உண்மையான அறிவியலும் கோமிய அறிவியலும்!
– ஆயிஷா இரா.நடராசன்
மாட்டின் சிறுநீர்: திடீர் பிரச்சனை ஏன்?
பசுமாட்டின் கோமியத்தை தான் குடித்ததாகவும் இதனால் பல நோய்களில் இருந்துதான் விடுபட்டதாகவும் திடீரென்று ஐஐடியின் இயக்குனர் காமகோடி திருவாய் மலர்ந்திருக்கிறார். என்ன காரணம் ஏன் இப்படி திடீர் என்று அறிவிக்கிறார்கள் என்று யோசித்தேன் யூஜிசி வெளியிட்டிருக்கும் நெறிமுறைகள் குறித்து கருத்து தெரிவிக்க 30 நாட்கள் தான் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
துணை வேந்தரை நியமிப்பது கவர்னரின் வேலை. மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் எல்லா செமஸ்டர் தேர்வுகளிலும் தேறினால் மட்டுமே அடுத்த ஆண்டுக்கு அனுப்பப்படுவார்கள் என்பது போன்ற கொடூர சட்டங்களை முன்மொழிந்திருக்கும் யூஜிசியை எதிர்த்து மாணவர்கள் போராட களமிறங்கும் இந்த நேரத்தில் அதைத் திசை திருப்புவதற்கு தான் இந்த கோமியம் பிரச்சனையை ஆர்.எஸ்.எஸ் காமகோடி கும்பல் கிளப்பி விட்டிருக்கிறார்கள் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.
இருந்தாலும் கொஞ்சம் நாட்களாகவே நான் கோமியத்தின் மீது நடத்தப்படுகின்ற ஆய்வுகள் குறித்த கேலிச்சித்திரத்தை வாசகர்களுக்கு வழங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இப்போது அதை கையில் எடுக்கிறேன்.

மாட்டின் சிறுநீர் குறித்த ஆய்வுகள்.
2020 ஆம் ஆண்டில் மத்திய அரசு பசுவின் சிறுநீரில் ஆய்வுகளை மேற்கொள்ள மாநிலங்களுக்கு பல கோடி ரூபாய் வழங்கும் திட்டமொன்றை முன்மொழிந்தது.. தற்போது பசுவின் கோமியத்தில் இருந்து மருந்து தயாரிக்கும் ஆராய்ச்சிகள் பெரும் அளவில் செய்ய இருப்பதாக உத்தரப் பிரதேச அரசு 100 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் உள்ள கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த போஜராஜ் சிங் என்கிற போலி விஞ்ஞானியின் தலைமையிலான மூன்று பி ஹெச்டி மாணவர்களை கொண்ட இந்த குழு அதுகுறித்து ஆய்வு செய்யும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்..
பசுவின் மூத்திரம் மனிதர்கள் குடிப்பதற்கு ஏற்றதல்ல, கோமியத்தில் அபாயகரமான கேடு விளைவிக்கும் ஈ கோலி எனப்படும் 11 வகை பாக்டீரியாக்கள் உள்ளன. இவை மனித உடலுக்கு சென்றால் வயிற்றில் நோய் தொற்று நிச்சயம் என்று உலக அளவில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்தியா கால்நடை மருத்துவத்துறையும் இந்த முடிவுகளை ஏற்றுக்கொண்டு பசுமாட்டின் சிறுநீரை குடிக்க கூடாது என்று பொதுமக்களை எச்சரித்துள்ளது. ஆனால் இந்த நேச்சர் இதழில் வெளிவந்த ஆய்வையும் அது ஏதோ பசுமாட்டின் மூத்திரத்தில் மருந்து உள்ளது என்று நிரூபித்துள்ளதாக மரியாதைக்குரிய ஐஐடியின் இயக்குனர் காமகோடி இதையே சுட்டிக்காட்டி இருப்பது வேதனைக்குரிய நகைச்சுவையாகும்.
ஆனால் இப்படிப்பட்ட அனைத்து உண்மையான அறிவியலையும் புறந்தள்ளிவிட்டு கோமியம் குடிப்பது கொரோனாவை தடுத்துவிட்டது என்று இந்து மகாசபை அறிவித்து கோமியம் குடிக்க வைக்கும் நிகழ்வுகளையெல்லாம் இந்தியா முழுவதும் அப்போது நடத்திக் கொண்டிருந்தார்கள். இந்த சூழ்நிலையில், இப்போது உத்தரப்பிரதேச அரசு இப்படி ஒரு உத்தரவை பிறப்பித்திருக்கிறது. இது ஒருபுறமிருக்க சென்னை ஐஐடியின் இயக்குனர் காமகோடி கோமியம் குடித்தால் தனக்கு 15 நிமிடத்தில் காய்ச்சல் சரியாகிவிட்டது என்கிற பொது அறிவிப்பின் மூலம் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
அறிவியலுக்கு எதிரான புதிய சர்ச்சைகள்:
ஆனால் இப்படியான சர்ச்சைகளை கிளப்புவது இவர்களுக்கு புதிதல்ல. தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் அவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். உத்தரப் பிரதேச கவர்னராக இருக்கும் ஆனந்திபென் பட்டேல் சமீபத்தில் விமானத்தை கண்டுபிடித்தது ரைட் சகோதரர்கள் அல்ல பாராஜ்வாத முனிவர் தான் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார். இதை அங்கு குழந்தைகளுக்கு பாடத்தில் வைக்கிறார்கள்.. கல்விக்குள் இந்துத்துவா வை இணைப்பது இப்போது நேரடியாக நடந்து வருகிறது. இதன் உச்சகட்டமாக இமாச்சல பிரதேசத்தில் உள்ள மாண்டி ஐஐடியில் மறு பிறப்பு அவதாரம் குறித்து ஒரு பாடமே அறிமுகம் செய்யப்பட்டு பட்டப்படிப்பு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இஸ்ரோ உட்பட அறிவியல் நிறுவனங்களின் தலைவர்களாக இருப்பவர்கள் தங்கள் இருப்பை உறுதி செய்து கொள்ள தாங்கள் எல்லாருமே வேதத்தை ஆதரிப்பவர்கள் என்று காட்டிக் கொள்வதில் பெரிய போட்டி நடந்து நடந்து கொண்டிருக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. கெளபதி (cowpathy) என தன்னை வெளிப்படுத்திக்கொள்ள தமிழிசை உட்பட பலரும் காட்டும் அவசரம் பதவி நோக்கம் கொண்டது என்பதில் சந்தேகமில்லை.
இந்தியாவின் அற்புதமான பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய அறிவியலை முடிவுக்கு கொண்டு வந்து வேத கால புராதன சமஸ்கிருதவாதிகளின் கையில் ஒட்டுமொத்தமாக போலி அறிவியலை உலகிற்கு பிரபலப்படுத்தும் ஒரு வேலையை அரசு தொடங்கி 10 வருடங்களுக்கு மேல் ஆகிறது. தற்போது, இந்தியாவின் முன்னணி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களில் கெளபதி (cowpathy) என்று அழைக்கப்படும் பசு நேயவாதிகளை தலைவர்களாக நியமிக்கின்ற ஒரு போக்கை அரசு கடைபிடித்து வருகிறது.

பசு மாட்டின் சிறுநீர் குறித்த ஆய்வுகள்:
ஏற்கனவே முன்பு ஆட்சியில் இருந்த வாஜ்பாய் அரசு இது போன்று ஒரு செயலில் ஈடுபட்டபொழுது அதற்காக கடும் எதிர்ப்பு தெரிவித்து இந்தியாவிலிருந்து வெளியேறிய நம்முடைய வேதியியல் விஞ்ஞானி பாரத ரத்னா சி.என்.ஆர் ராவ் பல ஆண்டுகள் வரையில் இந்தியாவுக்கு திரும்பவில்லை. 2020ஆம் ஆண்டு கடைசியாக நடைபெற்ற இந்திய அறிவியல் மாநாட்டில் பெங்களூரில் உரையாற்றிய சி.என்.ஆர் ராவ். இது போன்ற ஆய்வுகளை முன்னிறுத்துவது கேலிக்கூத்தானது என்று பகிரங்கமாக அறிவித்தார்.
2020ஆம் ஆண்டில் ஒன்றிய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறை ஆயுர்வேதா யோகா நேச்சுரோபதி யுனானி சித்தா அமைச்சகம் இவர்கள் எல்லாம் இணைந்து ஐந்து பிரமாண்ட பசுவின் சிறுநீர் குறித்த ஆய்வை முன்மொழிந்தார்கள். புற்றுநோய்க்கு எதிரான சர்க்கரை நோய்க்கு எதிரான மருந்துகளை பசுவின் சிறுநீரில் இருந்து தயாரிக்க முடியுமா என்பது குறித்த ஆய்வுகளுக்காக 100 கோடி பணம் ஒதுக்கப்பட்டது.
ஏற்கனவே உலக அளவில் பசு, எருமை உட்பட மாடுகளின் சிறுநீரில் இருந்து தயாரிக்கப்படுகின்ற பொருள்கள் வர்த்தகத்தில் இருப்பது உண்மைதான். தரையைச் சுத்தம் செய்யும் திரவங்கள் முதல் கழிவறையை சுத்தம் செய்யும் திரவங்கள் வரை பலவற்றை அதிலிருந்து தயாரிக்கிறார்கள். தலையில் தடவிக் கொள்ளும் ஷாம்பு, வயல்வெளிகளில் தெளிப்பதற்கான பூச்சிக்கொல்லிகள் என்று பலவகை பொருட்களை நைஜீரியாவிலும், மலேசியாவிலும் தயாரித்து உலக வர்த்தகம் நடந்து வருகிறது. ஆனால் அதையே மனிதர்கள் வழியே உட்கொள்ளும் பானமாக, உணவாகவும் மருந்தாகவும் மாற்றுவது என்பது மிகவும் ஆபத்தான போக்கு என்று உலக அளவில் எச்சரிக்கப்பட்டுள்ளது. கோமியத்தில் பல வகையான மருந்துகள் இருப்பது உண்மை என்றால் யானையும் முதல் எருமை வரை எல்லா விலங்குகளின் சிறுநீரிலும் அதே பொருள் இருப்பதற்கு அறிவியல் ரீதியில் சாத்தியக்கூறுகள் உள்ளன.
கோமியம் ஆய்வுக்கான விஞ்ஞானிகளின் எதிர்ப்பு:

2020ஆம் ஆண்டு கோமியம் குறித்த ஆய்வுகளுக்காக கோடிக் கணக்கில் மத்திய அரசு பணம் ஒதுக்கிய பொழுது இந்தியாவின் முன்னணியில் இருந்த 500 விஞ்ஞானிகள் ஒன்றிணைந்து இந்திய ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதினார்கள். இந்து மதத்தின் புனிதது விலங்கு என்று போற்றப்படும் பசு குறித்த நம்பிக்கை சார்ந்த போலி அறிவியலை சரி என்று நிரூபிப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த ஆய்வுகள் நடத்தப்படுவது சரியல்ல என்பது அவர்களுடைய வாதம்.
ஹோமி பாபா கல்வி நிறுவனத்தின விஞ்ஞானி அநிகேத் சூலு என்பவரின் தலைமையில் இந்த கடிதம் அனுப்பப்பட்டது. பெரிய அளவில் மக்கள் வரிப்பணத்தை ஆய்வுகளுக்கு செலவிடும் பொழுது இந்த ஆய்வுகளின் மூலம் நமக்கு நன்மை கிடைக்கும் என்பதற்கான குறைந்தபட்ச நிறுவனம் கூட இல்லாத பொழுது இப்படி ஒரு நடைமுறையை அறிமுகம் செய்யும் ஒன்றிய அரசை வண்மையாக அவர்கள் கண்டித்தார்கள். கற்பனையில் முளைத்த புனிதத்துல நம்பிக்கை வாதத்திற்கு அறிவியல் சாயம் பூசுவது நடைமுறைக்கு ஒவ்வாதது என்று அந்த அறிக்கை அப்போது எச்சரித்தது. இந்த அறிக்கையில் ஒப்பமிட்ட 500 விஞ்ஞானிகளின் பெயர்களை வெளியிட்டு ஒன்றிய அரசு அவர்களில் பலரை பழிதீர்க்கும் நடவடிக்கையில் நேரடியாக இறங்கியதை உலகளவில் விஞ்ஞானிகள் கண்டித்திருக்கிறார்கள்.
சூழலியல்வாதிகளின் எதிர்ப்பு:
பசுமாட்டின் சிறுநீரகம் குறித்த உண்மையான ஆய்வுகள் நடத்தப்பட வேண்டுமென்றால் அவை சுற்றுச்சூழலுக்கு பசு மாடு ஏற்படுத்துகின்ற கடும் பாதிப்புகள் குறித்து இருக்கவேண்டும் என்பது சூழலியல்வாதிகளின் வாதம். பசுவின் சிறுநீர் எதிர்மறையான சுற்றுச்சூழல் தாக்கங்களை ஏற்படுத்துகின்றது. அது நைட்ரஸ் ஆக்சைடுக்கு பங்களிக்க கூடிய உமிழ்வுகள் போன்றவைகளை வெளியிடுகிறது. கரியமில வாயு நம்முடைய பசுமை இல்லத்தை பாதிப்பதை போல 300 மடங்கு அதிக ஆற்றலோடு சூழலியலை தாக்குகிறது என்பது கிரீன்பீஸ் அமைப்பின் தகவலாகும்.
பசு மாட்டின் சிறுநீர் நைட்ரேட் மற்றும் அம்மோனியாவுடன் இணைந்து நிலத்தை மாசுபடுத்துகிறது. பசுவின் சிறுநீர் வயல்வெளிகளை அமில மயமாக்கி விவசாய உற்பத்தியை பாதிக்கிறது. இதன் மூலம் மீத்தேன் உமிழ்வு அதிகரிப்பதால் புவி சூடேற்றம் குறித்த பல விஷயங்களுக்கு பசுவின் சிறுநீர் பாதிப்பை ஏற்படுத்தும் பட்டியலில் உள்ளது. மண்ணின் கார்பனின் தீவிரத்தை அதிகரிப்பதன் மூலம் கரியமில வாயு உமிழ்வையும் அது பல மடங்கு விதைக்கிறது. பசுமாட்டின் சிறுநீரால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை குறைப்பதற்கு நாம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை பரிந்துரைக்க இந்த ஆய்வுகளை பயன்படுத்த வேண்டும் என்பதும் இந்த விஞ்ஞானிகளின் குரலாகும்.
உண்மையில் பசுவின் சிறுநீரில் இப்படி உலை உயர்ந்த பல பொருட்கள் இருக்குமேயானால், அது அறிவியல் ரீதியில் உண்மை என்றால் ஐரோப்பியவாதிகளும் ஆங்கிலேய கார்பரேட்வாதிகளும் பசுவின் சிறுநீரை சும்மா விட்டிருப்பார்களா என்றும் கேட்கத்தோன்றுகிறது.
எது எப்படியோ ஒரு மதத்தின் புனித தன்மையை நிரூபிப்பதற்காக அறிவியலின் அடிப்படைகளை துணைக்கு இழுத்து அதை கேலி கூத்தாக்குவது ஏற்புடையதல்ல. தமிழகம் இந்த திசை திருப்பல் கோமிய வாதத்தை கடந்து யூஜிசி உட்பட நம்முடைய அன்றாட பிரச்சனைகளை கையில் எடுக்க வேண்டும் என்பதுதான் அனைவரது கோரிக்கையும் ஆகும்.
கட்டுரையாளர்:

ஆயிஷா இரா.நடராசன்
கல்வியாளர், எழுத்தாளர்.
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


The country is heading towards a nazi regime worst than Hitlerite’s and a bandwagon of such so called scientists are rallying behind them. They know the truth but they are in the race to win bureaucratic position and to be on top of their good books.
உண்மையான அறிவியலும் கோமிய அறிவியலும்..! – ஆயிஷா இரா.நடராசன்
தற்போது யூஜிசி வெளியிட்டிருக்கும் கல்லூரி, பல்கலைகழகம் சார்ந்த ஆணையானது பல்கலைகழகத்தில் மாநிலத்தில் பங்கை முற்றிலும் இல்லாமல் செய்வதற்கும் கல்வியில் அடிமைத்தனத்தை நிலைநிறுத்தவும் தங்களுக்கான ஆட்களை தயார் செய்யவும் மனு சாஸ்திர விதிப்படி கல்வியை கொண்டு போவதற்குமான நுட்பமான நடைமுறை விதிகளை எதிர்த்து தமிழ்நாடு குரல் கொடுக்கிறது. மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.
கட்டுரையின் ஆசிரியர் குறிப்பிடுவது போல அடிப்படை பிரச்சனையிலிருந்து திசை திருப்பும் நோக்கத்தில் புதிய புதிய சர்ச்சகளை வெளியிடுகிறார்கள். நாட்டின் மிக உயர்ந்த அறிவியல் கல்வி நிறுவனத்தின் முதன்மைப் பொறுப்பிலிருப்பவரை வைத்து போலி அறிவியல் கருத்துகளை சமூகத்தில் விதைக்கிறார்கள். ஆசிரியரின் அறிவியல் சார்ந்த கட்டுரையை மக்களிடத்தில் கொண்டு சேர்ப்போம்.. விழிப்படைய செய்வோம். போலி அறிவியல் பேசும் கபடதாரிகளை அம்பலப்படுத்துவோம்!
மிகவும் பிற்போக்குத்தனமான செயல்களை செய்து வரும் ஒன்றிய ஆட்சியாளர்கள் எடுத்துள்ள அடுத்த ஆயுதம் தான் இந்த கோமியம். அதுவும் உத்திரப்பிரதேசத்தில் கோமிய ஆய்வு என்ற பெயரில் நூறு கோடி ரூபாய் ஒதுக்கியிருப்பது என்பதெல்லாம் மக்கள் மீதான வன்முறை என்றே கூறலாம். குறிப்பாக நாட்டில் வளர்ந்து வந்த கல்வியை சிதைக்கும் விதமாக ஒவ்வொரு அறிவிப்புகளும் வெளி வருவது மீண்டும் நிலப்பிரபுத்துவ காலத்துக்கு முற்பட்ட காலத்திற்கு சமூகத்தை கடத்தப்படுவதாகவே கவலைப்பட வைக்கிறது. இந்நேரத்தில் ஆகச்சிறந்த அறிவியல் எழுத்தாளர் ஆயிஷா இரா. நடராசன் அவர்களின் கட்டுரை வந்திருப்பது மிகப்பெரிய வரவேற்பு. இக்கட்டுரை மக்களிடம் பரவலாகக் கொண்டு செல்வோம். இக்கட்டுரை மூலம் கொஞ்சம் மன நிம்மதி அளித்த எழுத்தாளர் தோழர் ஆயிஷா இரா. நடராசன் அவர்களுக்கு மிக்க நன்றி🙏