப்பாளன். கேள்வி கேட்காமல் தனது வேலையைச் செய்துவரும் அவனுக்கு, தனது மனைவி மில்ட்ரெட் எதையுமே கண்டுகொள்ளாமல் பொழுதுபோக்குகளில் மட்டும் ஆர்வமாக இருப்பது பற்றிய கவலை இருக்கிறது.
க்ளாரிஸ் மெக்லெல்லன் என்ற ஒரு மாறுபட்ட இளம் பெண்ணை அவன் சந்திக்கிறான். அவள் புத்தகங்களை நேசிக்கிறவள். அதனால் வளர்ந்த அறிவுக் கூர்மையும் அன்பின் இணக்கமும் நிறைந்தவள். உலகத்தைப் பற்றிய விரிந்த பார்வை கொண்ட அவளுடன் பேசப் பேச அவனுக்குத் தனது வாழ்க்கையைப் பற்றியும், புத்தகங்கள் பற்றியும் புதிய பார்வை ஏற்படத் தொடங்குகிறது.
ஒரு நாள், தீயெரிப்புப் படையினர் வைத்த தீயில் வயது முதிர்ந்த ஒரு பெண் அவரது புத்தகங்களுடன் சேர்ந்து எரிக்கப்படுவதை கய் பார்க்கிறான். அது அவனை ஆழமாகப் பாதிக்கிறது. தான் இதுவரையில் எரித்த புத்தகங்களைப் பற்றி யோசிக்கிறான். சில புத்தகங்களை மீட்டு வீட்டில் ரகசியமாக மறைத்து வைக்கிறான்.
க்ளாரிஸ் திடீரென காணமாமல் போகிறாள். இது கய்யைக் குழப்பத்தில் ஆழ்த்துகிறது. அவள் ஒரு கார்விபத்தில் இறந்துவிட்டதாக மில்ட்ரெட் கூறுகிறாள். குறிப்பிட்ட பாதையில் க்ளாரிஸ் சென்றிருப்பாள் என்று கய் ஊகிக்கிறான். ஆனால் அதற்கான திட்டவட்டமான ஆதாரம் கிடைக்கவில்லை.
அவன் தன்னிடமுள்ள புத்தகங்களைப் பற்றி மில்ட்ரெட்டிடம் சொல்ல முயல்கிறான், ஆனால் அவள் பொருட்படுத்தவில்லை. ஏமாற்றமடையும் கய் ஒரு புத்தகத்தை அவளுடைய நண்பர்களுக்கு வாசித்துக் காட்டுகிறான். அவர்கள் அதிர்ச்சியும் கோபமும் அடைகிறார்கள்.
ஆத்திரப்படும் மில்ட்ரெட் கய்யைக் காட்டிக் கொடுக்கிறாள். அவனும் தீயெரிப்புப் படையைச் சேர்ந்தவன்தான் என்றாலும், புத்தகங்களுடன் இருக்கும் அவனுடைய வீட்டைக் கொளுத்துவதற்குப் படைக் குழுவினர் வருகின்றனர். அங்கே நடக்கும் மோதலில் அவன் தனது மேலதிகாரியான குழுத் தலைவனைத் தாக்கிக் கொன்றுவிடுகிறான். ஊரைவிட்டுத் தப்பி ஓடுகிறான். நகரத்திற்கு வெளியே, அடுத்த சந்ததிகளுக்காகப் புத்தகங்களை மனப்பாடம் செய்து தலைமுறை தலைமுறையாகப் பாதுகாத்து வருகிற, ஒதுங்கி வாழ்கிற ஒரு குழுவை அவர் சந்திக்கிறான்.
ஒரு போர் மூள்கிறது. அதில் நகரம் அழிக்கப்படுகிறது. கய்யும் அந்த குழுவினரும் தொலைவிலிருந்து அதைப் பார்க்கிறார்கள். அழிவின் இடிபாடுகளிலிருந்து ஒரு புதிய சமுதாயத்தைக் கட்டியெழுப்ப அவர்கள் ஒன்றாகப் பயணிக்கிறார்கள். புத்தகங்களிலிருந்து பெற்ற அறிவையும் மானுட மாண்பையும் அவர்கள் சுமந்து செல்கிறார்கள்.
க்ளாரிஸ்சுக்கு என்ன ஆனது என்று நாவல் தெரிவிக்கவில்லை. படையாட்களால் அவள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று பல வாசகர்கள் கருதுவதாகப் பதிவுகள் தெரிவிக்கின்றன.
போராளிகளின் துணை
மக்களின் அறிவு வளம் பெறுவது தங்களின் ஆதிக்கத்திற்குத் தடையாகிவிடும் என்று கருதும் ஆட்சியாளர்கள், அதிகார வர்க்கத்தினரைச் சாடும் இந்த நாவல், சிந்தனைகளுக்கு எதிரான ஒடுக்குமுறை பற்றிய கூர்மையான விமர்சனத்தை முன்வைக்கிறது. உலகம் முழுவதும் கருத்துச் சுதந்திரத்திற்காகப் போராடுகிறவர்களின் இலக்கியத் துணையாக அடையாளம் பெற்றிருக்கிறது.

அமெரிக்காவின் இலினாய்ஸ் மாநிலம் வாகீகன் நகரில் பிறந்த ரே டக்ளஸ் பிராட்பரி (Ray Bradbury) ‘தி மார்ஷ்யன் குரோனிக்கிள்ஸ்’, ‘சம்திங் விக்கெட் திஸ் வே கம்ஸ்’ உள்ளிட்ட படைப்புகளை அளித்திருக்கிறார். அவற்றிலும் அரசியல், சமூக விமர்சனங்கள் இருக்கின்றன என்று திறனாய்வாளர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். 400-க்கும் மேற்பட்ட சிறுகதைகள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதி மறைந்த அவருடைய ஆனால் அவரது எழுத்துகள் இன்னும் உலகம் முழுவதும் வாசகர்களை ஈர்க்கின்றன என்று திறனாய்வாளர்கள் கூறியிருக்கிறார்கள்.
அமெரிக்காவில் 1940களில் குறிப்பாக இடதுசாரி சிந்தனையாளர்கள் கடுமையாக வேட்டையாடப்பட்டார்கள். சோவியத் யூனியன் கொள்கைகளின் செல்வாக்கு பரவுவதற்கு எதிரான திட்டமிட்ட அவதூறுகள் கிளப்பப்பட்டன. அரசியல், சமுதாய நிலைமைகளை விமர்சித்தவர்கள் சோவியத் கையாட்கள் என்று தாக்கப்பட்டார்கள். “இரண்டாவது சிவப்பு பீதி” என்று சித்தரிக்கப்பட்ட அந்தக் காலக்கட்டத்தில் ஏற்பட்ட எண்ணங்கள்தான் இந்த நாவலை எழுதத் தூண்டின என்றார் ரே பிராட்பரி (Ray Bradbury). ஜெர்மனியில் ஹிட்லர் புத்தகங்களைக் குவியல் குவியல்களாக எரித்த அட்டூழியங்களும், அமெரிக்காவிலும் அதே போன்ற வெறியாட்டங்கள் வர வாய்ப்பிருக்கிறது என்ற தனது அச்சமும் ‘பாரன்ஹீட் 451’ கதைக்கு மூலமாகின என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். புத்தகங்களுக்கு எதிரான, சொற்களைக் கட்டுப்படுத்துகிற அதிகாரப்போக்கு இன்றைய மெய்யான எதிரி என்றார்.
சொற்களைக் கட்டுப்படுத்தத் துடிக்கும் அப்படிப்பட்ட மெய்யான எதிரிகளை எங்கேயும் பார்க்க முடியும் – இங்கேயும்தான் – இல்லையா?
எழுதியவர் :

அ. குமரேசன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.