“ரீல்ஸ் காதல்” – சிறுகதை
—————————–
ஐந்தாவது முறையாக அருணிடம் கேட்டாள் தீபிகா ” நீ என்னை எவ்வளவு லவ்வு பண்றேன்னு சொல்லு ? ”
” என் மனசளவுக்கு ’
” ப் பூ இவ்வளவு தானா ? ”
” ஏய் எம் மனசு எவ்வளவு பெருசுன்னு உனக்கு தெரியுமா ?
எவ்வளவு ?
” உன் மனசை மாதிரி ரெண்டு மடங்கு ”
’ அவ்வளவு தானா ? “
” அவ்வளவு தானாவா ? அப்டின்னா உன் மனசு அவ்வளவு சின்னதா ? ”
” யார் சொன்னது ?”
” அப்போ எவ்வளவு பெருசு சொல்லு ? ”
” அது கடல் ”
” அப்போ என் மனசு ரெண்டு கடல் ”
” அடேங்கப்பா ! விட்டா நீ அளந்துகிட்டே இருப்பே , யார் மனசு எவ்வளவு பெருசுன்னு யாருக்குத் தெரியும் ”
” வேண்ணா என் மனசு எவ்வளவு பெருசுன்னு அளந்து பாரு ”
” அடச்சீ ”
” அப்ப உன் மனசை காட்டு நான் அளந்து பார்க்குறேன் ”
” வேற பொழப்பே கிடையாது உனக்கு ” என்று செல்லமாக அருணின் மார்பில் குத்தினாள் தீபிகா . அவன் மல்லாந்து படுக்கையில் விழுந்து அவளை கழுத்தோடு சேர்த்து இழுத்து அணைத்துக் கொண்டான். விழுந்த வேகத்தில் அவன் மார்போடு தலையால் முட்டினாள்.
” நீ நல்லா வாங்கி கட்டப் போற ”
’ அதான் கட்டிக்கிட்டுத்தான இருக்கேன் ‘’
‘’ ஏன் கை எங்கெங்கெயோ போகுது ? ‘’
‘’ சும்மா ஒரு சின்ன டூர் ‘’
” உனக்கு என்னவோ ஆகிருச்சு , இதுக்குத்தான் அம்பத்தூர்ல வீட்டை வச்சுகிட்டு இருபது கிலோ மீட்டர்ல எக்மோர்ல ரூம் போட்டியா ?”
” என்ன அப்படி சொல்லிட்ட ? எக்மோர் எப்படிப்பட்ட இடம் தெரியுமா ? இங்க இருந்து தான் எல்லோரும் இந்தியாவுல இருக்குற எல்லா ஸ்டேசனுக்கும் பயணத்தை ஆரம்பிக்கிறாங்க , அது போல நாமளும் வாழ்க்கையை இங்க இருந்தே ஆரம்பிக்கலாம்னு தான் இங்க வந்திருக்கோம் ”
” அப்புறம் ஏன் ஒரு மாதிரி பார்த்துக்கிட்டு எச்சில் விழுங்கி கிட்டே இருக்கிறே , உன் சின்ன புத்தி உன்னை விட்டுப் போகலையே ? “
” எல்லாத்தையும் நீ தப்பாவே பார்க்குற ”
’ வேற பேசமாட்டியா ? ”
, சரி ஒரு கவிதை சொல்லுறேன் கேட்குறியா ? ’‘
‘ ஏதாவது விவகாரமா சொல்லுவ ‘’
‘ ச்சே ச்சே அப்பிடியெல்லாம் இல்லை , இது உண்மையான தெய்வீக காதல் சம்பந்தப்பட்ட கவிதை தான் ‘’
‘’ சரி சொல்லித் தொலை ‘’
‘’ உன்னை கண்ட நொடியில் என் இதயம்
எவ்வளவு பேசுகிறது என்பதை
என் மார்பில் கொஞ்சம் காதை வைத்துக் கேள் என்றாள் அவள் .
பொதுவாக முயல் குட்டிகளின் பாஷை எல்லாம்
எனக்கு அவ்வளவாக தெரியாது என்றான் அவன் ‘’
கவிதை எப்படி இருக்கு ?
அப்படியே உன்னை மாதிரியே தான் இருக்கு . உன் கவிதை வேற எப்படி இருக்கும் ? அல்பமாத் தான இருக்கும் ?
உன் இதயம் என்ன சொல்லுது ?
‘ உன் காதை திருக சொல்லுது ‘’
ஏன் ?
‘’ தப்பு தப்பா யோசிக்றியே ? ‘’
‘’ தப்பு தான் ஒரு நாள் சரியா மாறும் ‘’
‘’ இந்த தப்பு ஒரு நாளும் மாறாது ‘’
‘’ஒரு நாள் நாம இந்த தப்பை பண்ணத்தானே வேணும் ‘’
‘ அதுக்காக ?’’
‘’ அத இப்பவே பண்ணிட்டா என்ன ? ‘’
’’ அது தப்பு , நான் உன் மேல நிறைய நம்பிக்கை வச்சிருக்கேன் , ‘’
‘’ அவங்க தான் நம்ம கல்யாணத்துக்கு ஓ கே சொல்லிட்டேன் ‘’
‘’ அப்போ கல்யாணம் ஆகட்டும் ‘’
‘’ எனக்கு ஒரு ஆசை ‘’
‘’ என்ன ? ‘
‘’ என் பர்த்டே அன்னிக்கு உன்னை உன் பர்த்தேடே ட்ரெஸ்ல பார்க்கனும் ‘’
‘’ இன் டீசன்டா பிஹேவ் பண்ணாத , எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் தான் வச்சிக்கனும்னு நாம ரெண்டு பேரும் தான பேசி முடிவெடுத்தோம் ‘’
‘’ ஆமா பெரிய முடிவு ? ஐநா சபையே அப்பப்போ முடிவை மாத்துது , அரசியல்வாதிகள் எல்லாம் தினம் தினம் முடிவை மாத்துறாங்க , நாமளும் கொஞ்சம் மாத்துனா என்ன தப்பு ‘’
நீ என்ன அரசியல்வாதியா ? கொச்சைப்படுத்தாத காதலை ‘’
‘’ ஆஹா உனக்கு ஒன்னுமே தெரியாதுல்ல சின்னக்குழந்தை நீ , உன் சைடு மட்டும் தான் தெய்வீக காதல் , நாங்கள்ளாம் சீப்பு இல்லை ? ‘’
‘’ உன் பேச்சு அப்படித்தான் இருக்கு ‘’
‘’ அப்புறம் எதுக்கு ஏன் கூட ரூம் போட்ட ‘’
‘’ லூஸ் மாதிரி பேசாத , உன்னோட ரெண்டு வருச போராட்டத்துக்குப் பிறகு தான் நம்ம காதலுக்கு பச்சை கொடி காட்டுனேன் , அதனால தான் உன் பிறந்த நாளை கொண்டாட விஜிபிக்கு போகலாம்னு நீ சொன்ன உடனே நம்பி வந்தேன் ஆனா நீ தான் ஏதோ சர்ப்ரைஸ்னு சொல்லி இங்க கூப்பிட்டு வந்திட்ட ‘’
‘’ ஆனா ரூம் போடும் போது நீ ஏன் தடுக்கலை ‘’
‘’ உன் பிறந்த நாளை மூன்றாம் மனுசன் கண்ணில படாம நாம இரண்டு பேருமா கொண்டாடனும்னு தான இங்க வந்து சொன்ன ? நானும் சரின்னு நம்பி வந்துட்டேன் ,ஆனா இப்ப பேச்சை மாத்துற ‘’
‘’ யார் பேச்சை மாத்துறது , நீ தான என்னோட பர்த்டேவுக்கு என்ன கிப்ட் கேட்டாலும் தருவேன்னு பிராமிஸ் பண்ணியிருக்கே ஞாபகமிருக்கா ? , அதனால தான் ஸ்பெசல் ஏசி ரூம் இரண்டாயித்து ஐநூறுக்கு போட்டு கூப்பிட்டு வந்தேன் ‘’
‘’ அசிங்கப்படுத்தாதடா , உனக்கு என்னோட உடம்பு ஒரு கிப்ட்டா ?
‘’ அப்டியே வச்சுக்கோவேன் ‘’
‘’ செக்ஸ் வச்சுக்கிறது என்ன பர்த்தே கிப்ட்டு ? ஏன் என் சம்மதம் முக்கியமில்லையா ?’’
‘’ அதான் நம்ம கல்யாணம் இன்னும் இரண்டு மாசத்துல நடக்கப் போகுதே ? ’’
‘’ அதுக்காக எல்லாத்தையும் இப்பவே பார்த்துடனுமா ?’’
‘’ ஏன் உன்னை என் பர்த்டே அன்னைக்கு பர்த்டே ட்ரெஸ்ல பார்த்தா என்ன தப்பு ? கட்டிக்க போறவன் தானே ‘’
” அது கட்டிக்கிட்ட பிறகு தானே ”
” அப்ப வேற யாராது இருக்காங்களா ?”
‘’ அசிங்கமா பேசாத , எனக்கு இதெல்லாம் சுத்தமா பிடிக்காது ‘
‘’ என்னது ? ’’
‘’ கை யை எடு முதல்ல , ஏன் கண்ட இடத்துலயெல்லாம் கையை வைக்குற , எனக்கு இதெல்லாம் பிடிக்காது ? ’’
’’ உனக்கு இதெல்லாம் பிடிக்காதா , இல்லை என்னையே பிடிக்காதா ?’’
‘’ இப்பிடி நடந்துகிட்டா எனக்கு உன்னையும் பிடிக்காது ‘’
‘’ ஆஹா பெரிய பத்தினி மாதிரி பேசுறா பாரு , , உன்னோட எப்பி , வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் ,இன்ஸ்டாகிராம் எல்லாத்தையும் பார்த்துகிட்டுத்தான் வர்றேன் , யார் யாரு உன்னை பாலோ பண்றாங்க ,யாரு யாரு எப்பிடி கமெண்ட்ஸ் போடுறாங்கன்னனு பார்த்தாலே தெரியுது ‘
” நீ மட்டும் இத்தனை அக்கவுண்டலயும் தெய்வீகத்தை வளர்க்குறியா ? எத்தனை போர்னோ பிக்சர்ஸ உன்னோட பேஸ்புக்லயும் , ஸ்டேட்டஸ்லயும் வச்சிருக்கேன்னு தெரியாதா ?’
” ஓஹோ , அவ்வளவு தெரியுமா உனக்கு ? ”
” நீ வேற வேற பேர்கள்ள , வேற வேற அக்கவுண்ட்ஸ் வச்சிகிட்டு எப்படி சாட் பண்றன்னு தெரியாதா ? என் பிரண்ட்ஸ்க்கு கூட வேற வேற பேர்கள்ள பிரண்ட்ஸ் ரிக்வெஸ்ட் அனுப்புனவன் தான நீ ?”
” ஓஹோ நீ பெரிய பேஸ்புக் கண்ணகி , உன் அரை குறை போட்டோவை பார்த்துட்டு எத்தனை பேரு எப்படி கமெண்ட் போடுறான் அதெல்லாம் பார்த்துட்டு பல்லை இளிச்சிகிட்டுத்தான இருக்கிற நீ பத்தினி ”
‘’ பத்தினி தான் உனக்கு என்ன சந்தேகம் , உன்னை மாதிரி ஊர் மேயுறவள்ன்னு நினைச்சியா என்னை ? ’’
‘’ நல்ல பத்தினிடி நீ , உன் எதிர்த்த வீட்ல இருக்குறானே , ஜூவல்லரி வேலை பார்க்குற ரமேசு அவன் கூட நீ பைக்குல சுத்தறத பலவாட்டி நானே பார்த்துருக்கேன் ‘’
‘’ அந்த அண்ணா எங்க பேமிலி பிரண்டு , ஏற்கனவே மேரேஜ் ஆனவங்க , ‘’
‘’ மேரேஜ் ஆனவன்னா வசதியாப் போச்சு உனக்கு ‘’
‘’ அவங்களைப் பத்தி தப்பா பேசாத எனக்கு கோபம் வரும் ‘’
‘’ கோபம் வந்தா என்னடி செய்வ ? ‘’
‘’ கத்துவேன் , டார்ச்சர் பண்ணினே , அப்படியே வெளில போயிருவேன் எனக்கு இதெல்லாம் பிடிக்காதுன்னு சொன்னேனில்லை ‘’
‘’ போடி போய் அந்த அண்ணன் கூடயே போய் படு என்னைத் தான் உனக்குப் பிடிக்கலையே ’’
‘’ பிடிக்கலைன்னு தெரியுதுல்ல வழியை விடு நான் கிளம்புறேன் ‘
‘’ அப்ப நான் சொல்றதை நீ கேட்கமாட்ட ?’’
‘’ உனக்கு என்னை விட என் உடம்பு தான் முக்கியமா போச்சில்ல ‘’ ?
” ஆமா அப்பிடியே வச்சுக்கோயேன் , இனி ஏன் தெய்வீக காதல் அது இதுன்னு பினாத்தனும் ரீல்ஸ் காதல் தான்டி உன்னோடது ”
” உன்னோடது மட்டும் தெய்வீக காதலா ? எப்போ ரீல்ஸ் காதல்னு சொன்னியோ அப்பவே உன்னோட காதல் பிரேக் அப் ஆயிருச்சு ”
” தப்பிச்சேன்டா சாமி , , போயும் போயும் உன்னைப் போய் லவ் பண்ணி தொலைச்சேன் பாரு அதுக்காக நான் தூக்கு மாட்டிட்டு சாகணும் ‘’
‘’ போதும் வாயை மூடு , இப்படி பட்ட மோசமான புத்தி உள்ளவன் கிட்ட பழகுனதுக்காக நான் தான் தூக்குல தொங்கணும் ‘’
‘’ அப்ப தொங்குடி ஏன் பார்த்துகிட்டு இருக்க ? ‘’ அவன் அறைக் கதவை அறைந்து சாத்தி விட்டு வேகமாக வெளியேறினான்.
‘’ கட் கட் கட் இரண்டு பேரும் அருமையா நடிச்சீங்க வாழ்த்துக்கள் , நான் கூட பத்து இருபது டேக்கு போக வேண்டியதிருக்கும்னு நினைச்சேன் நீங்க ஒரு டேக்குலயே முடிச்சிட்டீங்க ‘’ என்று அவர்களை புகழ்ந்து தள்ளினார் இயக்குநர் மௌரியன் திருப்தியாக . படத்தின் ஹீரோ நிர்மலும் ஹீரோயின் தீப்தியும் சந்தோசமாக சிரித்தார்கள்.
பேக் அப் சொல்லியவுடன் மொத்த யூனிட்டும் அவரவர்களின் உபகரணங்களை எடுத்துக் கொண்டு கலைந்து கொண்டிருந்தார்கள்.
காரில் ஏறி கிளம்ப ஆயத்தமான இயக்குனரிடம் போய் தீப்தி கேட்டாள்.
‘’ சார் நாளைக்கு நிஜமாவே இந்த கேரக்டர்ல ஒண்ண தூக்குல தொங்க விடப்போறீங்களா ? ‘’
‘’ அப்படித்தான் நினைச்சிருக்கேன் ‘’ என்றார் இயக்குனர்
‘’ அப்டின்னா நாளைக்கு தூக்குல தொங்கப் போறது யாரு சார் அருணா ? இல்லை தீபிகாவா ? ’’
‘’ ஏம்மா அதுக்குள்ள சஸ்பென்ஸ் தாங்க முடியலையா ? ’’
‘’ ஆமா சார் ‘’
‘’ அது நாளைக்குத்தான் எனக்கே தெரியும்மா ‘’
‘’ என்ன சார் சொல்றீங்க ?’’
‘’ ஆமாம்மா ரெண்டு பேருல யாரை கொல்றதுன்னு எனக்கே குழப்பம் இருக்கு , யோசிச்சுப் பார்த்தா பேரு பக்கமுமே நியாயம் இருக்கிற மாதிரி தான் எனக்குத் தோணுது , ரெண்டு பேருல யாரு சாகப் போறதுன்னு நாளைக்குத்தான் முடிவு பண்ணணும் ‘’
‘’ ஒகே சார் நாளைக்கு மட்டும் எப்படி முடிவு பண்ணுவீங்க ?’’
‘’ நாம ஏன் முடிவு பண்ணணும் ? காலையில தமிழ் தினசரியை பார்த்தா போதாதா ? , இந்த மாதிரி பத்து சம்பவம் போடுறானே , அதுலயிருந்து ஒண்ணை எடுத்துகிட்டா போகுது . நீ ஓண்ணும் ஸ்ட்ரெய்ன் பண்ணிக்காதம்மா , நாளைக்கு டைம்முக்கு சூட்டிங் வந்திரு ’ என்ற படி கிளம்பினார்‘
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
மறுநாள் காலை எல்லா தமிழ் தினசரியிலும் ‘’ பிரபல தமிழ் நடிகை தீப்திகா தற்கொலை என்ற சோகமான செய்தி முதல் பக்கத்தில் கொட்டை எழுத்துக்களில் பிரசுரமாகியிருந்தது . கூடவே , இவருடைய தற்கொலைக்கும் காதல் தோல்வி தான் காரணமா ? என்ற வாசகங்களுடன் தீப்திகா தூக்கிட்டு தொங்கும் முழுப் புகைப்படமும் அதே பக்கத்தில் பிரசுரமாகியிருந்தது மிகவும் வேதனையை தூண்டுவதாக இருந்தது.
📚 எழுதியவர்:
தங்கேஸ்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

